Sunday, November 3, 2019

சூரியன் வானொலியின் செய்திகள்- ஒரு சாமானியனின் பார்வை!


லங்கையில் சூரியன் வானொலிக்கு என்று தனியிடம் உண்டு. ஊடகப் பரப்பிலும் சூரியன் என்ற பெயருக்கு களங்கம் எதுவும் இல்லை.

அண்மைக் காலமாக சூரியனை நான் மிக அதிகமாகவே விமர்சித்து வந்திருக்கிறேன். சூரியன் இணையத்தளச் செய்திகளின் மிக மோசமான போக்கு குறித்து அதன் ‘பாஷை’யில் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் காலப்பகுதியில் சூரியனுக்கு எதிரான பதிவுகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன. சுருக்கமாகச் சொல்லப்போனால், பொழுதுபோகாத சந்தர்ப்பங்களில் சூரியன் செய்திகளுக்கு பேஸ்புக்கில் வரும் பின்னூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு.

நான் சூரியன் வானொலியின் அபிமானி. ஆரம்ப காலத்தில் பிரதி வெள்ளிக் கிழமைகளில் காலை நேரத்தில் இலக்கியம் பற்றிய நிகழ்ச்சி இடம்பெறும். அந்த நிகழ்ச்சியை நான் பெரும்பாலும் தவறவிட்டதில்லை. செய்தி அறிக்கைகளையும் அப்படித்தான்.

இப்போது அடிக்கடி வானொலி கேட்பதில்லை. காலை நேர நிகழ்ச்சியில் 7.30 மணி, பொற்காலப் புதனில் பெரும்பாலும்- அவ்வப்போது செய்தியறிக்கைகள் எனக் கேட்பதுண்டு.

சூரியன் செய்திகள் பக்கசார்பாக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அது பெரும் பணக்கார முதலையின் சொத்து என்பதால் அநேகமாக அலட்டிக் கொள்வதில்லை.

ஆனாலும் செய்தி அறையில் தொழில்புரியும் ஊடகவியலாளர்களின் நேர்மையை நான் நன்கறிவேன்.

ஆயினும் என்னதான் செய்திகளை எழுதினாலும் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது வாசிப்பாளர்கள்தான். அவர்களுடைய அண்மைக்கால போக்கு மிக மோசமாக இருக்கிறது.

உச்சரிப்பு என்ற பெயரில் நச்சரிக்கிறார்கள். அதை சூரியனின் மேலிடம் தான் ஒரு ட்ரெண்டுக்காக உருவாக்கிப் பின்தொடர வைக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் அதனைக் கேட்கும்போது நெஞ்சு அழுத்துகிறது.

எல்லா அறிவிப்பாளர்களுடைய வாசிப்பும் அல்ல. ஒருசிலரின் வாசிப்பு….. ம்ம்ம் வார்த்தைகள் இல்லை.

தமிழில் ஒரு மாத்திரைச் சொற்களை மூன்றரை மாத்திரைக்கு இழுத்துச் செல்வதும், தங்களுடைய பெயரை உச்சரிப்பதில் காட்டும் அழுத்தத்தை ஏனைய முக்கியமான வரிகளுக்கு வழங்காமல் இருப்பதையும் நான் அவதானிக்காமல் இல்லை.

இதை, சூரியனின் பாஷையில் கூறியதற்கு விளக்கம் கேட்டு அழைப்புகள் பல வந்திருந்தன. அதன் விளக்கமாகவே இந்தப் பதிவை மேற்கொள்கிறேன்.
இது மோசமான பதிவு என்று, இன்று விமர்சிப்பவர்கள் - கடந்த காலங்களில் நான் ஏனைய வானொலிகளை, தொலைக்காட்சியை கடுமையாக விமர்சித்தபோது கூடிப் பேசி மகிழ்ந்தவர்கள் என்பதையும் நான் அறியாதவனில்லை.

நிற்க:
வானொலி என்பது ஒரு வீட்டின் குழந்தை போல, அறிவிப்பாளர்கள் எனச் சொல்லிக் கொள்ளுகின்ற பெரும்பாலானவர்களுக்கு இந்த விடயம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

மயான அமைதியிலும் எங்கோ ஒரு மூலையில் தன்னந்தனியாக ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலியை நேசிப்பவர்கள் மிக அதிகம். அந்தக் குழந்தை சிரிக்கும் போது சிரிப்பதும் அழும்போது அழுவதுமாக நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.

அதேபோன்று குழந்தை நல்லது செய்யும் போது பாராட்டுவதும் முறை தவறும்போது கண்டிப்பற்குமான அத்தனை உரிமையும் நமக்கிருக்கிறது.

இதனை யாரும், எந்த வகையிலும் மறுக்க முடியாது.

சூரியன் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் மக்கள் எதிர்த்துக் கேட்க மாட்டார்கள் என்ற மனநிலை ஒருசிலருக்கு இருக்குமானால் அது மிக மோசமான பின்விளைவை ஏற்படுத்தும். சூரியனை விரும்பாத பலர் மாற்று வானொலிகளைக் கேட்பதில்லையா? இணைய வானொலிகளைச் செவிமடுப்பதில்லையா?

சூரியனோடு நெடுங்காலம் பணிபுரியும் பலருக்கு அதன் தற்போதைய போக்கு பற்றிய விவாதத்தைக் கருப்பொருளாகக் கொள்ளும்போது என்னுடைய பதிவுகள் நிச்சயமாக மனதைப் புண்படுத்திவிடாது.

அறிவும், பண்புகளுக்குமான தேவைகளைத் தாண்டி காசு, காசு என்று - பணம்தான் முக்கியம் என்பதைத் தூண்டிவிட்டதும் சூரியன்தானே? என்று என் நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

அந்தக் கேள்விக்கு என் பதில் மௌனமாகவே இருந்தது.

இங்கே அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சிகளைப் பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இல்லை. நான் முழுவதுமாக ஆதங்கப்படுவது செய்தி அறிக்கைகள் பற்றித்தான் என்பதை திருத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மூத்தவர்களிடம் கற்று அறிந்த அறிவிப்பாளர்கள் சூரியனில் இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாளைக்கு செய்தி வாசிக்கட்டும். வித்தியாசத்தை நேயர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

நேயர்களின் இரசனையை மாற்றி, இப்படித்தான் தமிழ் மொழிநடை இருக்க வேண்டும் என ஒரு மாயை ஏற்படுத்தப்படுவது ஆரோக்கியமானதல்ல.

அடுத்ததாக, எனது பேஸ்புக் கணக்கு தனிப்பட்டது. அது, இறக்குவானையில் பிறந்த நிர்ஷன் இராமானுஜம் என்ற சாமானியனின் கணக்கு. அதில் எனக்குத் தெரிந்ததை, நான் அறிந்ததை, கிண்டல், குழப்பங்களை, கவிதைகளை, இரசனைகளை என எல்லாவற்றையும் பதிவிடுவேன்.

அதனையும் ஊடகத் தொழிலையும் இணைத்துப் பேசுவது விமர்சிப்பது… அடடா…. ஒரு சிலருக்கு இது தொழிலாகிப் போய்விட்டது.

ஊடகவியலாளர்களாக நாம் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். தொழிலில் போட்டித்தன்மை இருக்கலாம், அதற்காக நமது சுயமான அன்பை, பிணைப்பை எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை.

எனது பேஸ்புக் கணக்கு, ஊடகவியல் தொடர்புபட்டது என்றால் எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நான் எங்கே பதிவிடுவது? இது நியாயமான கேள்விதானே தோழர்களே?

ஆக, சூரியன் மீதான என் அண்மைய பதிவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டோரும் இல்லாமல் இல்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டு, அந்தக் காற்றில் தீயையும் மூட்ட முயற்சித்தவர்கள் இருக்கிறார்கள். இதுதானே உலகம்?

இனியும் என் பயணம் இதேபோன்று தொடரும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. நாம் பக்கசார்பற்ற செய்தியறிக்கையைத் தருகிறோம், தமிழ்ப் புலமைமிக்க அறிவிப்பாளர்கள்தான் செய்தி வாசிக்கிறார்கள் என நியாயம் வழங்கப்படுமாக இருந்தால், அதனைக் கடந்து செல்லவும் பிரயத்தனப்படுகிறேன். ஏனென்றால், இங்கே எல்லாமே சிலகாலம் தான்.

-நிர்ஷன் இராமானுஜம்-
இறக்குவானை.
03.11.2019

Monday, October 14, 2019

Digital யுகத்தில் மலையகத்தின் குரலாக ஒலிக்கும் மலையகம்.lk – அங்குரார்ப்பண விழா பற்றிய பார்வை


மலையகம்.lk இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் மலையக சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும் ஹற்றன் புனித பொஸ்கோஸ் கல்லூரியில் நேற்று (13) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மலையகத்தின் தனித்துவமான கலை அம்சங்களைத் தாங்கி, பாரம்பரிய அடையாளங்களை வெளிக்கொணரும் வகையில் இவ்விழா மிக நேர்த்தியாகவும் மனதைக் கவரும் விதத்திலும் இடம்பெற்றது.


மலையகம்.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் கே. தனபாலசிங்கத்தின் (ஆர்.ஜே. தனா) தலைமைத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் நிறைந்த இளைஞர் பட்டாளம் முன்னின்று இந்த நிகழ்வை நேர்த்தியாக வடிவமைத்திருந்தது.

இந்த விழா குறித்தான என்னுடைய பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.


ஆரம்பம்
கல்லூரி வளாகத்திலிருந்து தப்பு இசையோடு காவடியாட்டத்துடன் அதிதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பக்திப் பரவசத்தோடு அவர்கள் அந்தக் கலையை நிகழ்த்திய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது.

விழாவின் ஆரம்பமாக மலையகம்.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் கே. தனபாலசிங்கம் (தனா) வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்பு மாத்திரமன்றி இணையத்தளத்தின் ஆரம்பம், இளைஞர்களை இணைத்துக்கொண்டமை, திட்டமிடல்கள், சிரமங்கள், சவால்கள் என அத்தனையும் அவரது உரையில் பதிவு செய்தார்.

“நான், வீட்டு வேலைகளை அதிகமாகக் கவனித்தது கிடையாது. இப்படியொரு இணையத்தளத்தை என் மண்ணுக்காக உருவாக்கும் கனவு இன்று மெய்ப்பட்டிருக்கிறது. இதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம் உண்டு. அவற்றையெல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாவிட்டாலும், அவை அத்தனையும் இன்று மகிழ்ச்சிப் பூக்களாக என் மனதை ஆராதித்துக்கொண்டிருக்கின்றன.
இனிமேல் என் குடும்பத்துக்காக நேரத்தைச் செலவிடுவேன். அம்மா, அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்களை இனி கவனித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என மிக உருக்கமாக கருத்து வெளியிட்டார்.

அவ்வேளையில், சபையில் மத்திய இருக்கைகளில் அமர்ந்திருந்த தனாவின் பெற்றோர் நெகிழ்ச்சியடைந்ததை பலர் அவதானித்திருக்க வாய்ப்பில்லை.

நிகழ்வு
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் பட்ட துன்ப, துயரங்களை அடிப்படையாகக் கொண்டும் மலையக மக்களின் பாரம்பரிய கலைவடிவங்களோடும் டிக்கோயா நுண்கலை கல்லூரி மாணவர்கள் முதல் நிகழ்ச்சியைப் படைத்தார்கள்.

