யாருக்காக உழைக்கிறார்கள் மலையகத் தலைவர்கள்? (பகுதி 1)

பொதுவாகவே நான் யாருக்கும் எதிரி கிடையாது. அரசியலில் ஈடுபடும் எண்ணமும் கிடையாது. உண்மையை உள்ளவாறே கூறுவதால் பலர் என்னை எதிரியாகப் பார்க்கிறார்கள். எனக்கு அப்படியொரு மனோபாவம் கிடையாது.

மக்கள் சார்புப் பிரச்சினைகளை மக்களில் ஒருவனாக இருந்து அந்தப்பார்வையில் எழுதுகையில் ஏனோ உண்மைகள் பலவற்றை வெளிப்படையாகக் கூறிவிடுகிறேன். இதில் தவறில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

இருக்கட்டும்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களில் புரட்சியுடன் கூடிய இளைய தலைமுறையினர் மக்களின் நலனுக்காக உழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் அரசியல் சார்ந்தவர்கள் அல்லர். சுயலாபத்துக்காக வேசத்துடன் உழைப்பவர்களும் அல்லர். அவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.

பலர் எனக்குப் புதியவர்கள் அல்லர். அவர்கள் ஆரம்பகாலம் முதலே மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு திட்டங்களுடனும் தொடர்புடையவர்கள்.

அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுக்குப் பிறகு நாம் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தோம். மலையகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் அங்கு இருந்தார்கள்.

அப்போது பொதுவாக எல்லாரும் எழுப்பிய கேள்வி - "யாருக்காக உழைக்கிறார்கள் மலையகத் தலைவர்கள்?"

உண்மைதான். ஆரோக்கியமானதும் யதார்த்தத்துக்குப் பொருத்தமானதுமான கேள்வி இது.

பத்துப் பதினைந்து கூரைகள், விளையாட்டு உபகரணங்கள், ஒரு சில தொழில்வாய்ப்புகள், அனர்த்தங்களின்போது உதவிகள், வீதித் திருத்தம்...இப்படி குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கே உரித்தான சில பொதுச் சேவைகள் உண்டு. அவற்றைத்தான் காலம் காலமாகச் செய்துவருகிறார்கள்.

இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை.

உண்மையாகவே மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன?

அவர்களுக்குச் சொந்தமான வீட்டுக்கு இன்னும் உரிமைப்பத்திரம் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கென விலாசம் இல்லை. இது அடிப்படையில் அவர்களுக்குரிய பிரச்சினையாகும்.

அடுத்தது கல்வித் தேவைகள். மலையகத்தில் எத்தனை சிறுவர்கள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியிருக்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? செல்வந்தர்களின் வீடுகளில் எத்தனைபேர் வேலை செய்கிறார்கள்? அதன் உண்மை நிலை என்ன?

வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களில் எத்தனைபேர் பாதிக்கப்படுகிறார்கள்? ஏமாற்றப்படுகிறார்கள்?

இவை தொடர்பாக மலையக அரசியல் தலைவர்கள் செவி சாய்ப்பதில்லை. ஏனென்றால் இவை மிகப்பெரிய திட்டங்கள். இந்தத் திட்டத்தினால் மக்கள் நன்மையடைவார்களேயானால் அவர்களை ஏமாற்றிப் பிழைக்க முடியாது. அடிப்படைத் தேவைகளைத் தாமாகவே பூர்த்திசெய்துகொண்டு ஒரு சமுதாயம் தானாகவே முன்னேற்றம் காணுமானால் அரசியல் தலைவர்களுக்கு அங்கு வேலையிருக்காது.

ராகலையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அன்று வேதனையோடு கூறுகிறார்.

"எங்களது தோட்டத்தில் மகேந்திரன் என்ற பெயரில் மூவர் இருக்கிறார்கள். என்னுடைய பெயரும் மகேந்திரன். எனக்கு ஒரு கடிதம் வந்தால் மற்றைய மூவருக்கும் சென்றுதான் கடைசியில் என்னிடம் வரும். அப்படி வராமல் போன கடிதங்களும் உண்டு. எங்களுக்கு விலாசம் இல்லை என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி தேவைப்படுகிறது?"

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தோட்டங்கள்தோறும் உபதபால் நிலையங்கள் நிறுவப்பட்டன. எனினும் அவற்றில் பல இயங்காமை வருத்தத்திற்குரியதே.

இரத்தினபுரி டிப்டீன் என்ற தோட்டத்தில் கோப்பிமலை எனும் இடமிருக்கிறது. அங்கு பெரும்பான்மையினத்திருக்கு கூலித் தொழில் செய்யும் அடிமைகளாகத் தமிழர்கள் நடத்தப்படுகிறார்கள்.

பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் உடும்பு இறைச்சி சாப்பிட்டு கசிப்பு குடிக்கிறார்கள். இது எத்தனை அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்?

பதுளை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதி சிறுவர்களிடையே போஷாக்குக் குறைவாகக் காணப்படுகிறது. அவர்களின் பற்கள் செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.

சுத்தமான தண்ணீர் இல்லாமையும், போஷாக்கின்மையும்தான் காரணமாக இதற்குக் கூறப்படுகிறது. குறிப்பாக கோதுமை மாவை இவர்குள் அதிகம் உண்பதால் இப்பிரச்சினை உருவாகியிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

இதற்குரிய உண்மையான காரணம் என்ன? வறுமைதான். காலம் காலமாக உழைத்துக் களைத்து தலைவரின் பின்னாலேயே ஓடி ஓடி தேர்தல் காலத்தில் குடியும் குடித்தனமுமாக இருந்து விழிப்புணர்வுகளைத் தொலைத்த மக்களும் இதற்குக் காரணம்.

எப்படியிருந்தாலும் சுற்றிச்சுற்றி அதே அரசியல்வாதிகள் தான் நம் வீடுதேடி வருகிறார்கள். என்னதான் செய்வது நம் தலைவிதி என வாக்களிக்கிறோம் எனக் கூறுவோரும் இருக்கிறார்கள்.

பாரம்பரிய அரசியல் கலாசாரத்துக்கு அப்பால் புதிய வருகைகளை மக்கள் விரும்பினார்கள்.

ஸ்ரீரங்கா - தேர்தலுக்கு முன் மக்களோடு மக்களாக இருந்து மத்திய மாகாணமே தஞ்சம் என இருந்தார். அரசியல் கட்சித் தலைவர்களை வெளிப்படையாக விமர்சித்தார். ஹட்டன் வெலிஓய மக்களின் முழுமையான ஆதரவோடு இவருக்கு ஆதரவு அதிகரித்தது. வழமையாக தெரிவாகும் தலைவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள். புதிய சிந்தனையோடு மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் ரங்காவை தெரிவு செய்வோம் என மக்கள் தெரிவு செய்தார்கள். ஆனால் தற்போதைய நிலை?

அவரைக் காண்பதற்கே தவம் கிடக்க வேண்டியிருக்கிறது.

திகாம்பரம் - புரட்சியோடு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் முன்னேறினார். மக்களோடு மக்களாக இருந்து செயற்பட்டார். தேர்தல் காலங்களில் திகாம்பரத்தின் பேச்சு அனல் வீசியது. அதனால் இளைஞர்கள் பலர் அவரோடு இணைவதற்குத் தீர்மானித்தார்கள். அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டவர்கள் பலர் அவரோடு இணைந்துகொண்டார்கள். மக்களும் நம்பினார்கள். புதிய தலைமைத்துவம் உதயமாவதை எண்ணி மகிழ்ந்தார்கள்.

இறுதியில்? தேர்தலில் வெற்றிபெற்ற திகாம்பரம் வழமையான அரசியல்தான் புரிந்தார். ஆளும் கட்சியோடு இணைந்துகொண்டதால் புலி வாலைப் பிடித்த கதையாய் போயிற்று.

இப்போது நினைத்துப்பாருங்கள். மக்களின் கதி என்ன?

இருநூறு வருடங்களாக நாட்டின் முதுகெலும்பாய் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இதுவரை வீட்டுரிமைப் பத்திரம் பெற்றுக்கொடுக்க முன்வராதவர்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்?

-இராமானுஜம் நிர்ஷன்

(இதன் அடுத்த பகுதி விரைவில் எழுதுகிறேன்)

“அவர் கூப்பிட்டால் எத்தனை மணி என்றாலும் வரணும்” அமைச்சர் ஆறுமுகனின் உத்தியோகத்தர்கள் இளம் பெண்ணுக்கு இட்ட உத்தரவு

அன்று புதன்கிழமை 09.11.2011.

மதியம் 12.30 மணியளவில் தங்கையிடமிருந்து அழைப்பு. ‘அண்ணா என்னை அவசரமாக மினிஸ்ட்ரிக்கு வரச்சொல்றாங்கண்ணா’.

ஏன்? என்ன விஷயம் என்று கேட்டேன். ‘ஹவுப்பே பிரஜாசக்தி சென்ரர் பற்றித்தான் பேச வரச்சொல்றாங்கனு நினைக்கிறேன். ஆனா எதுவும் விளக்கமா சொல்லல’
கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

பலாங்கொடைக்கு அண்மித்ததாகவுள்ள பிரஜாசக்தி நிலையமொன்றில் இணைப்பாளராகக் கடமையாற்றுகிறாள் அவள்.

பிரஜாசக்தி நிலையங்கள் சௌமியமூர்த்தி தொண்டமான் மத்திய நிலையத்தின் கண்காணிப்பின் பேரில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்குக் கீழ் இயங்கிக்கொண்டிருக்கிறது.

அமைச்சிலிருந்து ஏன் அவசரமாக வரச்சொல்ல வேண்டும் என சிந்தித்தேன். நீங்கள் வரவேண்டாம். இப்போது கொழும்புக்கு வருவதென்றால் மாலை 5.30 மணியாகும். அமைச்சு அலுவலகங்கள் 4.30 மணிக்கு மூடப்படும். எதுவாயினும் விபரமாகக் கேளுங்கள் எனக் கூறினேன்.

பயந்த சுபாவமுடைய தங்கை அமைச்சு அதிகாரிகளுக்குப் பயந்து கொழும்புக்கு வந்தாள்.

அதற்கிடையில் பிரஜாசக்தியுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலருக்கு நான் தொலைபேசியினூடாகத் தொடர்புகொண்டேன்.

“இது அலுவலக வேலை. நீங்கள் தலையிட வேண்டாம். தலையிடவேண்டிய அவசியமும் இல்லை” - இது எனக்குக் கிடைத்த பதில்.

ஆகட்டும் என தங்கைக்காக புறக்கோட்டையில் காத்திருந்தேன். அவள் வரும்போது மணி 6.15 ஆகியிருந்தது.

அதே நேரத்தில் அமைச்சு அலுவலகத்திலிருந்து தூதுவர் ஒருவரும் அங்கு வந்திருந்தார்.

‘நேரம் தாமதமாகிக்கொண்டிருப்பதால் அழைத்துவருமாறு என்னை அனுப்பினார்கள்’ - இது அவர் எனக்குத் தந்த பதில்.

பொறுமையாக இருந்தேன்.

தங்கையை அழைத்துக்கொண்டு கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சுக்குச் சென்றேன்.

மூன்று மணிக்குத்தானே வரச்சொன்னோம். இரத்தினபுரியிலிருந்து இரண்டு மணித்தியாலத்தில் வரமுடியும்தானே? எனக்கேட்டார் அதிகாரியொருவர்.

திடீரென அழைத்துவிட்டு, தங்கையிடம் பணம் இருக்கிறதா? வேறு என்ன தேவைகள்இ கொழும்பு என்பது இரத்தினபுரியிலிருந்து 7 ரூபா தூரம் அல்ல என்பது அவர்களுக்கு விளங்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

அப்போதும் நான் பொறுமையாகத்தான் இருந்தேன்.

வாருங்கள். வாகனத்தில் ஏறுங்கள் என்றார்கள்.

JY 2390 என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஏறினோம். எங்கே போகிறோம் எனச் சொல்லவில்லை.

எம்மோடு இரண்டு அதிகாரிகள் இருந்தார்கள்.

அவர்களில் ஒருவரிடம் என் தங்கை கேட்டாள் ‘ எங்கே போகிறோம் சேர்?’

‘ட்ரஸ்டுக்குப் போறோம்’

‘ட்ரஸ்ட் எங்கே இருக்கிறது’

‘தெரியாது’

இது அவர்களுக்கிடையில் நடந்த சம்பாஷனை.

வாகன நெரிசல்களுக்கிடையில் எமது வாகனமும் மெல்ல மெல்ல நகர்கிறது.

