Monday, November 10, 2014

நடராஜா ரவிராஜ் நினைவுகள்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்று சில நாட்களில் கடந்திருந்தன.

அந்த நேரத்தில் தலைகள் வெட்டப்பட்ட நிலையில் ஐவர் கொல்லப்பட்டிருப்பதாக அவிசாவளையிலிருந்து தகவல் கிடைத்தது.

உடனடியாக நண்பர் தேவ அதிரனுடன் அங்கு சென்றேன். அனைத்து தகவல்களையும் திரட்டினோம். பல மீற்றர் தூரத்தில் கிடந்த கைக்கடிகாரம் முதல் மரம் அறுக்கும் இயந்திரத்தினால் கழுத்து அறுக்கப்பட்டுள்ள விடயம் வரை கிடைத்த அனைத்து விபரங்களையும் மறுநாள் எழுதியிருந்தேன்.

அந்த நேரத்தில் எமது வார வெளியீட்டின் பிரதம பொறுப்பாசிரியராக திரு.தேவராஜ் அவர்கள் கடமையாற்றிக்கொண்டிருந்தார்.

பத்திரிகையில் செய்திகள் வெளியானவுடன் எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. முதலாவது அழைப்பு ரவிராஜ் அவர்களிடமிருந்து..!

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்தானே என வியக்க வைக்கும் வகையில் நண்பரைப் போல உரையாடினார். மேற்குறித்த செய்தியில் வெளிக்கொண்டு வர வேண்டிய சட்ட ரீதியான நுணுக்கங்கள் பலவற்றை சொல்லித்தருவதாகவும் உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருமாறும் கேட்டுக்கொண்டார்.

அப்போது நிகழ்ந்தது எமது முதலாவது சந்திப்பு. அதன் பின்னர் மிக நெருக்கமானோம். அந்த நேரத்தில் இலங்கையில் இடம்பெற்ற கடத்தல், காணாமல்போதல் தொடர்பாக திரு.மனோ கணேசன் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்தார். அவரோடும் திரு.விக்ரமபாகு கருணாரத்ன, ஸ்ரீதுங்க ஜயசூரிய ஆகியோரோடும் இணைந்து காணாமல்போதல் தொடர்பான செய்திகளை புகைப்படங்களோடு விபரமாக வெளியிட்ட போதெல்லாம் ரவிராஜ் அவர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்.

திரு.தேவராஜ் அவர்களால் பயிற்சிக்காக நீதிமன்ற செய்தி சேகரிப்பில் சுமார் ஒரு மாதம் ஈடுபட்டிருந்தேன். காலை முதல் மாலை வரை அங்கேயே தான் இருக்க வேண்டும்.

அப்போதெல்லாம் ரவிராஜ் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஊடகவியல் தொடர்பாக நிறையவே தெரிந்து வைத்திருந்தார்.
நான் எழுதும் செய்திகள், கட்டுரைகளுக்கு திறந்த மனதோடு விமர்சனங்களை முன்வைப்பார். உரிமையோடு தூற்றுவார்.

இதேநாளில் எட்டு வருடங்களுக்கு முன்னர் அவர் ஆயுததாரிகளால் சுடப்பட்டார். அவருக்கு எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என கடவுளை பிரார்த்தித்துக்கொண்டே செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன்.
எண்ணியது நடக்கவில்லை.

அவருடைய இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தார்கள். அந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

அரசியல் பிரமுகர்கள் பலர் பல்வேறு காரணங்களுக்காக ஊடகவியலாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். ஆனால் ரவிராஜ் அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

-இராமானுஜம் நிர்ஷன்

No comments: