Monday, December 31, 2018

பண முதலைகளின் வலையில் சிக்கியுள்ள தொழிலாளர் வர்க்கம்!


-நிர்ஷன் இராமானுஜம்-

புதிய மலையகம் வாசகர்களுக்கு வணக்கம். புதிய மலையகம் வலைத்தளமானது, சமீபகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் சில தகவல்களை வழங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளது.

லையகப் பெருந்தோட்டப் பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு பல்வேறு பரிணாமங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைக்குமா என்பது ஒருபுறமிருக்க, பணம் படைத்த முதலாளிமார் முதலைகளின் வலையில் தொழிலாளர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையிலான சூட்சுமமான திட்டங்களும் தீட்டப்படுகின்றன.

இதில், மக்கள் சார்பான ஊடகம் எனத் தம்மை காட்டிக்கொள்ளும் பண முதலைகளின் சித்து விளையாட்டுக்களும் இடம்பெற்று வருகின்றன.

நிற்க, கிளைபோசேட் எனப்படும் களை நாசினி, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலும் ஏனைய விவசாயத் துறைகளிலும் பயன்படுத்தப்படுவது நாம் அறிந்த விடயமாகும். இது, மாபெரும் வர்த்தகச் சந்தையிலும் தொழிலாளர் போராட்டங்களிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கு கவனிப்போம்.

கிளைபோசேட் கிருமிநாசினியை உபயோகப்படுத்துவதால் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டு 2015, ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அதற்குத் தடை விதித்தது.

இது பெருந்தோட்டப் பகுதிகளில் உற்பத்திக்குப் பெரும் பாதிப்பாக அமைவதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தது. தேயிலை, இறப்பர் தொழிற்துறைகளில் இதன் பாவனை தடை செய்யப்பட்டதால் வருடாந்தம் 20 கோடி ரூபாவரை நட்டம் ஏற்படுவதாக முதலாளிமார் சம்மேளனம் 2018, ஏப்ரல் 19 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க, கிளைபோசேட் கிருமிநாசினி மீதான தடையால் இலங்கையில் அதன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இது, மாமன்னர் (மாத்தி யோசி!) எனும் பணம் படைத்த முதலாளியின் மற்றுமொரு நிறுவனமாகும். SorcraH (மாத்தி யோசி!) என்ற இந்த நிறுவனம் முற்றுமுழுதாக மாமன்னரின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் பேரளவு இலாபமீட்டும் நிறுவனம்.

ஒருபுறம் கிளைபோசேட்டை தேயிலை, இறப்பருக்கு மாத்திரம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்து வந்த நிலையில் மறுபுறம் SorcraH நிறுவனமும் பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இரசாயனவியல் தயாரிப்பு தொழிற்சாலையொன்று ஜா-எல பகுதியில் இயங்கி வருகிறது. கிளைபோசேட்டை ஏனைய கிருமிநாசினிகளில் கலந்து விற்பனை செய்துவரும் செயற்பாடுகளும் அங்கு இடம்பெற்று வந்தன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற அழுத்தம் காரணமாக 2018, மார்ச் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியன இணைந்து ஆராய்ச்சிக் குழுவொன்றை அமைத்தன.

அந்தக் குழுவுக்கும் மேற்படி மாமன்னர் நிறுவனம் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வந்தது. பெருந்தோட்டத் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர், முதலாளிமார் சம்மேளனத்துடனும் மாமன்னர் நிறுவனத்துடனும் மிக நெருக்கமான உறவினைப் பேணி வருகிறார்.

இந்நிலையில், 2018, ஜுலை 11 ஆம் திகதி புதன் கிழமை 2079/37 இலக்கம் கொண்ட  விசேட வர்த்தமானியின் மூலம் தேயிலை, இறப்பர் பயன்பாட்டுக்கான கிளைபோசேட் பயன்பாட்டுத் தடை நீக்கப்பட்டது. தேயிலை, இறப்பர் துறைக்கு மாத்திரம் தடை நீக்கப்பட்டதற்கான காரணங்களை மேற்சொன்ன தகவல்களில் வெளிச்சமாகும்.

2017 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதத்தில் இலங்கை தேயிலைச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதாவது, கிளைபோசேட் தடை செய்யப்பட்டுள்ள போதும் அதற்கு இணையான வகையில் பல்வேறு களைநாசினிகள் பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த நாசினிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அனுமதி பெறாத களைநாசினியை பெருந்தோட்டப் பகுதிகளுக்கு விநியோகம் செய்ததும் நாம் மேற்சொன்ன தனியார் நிறுவனம் தான்.

இன்னும் ஒருபடி மேலே சென்றுச் சொல்வதானால், முதலாளிமார் சம்மேளனத்தின் இயக்கமும் அந்தச் சம்மேளனம் பெறும் இலாபமும் இந்த மாமன்னர் நிறுவனத்துக்கு அவசியமாகும். இதனை ஆங்கிலத்தில்  Corporate Crime  என்று சொல்லுவோம், White-collar crime  என்ற வகைப்பாட்டுக்குள்ளும் அடக்கலாம்.

கிளைபோசேட் எனும் களைநாசினியினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் சிலவற்றை (பிரதானமானவை) பார்ப்போம்.

01. சிறுநீரகப் பாதிப்பு
02. தோல் வியாதிகள்
03. விந்து உற்பத்திப் பாதிப்பு
04. கர்ப்பிணிகளின் குழுந்தை வளர்ச்சியில் பாதிப்பு
05. சுவாசம் மற்றும் தொண்டை தொடர்பான நோய்கள்
06. அத்துடன் தேனீக்களின் பரவலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறான தாக்கங்கள் ஏற்படும் சூழல்நிலையில் மேற்படி தனியார் நிறுவனத்துக்கு முதலாளிமார் சம்மேளனத்தை அரவணைத்துச் செல்லும் கடப்பாடு இயல்பாக ஏற்படுகிறது. இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்படுவதால் எந்தவொரு முதலாளியும் மக்கள் நலன்குறித்துச் சிந்திப்பதில்லை. அத்துடன் மாமன்னர் நிறுவனமானது, தனக்கு இலாபம் என்றால் எந்தவகையிலான சூழ்ச்சியையும் செய்வதற்குத் தயாராக இருக்கும் என்பது நாடறிந்த உண்மை.

சரி, மலையக பெருந்தோட்ட மக்களின் போராட்டத்தை திசை திருப்புவதற்கு ஏன் இந்த கோர்ப்பரேட் கம்பனிகள் முன்வர வேண்டும்?

ஆம்! பெரும் இலாபமீட்டும் பண முதலைகளான இவர்களுக்கு மக்கள் ஒற்றுமையாக இருப்பதோ அல்லது தனியொரு சக்தியாக உருவெடுப்பதோ விரும்பத்தகாத ஒன்றாகும். இங்கே ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும் பட்சத்தில் கம்பனிகள் அடையும் சிறு இழப்பினையும் இழக்கவிடாமல் பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த முயற்சிகள் என்னவென்பதை, அண்மைக்காலப் போக்குகளைக் கொண்டு கணிக்க முடியும். மாமன்னரின் கைக்குழந்தையான நிகழ்ச்சி அரசியல்வாதியொருவருக்கு இதுவொன்றும் தெரியாத விடயமல்ல. ஆனாலும் வெளிவேசம் போடும் இவர்கள் போன்றோரை இனங்காண நம் சமூகமும் இளைஞர்களும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறான விடயங்கள், பின்புலத் திட்டமிடல்கள், சதி, சூழ்ச்சிகள் என்பவை சாதாரண பொதுமக்களுக்கு விளங்குவதில்லை. அவர்கள் எப்போதும் விசுவாசமுடையவர்களாகவும் உழைப்பை மாத்திரம் நம்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

எவ்வாறெனினும் இவை குறித்து முழு உழைப்பாளர் வர்க்கமும் தெளிவுபெற வேண்டும். நன்றியுள்ள நாய் வடிவத்தில் நம்முன்னே செயற்பட்டுக்கொண்டிருக்கும் குள்ளநரிகளை இனங்காணுவது காலத்தின் கட்டாயமாகும்.

(கூட்டுக் களவானிகளின் சூழ்ச்சியை இந்தக் கட்டுரை ஓரளவுக்கேனும் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். விழித்துக்கொள்ளுதல் என்பது எழுந்துகொள்ளல் மாத்திரமல்ல, அறிந்துகொள்ளுதலும் தான்!)

Friday, December 28, 2018

இறப்பர் தொழிலாளர்களை கைவிடும் தொழிற்சங்கங்கள் - நிர்ஷன் இராமானுஜம்


லங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் இறப்பர் தொழிற்துறைக்கு பிரதான இடம் உண்டு. தேயிலை பெருந்தோட்டங்களைப் போலவே இறப்பர் பெருந்தோட்டங்களிலும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தொழில்புரிந்து வருகிறார்கள்.