“காடுகளே போய்வரவா..” என்ற பாடலோடு, தத்தளிக்கும் கப்பலில் மண்ணைவிட்டு, சொந்தங்களை விட்டு வேறு தேசத்துக்குப் பெயர்ந்த எம் மக்களின் கண்ணீரை அந்த மாணவர்கள் யதார்த்தமாக வெளிக்கொண்டு வந்திருந்தார்கள்.

குறிப்பாக, “வெளையாத காட்டவிட்டு
வெளையாண்ட வீட்டவிட்டு
வெள்ளந்தியா வெகுளிச்சனம்
வெளியேறுதே..
வாழ்வோடு கொண்டு விடுமோ
சாவோடு கொண்டு விடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி நீளுதே..!
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே
வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே” என்ற வரிகளை மாணவர்கள் பாடி, நடித்தபோது சபையினர் கண் இமைக்காமல் பார்த்திருந்தனர்.

அதனையடுத்து கண்டிச்சீமைக்கு வந்த மக்கள் வேதனையோடு தொழில்புரிந்தாலும் தமது மண்சார்ந்த, வாழ்வியல் சார்ந்த பாடல்களைப் பாடி மகிழ்ந்த விதத்தையும் மாணவர்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை.

“மலையோரம் காட்டுக்குள்ள
கொழுந்தெடுக்கப் போறபுள்ள” என்ற காதல் துளிர்க்கும் பாடல் முதல் ஒப்பாரிப்பாடல் வரை ஒரு முழுமையான படைப்பை மேடையேற்றியிருந்தார்கள்.

இந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் மற்றும் சிறப்பு அதிதிகளால் மலையகம்.lk இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

மலையகத்தில் அனைத்து விதத்திலும் பேசப்படும் பாடசாலையாகத் திகழும் கேகாலை, கந்தலோயாவின் மாணவர்கள் மேலும் விருந்தளித்தார்கள் என்றே சொல்ல முடியும். அதிலும் குறிப்பாக பறை இசையில் கைதேர்ந்தவர்களாக தனித்துவமான படைப்புகளை வழங்கினார்கள்.

பறை என்பதை பலர் தாழ்த்தப்பட்டதாக நினைப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள் அது தமிழரின் பாரம்பரிய இசை என்பதை வலியுறுத்தியிருந்தார்கள்.

அதுமாத்திரமா? பறையின் இசை வடிவங்களைச் சொல்லி அதற்கேற்றாற்போல இசையமைத்துக் காட்டியமையால் கரகோஷத்தால் நிறைந்தது அரங்கு.

விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட மலையகக் கலைஞர்களும் தமது திறமையை மேடையில் வெளிக்காட்டியிருந்தார்கள்.

கௌரவம்
மலையகத்தில் பல்வேறு துறைசார்ந்து பங்களிப்பு வழங்கிவரும் படைப்பாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு இதன்போது கௌரவம் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் முக்கியஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

நாட்டார் பாடல் கலைஞர், நாட்டார் பாடல்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பண்டாரவளை கதிர்வேல் விமலநாதன், காமன் கூத்துக் கலையை காலங்காலமாகப் பேணிவரும் மஸ்கெலிய லங்கா தோட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் ராமர் மற்றும் சின்னையா சுப்ரமணியன் ஆகியோர் தங்களது அளவில்லாத மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொண்டனர்.

அதுமாத்திரமல்லாது புரட்சிக் கவிதைகள் மூலம் நற்கருத்துகளை விதைத்துவரும் பொகவந்தலாவை ப. கணகேஸ்வரன், மலையகத்தில் இளம் படைப்பாளர், நூலாசிரியர் கணேசன் பிரவீனா, இளம் விஞ்ஞானி விஷ்ணு தர்ஷன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை பாராட்டுக்குரியது.

சூரியன் வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் உதவி முகாமையாளர் அஜித் குமார், கந்தலோயா பாடசாலையின் அதிபர் கருணாகரன், சாதனை ஓட்ட வீரர் சண்முகேஸ்வரன், தேசாபிமானி பதூர் பாபா ஆகியோரையும் மலையகம்.lk குழு கௌரவித்தது.
பத்தனை ஸ்ரீபாத அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் திருமதி. சந்திரலேகா, விரிவுரையாளர் திருமதி. ரூபாராணி, மலையக சமூக ஆய்வு மைய இணைப்பாளர் சிவன் பிரபா, சமூக செயற்பாட்டாளர் பொன் பிரபா ஆகிய சிறப்பு அதிதிகளும் விழாவில் கௌரவம் பெற்றனர்.











நிறைகள்:
நமது தனித்துவமான கலைகள் மேடையேற்றப்பட்டமையை நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அனைவரும் மனம் திறந்து பாராட்டினார்கள். நிகழ்ச்சிகள், மேடைப் பேச்சுகள் அனைத்தும் வெகு நேரம் எடுத்துக்கொள்ளப்படாமல் ஏற்பாட்டாளர்கள் முக்கிய அவதானம் செலுத்தியிருந்தார்கள். சித்திரக் கலைஞர் கணேஷ் வெகுவாகப் பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டமையும் நினைவுகூர வேண்டும்.

முக்கிய கவனம் செலுத்தப்பட்ட விடயம்:
இந்த விழாவின் வெற்றிக்கு அறிவிப்பாளர்களின் பங்கு பாரியளவில் பக்கபலமாக அமைந்திருந்தது. சுதர்ஷன், விநோத், நவீன் ஆகிய இளையோர்கள் மூவர் சபையினரின் மனதில் இடம்பிடித்துக்கொண்டார்கள். அவர்களது நிகழ்ச்சித் தொகுப்பு, கம்பீரமான குரல் என்பன அரங்கை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தன.