இறுதியில் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு அண்மையில் உள்ள அமைச்சின் மற்றுமொரு அலுவலகத்துக்கு வந்தோம்.

அப்போது சரியாக மணி 7.20.

எதற்காக இங்கே வந்திருக்கிறோம் எனக்கேட்டாள் தங்கை.

மினிஸ்டர் சர் வரச்சொன்னார் என்றார் அந்த அதிகாரி.

மினிஸ்டர் எத்தனை மணிக்கு வருவார் என நான் கேட்டேன் - எனது பொறுமை களைத்து முதலாவதாக நான் பேசிய வார்த்தைகள் இவை.

இன்னும் ஹாஃப் என் ஹவர் ஆகும் எனப் பதில் கிடைத்தது.

உத்தேச பறிமுதல் சட்டம் தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் பாராளுமன்றில் அன்றைய தினம் நடந்துகொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதனால் அமைச்சர் வரத் தாமதமாகும் என்பதையும் நான் அறிந்தேன்.

அரைமணிநேரம் பொறுமையாக இருந்தேன்.
பின்னர் பிரஜாசக்தியின் முகாமையாளரிடம் நான் சென்று பேசினேன்.

பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?

அமைச்சர் இப்போதைக்கு வரமாட்டார். இதற்கு மேலும் என் தங்கையை இங்கே இருத்தி வைக்க எனக்கு விருப்பமில்லை. நான் அழைத்துச்செல்கிறேன் என ஆத்திரத்துடன் கூறினேன்.

இவள் எங்களுக்குக் கீழ் வேலை செய்யும் உத்தியோகத்தர். நாங்கள் அழைத்திருக்கிறோம். அவள் வந்திருக்கிறாள். இதில் நீங்கள் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றார் அவர்.

உங்களிடம் வேலை செய்வதற்கு முதல் அவள் என்னுடைய தங்கை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள். இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தோம்.

ஐந்து மணிநேரப் பயணத்தை 2 மணிநேரத்துக்குள் வரச்சொல்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்? அமைச்சர் என்றால் எதுவும் செய்யலாமா?

அமைச்சர் வரச்சொன்னால் எத்தனை மணி என்றாலும் வரத்தான் வேண்டும். ஏனென்றால் அவள் எங்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்குகிறாள். நாங்கள் 11.30 மணிக்கே கூறிவிட்டோம். அவள்தான் அம்மாவிடம் சொல்லவேணும் அப்பாவிடம் கேட்கவேணும் என நேரம் தாமதித்தாள். நீங்கள் கட்டாயம் இங்கு இருந்து அமைச்சரைச் சந்தித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்றார் அந்த அதிகாரி.

அம்மா அப்பாவிடம் கேட்காமல் எப்படி ஒரு பெண்ணால் தனியாக கொழும்புக்கு வரமுடியும்? அவள் வேலை செய்ததற்காக சம்பளம் வாங்குகிறாள். சும்மா உட்கார்ந்திருந்து சம்பளம் வாங்கவில்லை. உங்களைப்போல அமைச்சருக்கு நாலு போஸ்டர் ஒட்டிவிட்டு வால்பிடித்து இந்தத் தொழிலுக்கு வரவில்லை என ஆத்திரத்துடன் கூறி தங்கையை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.

கொஞ்சம் பொறுங்கள் அமைச்சரிடம் கேட்டுச்சொல்கிறேன் என தொலைபேசி அழைப்பெடுத்தார் அந்த அதிகாரி.

அண்ணன் வந்து பெருங்குழப்பம் போடுகிறார். கண்டபடி திட்டுகிறார். என்ன செய்வது என உரையாடியதை நான் கவனித்தேன்.

அமைச்சர் வந்தாலும் நான் எனது தங்கையை அழைத்துச்செல்வேன் வராவிட்டாலும் அழைத்துச்செல்வேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து வந்தோம்.

அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் பாருங்கள். நான் அங்கு சென்றதுஇ நடந்த விடயங்கள் அனைத்தையும் எனது ட்விட்டர், பேஸ்புக் தளங்களில் பதிவேற்றிக்கொண்டிருந்தேன்.



உண்மையில் எனக்கு அமைச்சர் மீது அப்படியொரு கோபம் வந்தது. அவருக்கு பல விடயங்கள் தெரியாது. ஆனால் அவருடைய பெயரை வைத்துக்கொண்டு நடத்தப்படும் அராஜகங்களால் அமைச்சரின் பெயர்தான் கேவலமாக்கப்படுகிறது.

இப்படி எந்தப் பெண்ணையும் எந்த நேரத்திலும் அழைக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது?

அலுவலக ரீதியில் என்றால் அதற்கு ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. அதனை இவர்கள் சரியாகக் கடைப்பிடித்தார்களா?

மலையத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானை நான் அந்த நேரத்தில் நினைவுகூர்ந்தேன். அற்புதமான அந்த மனிதரின் பெயரால் நடத்தப்படும் இந்த பிரஜாசக்தி நிலையங்களில் இப்படியும் அதிகாரம் பயன்படுத்தப்படுகிறதா என வியந்தேன்.

எனது தங்கையை நான் அழைத்துச் சென்றதால் சரியாகிப்போனது. இதேபோல் வேறு பெண்களை இவர்கள் அவசரமாக அழைத்தால் எங்கே தங்கவைப்பார்கள்? யார் பாதுகாப்பு? யார் பொறுப்பு? இப்படியெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து அவை அத்தனையும் அமைச்சர் ஆறுமுகனின் மீது வெறுப்பாகவே அமைந்தன.

இப்போதும் எனக்குக் கோபம் அடங்கவில்லை. ஆனால் பொறுமையாக இருக்கிறேன்.

-ஆர்.  நிர்ஷன்

இறக்குவானை அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டும் பிரம்மோற்சவம்


இலங்கைத் திருநாட்டின் இரத்தினத் துவீபம் எனப் போற்றப்படும் இரத்தினபுரி மாவட்டத்தின் சகல வளங்களும் சிறந்து விளங்கும் இறக்குவானையில் அருளாட்சி புரியும் அம்பிகைக்கு பிரம்மோற்சவம் நடத்தத் திருவருள் கூடியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் மகோற்சவம் நடைபெறும் ஆலயங்களில் பிரதானமானதாகவும் ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம். ஏறத்தாழ 150 ஆண்டுகள் பழைமையானதும் வரலாற்றுச் சிறப்புடையதுமான இவ்வாலயம் சக்தி நிறைந்ததாக விளங்குகிறது.