ஆயினும் இந்தத் தொழிலாளர்கள் குறித்த அக்கறையை, பெருந்தோட்ட மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் முற்றுமுழுதாக கைவிட்ட நிலையே இன்று காணப்படுகிறது.

http://puthiyamalayagam.blogspot.com
அண்மைக்காலமாக கூட்டு ஒப்பந்தம் பற்றிய பேச்சு அதிகமாகவே பேசுபொருளாகியுள்ளது. இதில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களாயினும் சரி, பங்கேற்காத தொழிற்சங்கங்களாயினும் சரி இறப்பர் தொழிற்துறையைப் பற்றி வாய்திறப்பதில்லை. முதலாளிமார் சம்மேளனம் என்ன சொல்கிறதோ,  அதை அவ்வாறே கேட்டுக்கொள்ளும் போக்கிலேயே செயற்படுகின்றன. கூட்டு ஒப்பந்தம் பற்றி எத்தனையோ ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி சம்பள விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் தொழிற்சங்கங்கள் இதுவரை இறப்பர் தொழிலாளர்கள் பற்றி எந்தவித கருத்தையுமே வெளியிடாதது வேதனைக்குரிய விடயமாகும்.

பொதுவாக மலையகம் என்றால் மத்திய, ஊவா மாகாணங்களை மாத்திரமே குறி வைக்கும் தொழிற்சங்கங்கள் இறப்பர் பயிர்ச்செய்கை இடம்பெறும் ஏனைய மாவட்டங்கள் குறித்து கரிசனை கொள்வதில்லை. அவர்களுக்கு இடம்பெறும் அநீதிகள் குறித்தும் குரல்கொடுப்பதில்லை. ஆனால் தொழிலாளர்களின் மாதாந்த சந்தாப்பணம் மாத்திரம் தொழிற்சங்கக் கணக்குகளில் வரவில் வைக்கப்படுகின்றன.

சரி, ஏன் இந்தத் தொழிற்சங்கங்கள் இறப்பர் தொழிலாளர்களைப் புறக்கணிக்கின்றன? இதற்குப் பிரதான காரணியொன்று உள்ளது. தொழிலாளர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் முற்றுமுழுதாக அரசியல் நோக்கத்தைக் கருதியே இயங்கிக்கொண்டிருக்கின்றன. தமது அரசியல் இருப்பை உறுதி செய்துகொள்ளவே தினந்தோறும் போராட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் எங்கு தமக்கான வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள முடியுமோ அங்குதான் இவை அரசியல் ரீதியாக இயங்குகின்றனவே தவிர சந்தா செலுத்தும் தொழிலாளர்களின் நலன் குறித்து சிந்திப்பதில்லை.

பெருந்தோட்டக் கம்பனிகளைப் பொறுத்தவரையில் இறப்பர் தொழிற்துறை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக சுட்டிக்காட்டுகின்றன. இந்த நட்டத்திலிருந்து மீள்வதற்காக முள்ளுத்தேங்காய் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

ஏற்கனவே, இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளார்கள். இவற்றுக்கு யார் பொறுப்புக் கூறுவார்கள்? பெருந்தோட்ட தொழிற்துறையின் வினைதிறனை அதிகரிப்பதாக கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் சம்மதம் தெரிவித்து கையொப்பமிட்ட தொழிற்சங்கங்களின் பதில்தான் என்ன?
இறப்பர் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

உண்மையில் மலையகத் தொழிற்சங்கங்கள் மக்கள் நலனுக்காக இயங்குகின்றன என்றால் இறப்பர் தொழிலாளர்கள் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும். பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் நிர்வாகத்தினால் பெரும் அநீதிகள் இழைக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் தமது நியாயங்களை எடுத்துரைப்பதற்குரிய தலைமைத்துவம் இல்லாமல் இருக்கிறார்கள்.

வெறுமனே வாய்ப்பேச்சில் வீரர்களாக இருக்கும் தொழிற்சங்கத் தலைமைகள் இது குறித்து சிந்தித்து களத்தில் இறங்கிப் பணியாற்ற முன்வர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.
குறிப்பாக, களுத்துறை, இரத்தினபுரி, குருநாகல், காலி உள்ளிட்ட மாவட்டங்களில் இறப்பர் தொழிற்துறையைக் கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உரிய பராமரிப்பின்றி காடாகிப்போயுள்ள பெருந்தோட்டங்களை அரசியல்வாதிகள் தாம் நினைத்தாற்போல பெரும்பான்மையின மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டமும் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிகாரப்போட்டிக்காக நீயா? நானா? என தலைவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய மண், எங்களுடைய தொழிற்துறை ஒருசிலரின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் சுய தேவைக்காகவும் பறிபோவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு அதிகாரத்துக்காகப் போட்டிபோடுபவர்கள் கட்டாயம் மக்களின் இந்த நிலைமைக்குப் பதில் கூறியே ஆக வேண்டும். அல்லாவிடின் ஒரு சமூகத்தை அதன் நிலத்திலிருந்தும் கலாசாரத்திலிருந்தும் அந்நியப்படுத்தியவர்கள் என்ற கறுப்புப் புள்ளி என்றுமே மறையாமல் நிலைத்திருக்கும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

-நிர்ஷன் இராமானுஜம்-

Tuesday, December 11, 2018

'அடிப்படை 600 ரூபாவுக்கு மேல் வழங்க முடியாது'- முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு

'அடிப்படை 600 ரூபாவுக்கு மேல் வழங்க முடியாது' 'நாளாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம்' 'நாம் இனி பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள மாட்டோம்' - முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு (நிர்ஷன் இராமானுஜம்) மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 600 ரூபாவை வழங்கும் தமது தீர்மானத்தில் மாற்றமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம்இ இனிவரும் காலங்களில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை எனவும் தெரிவித்தது. அத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெறும் காலப்பகுதியில் வேலைநிறுத்தம் செய்வது கூட்டுஒப்பந்த மீறல் எனவும் இதனால் நாள் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அச் சம்மேளனம்இ தமக்கு எதிரான கொலை அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.

PICTURE BY. V. Harendran
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இன்று (11) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்ளம் 600 ரூபாவுடன் மொத்த சம்பளமாக 940 ரூபாவழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். தற்போதைய அடிப்படை சம்பளத்துடன்(500ரூபா) ஒப்பிடும் போது நாம் 20 வீத அதிகரிப்பை வழங்குகின்றோம். இது தொடர்பில் தொழிற்சங்களுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இலங்கையில் பெருந்தோட்ட தொழிற்துறையை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும். ஆயினும் எம்மால் இயன்றளவு சம்பளத்தை மாத்திரமே வழங்க முடியும்.தற்போது ஜப்பானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இது எமக்கு பாரிய இழப்பாகும். அதுமாத்திரமல்லாது மத்திய கிழக்கு நாடுகளும் ரஷ்யாவும் எமது தேயிலையை புறக்கணிக்கும் பாரிய அச்சுறுத்தலுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம். கடந்த 150 வருடங்களாக வளர்ந்து வரும் இத்துறை மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எமது எண்ணமாகும். ஆயினும்இ தொழிற்சங்கங்கள் அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இதனால் வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்படுகின்றது. வேலைநிறுத்தம் செய்வது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். எனினும் இதன் காரணமாக தேயிலை துறையில் மாத்திரம் நாள் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதுடன் வாரத்திற்கு 1.25 பில்லியன் ரூபாவும் மாதம் ஒன்றுக்கு 6.25 பில்லியன் ரூபாவும் இழப்பு ஏற்படும். இது எமது பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக அமைந்துள்ளது. இதேவேளை முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழிலாளர்களால் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளோம். எமது தொழிற்துறையை பாதுகாப்பதற்காகவும் இவ்வாறான அச்சுறுத்தல்களை தடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்வி (ஆர். நிர்ஷன்) : தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்களால் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டதா? பதில்: (எஸ். ஸ்ரீகுமார்- ஆலோசகர் முதலாளிமார் சம்மேளனம்) ஆமாம். ஆனால் இதர கொடுப்பனவுகள் பற்றி முன்மொழியப்படவில்லை. கேள்வி: முதலாளிமார் சம்மேளனம் இனி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாதற்கான காரணம் என்ன? பதில்: எமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்கங்கள் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும். கேள்வி (ஆர்.நிர்ஷன்) : பெருந்தோட்டங்கள் காடாகிப் போயுள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். உதாரணமாக, டிப்டீன், ஓபாத உள்ளிட்ட தோட்டங்கள் தொடர்பான ஆதாரங்கள் உண்டு. மாதம்பை தோட்ட தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும் அல்லவா? பதில்: ஆமாம். இதற்கு நாம் மாத்திரம் பொறுப்பாளியாகி விடமுடியாது. அரசாங்கத்தினால் குறிப்பிட்டதொரு களைநாசினிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 3 இலட்சத்து 27 ஆயிரமாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை இன்று ஒரு இலட்சத்து 56 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. இதுவும் இந்நிலைமைக்கு காரணமாகும். கேள்வி: இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரின் அதிகரிப்பு காரணமாக ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கின்றதல்லவா? பதில்: அவ்வாறு கூறப்பட்டாலும் தேயிலையில் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒரு கிலோ தேயிலைக்கான செலவு 630 ரூபாவாக இருக்கும் அதேவேளை 570 ரூபாவுக்கே தேயிலை விற்பனை செய்யப்படுகின்றது. கேள்வி (ஆர்.நிர்ஷன்): பெருந்தோட்ட பகுதிகளில் வெளிவாரி உற்பத்தி முறை மூலமாக உற்பத்தியையும் செயன் திறனையும் அதிகரிப்பதற்கு கடந்த ஒப்பந்தத்தில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதே? பதில் : ஆமாம். இருந்த போதிலும் தொழிற்சங்கங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. கேள்வி (வி.ஹரேந்திரன்): இவ்வாறானதொரு நிலை தொடர்ந்தால் தொழிற்துறை பாதிப்பு ஏற்படுமல்லவா? பதில்: அவ்வாறு இடம்பெறக் கூடாது என்பதே எமது எண்ணம். கேள்வி (வி.ஹரேந்திரன்): ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன? பதில்: அது நூறுவீத அதிகரிப்பாகும். உலகில் எந்தவொரு தொழிற்துறையிலும் இவ்வாறு இடம்பெறுவதில்லை. நாம் எமது இயலுமைக்கேற்ற வகையில் தான் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறோம். கேள்வி: உங்களால் முடியாவிட்டால் பெருந்தோட்டங்களை அரசாங்கத்துக்கு பாரப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனவே? பதில்: அரசாங்கத்துக்கு முடியாது என்பதால் தான் எம்மிடம் அந்தப் பொறுப்பை தந்தார்கள். அரசாங்கத்துக்குக் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியைக் கூட செலுத்துவதில்லை.