இதேவேளை, கௌரவத்தின்போது யாருக்கும் பொன்னாடை போர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அரசியல்வாதிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படாமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

விமர்சனங்கள்:
இந்தப் பாரிய விழாவினை நடத்துவதற்கு புனித பொஸ்கோஸ் கல்லூரியின் கேட்போர் கூடம் பொருத்தமானதாக இல்லை. மேடையில் போதியளவு வெளிச்சம் இல்லாமையால் முதல் நிகழ்ச்சியில் ஒருவகை தொய்வு காணப்பட்டது.

சவால்கள்:
மலையகம் சார்ந்து பல்வேறு இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் நமது வாழ்வியலை அடையாளப்படுத்துவதாக, தனித்துவத்தைப் பேணுவதாக, சமூக அவலங்களை ஆதாரங்களோடு வெளிப்படுத்துவதாக, நமது பாரம்பரிய கலை வடிவங்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்வதாக அமைவதில்லை.

ஆனால் மலையகம்.lk என்ற இணையத்தளக் குழுவினருக்கு இந்தத் தார்மீகப் பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயப்பாடு உண்டு.

இப்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் இனிவரப்போகும் அதையும் தாண்டிய நவீன காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களோடு பயணிக்க வேண்டிய தேவையும் உண்டு.

வெறுமனே இணையத்தளத்தை ஆரம்பித்துவிட்டோம், இனி இயலுமானதைச் செய்துகொண்டு தொடருவோம் என்றுதான் பலர் இணையத்தளங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் அரசியல் தேவைக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் பொழுதுபோக்குக்காக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கே, இவற்றைத் தாண்டி இணைய வெளியில் மலையகத்தின் தாய் இணையத்தளமாக அதனை மாற்றியமைத்து மக்களின் மனதில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக் கூடிய வகையில் மலையகம்.lk இணையத்தளக் குழுவினர் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

-நிர்ஷன் இராமானுஜம்-
இறக்குவானை
14.10.2019

Thursday, August 15, 2019

ஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா? துரோகிகளா?


சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் கட்சியின் அரசியல் பிரமுகர்கள் நியாயப்படுத்தி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் ஆறுமுகன் தொண்டமான், வழமைபோல தனது விசுவாசிகளின் மீது பாரத்தைச் சுமத்திவிட்டு அமைதியாய் தப்பிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

வெகு இலாவகமாகத் தப்பித்துக்கொள்ளும் வழி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனபோதும் அந்தக் கட்சி செய்துள்ள மாபெரும் நம்பிக்கைத் துரோகம் அதன் தொடர் பயணத்துக்கு இன்னுமின்னும் தடையாக அமையும் என்பதே உண்மை.

ஆறுமுகன் என்ற நபருக்கு, தொழிலாளர்கள் எனப்படுகின்றவர்கள் எப்போதும் மூன்றாம் பட்சம் தான். தொழிலாளர்களைப் பயன்படுத்தி எந்தளவுக்கு நன்மை அனுபவிக்க முடியுமோ அந்தளவுக்கு அதன் உச்சத்தை அடைவதுதான் அவருடைய எண்ணம் என்பதற்கு கடந்த கால நடவடிக்கைகளே கண்கூடு.

கூட்டு ஒப்பந்தம் பற்றியதான தொழிலாளர்களின் கோபமும் வேகமும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே என்பதை ஆறுமுகன் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். அதற்கு ஏற்றாற் போல தொழிலாளர்களும் அவரை நம்பி, நம்பியே ஏமாற்றமடைந்து வருகிறார்கள்.

நிற்க,
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே சந்தாப்பணம் (மூன்றில் ஒன்றாக) அதிகரிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அறிக்கைகளுக்குப் பெயர்போனவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எந்தவொரு இடத்திலும் அவ்வாறனதொரு சரத்து இடம்பெறவில்லை.

இறுதியாக முழுமைப்படுத்தப்பட்ட 2003 ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பாகம் 2, இரண்டாம் பகுதியில் அ. பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அ. உறுப்பினர் ஒருவரிடமிருந்து அறவிடப்படக் கூடிய சந்தாப் பண விபரத்தை, சந்தா தொடர்பான விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டு, தொழிற்சங்கத்தின் தலைமையகம் வாயிலாக மாதத்தில் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறியத்தருவதுடன் எந்த மாதத்திலிருந்து அந்தத் தொகையை கழிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இதற்கு அடுத்ததான பிரிவுகளில் ஏனைய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆக, இங்கே தொழிலாளர்களின் அனுமதி இல்லாமல் சந்தாவை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. அதேவேளை, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்காமல் அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லை.

அவ்வாறெனின் யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? யாரால் யார் ஏமாற்றப்படுகிறார்கள்?

தொழிலாளர்கள், தங்கள் தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கை என்ற ஆயுதத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பியிருக்கிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். தொழிற்சங்க ரீதியில் தங்களை விட்டால் யாருமில்லை என்ற இறுமாப்பும் அதீத கர்வமும்தான் இதற்குக் காரணம்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மக்களை வீதியில் இறக்கி, இறுதியில் நிலுவைப் பணத்தைக் கூட பெற்றுக்கொடுக்காமல் வெறும் 20 ரூபாவை அதிகரித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தங்களுடைய சுய இருப்பு கருதி 63 ரூபாவை கௌரவப் பிச்சையாக எடுத்துக்கொண்டுள்ளது.

சந்தாவை மாத்திரம் அதிகரித்துக்கொண்ட இ.தொ.கா., கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தொழிற்சங்கம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பிலும் உற்பத்தி அதிகரிப்பில் பங்களிப்பு தொடர்பிலும் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன?