இந்து மதம் மாத்திரமே இறைவனை தாயாகவும் தந்தையாகவும் தலைவனாகவும் தோழனாகவும் குருவாகவும் வழிபடும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இவற்றில் தாயாக வழிபடுவது அன்பின் பிணைப்பால் அருள்பெறும் முறையாகக் கொள்ளப்படுகிறது.

இந்நிறத்தான் இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத்துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம்.

சகலரும் தன்முன் பொதுவெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன, தத்துவம் உடையன.

அவ்வாறு தத்துவங்களை உணர்த்துபவளாகவும் அண்டசராசரங்கள் அனைத்தின் இயக்கத்துக்குக் காரணமாகவும், ஆள்பவளாகவும், ஆட்டிப்படைப்பவளாகவும் அரவணைப்பவளாகவும் விளங்குகிறாள் அன்னை ஆதிபராசக்தி. அவள் அம்பிகையாகத் திருவுருவம் கொண்டு இறக்குவானை மக்களுக்கு தாயாகத் திகழ்கிறாள்.

அந்த அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி குலதெய்வத்துக்குத் தேரெடுத்து அலங்காரமிட்டு பக்திப் பரவசத்தோடு கொண்டாடும் ஊர்த் திருவிழாவாக இறக்குவானை மக்கள் இந்த ஆலயத்தின் பிரம்மோற்சவத்தைப் பார்க்கிறார்கள்.

ஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக்கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாகவும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும்.

ஆம்! பல்லாயிரக்கணக்கான மக்களை ஓரிடத்தில் கூடவைக்கும் பிரம்மோற்சவம், துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்றத்துடன் கடந்த 9ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது. உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்து இறைவன்பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயர்நிலைத் தத்துவத்தை விளக்கும் இக்கிரியையில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. எதிர்வரும் 15ஆம் திகதி மாலை வேட்டைத் திருவிழாவும் 16 ஆம் திகதி இரவு சப்பரத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

இறைவனின் ஐந்தொழிலைக் குறிக்கும் மகோற்சவத்தில் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்பவனி எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. திருவிழாவில் இம்முறை முத்தேர் பவனி இடம்பெறுவது சிறப்பமிசமாகும்.

சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை, சோடச உபசாரங்களுடன் சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா செல்கிறாள்.

சிவனில் பாதியாகி இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவருவோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய வாசலில் கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க நாயகியவள் நகர்வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவம் என்னும் இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே தேர்பவனியின் பொருளாகும்.

அதுமட்டுமன்றி ஊர்த்தூய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒடுங்கும் நிலையை நெறியெனக் கூறும் இப்பெருவிழா சமய சடங்குகளில் தனித்துவம் நிறைந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபடுவதனால் தான் கடந்த 2009 ஆம் ஆண்டு பேரினவாத சக்திகளால் தேர்பவனி தடை செய்யப்பட்டது. அந்தக் கசப்பான அனுபவங்களை உரமாக்கி அசைக்கமுடியாத ஆலமரமாய் மேலும் வளர்ந்து அன்பு நிழல் தரும் ஆலயமாக மிளிர்ந்திருக்கிறது.

ஆலய நிர்வாக சபையினரும் ஆலயத்துக்காக தங்களை அர்ப்பணித்துள்ள இறக்குவானை இந்து இளைஞர்களின் பங்களிப்பும் இதற்கு முக்கிய காரணமாகும்.

ஆலயத்தின் பிரதான விழாவான தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து மறுநாள் தீர்த்தோற்சவமும் அதற்கு அடுத்தநாள் பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

எங்களுடைய கலாசாரம், எங்களுடைய பண்பாடு, எங்களுடைய விழுமியங்கள், எங்களுடைய பாரம்பரியங்கள், எங்களுடைய தனித்துவங்களைக் காக்கவேண்டிய கடமைப்பாடும் பேணவேண்டிய பொறுப்பும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஆதலால் ஆசார சீலர்களாய் ஆலயத்துக்கு வந்து அன்னையின் அருள் பெற்றுய்வோம்.

-இராமானுஜம் நிர்ஷன்
(நன்றி வீரகேசரி வாரவெளியீடு-13.02.2011)

கந்தா…கண் திறந்து பார்..!

யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை.

நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது.

குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்...

'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....!.

ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.


தமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....!

தமிழ்மொழி இருட்டடிப்பு

தமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது.

உண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு...

ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி.

இத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

ஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது.

இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது.

அது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா...? அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...? ஒருவேளை கண்டும் காணாமல்.......

ஆலய வரலாறு


அது போகட்டும்...மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு அது பற்றிய தகவலையும் சுருக்கமாக தருகிறோம்.

யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9மைல் தொலைவில் உள்ளது மாவிட்டபுரம்.

சோழநாட்டு இளவரசி மாருதபுரவீகவள்ளிக்கு குதிரை முகம் இருந்துள்ளது. எங்கு தேடியும் அதனை மாற்றுவதற்கு மருந்து கிடைக்கவில்லை. மாவிட்டபுரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி அழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.

மாவிட்டபுரம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை நூற்றாண்டு காலமாக பக்தியுடன் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

வடக்கு எல்லையில் காங்கேசன் துறையையும் தெற்கு எல்லையில் தெல்லிப்பழையையும் கொண்டுள்ளதால் இவ்வூருக்கு சிறப்பு அதிகம்.

முருக பக்தரான மறைந்த கிருபானந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒருமுறைகூட மாவிட்டபுரத்துக் கந்தனை தரிசிக்காமல் சென்றதில்லை என அவரே சொல்லியிருக்கின்றார். மாவிட்டபுரம் கந்தனின் அருளாட்சிக்கு இவரைவிட சான்றுபகர்பவர் வேறு எவராக இருக்க முடியும்?

-என். அஞ்சனா

கலைத் தாயின் குழந்தைக்கு ஈழக் கலைஞர்களின் பிரியாவிடை (01)











கலைத்தாயின் முழுமையான அருளை தன்னகத்தே பெற்ற மாபெரும் கலைஞனை ஈழம் இழந்திருக்கிறது. கலைஞன் என்பதற்கு அப்பால் நட்புள்ளமும் உதவி செய்யும் மனப்பான்மையையும் கொண்டிருந்த உதாரவாதியை கலையுலகம் இழந்திருக்கிறது.

ஆம்!ஸ்ரீதர் பிச்சையப்பா என்ற கலைச்சரிதத்துக்கு காலன் முற்றுப்புள்ளி வைத்து ஒரு வாரம் ஆகப்போகிறது.

எதைக் கொண்டும் யாராலும் எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பினை தாங்கிக் கொள்ள முடியாதவனாய் தவித்திருந்த பொழுதுகளை நினைவூட்ட விரும்பவில்லை.

எனினும் ஸ்ரீதரின் இறுதிச் சடங்குகள் தொடர்பான விடயங்களை வெளியுலகுக்கு கொண்டுவரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடல் கடந்த புதன்கிழமை கொழும்பு – கலாபவனத்தில் கலைஞர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் துறை சார்ந்த கலைஞர்களும் வருகை தந்து ஸ்ரீதரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.

அவர்கள் ஸ்ரீதருடனான நினைவுகளை கலாபவனத்தில் பகிர்ந்துகொண்டனர்.

பீ.எச்.அப்துல் ஹமீட்:
ஸ்ரீதர் பிச்சையப்பா, பன்முகத் திறமைகள் வாய்ந்த கலைஞன், தந்தைக்கு தப்பாமல் பிறந்த தனயன். முதல் தலைமுறையை விட அடுத்துவரும் தலைமுறை அதைவிட சாதிக்கும் என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதற்கொரு நல்ல உதாரணம் தான் ஸ்ரீதர். தந்தை நடிப்புக் கலையில் தன்னை வளர்த்துக்கொண்டார். ஸ்ரீதர் நடிப்புக் கலை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் மிளிர்ந்தார்.
பல்துறை அறிவையும் திரட்டி சிறந்த கட்டுரைகளாக எழுதக்கூடிய திறமை வாய்ந்தவர்.

பொதுவாக இதுபோன்ற புகழ்சார்ந்த துறைகளில் திடீரென்று அவர்கள் நம்மைவிட்டுப் பிரியும் போது பேரிழப்பு என்கிறோம். சிலர் சம்பிரதாயமாக அதைச் சொல்வார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் உண்மையில் இது பேரிழப்பு தான்.

மேமன் கவி:
நண்பன் ஸ்ரீதர் பிச்சையப்பாவை கடந்த 30 வருட காலமாக அவருடன் நேசமிருந்தது. நான் நினைக்கிறேன். ஒரு கலைஞனின் பன்முக ஆற்றல் என்பதற்கு அப்பால் எல்லா கலைஞர்களுக்கும் எல்லா படைப்பாளிகளுக்கும் தன்னை ஆழமாக வெளிப்படுத்த முடிவதில்லை. ஆனால் ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் எல்லா துறைகளிலும் தனது தனித்துவத்தைப் பேணி, பதித்து வந்தவன்.
அவனுடைய பாடல், நாடகம் இவ்வாறு பலதுறைகளைப் பற்றியும் பேசும் போது நான் முக்கியமாக ஓவியத்தை கவனம் செலுத்தியிருக்கிறேன். ஏனென்றால் அவனுடைய கோட்டோவியங்கள் மிக முக்கியமானவை.

சந்தனராஜ், வீரசந்தானம்,ஆதிமூலம் இப்படி பலருடைய ஓவியங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த கோட்டோவியங்களினூடாக இவை ஸ்ரீதருடைய ஓவியங்கள் தான் என தனித்துவமாக சொல்லக்கூடியவை.
இப்படியான கலைஞர்கள் ஒரு கால இடைவெளிக்குள்ளே தான் தோன்றுவார்கள். பன்முக ஆற்றல் எனும்போது இயந்திரத் தனமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக தூய்மையாக அதனை ஸ்ரீதர் செய்துவந்தார்.

ஸ்ரீதருடைய எல்லா பார்வையிலும் படைப்பிலும் ஒரு நவீனத்துவம், ஒரு புதுமை, மக்களைக் கவர்கின்ற வெளிப்பாட்டுத் தன்மை இருந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் ஸ்ரீதரின் இழப்பினை நாம் அதிகமாக உணர்வோம் என்பதில் சந்தேகமில்லை. அவனுடைய ஆத்மா சாந்தியடைவதாக.

சீத்தாராமன்:
இலங்கைக் கலையுலகம் சகலகலா வல்லவனை இழந்திருக்கிறது.அவரும் நானும் ஒரே நிகழ்ச்சியில் 1979ஆம் ஆண்டு அறிமுகமானோம். இருவரும் நாடகங்கள், நிகழ்ச்சிகளில் பங்குபற்றினோம்.

ஸ்ரீதருக்கு அப்போது சிறந்த பாடும் திறமை இருந்தது. அப்போதிலிருந்து ஓர் இசைக்குழுவை ஆரம்பிக்க வேண்டும் என அவரும் நானும் முழுமூச்சாக செயற்பட்டு வந்தோம்.
1980ஆம் ஆண்டில் எமது இசைக்குழுவினூடாக அவர் பாடிய முதல் பாடல் வாழ்வே மாயம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வந்தனம் வந்தனம்’ என்ற பாடல் தான். உலகுககே வந்தனம் சொல்லி கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போது ஸ்ரீதர் மிகச்சிறந்த அளவில் பேசப்பட்டார். உலகம் முழுதும் அவர் சென்றார்.

அதேபோல கடைசி இசை நிகழ்ச்சியும் என்னோடு தான் செய்தார். கடைசியாக தென்பாண்டிச் சீமையிலே என்ற துக்ககரமான பாடலைப் பாடினார். அது அவரது வாழ்வின் இறுதிக்காலத்தைச் சொல்லும் என நான் நினைக்கவில்லை.

மோகன்ராஜ்:
என்னுடைய ஆத்ம நண்பனும் இலங்கையின் புகழ்பெற்ற கலைஞனுமான ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு பல்துறைக் கலைஞன். கிட்டத்தட்ட 37 வருடங்கள் ஒரே தெருவில் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக இருந்து வளர்ந்தவர்கள்.
அவனிடமிருந்த மனிதப் பண்பானது ஏனைய கலைஞர்களுக்கு படிப்பினையாகும். ஆழந்த கவலையுடன் இந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்.