Monday, December 3, 2018

"ஏமாற்றும் நோக்கம் எமக்கில்லை" – அமைச்சர் செந்தில் தொண்டமான் விளக்கம்

புதிய மலையகம் தளத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த  ஆறுமுகனின் 1000 தந்திரங்கள்!  என்ற  கட்டுரைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் விளக்கமளித்தார். அந்தக் கட்டுரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாகவும் சம்பள விவகாரத்தில் முழுமையான அக்கறையுடன் தமது கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



அவரது விளக்கம் சுருக்கமாக வருமாறு,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் மக்கள் நலன் குறித்தே சிந்திக்கிறது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அது நியாயமான கோரிக்கை தானே?

பெருந்தோட்டத்தில் வெளியாள் ஒருவர் தொழில்புரிகையில் அவருக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க முடியுமாயின் ஏன் எமது தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியாது?

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கொடுப்பதற்கான சகல இயலுமைகளும் கம்பனிகளுக்கு உண்டு. ஆனால் அவர்கள் இலாபம் கருதி, அதாவது பன்மடங்கு இலாபம் கருதி இதனைத் தவிர்க்கிறார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பவர்கள் நான் இங்கே குறிப்பிடும் ஒரு விடயம் குறித்து சிந்திக்க வேண்டும்.

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் நூறு புள்ளிகள் பெற வேண்டும் எனப் படிக்கிறார்களா? அல்லது 50-60 புள்ளிகள் பெற வேண்டும் எனப் படிக்கிறார்களா? ஒவ்வொருவரினதும் நோக்கம் 100 புள்ளிகள் பெற வேண்டும் என்பதே. பரீட்சை எழுதும்போது அதில் மாற்றங்கள் உண்டாகலாம்.

இதேபோல நாமும் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். இதில் வெற்றியும் உண்டாகலாம், தோல்வியும் உண்டாகலாம். ஆனாலும் நாம் எமது முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. இங்கு எம்மை விமர்சிப்பவர்கள், இந்த விடயத்தில் எதிர்மறையான சிந்தனைகளை விடுத்து, எவ்வாறு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கலாம் என சிந்திக்க வேண்டும்.

இந்த விடயங்களை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு எம்மில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் எமது முயற்சிகளை கைவிடவில்லை. எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்படுகிறார்.

நாம், அண்மையில் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அதனை வெற்றிகரமாக செயற்படுத்தினோம். அதன்பிறகுதான் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. மக்களை வீதிக்கு இறக்காமல் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்கலாம்.

இங்கே இ.தொ.கா. அரசியல் இருப்புக்கான நாடகம் ஆடுகிறது என கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனாலும் எமது போராட்டம் மக்களின் பலத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் தமது தேவை குறித்த குரலை எழுப்பியிருக்கிறார்கள். அதனால் தான் நாம் இன்னும் உத்வேகத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் மக்களை ஏமாற்றுகிறோம் என நீங்கள் நினைப்பீர்களேயானால் அது முற்றுமுழுதாக தவறு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் நலனை விட்டுக்கொடுத்ததில்லை. கட்சி பேதங்கள் இன்றி அனைவருக்குமாகத் தான் நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம், போராடிக்கொண்டிருக்கிறோம்.

இதனை அனைவரும் உணர வேண்டும். நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது எமது கட்சிக்காரர்களுக்கு மாத்திரமல்ல. இதனைப் பலர்  புரிந்துகொள்வதில்லை.

எது எவ்வாறாயினும் நாம் எமது நோக்கத்தில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். எம்மை யார் விமர்சனம் செய்தாலும் எமது கடமையிலிருந்து பின்வாங்க மாட்டோம்.

மனித வடிவில் கொடிய விஷம்; நாட்டை அச்சுறுத்தும் HIV




எனக்குத் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனைப் பெரிது படுத்தாமல் வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தேன்.
காய்ச்சல் குறைவடைந்தது.
 எனினும் எனது ஆண் உறுப்பிலும் அதனைச் சுற்றிலும் சிவப்புப் புள்ளிகள் தோன்றியிருந்ததை நான் அவதானித்தேன்.
அப்போது ஒருவித பயம்
என்னைப் பற்றிக்கொண்டது

-நிர்ஷன் இராமானுஜம்-

லங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மறைமுகமாக அதிகரித்து வருகிறது. யார்? எங்கே? எவ்வாறு? இதனைப் பரப்புகிறார்கள் என்பதை அறியவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதையும் வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத விஷம் சமூகத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம் தொடர்பிலும் இந்தக் கட்டுரையினூடாக முன்வைக்க முயற்சிக்கிறோம்.

எயிட்ஸ் இனால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலர் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இரண்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள். பெரும் மன உளைச்சலுக்கு மத்தியில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பலர் எம்மிடம் மனம் விட்டுப் பேசினார்கள். அவர்களில் சிலருடைய வாழ்க்கை அனுபவங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம்.

எயிட்ஸ் நோயாளிகள் பகிரும் அனுபவங்கள்

“எனக்குத் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனைப் பெரிது படுத்தாமல் வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தேன். காய்ச்சல் குறைவடைந்தது, எனினும் எனது ஆண் உறுப்பிலும் அதனைச் சுற்றிலும் சிவப்புப் புள்ளிகள் தோன்றியிருந்ததை நான் அவதானித்தேன். அப்போது ஒருவித பயம் என்னைப் பற்றிக்கொண்டது” - குருநாகலைச் சேர்ந்த 34 வயது இளைஞர் இவ்வாறு பேசத்தொடங்கிய போதே கண்ணீரும் கன்னத்தை நனைத்தது.

நீண்ட தாடி, நலிவடைந்த உடலுடன் இருந்த அவர் தரையைப் பார்த்தபடியே எம்மோடு உரையாடினார்.

“வைத்தியசாலைக்குச் சென்றவுடன் காய்ச்சல் அதிகம் என்பதால் என்னை தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். காய்ச்சலுக்கான மருந்து வகைகளை தந்து தாதியர்கள் என்னைக் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

நான்காவது நாள் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அடிக்கடி இரத்தமாதிரிகளைப் பெற்றுக்கொண்டார்கள். எனது அம்மாவும் தங்கையும் அடிக்கடி வைத்தியசாலைக்கு வந்து என்னைப் பார்ப்பதுண்டு.