மக்களின் இயலாமையையும் பலவீனத்தையும் சாதகமாகப் பயன்படுத்துவதில் ஆறுமுகனுக்கு நிகர் ஆறுமுகனே தான் என்றால், அது சாலப் பொருத்தமாகும்.

அது ஒருபுறமிருக்க, தற்போதைய அரசாங்கத்தில் பலம் மிக்க அமைச்சராக இருக்கும் பழனி திகாம்பரத்தின் செயற்பாடு தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவரது அலுவலர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அமைச்சர் மீதான நம்பிக்கையீனத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பான தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தின் மூலம் பெறப்பட்டு தினக்குரல் பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது.

அந்தச் சட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவல்களை முன்னிறுத்தி ஊடகவியலாளர் கருப்பையா பிரசன்னகுமார் கட்டுரையை எழுதியிருந்தார். இந்நிலையில் கட்டுரையில் உள்ள தகவல்கள் பிழை எனக் கூறி அமைச்சர் திகாம்பரம், ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அது மாத்திரமன்றி மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியுள்ளார்.

தலைவனின் வழியில் தொண்டன் என்ற வகையில் அமைச்சரின் ஊழியர் ஒருவரும் அவரது பங்கை விட்டு வைக்கவில்லை. தினக்குரல் ஆசிரிய பீடத்துக்கு வந்து விசாரிப்போம் எனவும் ஊடகவியலாளரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அழைப்பை எடுப்பதாகவும் மிரட்டியிருக்கிறார்.

சமூகத்துக்கான தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வது ஓர் ஊடகவியலாளனின் கடமைகளில் ஒன்றாகும். கடமையைச் செய்த ஊடகவியலாளருக்கு அமைச்சர் கொடுத்த பரிசு தான் ‘கொலை அச்சுறுத்தல்’.

'சரி... மலையகத்தைச் சார்ந்த ஊடகவியலாளன் தானே? மிரட்டினால் இனி எழுத மாட்டான்' என அமைச்சர் நினைத்திருப்பார் போலும்.

இங்கே ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன், இதே கட்டுரையை எழுதிய பிரசன்னா என்ற ஊடகவியலாளர் தான் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினத்துக்கான ஒருநாள் செலவு 50 இலட்சம் என்ற உண்மையையும் வெளிக்கொண்டு வந்தார்.

தினக்குரல் வெளியிட்ட தகவல் பிழை என்றால் அந்த ஊடகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம், அல்லது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் பிழை என்றால் அது தொடர்பில் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருக்கலாம். அதைவிடுத்து ஊடகவியலாளரை மிரட்டும் சிறுபிள்ளைத்தனமான செயலைச் செய்ததை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விடயத்தை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டித்திருந்தது.

ஊடகவியலாளர் ஏன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதன் பின்னணியில் சமுதாய அக்கறை உண்டு என்பதையும் சில காரணங்களையும் காலம் வரும்போது அவர் முன்வைப்பார் என நம்புகிறோம்.

மிக அண்மைக்காலத்தில் நடைபெற்ற இவ்விரு விடயங்களையும் உற்று நோக்கும் போது மனதில் பல கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

அதில் முதலாவது, “இவர்கள் தலைவர்களா?” என்பதே.

தலைவர் எனப் பெயர் வைத்துக்கொண்டவர்கள் எல்லோரும் மக்களின் மனதில் தலைமைத்துவ இடத்தை நிரப்பிவிட முடியாது. மலையகத்தைப் பொருத்தவரையில் அராஜக அரசியல் இடம்பெற்றுள்ளதை நாம் அறியாமல் இல்லை.

அது தொடர வேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தார்களேயானால் அதன் பிரதிவிளைவுகள், பெரும் பாடம் புகட்டுவதைத் தவிர்க்க முடியாது. அத்தோடு மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சுயநலனுக்காகப் பயன்படுத்தி, அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் அது எத்தனை பெரிய துரோகம்?

எங்கள் ஊரில் வாய்மொழி வழக்கு ஒன்று  உண்டு.

“முனியாண்டி வேணாம்னு மாடன்கிட்ட போனோம். அவனும் பலி கேக்குறான்”

இது ஆறுமுகனுக்கும் திகாம்பரத்துக்கும் புரியுமா?

-நிர்ஷன் இராமானுஜம்-

Saturday, February 16, 2019

உண்மைச் சம்பவம்: வஞ்சிக்கப்பட்ட நட்பால் 23 இலட்சம் பறிபோன கதை!


வாசுவும் சாமரவும் மிக நெருங்கிய நண்பர்கள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாசு வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகிறான். அரசாங்க நிறுவனம் ஒன்றில் தொழில்புரிந்து வருகிறான் சாமர. இருவருக்கும் இடையில் மூன்று வருட நட்பு இருந்துள்ளது.

ஒரு தேநீர் கோப்பையில் இருவரும் பகிர்ந்து நுகரும் வகையிலும் ஒரே உணவைப் பகிர்ந்து உண்ணும் வகையிலும் நட்பு வளர்ந்திருந்தது. சாமர தனது நண்பர்கள் சிலரையும் (சிங்களவர்கள்) வாசுவுக்கு அறிமுகப்படுத்தத் தவறவில்லை.

இப்படியிருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாமர தனது திட்டம் ஒன்றுகுறித்து வாசுவுடன் கலந்துரையாடியுள்ளான். அந்தத் திட்டத்தை இவ்வாறு விபரித்துள்ளான்.