இராஜேஸ்வரி சண்முகம்:
என் மகன் ஸ்ரீதரின் அந்திமக்கிரியைகளில் கலந்துகொண்டிருக்கிறோம். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் உலகுக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என வாழ்ந்தவர் ஸ்ரீதர். அவர் என்னோடு பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறார்.

கவிதைகளில் கருவாகி நின்றவனே
கலைகளில் உருவாகி நின்றவனே
நாடகங்களில் பாத்திரமாகி நின்றவனே

நான் உனக்கு கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன் ஐயா.
விடைபெறுகிறேன் ஐயா.

நீ போகும் இடத்திலாவது இறைவன் உனக்கு நிம்மதியைத் தரட்டும்.

கமலினி செல்வராஜன்:
நான் அதிகமான சந்தர்ப்பங்களில் ஸ்ரீதரை என் வீட்டுக்கு அழைத்து கதைத்துக்கொண்டிருப்பேன். பல விடயங்கள் கதைப்போம். எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு கலைகளைப் பற்றித் தான் அதிகம் சொல்லிக்கொண்டிருப்பார்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கண்ணை இழந்த போதிலும் அந்த சோகத்தை மறைப்பதற்காக கலைகளோடு வாழ்ந்து வந்தார். கலையோடு மிக்க ஆர்வம் இருந்தது.

ஆனால் குடும்பம் சரியாக இருக்கவில்லை என்பதனால் தன்னை மறந்து வாழக்கூடிய ஒருவனாக இருந்தார். என்னதான் இருந்தாலும் ஆற்றுப்படுத்தல்போல அன்பாக கதைப்பார்.

மல்லிகை ஜீவா
மிகச்சிறந்த ஓவியன், மிகச்சிறந்த நடிகன்,அற்புதமான நடிகன். இவை எல்லாவற்றையும் விட எல்லாரையும் நேசிக்கும் அன்பான நண்பன். இந்த அற்புதமான கலைஞனை கடந்த 30 ஆண்டுகளாக நான் அறிவேன். யாழ். கலைஞர்கள், எழுத்தாளர்கள் சார்பில் ஆழ்ந்த துக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எத்தனையோ கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் இன்று கூடியிருக்கிறார்கள். ஸ்ரீதர் மற்றவர்கள் மீதிருந்த பாசம் இப்போது விளங்குகிறது.

(தொடரும்)

(ஊடகம் சார்ந்தபடியால் முன் அனுமதியின்றி படங்களை பயன்படுத்த வேண்டாம்)

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்


ஏதோ என்னில் ஒரு பாகத்தை இழந்து தவிப்பதாய் ஓர் உணர்வு. இல்லை… இல்லை…ஸ்ரீதர் இறந்திருக்கமாட்டார் என்ற துர்நம்பிக்கை அவ்வப்போது துளிர்விட்டு மறைந்துகொண்டிருக்கிறது.

ஆம். ஒரு மகத்தான கலைஞனை நான் மட்டுமல்ல. நாடே இழந்திருக்கிறது.

ஸ்ரீதர் பிச்சையப்பா – 1990 களில் நான் பாடசாலை செல்லும்போது ஆச்சரியப்பட்ட கலைஞன். இப்போதும்தான். அந்தக்காலத்தில் இருந்த துடிப்பு, ஈடுபாடு என்பன இந்தச் சிகரத்தையும் நெருங்க முடியுமா என்ற ஆச்சரியத்தை தோற்றுவித்திருந்தது.

பாடல்,எழுத்து,நடிப்பு,இயக்கம்,இசை,ஓவியம்,கவிதை என கலைத்துறையின் அத்தனைப் பரிமாணங்களையும் தொட்ட கலைஞனை இழந்திருக்கிறோம்.

ஸ்ரீதருடனான சந்திப்பு தொடர்பு அத்தனையும் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

இந்தக் கலைஞனை அவனது திறைமையை வெளிப்படையாகச் சொல்ல எவ்வெந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது?

ஸ்ரீதருடனான பழக்கம் பற்றி எழுதுவதற்கு அடியெடுத்து வைக்கிறேன். நெஞ்சில் சோக அழுத்தங்களுடன்….

இராமானுஜம் நிர்ஷன்

கலைஞர் கருணாநிதிக்கு!

பேரன்புக்குரிய கலைஞர் கருணாநிதிக்கு,
வணக்கம்.

பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச்சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்।

நிற்க:
பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக்கொண்டிருக்கின்றன। தாகம்தீர்க்க மழையில்லை। இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது என்றிருந்த காலமும் மாறி நாமும் கொஞ்சம் மாறியிருக்கிறோம்.

குடும்பத் தலைவன் உயிருடன் இல்லை. பிள்ளை கண்ணிவெடியில் சிக்கி கால்களை இழந்திருக்கிறது, தங்கை சித்தப்பிரம்மையாய் அலைகிறாள், மனைவியோ எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு.... என பலருடைய காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

மீளக் குடியமர்த்துகிறார்கள். உண்மைதான். வேதனைகளின் ஈரம் இன்னும் காயாமல் இருக்கும்போது பழைய கிராமத்தை பார்க்க முடியவில்லை. அரசமரத்தடிப் பிள்ளையார் முதல் அஞ்சலகம் வரை எதுவுமில்லை. அடையாளமும் இல்லை. அ

தே சந்தோசத்தை, அதே நினைவுகளை இனிவரும் காலம் மீளப்பெற்றுத்தருமா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு.

ஆம்! நாம் மீளக்குடியமர்த்தப்பட்டோம் குடிதண்ணீர் இல்லாமல்...
மீளக்குடியமர்த்தப்பட்டோம் மின்சாரம் இல்லாமல்...

எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்। ஏன் நீங்கள் கூடத்தான்।
எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும்போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம்நிறைந்து களிக்கிறேன்। காலம் தள்ளிப்போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப்போகின்றன। ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு, நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...

உங்களுக்குத் தெரியாது ஐயா।
அனுபவித்தால் தான் தெரியும்। கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?
நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார்நிலத்தை நாம் பறித்தோம்?யார் உரிமைக்கு இடம்கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள்। வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது।

போகட்டும்।
இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள்। அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவிவிலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள்। ஏன் ஆனால் மௌனம் காத்தீர்கள்?
இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள்। தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள்।
ஆனால் பதில்கேட்க மறுத்தீர்கள்.
போராட்டத்துக்கு அழைத்தீர்கள்। சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம்। இடைநிறுத்தினீர்கள்.

எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக்காட்டினீர்கள்। என்ன பயனாயிற்று?

எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை। அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன்।

நான் மட்டுமல்ல। இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்। பனைமரங்களுக்குள் நாம் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக்கொண்டிருப்போம்।
அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்துவிடாதீர்கள்।

எம்மை ஏமாற்றத்துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்தபின்னும் எம் ஆன்மா சாபமிடும்। இது நிச்சயமான உண்மை।

கலைஞரே,
எமக்கான தேவையை இந்த வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது. முடியுமானால் எம்மை நீங்கள் வந்து பாருங்கள். நீங்கள் தவறு செய்தீர்களா இல்லையா என்பதை அப்போது உணர்வீர்கள்.

ஐயா,
நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பலர் சொல்லிக்கொள்கிறார்கள்। எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை। எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லிவிடுங்கள்। கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக்கொண்டே புள்ளிவைத்து முடித்துவிடுகிறோம்। கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது।

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம்। ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்।

அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு!
எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்।

இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்

அச்சுவலைச் சந்திப்பு 03














“அது அவரோட ஸ்டைல்”

குரு இலிங்க சங்கம வழிபாடு என்பார்கள். இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்த மூன்றும் இறைவன் தான். அஞ்ஞானத்தை அகற்றும் ஆசாரியன், வழிபாட்டுக்குரிய இலிங்கம், சங்கமம் எனப்படும் சிவனடியார்கள் ஆகிய மூன்று பகுதியினருக்கும் சமமான மதிப்பு உண்டு.

இலிங்கத்துக்கு முதலாக ஏன் குரு சொல்லப்படுகிறார் என்றால், இறைவன் தான் குருவாக வந்து தன்னைப் பற்றியும் மும்மலங்கள், பஞ்சபூதங்கள் பற்றியும் விளக்குகிறார் என்பதால் தான். ஆசாரியன் எனப்படும் ஆசிரியர்கள், தாம் அந்த நிலையில் தான் இருக்கிறோமா என்பதை எப்போதும் சுயமதிப்பீடு செய்துகொள்ளல் அவசியமாகும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் கொட்டாஞ்சேனை என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு பிரபலமான தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்தக் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் லீலைகள் குறித்தான பதிவுதான் இது.

காலத்துக்குத் தேவையான மிக முக்கியமான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் அவர். வெள்ளவத்தையிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிப்பதுடன் பிரத்தியேக வகுப்புகளையும் நடாத்துகிறார்.

வயதுடைய அவர் தனது வகுப்புகளில் கற்பிக்கும்போது இரட்டை அர்த்த வசனங்களைத் தான் அதிகம் உபயோகிக்கிறார்.
கையில் பேனையை வைத்துக்கொண்டு மாணவியரின் அந்தரங்கப் பகுதியை குத்தி பிழைதிருத்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் இவர்,
மாணவன் ஏதாவது பிழைவிட்டால், “வா… இங்க வா… உனக்கெல்லாம் என் மேசைக்குக் கீழ் இருக்கும் வேலை தான் சரி” என்பாராம்.

மாணவரியர் பலரின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை வாங்கிக்கொண்டு இரவுவேளைகளில் குறுஞ்செய்தி அனுப்புவதுதான் இவரது பொழுதுபோக்கு.

இதுபற்றி அந்த கல்விநிறுவனத்தின் நிர்வாகத்தினர் அக்கறை எடுப்பாக இல்லை. அது அவரோட ஸ்டைல் என்கிறார்கள் அனுபவத்தில் முதிர்ந்த ஆசிரியர்கள்.

ஆசிரியரின் பெயரோடு நான் எழுதவேண்டும் என்றிருந்தேன். ஆனால் நான் அவ்வாறு எழுதிய பிறகு, அந்த ஆசிரியரிடம் கல்விகற்க தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் வருத்தப்படுவார்கள்.

மாணவர்களின் கட்டிளமைப் பருவம் வித்தியாசமானது. எது நல்லவழி எது தீயவழி என்பதை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் ஒரு புள்ளியில் ஊஞ்சல்போல் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆசியர்கள் தான் அவர்களை சரியான வழிக்கு இட்டுச்செல்ல வேண்டும்.

சில அநாவசியமான வார்த்தைகள் அவர்கள் மனதில் காம எண்ணத்தை தூண்டுவதாக இருந்தால் அதன் பிரதிபலன் அதிமோசமாக இருக்கும் என்பதை இவ்வாறான ஆசிரியர்கள் உணராதவர்களா?

பெண்களின் உள்ளாடைகளைப் பற்றியே வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் சமுதாயத்துக்கு செய்யும் சேவை இதுதானா?

அந்தப் பொறுப்புக்குரியவர்கள் அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். தன் உயிரிலும் மேலாக அன்புசெலுத்தி ஆசிரியர்களை நம்பி வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு சம்பந்தப்பட்டவர்கள் செய்யும் பிரதியுபகாரமா இது?

திருடனாய்ப் பார்த்து திருந்த வேண்டும்.

அச்சுவலைச் சந்திப்பு 02

இளையதம்பி தயானந்தா – ஆசிரியர் - இருக்கிறம்

நான் இல்லாதபோதும் கூட அச்சுவலைச் சந்திப்பு நன்றாக நடந்துகொண்டிருக்கிறது. பதிவர்கள், ஊடகவியலாளர்கள் நான் நினைத்ததற்கும் அதிகமானோர் வந்திருக்கிறார்கள்.

இது வெறும் சந்திப்புதான்.

எமது விழுமியங்களையும் மொழியையும் காக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இன்றைய உலகம் இணையத்தின் பங்களிப்போடு தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் இணையத்தையும் ஊடகத்தையும் இணைக்கவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.

நாம் எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம்? எதற்காக எழுதுகிறோம்? நாம் எழுதுவதானால் ஏற்படும் அனுகூலங்கள் என்ன என்பது பற்றி சிந்தித்து எழுதுபவர்களை நான் குறைவாகவே காண்கிறேன். ஆகையால் நமது மொழிசார்ந்த அக்கறையாளர்கள் என்ற வகையில் இதற்குத் தீர்வு காணும் அடிப்படையாக இந்த சந்திப்பினை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இனியும் நாங்கள் சந்திப்போம். இருக்கிறம் எப்போதும் உங்களுக்காக இருக்கிறது.