ஐந்தாவது நாள் காலை வைத்தியர் ஒருவர் என்னிடம் வந்து என்னை ஆறுதலாக இருக்கும் படியும் மனதைத் தளரவிடாது தான் சொல்வதை புரிந்துகொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, வைத்தியரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

உங்களுக்கு எச்.ஐ.வி. பொசிட்டிவ். இன்னும் பல இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்து கட்டுப்படுத்த முடியுமா என நாம் ஆராய வேண்டியுள்ளது என்றார். என் உடம்பு கொதித்தது. பேரிடி விழுந்து நான் சுக்குநூறாகச் சிதறிப் போனதாய் உணர்ந்தேன். மூச்சும் வார்த்தையும் ஒரு கணம் நின்றுபோயிருந்தன. கழிவறைக்குச் சென்று கதறிக் கதறி அழுதேன். அம்மா, தங்கை, உறவினர்கள் எல்லாம் என் கண்முன் தோன்றி மறைந்தார்கள். அந்தச் சோகத்தை என்னால் சொல்ல முடியவில்லை.

அது 2016 ஆரம்ப காலப்பகுதி இருக்கும். உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று உடலை கட்டாகப் பேணி வந்தேன். பெண்கள் பலருடன் உடலுறவு கொண்டிருக்கிறேன். என்னை முதலில் பரிசோதித்த வைத்தியர்கள், ஆறு மாதகாலத்துக்கு முன்னரே எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இப்போதே அது வெளிப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். அந்த ஆறு மாத காலப்பகுதியில் நான் பலருடன் உறவு வைத்திருந்தேன். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது” என்றார்.

பதுளை, இரத்தினபுரி மற்றும் வவுனியா பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்கள் மூவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பதுளையைச் சேர்ந்த பெண், தரகர் ஒருவரால் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். ஆடைத் தொழிற்சாலையில் தொழில் செய்துகொண்டிருந்த சமயம், அந்தத் தரகரால் மூளைச்சலவை செய்யப்பட்டு மசாஜ் நிலையத்திலும் பகுதி நேரமாக தொழில் புரிந்திருக்கிறாள். இதன்போது ஏற்பட்ட தவறான உறவு காரணமாக இப்போது வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

இரத்தினபுரியிலிருந்து கம்பஹா பகுதிக்கு தனது 20 வயதில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிவதற்கு அவள் வந்திருக்கிறாள். அங்கு வேறொரு ஆடவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிந்து திருமண ஏற்பாடுகளுக்கான திகதியும் குறிக்கப்பட்டது. இதனிடையில் இருவரும் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் சில மாதங்களில் அந்த இளம் யுவதி நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியது தெரியவந்துள்ளது.

வைத்தியசாலை ஊழியர்களால் ஊருக்குக் கதை பரப்பப்பட்டதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் கூறுகிறாள் அப்பெண். பல தடவைகள் தற்கொலைக்கு முயன்று தற்போது ஏனையோருக்கு உதவுவதற்காக இந்த வீட்டில் அடிக்கடி வந்து தங்கியிருந்து சேவகம் புரிவதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் குடும்பச் சுமை காரணமாக திருமணமாகாத 42 வயது பெண்ணொருவர் தனது தூரத்து உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் சமையல் உதவிக்காக ஹோட்டல் ஒன்றில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். கல்கிசை பகுதியில் உள்ள அந்த ஹோட்டலில் இருந்து பலரது தொடர்பு கிடைத்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட பின்விளைவு காரணமாக நான்கு வருடங்களாக தனது வீட்டுக்குச் செல்ல முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள்.

இவர்கள் மாத்திரமல்ல, அங்கு தங்கியிருந்த பலரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். தமக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என அறிந்து அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் இவர்களோடு பாலியல் உறவு வைத்துக்கொண்ட இன்னும் பலர் வெளியுலகத்தில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் அச்சம் தரக்கூடிய விடயம்.

நாம் மேலே குறிப்பிட்ட வீடுகளில் தங்கிருப்போர் உட்பட மேலும் பலருக்கு உதவிகள் புரிந்து பராமரிப்பு செய்து வருவதும் ஒரு பெண்மணிதான். அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இவர் சமூக சேவையைச் செய்து வருகிறார். பிரின்சி மங்களிகா (அனுமதியுடன் பெயரும் புகைப்படமும் பிரசுரிக்கப்படுகிறது) என்ற 58 வயதுடைய இந்தப் பெண் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். அது மாத்திரமல்லாது எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகளையும் நடத்தி வருகிறார்.
Princy Mangalika
இவரது பராமரிப்பின் கீழ் எச்.ஐ.வி. இனால் பாதிக்கப்பட்ட 362 ஆண்களும் 354 பெண்களும் 41 சிறுவர்களும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.

பிரின்சி மங்களிகா, இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானது எப்படி? ஆம்! அவருக்கு எச்.ஐ.வி. தொற்று உண்டாகி 18 வருடங்களாகின்றன. ஜெர்மனியில் தொழில்புரிந்த கணவருக்கு எச்.ஐ.வி. தொற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிராமத்து மக்களின் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதன் பின்னர் பிரின்சியையும் இரத்த மாதிரியை பரிசோதனை செய்துகொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பிரகாரம் பரிசோதனை செய்துகொண்டபோது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

“எனது பரிசோதனை முடிந்து சில மணி நேரங்களிலேயே எமது வீட்டை கிராமத்தவர்கள் எரித்துவிட்டார்கள். எனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் நடுத்தெருவில் நின்றேன். கிராமத்தாரின் தூற்றுதல்கள், உறவினர்களின் நகைப்புக்கு மத்தியில் சில காலம் நாம் தனித்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

எனது பிள்ளைகளுக்கு இந்த நோய் தொற்றியிருக்கிறதா என்பதை ஆராயும் வரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இரு பிள்ளைகளினதும் இரத்த மாதிரிகளைப் பரிசோதித்த பின்னரே நான் பெருமூச்சு விட்டேன். அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றியிருக்கவில்லை.

நான் தவறான பாலியல் தொடர்பு கொள்ளவில்லை. ஆதலால் நான் யாருக்கும் பயப்படவும் இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எவ்வாறு மீள்வது என சிந்தித்து எனக்கு நானே ஆறுதல் கூறி என்னை மாற்றிக்கொண்டேன்.

இப்போது,எச்.ஐ.வி. இனால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நான் ஆறுதலாக இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமிதம் தான். இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் இன்னும் சில காலம் உயிர்வாழ்வார்கள் என்பதே நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை” என்றார்.

‘விழிப்புடன் இருப்போம் - இருமுறை சிந்திப்போம்’

நாட்டில் அண்மைக்காலமாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் இரு ஆண்களுக்கிடையே இடம்பெறும் சமபால் உறவின் காரணமாகவே அதிகமானோர் எயிட்ஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனை சுகாதார அமைச்சின் தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இது மிகவும் ஆபத்தான சமிக்ஞையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஆலோசகர் வைத்தியர் கே.ஏ.எம். ஆரியரத்ன, இது குறித்து விழிப்புணர்வு அவசியம் என்பதையும் தினக்குரலிடம் சுட்டிக்காட்டினார்.

சிறைக் கைதிகள், பாலியல் தொழிலாளர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள், கடற்கரை இளைஞர்கள் என பலதரப்பட்டோரிடம் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆண்களுக்கிடையே இடம்பெறும் பாலியல் உறவு காரணமாகவே அதிகமாக இந்நோய் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களில் 25 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டோரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு 186 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் ஆயிரத்து 500 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாண்டில் எயிட்ஸ் நோயாளிகள் 475 பேர் மரணத்தைத்  தழுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான சிலருக்கு சில மாதங்களிலேயே அறிகுறிகள் தென்படத் தொடங்குவதுடன் சிலருக்கு பல வருடங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தெரிவித்த கருத்துகளின் பிரகாரம் ஒரு சிலருக்கு 10 முதல் 12 ஆண்டுகளின் பின்னரே நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. அப்போது காலம் கடந்திருப்பதுடன் அதுவரை அவர்களால் மேலும் பலருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

இலங்கையைப் பொறுத்தவரையில் பாலியல் ரீதியிலான தொடர்பு காரணமாகவே அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவு இதற்கு முக்கிய காரணமாகும். கணவனும் மனைவியும் காதலிக்கும் போது அல்லது திருமணத்தின்போது எவ்வாறான அன்புடனும் புரிந்துணர்வுடனான உறவுடனும் இருக்கின்றனரோ, அதேபோல் வாழ்நாள் முழுவதும் தொடரும்போது இவ்வாறான பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றன எனக் கூறுகிறார்கள் எயிட்ஸ் இனால் பாதிக்கப்பட்டோர்.

ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் வேலைப்பளு காரணமாக பெண்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளாமையும் பெண்கள் சிலர் ஆண்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளாமையும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எது எவ்வாறாயினும் மனச்சாட்சியுடன் இருமுறை சிந்தித்தல் அவசியமாகும். மிகப் பழைமையான கலாசார பின்னணி கொண்ட நாம், அது தொடர்பில் சிந்திக்காமல் சிற்றின்பத்துக்கான நாட்டத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்கிறோம். நாம் சந்தித்த எயிட்ஸ் நோயாளிகளைத் தவிர அவர்களுக்குப் பரப்பியோரும் அவர்களால் பாதிக்கப்பட்டோரும் இன்னும் எமது சமூகத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கண்ணுக்குப் புலப்படாமல் கொடிய விஷத்தை ஏந்திக்கொண்டு சிற்றின்பத் தாகத்தோடு எங்கேயோ தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். இவை தொடர்பில் விழிப்புணர்வு கொண்டாலேயொழிய இந்த நோய்த் தாக்கத்திலிருந்து எம்மைக் காப்பாற்றிக்கொள்வது சிரமமான காரியமாகவே அமையும் என்பதுதான் உண்மை.

(நாட்டில் பெரும்பாலான வைத்தியசாலைகளில் எச்.ஐ.வி. பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன் இரகசியம் பேணப்படுகிறது. தொடர்பு: 0703 533633)

-நன்றி தினக்குரல் 02.12.2018-

Wednesday, November 28, 2018

ஆறுமுகனின் 1000 தந்திரங்கள்!


-நிர்ஷன் இராமானுஜம்-



தொழிலாளர் நலனுக்காக, உரிமைகளைப் பேணுவதற்காக ஆரம்பிக்கப்படுகின்ற தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியாக மாத்திரம் செயற்படும் துரதிர்ஷ்டமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இலங்கையில் மலையகத்தைப் பொறுத்தவரையில், தொழிற்சங்கங்கள் முற்று முழுதாக ‘அரசியல்’ செய்வதையும் அதனைத் தவிர்க்க முடியாத சூழலுக்குள் இயங்கிக் கொண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதன் உச்ச கட்டமாக, அரசியல் இருப்புக்காக ‘ஆயிரம் ரூபா’ நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை வெளிப்படையாகத் தெரிந்தே, எதிர்க்க முடியாத சக்தியற்றவர்களாக தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ‘சக்தியற்றவர்களாக’ மாற்றியதும் இந்தத் தொழிற்சங்கங்கள்தான் என்பதும் இங்கு வெளிப்படை.

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தைக் கோரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் நடத்துமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களும் வீதியில் இறங்கி உரிமைக்காக போராடினார்கள். அதன்பின்னர், நேற்று (27) ஆறுமுகனின் அறிவிப்பு வெளியாகியது. அதாவது, போராட்டத்தின் காரணமாக நிதியமைச்சில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் ஆறுமுகன் தொண்டமானால் நிதி அமைச்சில் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை விடுக்க முடியாதா? இது இயல்பாக எழுகின்ற கேள்வி. ஆனாலும் ஆறுமுகனின் இராஜதந்திரம் எவ்வாறு அமைந்தது பாருங்கள்.

தொழிலாளர்களை வீதிக்கு இறக்கி, அதன்காரணமாகத் தான் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடு நடைபெற்றது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. நிதி அமைச்சு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பது இங்கே எத்தனை தொழிலாளர்கள் அறிவார்கள்?

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்வியும் ஆறுமுகன் தொண்டமானின் பதிலும் இவ்வாறு அமைந்தது.

கேள்வி: உங்களது பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மை இல்லையே?

பதில்: எனது அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையை நான் ஏன் வெளியில் சொல்ல வேண்டும். அவ்வாறானதொரு தேவை எனக்கில்லை. உங்கள் சொந்த வீட்டில் மனைவியுடன் நடைபெறும் கலந்துரையாடல்களை வெளியில் சொல்வீர்களா? உங்கள் நிறுவன எம்.டி. உங்களுடன் பேசும் விடயங்களை வெளியில் சொல்வீர்களா? அதேபோல் எனக்கும் எனது அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மலையகத்தில் மூத்த தொழிற்சங்க வரலாறு கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொறுப்பற்ற பதிலை உற்று நோக்குவோம். ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வா, சாவா பிரச்சினை. அவர்கள் சார்ந்த 20 இலட்சம் பொதுமக்களின் பிரச்சினை என்பதை எந்தளவுக்கு சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பொது விடயத்தை, தான்சார்ந்த மக்களின் பட்டினியுடன் தொடர்புடைய விடயத்தை இரகசியமாகப் பேசுவதும் அதனை வெளியிட முடியாது எனக் கூறுவதும் எந்த வகையில் நியாயம்?

கேள்வி: பெருந்தோட்டக் கம்பனிகள் நட்டத்திலா இயங்குகின்றன?

பதில்: அதை தெரிந்துகொள்ள நான் எக்கவுன்டன்ட் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது. எனது மக்களுக்கு ஆயிரம் ரூபா அவர்கள் தர வேண்டும்.அதுதான் எனது கோரிக்கை.

இந்தப் பொறுப்பற்ற பதிலையும் கவனியுங்கள். பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகின்றனவா? எந்தளவு இலாபம்? அந்த இலாபப் பங்கை தொழிலாளர்களுக்கு எவ்வாறு பெற்றுக்கொடுக்கலாம்? அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன? என்பது குறித்தான எந்தத் தகவலும் இந்தத் தலைவரிடம் இல்லை. அந்தப் பதிலை வெளிப்படையாகக் கூறாமல் தந்திரமாகச் சொல்லி சமாளிக்கிறார்.

அதேவேளை, மற்றுமொரு விடயத்தையும் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டுகிறார். முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் தோட்டத் தலைவர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது  என்பதுதான் அது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்களைக் கணக்கிட்டால் அதில் இதுவும் உள்ளடங்கும். இது குறித்த உண்மை நிலையை தொழிலாளர்கள் நன்கறிவார்கள்.

இதுவரைகாலமும் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை, யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் கையொப்பமிடும் வழக்கம் இருந்துவந்ததை மக்கள் அறியாமல் இல்லை. நாம் என்ன சொன்னாலும் அதனை தொழிலாளர்கள் எனும் அடிமைகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற எதேச்சதிகார செயற்பாட்டின் விளைவுகள் தான் இவை.

மக்களுக்குச் சேவை செய்வதில் நீயா?நானா? எனப் போட்டிபோட்டுக்கொண்டாலும் பரவாயில்லை. இங்கு அதிகாரத்துக்கான போட்டியே மேலோங்கிக் காணப்படுகிறது. வெறும் பொன்னாடைகளுக்கு மாத்திரம் ஆசைப்படும் அளவுக்குத்தான் அரசியல் மாற்றம் கண்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், மறுநாள் ஹட்டன் நகருக்குச் சென்றார் ஆறுமுகன் தொண்டமான். அங்கு அமோக  வரவேற்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன. வாகன நெரிசல் ஒருபுறம் இருக்க மறுபுறம் பட்டாசுச் சத்தத்துக்கும் பொன்னாடைக்கும் குறைவில்லாமல் ஆறுமுகன் வரவேற்கப்பட்டார். (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)

இதோ, ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைத்துவிட்டது என்பதுபோல இ.தொ.கா. ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள். ஆனால் இவை அனைத்தும் எதற்காக? யாருக்கு எதிராக? என்பதெல்லாம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இருக்கட்டும். கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை உண்மையாகவே முன்வைக்கப்பட்டுள்ளதா?

ஆயிரம் ரூபா கோரிக்கை வெறும் பேச்சளவிலேயே உள்ளது. தற்போது தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவை நூறு மடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது. இன்னுமொரு 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தோடு சேர்க்கப்படுவதாயின் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற சூத்திரம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கவில்லை. அதாவது மேலதிகமான 500 ரூபாவை எவ்வெந்த வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து ஆராயப்படவில்லை என்பதே உண்மை.

இதேவேளை, தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கப்போவதாக குறிப்பிடவும் இல்லை.

மகிந்த ராஜபக்ஷ, இது தொடர்பில் சகோதர மொழி ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்து இதுதான் “ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் அல்ல. மொத்தமாக தொள்ளாயிரம் கணக்கு வருகிறது. அவ்வாறானதொரு தொகையைத் தான் முதலாளிமார் சம்மேளனம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நட்டம் ஏற்படாத வகையில் தொழிலாளர்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் மொத்தமாக ஆயிரத்தை எவ்வாறு பெறலாம் என்பதை ஆராயுமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கும் அதிகாரிகளுக்கும் பணித்துள்ளேன்”.