அதிர்ஷ்டலாபச் சீட்டு தயாரிப்பவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சீட்டில் உள்ள இலக்கங்கள் தெரிவுசெய்யப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். சரியாக குறிப்பிட்ட தினத்தில் சனிக்கிழமை அதிர்ஷ்டத்தில் திட்டமிடப்பட்ட குறித்த இலக்கங்கள் தெரிவாகும். கிட்டத்தட்ட 15 கோடி பணம் இதன்மூலம் கிடைக்கும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் இப்படி திட்டம் ஒன்றை அரங்கேற்றலாம். 
இப்படி செய்வதற்கு 25 இலட்சம் ரூபா செலவாகும். ஆனால் வருமானம் அதை விட பன்மடங்கு கிடைக்கும்.

இங்கே, சீட்டு தயாரிப்பவர், இலக்கத்தை தெரிவு செய்பவர், அச்சிடுபவர் என ஐந்து பேருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. நீ பணம் தந்தால், அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்குச் செல்லாம்” என நம்பிக்கையூட்டியுள்ளான் சாமர.

இந்த விடயத்தை முழுமையாக நம்பிய வாசு, எதைப்பற்றியும் யோசிக்காமல் சம்மதித்துள்ளான். அதுமட்டுமல்லாது சாமர கோரிய முதல்கட்டப் பணத்தொகையான 5 இலட்சத்தையும் கொடுத்துள்ளான்.

இப்படி கட்டம் கட்டமாக 23 இலட்ச ரூபா பணம் வாசுவால் சாமரவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சமார, இரண்டு அதிர்ஷ்டலாபச் சீட்டுகளை வாசுவுக்கு கொடுத்த போதிலும் அதில் எந்தவொரு இலக்கமும் தெரிவு செய்யப்படவில்லை.

இப்படி காலம் நகர்கையில், சமரவின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாசுவைச் சந்திப்பதிலிருந்து அவன் தவிர்த்துவந்தான். இதனால் சந்தேகம் கொண்ட வாசு தான் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளான்.

இந்த நிலையில், வாசுவை மதிய உணவு விருந்துக்காக தனது வீட்டுக்கு அழைத்தான் சாமர. இனி நடந்த விடயங்களை வாசு இப்படி விபரிக்கிறான்.

அன்று மதியவேளை சாப்பாட்டுக்குப் போனேன். சாமரவும் அவனது மனைவியும் வீட்டில் இருந்தார்கள். சாமரவின் மனைவிதான் எனக்கு உணவு பரிமாறினாள். அன்றுதான் அவளை நான் முதல் முதலாகப் பார்த்தேன். ஆனாலும் அவளுடைய நடத்தையில ஏதோ மாற்றம் இருந்தது. என்னருகில் இருந்து என்னை உரசிக்கொண்டே இருந்தாள். பார்வையும் வித்தியாசமாக இருந்தது.

நான் சாப்பிட்டு முடியும் முன்பே சாமர எழுந்துவிட்டான். அந்த நேரத்தில் என்னுடைய கோப்பையின் கீழ் ஏதோ காகிதத்தை வைத்துவிட்டு உள்ளே சென்றாள் சாமரவின் மனைவி. நான் அதை எடுத்துப் பார்த்தேன். அது கைத்தொலைபேசி இலக்கம்.

நான் கொஞ்ச நேரத்தில அங்கிருந்து வந்துவிட்டேன். அன்றிரவு அந்தத் தொலைபேசி இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சாமரவின் மனைவி எனக்கு அழைத்திருந்தாள். நான் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும் என்னைச் சந்திக்க வேண்டும் எனவும் கூறினாள். 
இப்படி சில நாட்கள் நகர்ந்தன. 

ஒருநாள் அவள் எனக்கு அழைப்பு எடுத்தாள். ‘சாமர அனுராதபுரத்துக்குச் சென்றிருக்கிறார். நாளை மாலை தான் வருவார். நீங்கள் இன்றிரவு வீட்டுக்கு வர முடியுமா? இரவு 10 மணிக்கு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

சாமரவின் மனைவி அழகானவள். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நான் சாமரவின் வீட்டுக்குச் சென்றேன். அவள் செக்ஸியாக ஆடை அணிந்திருந்தாள். எனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டாள். நான் எதுவும் பேசாமல் அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் அவள் என்னை இறுகக் கட்டி அணைத்துக்கொண்டாள். நானும் அணைத்துக்கொண்டேன்.

திடீரென கதவைத் திறந்துகொண்டு சிலர் வந்தனர். அவர்களில் சாமரவும் இருந்தான். எதுவும் பேசாமல் என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான் சாமர. மற்றொருவன் என் பின் பக்கத்திலிருந்து மார்போடு பிடித்து கைகள் அசையா வண்ணம் இறுக்கிக்கொண்டான். இன்னொருவன் வீடியோ பதிவு செய்தான். மற்றுமொருவன் கதவுக்கு அருகில் நின்றான்.

சாமர என்னைக் கேவலமாகத் திட்டித் தீர்த்தான். என்னைப் பொலிஸில் ஒப்படைப்பதாகவும் மிரட்டினான். சாமரவின் மனைவி அறைக்குள் இருந்து என்னைக் கிண்டலாகப் பார்த்ததை நான் அவதானித்தேன்.

பின்னர் நான் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டேன்.

என்னுடைய 23 இலட்சம் பணத்தின் கணக்கைத் தீர்க்க கணவனும் மனைவியும் இணைந்து நடத்திய நாடகம் இதுவென நான் பின்னர் அறிந்துகொண்டேன்.

எனது பணத்தைத் தருமாறும், மனைவியின் வேண்டுகோளுக்கு அமையவே வீட்டுக்கு வந்ததாகவும் நான் அவனுக்கு அழைப்பு எடுத்து கூறினேன். ‘உன்னோடு இனி எந்தத் தொடர்பும் இல்லை. உன்னைப் பொலிஸ் நிலையத்தில் பிடித்துக்கொடுப்பேன். எங்கேயாவது ஓடியொளிந்துகொள். நீ ஒரு கேவலமான நாய்’ எனப் பதில் கிடைத்தது”
என நடந்த சம்பவத்தை விபரித்தான் வாசு.