இந்திய சஞ்சிகைகளின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் பல சவால்களுடன் இந்தப் பெயர்கொண்டு ஆரம்பித்தோம். பத்திரிகைகளையும் இந்திய சஞ்சிகைகளையும் பார்த்துப்பழகிய நம்மவர்களை ஓர் ஈழத்துச் சஞ்சிகை எவ்வாறு கவரவேண்டும்? எவ்வாறான தகவல்களை உள்ளடக்கலாம் என பல மாதங்களாக திட்டமிட்டோம். ஏன் இன்னும்கூட அது நடக்கிறது.

தமிழனாக இருந்து தமிழனுக்காக சஞ்சிகை நடாத்துவதன் சிரமங்களை நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் நாம் உழைக்கப் பிறந்தவர்கள். ஏதோ ஒருவகையில் இந்தத் துறைக்குள் ஈர்க்கப்பட்டு இன்றுவரை அதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமது சமுதயாம், மொழிக்காக பாடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பேசிய விடயங்கள் :

முன் அட்டை, இந்திய சினிமா போன்ற விடயங்களை சந்தைப்படுத்தலுக்காக கையாள வேண்டிய கட்டாயம் உண்டு. வருமானத்தினூடாகத்தான் இதனை நடாத்திச்செல்ல முடியும்.

மொழி வழக்கைப் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். சில எழுத்துப்பிழைகள், தவறுகள் இருக்கின்றன என்பதற்கான நாம் மொழிப்பற்றற்றவர்கள் என்ற நிலைப்பாடு கொள்ளலாகாது.

நமக்கென உரிய மொழிச்சொற்கள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மொழிப்பயன்பாட்டோடு பாதுகாக்க முதுசரம் சஞ்சிகையை வெளியிட நினைத்தோம்.

இனிவரும் காலம் பல நல்ல முயற்சிகளுக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

நடராஜா குருபரன் - ஊடகவியலாளர்

காலத்தின் சோதனையால் நாம் இன்று பிரிந்துநிற்கிறோமே தவிர மனதால் ஒன்றுபட்டிருக்கிறோம். உங்களை எல்லாம் நேரில் சந்திக்கவில்லையே என்ற ஆதங்கத்தை இருக்கிறம் போக்கியிருக்கிறது. தயானந்தா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடன் ஊடகங்களில் பணியாற்றிய நிறைய நண்பர்களை, எனக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தவர்களை இன்று பார்க்கிறேன்.

தயா அண்ணா கூறியதுபோல எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்றில்லாமல் நன்றாக சிந்தித்து, அது பொழுதுபோக்கு அமிசமாயினும் சரி, நடைமுறைவிடயங்களாயினும் சரி காத்திரமாக வழங்கப்படல் வேண்டும்.

குறிப்பாக பால்நிலை சமத்துவத்தை நாம் பேணவேண்டும். பல வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இழிநிலை வார்த்தைப் பிரயோகங்களை நான் பார்த்துவருகிறேன். இது நமது சமுதாயத்தை மேலும் கீழ்தரத்துக்கு தள்ளும் செயலாகும்.

நாம் ஏன் இன்று இவ்வாறிருக்கிறோம்? நமக்கான களம் என்ன? என்றெல்லாம் சிந்திப்பவர்கள் இவ்வாறு எழுதுவதில்லை.

குறிப்பாக ஊடக தர்மம் குறித்து சிந்திப்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இதனை ஒரு குறையாக நினைத்துக்கொள்ள வேண்டாம். செம்மைப்படுத்தலின் அவசியம் காலத்தின் தேவை என்பதாலேயே நான் இதைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு விடயத்தை எழுதும்போது அதனால் மற்றொரு சமூகமோ, வர்க்கமோ, மொழியோ அல்லது இதர விடயங்களோ பாதிக்கப்படக்கூடாது. அதனால் நாம் எழுதுவதன் காத்திரத்தன்மையை இழந்துவிடுகிறோம்.

ஒரு தளத்தில் வருவதை அவ்வாறே பிரதிபண்ணி தமது இணைங்களிலும் வலைத்தளங்களிலும் பதிந்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். நான் எழுதும் பல கட்டுரைகள் பெயர்கூட குறிப்பிடப்படாமல் பல தளங்களில் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறானவற்றைத் தவிர்த்து தரமான தகவல்களை நாங்கள் வழங்க முன்வரவேண்டும். தமிழால் சாதனை படைப்பதற்கு நிறைய இருக்கிறது. அந்த சாதனை படைப்பதற்கான வழியை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்திப்பு அதற்கான ஏற்பாடாக அமையட்டும்.

எழில்வேந்தன் - ஊடகவியலாளர்

இணையத்தளங்களில் நாம் எழுதும் விடயங்கள் குறித்து இங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. தமிழில் விடப்படுகின்ற தவறுகள் பற்றி வித்தியாதரன் நன்றாக எடுத்துக்கூறினார்.

இவ்வாறான பிழைகளைத் தவிர்த்து முறையாக எழுதவேண்டியது நமது கடமையாகும்.

நான் ஒரு விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
நமது கலாசாரம், நமது மொழி என பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியச் சொற்கள், இந்திய படங்களை ஏன் நாம் நம்பியிருக்க வேண்டும். இருக்கிறம் சஞ்சிகையில் தற்போது அவ்வாறான போக்கு காணப்படுகிறது. எனக்குத் தந்த சஞ்சிகையில் கூட இந்திய சினிமாவுக்கே அட்டைப்படத்துடன் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்.

இதற்கான விளக்கத்தை நான் இருக்கிறம் நிர்வாகத்தினரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

…………………………………………………………..
முகுந்தன் (வலைப்பதிவரல்லாமல் ஆர்வத்தின் காரணமாக வந்தவர்), சட்டத்தரணி மர்சூம், அறிவிப்பாளர் முகுந்தன், பிரதீப், ஒளிபரப்பாளர் முஷாரப் என ஒரு பட்டாளமே அங்கு தமது கருத்துக்களை முன்வைத்தது.
அனைவரினதும் பேச்சுக் குறிப்புகள் என்னிடம் இருக்கின்றன.

எனினும் அது இருக்கிறம் சஞ்சிகையின் வளர்ச்சிகான விமர்சனங்கள் என்பதால் நான் இங்கு எழுதவில்லை.
(தொடரும்)