இதேவேளை, தோட்டங்கள் காடாகிப்போயுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடிக்கடி குற்றம் சுமத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் (பிரிவு இல:3), தொழிலாளர்களின் வினைத்திறனை அதிகரிப்பது, தொழிற்துறையை விருத்தி செய்வது தொடர்பில் தொழிற்சங்கங்களும் பங்களிப்பு செய்வதாக இணங்கி கையொப்பம் இடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தொழிற்துறை பின்னடைவுக்கு தொழிற்சங்கங்களும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினர்தானே?

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துக்காக மூன்றரை வருடங்களாக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை காலம் இழுத்தடிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் தொழிலாளி ஒருவருக்கு சுமார் 70 ஆயிரம் ரூபா முதல் 80 ஆயிரம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டது. அவ்வாறாயின் அந்த பெருத்த இலாபத்தை கம்பனிகளுக்கு பெற்றுக்கொடுத்தது தொழிற்சங்கங்கள் தானே?

இந்த முறையும் இது நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற்சங்களின் அரசியல் இருப்பைத் தீர்மானிக்கின்ற துருப்புச் சீட்டு. இதனை சரியான நேரத்தில் பொருத்தமாகப் பயன்படுத்தாவிட்டால் அடுத்த நகர்வுகள் கேள்விக்குறியாகிவிடும். ஆதலால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிதானமான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.

எவ்வாறாயினும், அதிகாரத்துக்காகவும் அரசியல் இருப்புக்காகவும் தொழிலாளர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை எவ்வெந்த முறைகளில் பெறலாம் என்ற வழிமுறைகளை முதலில் ஆராயுங்கள். அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி தீர்மானத்துக்கு வாருங்கள்.

அதனை விடுத்து எத்தனை காலத்துக்குத் தான் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க முடியும்? நாளொன்றுக்கு 5 ரூபா ஏன் தர முடியாது என தொழிலாளர்களிடம் உரிமையாக கேட்க முடியுமென்றால், உறுதியளித்த தொகையை ஏன் பெற்றுத்தர முடியாது என தொழிலாளர்கள் கேட்பதற்கு ஆயிரம் மடங்கு உரிமை உண்டு என்பதையும் மறவாதீர்கள்.

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளித்திருந்தது. அந்தத் தொகை மக்கள் மனதில் அழுத்தமாக நிறைந்துவிட்டது.

அதற்காக தொழிலாளர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்கள், இளைஞர்கள், பல்கலை மாணவர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்துமே வீணாகிப் போய்விடாது என்ற நம்பிக்கை இந்த நிமிடம் வரையிலும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை.

இதனை மறுத்து இம்முறையும் துரோகம் இழைக்கப்படுமானால் அடுத்த கட்ட பின்விளைவுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உரிய தரப்பினர் நினைவிற்கொள்ள வேண்டும்.

Sunday, November 18, 2018

மலையகத் தொழிலாளியின் மரண வாக்குமூலம் - நிர்ஷன் இராமானுஜம்

ஏமாற்றங்களையும் வலிகளையும் தாங்கிய ஒரு மலையகத் தொழிலாளியின் மரண வாக்குமூலம் இது!

Image from Internet
மகனே,

இந்தத் தளர்ந்த வயதில், மரணம் அழைக்கும் தருவாயில் உனக்காக இந்த மடலை வரைகிறேன். வாய்திறக்க முடியாத எனது சோகங்கள் அனைத்தையும் நீ பாடமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது அவா.

அடர்ந்த காடுகளை அழகிய தேசமாக்கிய தன்னம்பிக்கை மிக்க சமூகம் நம்முடையது. எமது விதியோ என்னவோ குதிரைகளின் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டு வெள்ளையனுக்குச் சேவகம் செய்வதிலேயே காலம் கழிந்தது. மீசை முறுக்கிய அஜானுபாகுவான தோற்றத்தோடு உன் தாத்தா பீடியொன்றை பற்றவைத்துக்கொண்டு தன்னந்தனியாக இந்த மலைகளில் நடந்துவருவார். அவரோடு நடைபயின்றதால் என்னவோ எனக்கும் கொஞ்சம் திமிரும் இறுமாப்பும் கூடவே ஒட்டிக்கொண்டன. என்னதான் இருந்தாலும் வெள்ளையனின் பிரம்புக்குள் அத்தனையும் தொலைத்துப்போனதுதானனே உண்மை.

மகனே, இவற்றையெல்லாம் நீ மறந்துவிடக் கூடாது. வெள்ளையனின் ஆதிக்கத்தின் பின்னரும் எமக்கு நல்லகாலம் பிறக்கும் என நம்பியிருந்தோம். அதுவும் இந்த நிமிடம் வரை நடக்கவில்லை என்பதே பெருந்துயரம். எமது மக்களின் விடிவுக்காக குரல் கொடுக்கப்போகிறோம் என்று எழுந்துநின்றவர்கள் எல்லாம் இன்று அரசியல் சாக்கடைக்குள் விழுந்து விட்டார்கள். அதில் இன்பம் காணும் அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பது என்பது, நீரில் இருந்து ஈரத்தைப் பிரித்தெடுப்பது போன்று சிரமமானது.

ஆகட்டும், எனக்கு 50 ரூபா சம்பளம் கிடைத்த நாள் முதல் உன்னைப் படிக்க வைத்திருக்கிறேன். ஆனாலும் நம் தலைவர்களின் உண்மையான முகம் பற்றி நான் உனக்குக் கற்றுத்தரவில்லை. ‘தோட்டகாட்டான்’ எனும் பெயரோடு நீ கொழும்பில் தொழில்புரிகிறாய், ஆனால் உன்னால் தெரிவானவனோ ‘தலைவன்’ எனும் பெயரில் சுகம் அனுபவிக்கிறான்.

நீ ஒன்றைப் புரிந்துகொள், மலையகத்தில் அரசியல் எனும் பெயரில் நடத்தப்படும் அத்தனையும் நாடகம்தான். நாம் வெறும் கோமாளிகள் போல நாடகத்தைப் பார்த்து ஏமாந்துகொண்டிருக்கிறோம். நம் தோட்டத்தில் காத்தவராயன் கூத்தில் உன் தாத்தா வெறியோடு ஆடியதைக் கண்டு ஒரு வாரம் நான் அவரிடமிருந்து ஒதுங்கி நின்றேன். ஆயினும் அதைவிட ஒப்பற்ற வகையில் நாடகங்கள் தான் எம் தலைவர்களால் இன்று அரங்கேற்றப்படுகிறது.

கொழுந்து மாலைகளால் நாம் அவர்களை அலங்கரிக்கின்றோம். ஆனால் ஒரு சிறு தூசுக்கேனும் எம்மை அவர்கள் கவனிப்பதில்லை.

அரசியல் என்றும் அவன்தான் தலைவன் என்றும் கொடிபிடித்துத் திரிந்து கொண்டாடிக் களித்தது போதும் மகனே! இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாம் “ஐயா” போட்டுக்கொண்டே வாழ்வது? நமக்கென்று சுயமாய் ஒரு பாதையை நாம் வகுத்துக்கொள்ளக் கூடாதா?

ஐயாவின் வீட்டு மாட்டுத் தொட்டிலில் அதிகாலை 4 மணிக்கு பசும்பால் கறந்து கொடுத்திருக்கிறேன். சம்பளம் பெற்றுக்கொண்டதில்லை. கால் போத்தல் பாலுடன் வீட்டுக்கு வந்து உனக்கும் தங்கைக்கும் கொடுத்துவிட்டு மலைக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் வலிக்கவில்லை. வலிகளை நான் உணர்ந்ததும் இல்லை.

சின்னத்துரை எனக்கு ஒருநாள் பேர் போடவில்லை என முறைப்பாடு செய்ய ஐயாவின் அலுவலகத்துக்குச் சென்றேன். ஐயா என்னிடம் கேட்டாரே ஒரு கேள்வி…

“நீயெல்லாம் சம்பளம் எடுத்து என்ன செய்யப்போற? உன் புள்ள என்ன டொக்டராவா வரப்போறான்? அவனும் புல்லு வெட்டத்தானே போறான். போயிட்டு வேலயப்பாரு” என்றார்.

அப்போதுதான் வலித்தது மகனே. உன்னை என்னிலும் மேலாக உருவாக்க வேண்டும் என அப்போது நினைத்தேன். நான் இங்கே பிறந்ததும் இப்படி வளர்ந்ததும் என் தவறில்லையே? இறைவனின் தவறன்றோ என முச்சந்தி மாடசாமியிடம் விழுந்து விழுந்துக் கதறினேன்.