நூதனமான திருட்டுச் சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. அதற்கு வாசுவின் இந்தக் கதை ஓர் உதாரணம். வஞ்சகர்கள் நிறைந்த இந்த உலகத்தில் சூழ்ச்சியோடு திட்டமிடப்பட்டு இந்தக் கொள்ளை அரங்கேறியிருக்கிறது. இங்கே நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை. சில பலவீனங்களைப் பயன்படுத்தி இப்படியும் கொள்ளைகள் இடம்பெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டவே முனைந்துள்ளேன்.

அவதானமாக இருப்போம்.

-நிர்ஷன் இராமானுஜம்-
16.02.2019


Tuesday, January 22, 2019

சிங்களவர்களாக மாறும் தமிழர்கள் - கொழும்பு மாவட்ட பெருந்தோட்டமொன்றில் ஒலிக்கும் அவலக் குரல்கள்

* பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம்
* 1983 ஆம் ஆண்டுதான் லயன் கூரைகள் சீரமைக்கப்பட்டன
* 75 வீதமானோர் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள்
* பெரும்பாலான சிறுவர்கள் சிங்கள பாடசாலைக்குச் செல்கிறார்கள்





நன்றி ஞாயிறு தினக்குரல் 20.01.2019

-நிர்ஷன் இராமானுஜம்-


“நாம காலம் முழுக்க கம்பனிக்கும் நாட்டுக்கும் உழைச்சுக் கொடுத்திட்டு, தலைவர்களுக்கு அடிமையாக இருக்கனும்னு தான் எல்லாரும் நெனைக்கிறாங்க. இந்த இறப்பர் மரங்கள எங்க சொந்தங்களா நெனச்சு எல்லா சோகங்களையும் மரங்களுக்குத் தான் சொல்றோம். எங்க உசுரு போகும் வரைக்கும் ஏழையாவே வாழனும்னுதான் கடவுளுக்கும் ஆசை போல” -

இப்படிப் பேசுகிறார் வேரகொல தோட்டத்தில் 17 வயதிலிருந்து இறப்பர் பால்வெட்டுத் தொழிலில் ஈடுபட்டுவரும் என். கலைச்செல்வராணி (37).

கொழும்பு – அவிசாவளை வீதியில் பாதுக்கை நகருக்குச் செல்லும் வழியில் இருக்கிறது வேரகொல தோட்டம். எலிஸ்டன் தோட்டத்துக்குச் சொந்தமான பிரிவாக இருந்தாலும் பொதுவாக வேரகொல என்றே அழைக்கப்படுகிறது. சுற்றிலும் சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் மிகவும் மோசமான லயன் அறைகளில் வசிக்கும் அவர்களை நாம் சந்தித்தோம்.

ஆம்! கலைச்செல்வராணியின் ஆதங்கம் இவ்வாறு தொடர்கிறது, “தலைவர்கள் எல்லாரும் தேயிலைய பத்தி மட்டுந்தான் பேசுறாங்க. இறப்பர் தொழிலாளிய பத்தி பேசுறதே இல்ல. நாங்க படுற கஷ்டத்த யார்கிட்ட, எப்படி சொல்றதுனே புரியல்ல”.

“ஒரு நாளைக்கு 7 கிலோ பால் எடுக்கனும். ஆனா, அந்தளவு பால் எடுக்க முடியாது. மரங்களுக்கு ஒருவகையான மருந்து அடிக்கிறாங்க. அதனால வாரத்தில ரெண்டு நாளைக்கு மட்டுந்தான் அந்தளவு பால் எடுக்கலாம். மத்த நாளில 5 கிலோவுக்குக் குறைவா தான் பால் வெட்டுறோம். அப்போ அரை நாள் பேர போட்டு 250 ரூவா தான் சம்பளம் போடுவாங்க”.

“நாங்க ரொம்ப வேதனையோடு வாழுறோம். தொழிற்சங்கங்கள் எல்லாமே நம்மல ஏமாத்துறதுக்குத்தான் இருக்காங்க. சந்தாவ நிறுத்திட்டு, இவங்களுக்கு வோட்டுப் போடுறதையும் நிறுத்தனும். நம்ம உசுரு இன்னும் கொஞ்ச காலம் தானே இந்த ஒடம்ப தாங்கிகிட்டு இருக்கப்போகுது. ஏதோ பிறந்ததுக்காக வாழ்ந்திடுவோம் என்கிற நிலையில தான் இப்போ நாங்க இருக்கிறோம்” என்றார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களா இந்தளவு இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு கவனிப்பாரற்றிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. லயன் குடியிருப்புகள் இடிந்து வீழ்ந்துள்ளதால் வீடுகளுக்கு மத்தியில் மாடுகள் வசிக்கும் நிலைதான் அங்கு காணப்படுகிறது. கடும் மழைபெய்யும் காலங்களில் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் அவலச் சூழலுக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இங்குள்ள மக்கள் சொல்லும் மற்றுமொரு ஆச்சரியத் தகவல் என்னவென்றால், இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் தங்களது குடியிருப்புப் பக்கம் காலடி எடுத்து வைத்ததில்லை என்பதுதான்.

இவர்கள் வாழும் லயன் குடியிருப்புகள் 1983 ஆம் ஆண்டுதான் இறுதியாக சீர்செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு தமக்கு இயலுமான வகையில் கூரைத்தகடுகளைப் பொறுத்தி வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களுடைய வாழ்க்கைச் சூழல் குறித்து பி.எஸ். காந்தி (48) இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“நாங்க காலையில அஞ்சர மணிக்கு வெட்டுக்கு வருவோம். காலையில தான் பால் அதிகமா சுறக்கும், அதோட வெய்யிலும் குறைவா இருக்கும். ஆளுக்கு 300 மரங்கள் பார்க்கனும். கால வெட்டு முடிஞ்சு அந்தி வெட்டுக்கும் போகனும்னு சொன்னாங்கனா, ஒரு மரத்துகிட்ட 2 தடவ படி 600 தடவ வேல பார்க்கணும்”.