இவற்றையெல்லாம் நான் இதுவரை உன்னிடம் சொன்னதில்லை. என் வாழ்க்கையும் மரணமும் உனக்கு ஒரு பாடமாகட்டும். நீ எதற்கும் அஞ்சாதே, இளைஞன் என்ற நெஞ்சு நிமிர்த்திய பலம் உனக்கிருக்கிறது. அயராத உழைப்பும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் உனக்கிருக்கிறது. இனி எதற்கு, யாருக்கு பயப்பட வேண்டும்?

பயங்கரமான மிருகங்கள், விஷ ஜந்துக்கள், பேய், பிசாசுகள் என அத்தனையையும் தாண்டி அடர்ந்த வனங்களை அழித்து தேயிலை செய்தோம்.

இந்த நிலம், இந்தக் கோயில், இந்த லயம், இந்த ஆறு என அனைத்துமே எமக்கே சொந்தம். எங்களுடைய கலாசாரம், எங்களுடைய பண்பாடு, எங்களுடைய விழுமியங்கள், எங்களுடைய தனித்துவங்கள் என அத்தனையயும் காக்க வேண்டியதும் பேண வேண்டியதும் உன்னுடைய பொறுப்புதான் மகனே.

அப்போதைய காலத்தில், கடும் மழையிலும் வெயிலிலும் எங்கள் களைப்பு தீர நாம் பாட்டு பாடுவோம். அந்தப் பாடல்கள் சுற்றியுள்ள மலைகளில் எதிரொலிக்கும்.

“வாரான்டி வாரான்டி சின்னத்தொர
பெரம்பெடுத்து வாரான்டி கட்டத்தொர
சுண்ணாம்பு செவக்கவில்ல – அவன்
கோவந்தான் செவந்திருக்கு”
இப்படி பாடினோம்.

“மாடசாமிக்கு ஆடு வெட்ட வாங்கடியோ –
அந்த மலச்சாமிக்கு கோழி கொண்டு வாங்கடியோ
வாழ எல சோறு
வாழ வைக்கும் பாரு
சோகமெல்லாம் போகும் - நம்ம
சொந்தமெல்லாம் சேரும்”

இப்படியும் பாடினோம்.

ஆனாலும், வாய்வழி வந்த இந்தப் பாட்டுப் போல நம்ம வரலாறும் மறைந்து போகிறது மகனே. அந்தக் கவலை மட்டுந்தான் என் நெஞ்சை அடைக்கிறது.

நான் போய் வருகிறேன் மகனே.

இனி உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது. போலித் தலைவனை நம்பி பின்னால் செல்வதா அல்லது நீயே தலைவனாகி உன் தலைமுறையைக் காப்பதா என்பதை சிந்தித்துத் தீர்மானித்துக்கொள். உன் எதிர்கால பாதையை முறையாகத் திட்டமிடு. யாருக்கும் எந்த வஞ்சகமும் ஏமாற்றமும் துரோகமும் செய்யாமல் தற்துணிவோடு முன்னோக்கிச் செல்.

எமது மக்களுக்கான நியாயமான எந்தவொரு பயணமும் தோற்றதாய் இதுவரை சரித்திரமில்லை மகனே. உன் வாழ்க்கையும் பயணமும் சரித்திரமாகட்டும். நம்மூர் மாடசாமி எப்போதும் உன் துணை நிற்பான்.

இப்படிக்கு,
உன் அன்பு அப்பா
எஸ். சிங்காரம்

Sunday, November 11, 2018

“ஆயிரம் ரூபா இயலாத காரியம் அரசியல் நலனுக்கான வாக்குறுதிகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது”

-நிர்ஷன் இராமானுஜம்-

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முடியாதென்றும் அரசியல்வாதிகள், அரசியல் நலனுக்காக மன்னர்கள் போல வாக்குறுதியளித்தமைக்கு தாம் பொறுப்பல்ல என்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

கேள்வி: பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை உங்களால் வழங்க முடியுமா? முடியாதா?
பதில்: முடியாது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எமக்கும் விருப்பம் உண்டு. ஆனாலும் அது சாத்தியமற்றது.

கேள்வி: அவ்வாறாயின் உங்களால் தர இயலுமான, இறுதிப்படுத்தப்பட்ட தொகை என்ன?
பதில்: அடிப்படைச் சம்பளம் 600 ரூபா உள்ளடங்களாக மொத்தமாக 940 ரூபா என்பதே இறுதிப்படுத்தப்பட்டதாகும்.

கேள்வி: அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா பெற்றுக்கொடுக்க முடியாமைக்கான காரணம் என்ன?
பதில்: அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பது 100 வீத அதிகரிப்பாகும். எந்தவொரு தொழிற்துறையிலும் 100 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவது சாத்தியமற்றது. அவ்வாறு வழங்கினால் நாம் நிறுவனத்தை கொண்டு நடத்த முடியாதல்லவா? எமது தேயிலைக்கு உரிய விலை சர்வதேச சந்தையில் கிடைப்பதில்லை. அத்துடன் உற்பத்திச் செலவு உள்ளிட்ட இதர செலவினங்களின் அதிகரிப்பையும் இங்கு நோக்க வேண்டும். தொழிலாளர் செலவு 67 வீதமாகவும் எரிபொருள், உரம் உள்ளிட்ட ஏனையவை 15 வீதமாகவும் சுகாதாரம், நலன்புரி, மின்சாரம், வரிகள் உள்ளிட்டவை 5 வீதமாகவும் உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை, மனிதவளம், அலுவலகம், முகாமைத்துவ செலவுகள் 9 வீதமாகவும் இதர செலவுகள் 4 வீதமாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் ஒரே தடவையில் பாரியதொரு தொகையை சம்பளமாக வழங்க முடியாத சூழ்நிலையே உள்ளது.

கேள்வி:  பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியகப் பயிரிடல் முறைமையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தொழிலாளர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறதே?
பதில்: அசௌகரியம் கிடையாது. அது போலியான பரப்புரை. அதுதான் சிறந்த முறை. அந்த முறையின் ஊடாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை தொழிலாளர்கள் வருமானமாகப் பெறுகிறார்கள். வெளிநாடுகளிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

கேள்வி: பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும் அதனால் சம்பளம் அதிகரிப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளமை பற்றி..?
பதில்: பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அவை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள். அமைச்சர் இதனை ஆராய்ந்து பார்த்து கருத்துகளை வெளியிட்டிருக்க வேண்டும்.

கேள்வி: ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கொடுக்க முடியாவிட்டால், தோட்டங்களை விட்டு வெளியேறுமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பகிரங்கமாகக் கூறியிருக்கிறாரே?
பதில்: நாம் எமது தரவுகளையும் தகவல்களையும் வெளிப்படையாகப் பேணுகிறோம். அரசியல்வாதிகள், அரசியல் நலனுக்காக மன்னர்கள் போல வாக்குறுதியளித்தமைக்கு தாம் பொறுப்பல்ல, அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. அவ்வாறெனின், நாம் தோட்டங்களை விட்டு வெளியேறத் தயார். மறுபுறம், இவ்வாறு குறிப்பிடும் தொழிற்சங்கவாதிகளும் பணம் படைத்தவர்கள்தான். அவர்களால் தோட்டங்களைக் கொண்டு நடத்த முடியும்தானே? அவ்வாறு தோட்டங்களை நிர்வகித்து ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுக்கலாம் தானே?

கேள்வி: தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமற்றது என நினைக்கிறீர்களா? அவ்வாறியின் தொழிலாளர்பக்கம் உள்ள பாதகத் தன்மை என்ன?
பதில்: நியாயமானதுதான். நாங்கள் கையில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லவில்லை. தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், ஆண் தொழிலாளர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 4 மணித்தியாலங்களே தொழில்புரிகிறார்கள். அதனால் உற்பத்தித் திறனும் குறைவடைகிறது.

கேள்வி: தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்கள் உங்களது நிர்வாகத்தின் பின்னர் காடாகிப் போயுள்ளதை கண்கூடாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறதே? நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளுக்கு ஏன் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்?
பதில்: தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் வேலைக்கு வருகை தராமை தான் காரணம். தற்போதைய இளைஞர்கள் தோட்டங்களில் தொழில்புரிவதை விரும்புவதில்லை. தொழிலாளர் வருகையீனம் காரணமாக தோட்டங்களை பராமரிப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம். இதுவே, அரச நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஊழியர்சேமலாப, நம்பிக்கை நிதியங்கள் வழங்கப்படுவதில்லை. முறையாக சம்பளம் கூட வழங்கப்படுவதில்லை.

கேள்வி: சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்குக் கிராக்கி இருக்கிறதல்லவா?
பதில்: ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஏலத்தில் உரிய விலை கிடைப்பதில்லை. இது பற்றி அநேகர் அறிந்திருக்காததன் காரணமாகத்தான் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். ஏற்கனவே, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எமது தேயிலைக்கான கேள்வியை நாம் இழந்திருக்கிறோம். எதிர்வரும் காலம் எமக்கு மிகவும் சவாலாக அமையக்கூடும்.