மழைக்காலங்கள்ல வெட்டு எதுவும் இல்ல. தொடர்ச்சியா மழை பெய்தா எங்க நிலை ரொம்ப மோசமாகிடும். ஒருசில மாதங்கள்ல மாசம் 5ஆயிரம் ரூவா சம்பளம் எடுத்ததும் உண்டு. எங்களோட சிரிப்புக்கு எல்லாம் சந்தோஷம்னு அர்த்தம்; இல்ல. வெளியில் சொல்ல முடியாத ஏராளமான பிரச்சினைகள ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குறோம்”.

இந்தத் தோட்டத்தில் உள்ளவர்களில் 75 வீதமானோர் சிங்கள மொழியைப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதுமாத்திரமல்லாது பெரும்பாலான மாணவர்கள் சிங்கள பாடசாலைகளிலேயே தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடருகிறார்கள்.



இது குறித்து மரியசூசை இந்திரா (52) கூறுகையில், இங்க சுற்றிவர சிங்கள ஆட்கள்தான் இருக்காங்க. நாம இங்க வந்து குடியேறிய நாள் தொடக்கம் அவங்களோடதான் உறவு இருக்குது. தமிழர்கள் பலர் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்திருக்காங்க. வீட்டிலயும் சிங்களத்தில பேசிப்பேசியே பழக்கமாகிடுச்சி. பக்தில சிங்கள ஸ்கூல் இருக்கதால பிள்ளைகளும் அங்கேயே படிக்கிறாங்க” என்றார்.


இந்தத் தோட்டத்தில் இறப்பர் தொழிற்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் பற்றி எஸ். இராஜரத்தினம் (35) பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“இறப்பர் மரங்களுக்கு ஒரு வகையான இரசாயனப் பதார்த்தம் பூசப்படுது. இப்படியொரு செயற்பாடு கடந்த ஒரு வருஷமா தான் நடக்குது. அப்படி இரசாயனப் பதார்த்தம் பூசின பிறகு பால் ரொம்ப கிடைக்குது. ஆனாலும் மரம் கூடிய சீக்கிரத்திலேயே பால் தரும் சக்திய இழந்திருது. அதாவது வாரத்தில 3 நாளைக்கு பால கறக்க முடியும் நேரத்தில மிகுதி 4 நாளைக்கு பால் கிடைக்காது. திரும்பவும் மறு வாரம் அந்த இரசாயனப் பதார்த்தம் பூசுவதற்கு உத்தரவிடுறாங்க”.

“அது தவிர ஒரு கப் ஒன்றை வச்சி கேஸ் ஒன்றை மரத்துக்கு உட் செலுத்துறாங்க. இந்தமாதிரி செய்றதுனால 15 வருஷத்துக்கு பால் கொடுக்கிற மரங்கள் எல்லாம் 5 வருஷத்திலேயே காய்ந்து போகும் நிலைதான் இருக்குது”.

“நெறய சக்தி மிக்க நல்ல மரங்கள் எல்லாம் உடைஞ்சு விழும் நிலையில இருக்குது. முன்னர் நிர்வகிச்ச கம்பனியில இப்படியெல்லாம் செய்யல்ல. இப்போ பொறுப்பெடுத்திருக்கிற கம்பனிக்காரங்க தான் இப்படி மோசமான வேலைகளை முன்னெடுக்கிறாங்க” எனத் தனது மன உளைச்சலை கோபத்தோடு கூறினார்.



தொழிற்சங்கங்கள் மீது தாம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையவில்லை என்றும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

கூட்டு ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கு தமது முழுமையான எதிர்ப்பையும் இந்த மக்கள் வெளியிடுகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக இருப்பதாகக் கூறப்பட்டாலும் தோட்டங்களில் முதுகெலும்பற்றவர்களாக நடத்தப்படுவதாகவும் தொழிற்சங்கங்கள், சம்பளப் விடயத்துடன் நிர்வாகமுறைகேடுகள் குறித்தும் பேச வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா அடிப்படைச் சம்பளமே கிடைக்கப்பெறுவதாக கூறுகிறார் எம். ரோஸ்மேரி (27). இவ்வாறானதொரு நிலையில் தமது 3 பிள்ளைகளினதும் கல்விச் செலவு உள்ளிட்ட இதர அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் ஒவ்வொரு நாளையும் சவாலுடன் எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.



மலையகம் என்றால் பெரும்பாலும் மத்திய, ஊவா மாகாணங்கள் மாத்திரமே தலைவர்களின் கண்களுக்குத் தெரிவதாக பொதுவான குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருந்தோட்ட மலையக மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூட கவனிப்பாரற்றிருக்கிறார்கள் என்றால், எந்தளவுக்கு எமது மக்கள் மீதான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

எமது அடிப்படையை விட்டு, முற்றுமுழுதான கலாசார வேறுபாட்டுக்குள் இந்த மக்கள் பயணிக்கும் நிலை ஒருபுறம் இருக்க வறுமையின் கோரப்பிடிக்குள் நிர்வாகத்தின் சீர்கேடுகளுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் தொழிற்சங்கங்களும் கைவிடுமாக இருந்தால் மக்களின் வாழ்க்கையின் கறுப்புப் பக்கங்களாகவே எதிர்காலம் அமைந்துவிடும். ஆதலால் பேதங்களைத் தவிர்த்து தலைமைகள் தமது கடமையைச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.