கேள்வி: தொழிலாளர்களின் மனிதாபிமானம் சார்ந்த விடயங்களிலும் அவர்களின் நலன்களிலும் கம்பனிகள் அக்கறை செலுத்துவதில்லையே?
பதில்: தவறு. தொழிளார்கள் மற்றும் அவர்கள்சார்ந்த ஒரு மில்லியன் மக்களுக்கு எமது சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இயற்கை அனர்த்தங்களின்போது நாம் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கிறோம். உதாரணமாக, 61 வைத்தியசாலைகள், ஆயிரத்து 474 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. இன்னும் பல்வேறு விடயங்களைக் குறிப்பிடலாம்.

கேள்வி: ஆங்காங்கே, தொழிலாளர்சார்ந்த விடயங்களில் கூட்டு ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறதே?
பதில்: நாம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செயற்படுகிறோம். குற்றங்கள் முன்வைப்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். இங்கே மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி: இறப்பர் தொழிலாளர்கள் குறித்து தொழிற்சங்கங்களும் அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் வாய்திறப்பதில்லை. ஏன்?
பதில்: இறப்பர் தொழிற்துறை பெரும் நட்டத்தில் இயங்குகிறது. காலநிலை மாற்றம், வெளிநாடுகளில் உள்ள கேள்வி உள்ளிட்டவை இதில் தாக்கத்தை செலுத்துகின்றன. எவ்வாறாயினும் நாம் உறுதியளித்த சம்பளத் தொகையை வழங்கி வருகிறோம்.

கேள்வி: இலங்கையில் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சிக்கு பெருந்தோட்டக் கம்பனிகளும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: நீங்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். 1992 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 27 ஆயிரம் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டார்கள். இப்போது அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரமாகக் குறைவடைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து வெளியிடங்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். தொழிற்துறை பாதிப்புக்கு இதுவே பிரதான காரணியாகும்.

கேள்வி: ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக கொடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனவே?
பதில்: எமது நிலைப்பாடு குறித்து தொழிற்சங்கங்கத் தலைவர்களும் நன்கறிவார்கள். நாம் விளக்கமளித்துள்ளோம்.

கேள்வி: சம்பள விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தாரா?
பதில்: ஆமாம். இதே நிலைப்பாட்டைத்தான் நாம் அவரிடமும் எடுத்துரைத்தோம்.

நன்றி தினக்குரல்
11.11.2018

Tuesday, October 30, 2018

மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள்!

ஒரு மலையகத் தமிழனாக, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக வரலாற்றில் மிகக் கேவலமானதொரு அரசியல் தலைமையை சமகாலத்தில் கண்டிருக்கிறேன் என்பதை மிக வேதனையுடன் பதிவு செய்து தொடர்கிறேன்.



வடிவேல் சுரேஷ்
- மலையகத்தின் மீட்பர் போல தீவிரமான பேச்சு, போலிச்சிரிப்பு, அவ்வப்போது நாடகம் என அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அப்பாவி மக்களின் வாக்குகளால் தெரிவான நபர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வியூகம் அமைத்து வெற்றி பெற்றாலும் காலம் இவரை மக்கள் மத்தியில் பல சந்தர்ப்பங்களில் அடையாளம் காட்டியிருக்கிறது.

நேற்று முன்தினம் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததை மக்கள் அறியாமல் இல்லை. ஆனாலும் நேற்று ஐக்கிய தேசிய கட்சியினருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதன் பின்னர் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்த கருத்துக்களும் நியாயமான சிந்தனையுடையவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தன.
இதில் குறிப்பிடத்தக்க சில கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.

“நான் கட்சி மாறியதாக கூறியதில் எந்த உண்மையும் இல்லை. மரியாதையின் நிமித்தமே மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தேன். நான் ஒரு பச்சைத் தமிழன், இந்து, எனக்கு நன்றிக்கடன் என்ற கடமை இருக்கிறது. அதற்காக நான் அவர்களுடன் இணைந்துகொண்டதாக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயற்படுகிறேன். அதனூடாக மக்கள் சேவை செய்யவே விரும்புகிறேன்”

இப்படிக் கூறிய வடிவேல் சுரேஷ், அன்றையதினமே மாலை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கே மக்கள் முன்வைக்கும் கேள்விகள்தான் என்ன?

நீங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராகவே இருந்திருக்கலாம். எதற்காக மீண்டும் கட்சி மாறி நாடகம் ஆடினீர்கள்?

அன்று மாலையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு பேச்சுவார்த்தைகளின்போது எட்டிய இணக்கப்பாடுகள் அல்லது கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்ன?

உங்களது இந்த செயற்பாட்டினால் ஒட்டுமொத்த மலையக மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா?

வெறும் பதவிக்காக தாவும் நீங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் இத்தனை நாள் நடைபெற்ற பேச்சுவார்;த்தைகளின் போது மக்களின் நியாயங்களையும் போராட்டங்களையும் காட்டிக்கொடுத்து கையொப்பம் இட்டதன் உண்மையான காரணம் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா?

மலையகத்தில் பட்டினிக்கான போராட்டம் நடைபெறுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரான நீங்கள் மக்களின் நிலைப்பாடு, வேண்டுகோள் பற்றி முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களே, மக்களுக்கு சேவையாற்றவே கட்சி மாறினேன் என வெகு இலகுவாக நீங்கள் கூறிவிட்டுச் செல்லலாம். ஆனால் காலம் உங்களுக்குக் குத்தியிருக்கின்ற கறுப்புப் புள்ளியை என்றுமே மறைக்க முடியாது.

மலையக மக்கள் ஏமாற்றுப்பேர்வழிகள், கொஞ்ச காலம் கோபமாக இருப்பார்கள், பின்னர் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தை துடைத்தெறியுங்கள். ஒரு மலையக சமூகத்தைச் சார்ந்தவனாக, உங்களைப் போன்றவர்களை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்.

உங்களுடைய கட்சித்தாவலுக்கும் கடைசிநேர சதுரங்க ஆட்டத்துக்கும் பிரதான காரணம் என்ன என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். உங்களை அமைச்சுப் பொறுப்பில் அமர்த்தியவர்களின் முக்கிய நோக்கம் என்ன?

நீங்கள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதா? அல்லது பெரும்பான்மையை நிரூபித்து தமிழ்மக்கள் தங்களோடு இருக்கிறார்கள் என்பதை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்பதா?

நான் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தவன் அல்லன். மனச்சாட்சியுள்ள பெருந்தோட்டவாசியாக மக்கள் மனதில் உள்ள குமுறல்களை வார்த்தையாக்கிக்கொண்டிருக்கிறேன்.



ஆகட்டும், இப்போது நீங்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள். இனி மக்களின் கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றப்போகிறீர்கள்? புதிய பிரதமரும் அவர் சார்ந்த குழுவினராலும் இது தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாடு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக ஒக்டோபர் 10ஆம் திகதி தங்களுடைய தொழிற்சங்க அலுவலகத்தில் நாம் சந்தித்திருந்தோம். ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தராமல் ஓயமாட்டேன் என உறுதியளித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இனி உங்களுக்கு ஒரு தொழிற்சங்கம் இல்லை. இனியும் ஒரு தொழிற்சங்கம் வேண்டுமானால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் தஞ்சம் கோரலாம். ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் அங்கும் எவ்வாறான சித்துவிளையாட்டுகளை நடத்தினீர்கள் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

எந்தவொரு சுயலாபமும் (?) இன்றி மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்தால் அந்தக் கடமையை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்வதற்கு இனியாவது முயற்சி செய்யுங்கள் அமைச்சரே. அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அங்குமிங்கும் தாவித்திரிவதால் உங்களை மாத்திரமன்றி சமூகத்தையும் காட்டிக்கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள் பல இருக்கின்றன. இப்போது மக்களுக்கு முக்கியமானதொரு தேவை இருக்கிறது. அது சம்பளத் தேவை. அதனைக்காரணம் காட்டி கட்சி தாவுவது மிக இலகுவான விடயம் தான். ஆனாலும் இனிவரும் காலம் சவால்மிக்கதொரு நிலைமையைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அத்தோடு மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இருநூறு வருட கடும் உழைப்போடு இன்றும் தமது உழைப்பை மாத்திரமே நம்பியிருக்கும் அப்பாவித் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். உங்களை அறியாமல், மலையகத்தில் மாற்றத்தை வேண்டி பாரியதொரு இளைஞர் சக்தி உருவாகி வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



மேலும் பல முதலைகள் பற்றி தொடர்ந்தும் பேசுவோம்.

-இராமானுஜம் நிர்ஷன்-