Wednesday, November 28, 2018

ஆறுமுகனின் 1000 தந்திரங்கள்!


-நிர்ஷன் இராமானுஜம்-



தொழிலாளர் நலனுக்காக, உரிமைகளைப் பேணுவதற்காக ஆரம்பிக்கப்படுகின்ற தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியாக மாத்திரம் செயற்படும் துரதிர்ஷ்டமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இலங்கையில் மலையகத்தைப் பொறுத்தவரையில், தொழிற்சங்கங்கள் முற்று முழுதாக ‘அரசியல்’ செய்வதையும் அதனைத் தவிர்க்க முடியாத சூழலுக்குள் இயங்கிக் கொண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதன் உச்ச கட்டமாக, அரசியல் இருப்புக்காக ‘ஆயிரம் ரூபா’ நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை வெளிப்படையாகத் தெரிந்தே, எதிர்க்க முடியாத சக்தியற்றவர்களாக தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ‘சக்தியற்றவர்களாக’ மாற்றியதும் இந்தத் தொழிற்சங்கங்கள்தான் என்பதும் இங்கு வெளிப்படை.

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தைக் கோரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் நடத்துமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களும் வீதியில் இறங்கி உரிமைக்காக போராடினார்கள். அதன்பின்னர், நேற்று (27) ஆறுமுகனின் அறிவிப்பு வெளியாகியது. அதாவது, போராட்டத்தின் காரணமாக நிதியமைச்சில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் ஆறுமுகன் தொண்டமானால் நிதி அமைச்சில் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை விடுக்க முடியாதா? இது இயல்பாக எழுகின்ற கேள்வி. ஆனாலும் ஆறுமுகனின் இராஜதந்திரம் எவ்வாறு அமைந்தது பாருங்கள்.

தொழிலாளர்களை வீதிக்கு இறக்கி, அதன்காரணமாகத் தான் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடு நடைபெற்றது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. நிதி அமைச்சு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பது இங்கே எத்தனை தொழிலாளர்கள் அறிவார்கள்?

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்வியும் ஆறுமுகன் தொண்டமானின் பதிலும் இவ்வாறு அமைந்தது.

கேள்வி: உங்களது பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மை இல்லையே?

பதில்: எனது அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையை நான் ஏன் வெளியில் சொல்ல வேண்டும். அவ்வாறானதொரு தேவை எனக்கில்லை. உங்கள் சொந்த வீட்டில் மனைவியுடன் நடைபெறும் கலந்துரையாடல்களை வெளியில் சொல்வீர்களா? உங்கள் நிறுவன எம்.டி. உங்களுடன் பேசும் விடயங்களை வெளியில் சொல்வீர்களா? அதேபோல் எனக்கும் எனது அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மலையகத்தில் மூத்த தொழிற்சங்க வரலாறு கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொறுப்பற்ற பதிலை உற்று நோக்குவோம். ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வா, சாவா பிரச்சினை. அவர்கள் சார்ந்த 20 இலட்சம் பொதுமக்களின் பிரச்சினை என்பதை எந்தளவுக்கு சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பொது விடயத்தை, தான்சார்ந்த மக்களின் பட்டினியுடன் தொடர்புடைய விடயத்தை இரகசியமாகப் பேசுவதும் அதனை வெளியிட முடியாது எனக் கூறுவதும் எந்த வகையில் நியாயம்?

கேள்வி: பெருந்தோட்டக் கம்பனிகள் நட்டத்திலா இயங்குகின்றன?

பதில்: அதை தெரிந்துகொள்ள நான் எக்கவுன்டன்ட் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது. எனது மக்களுக்கு ஆயிரம் ரூபா அவர்கள் தர வேண்டும்.அதுதான் எனது கோரிக்கை.

இந்தப் பொறுப்பற்ற பதிலையும் கவனியுங்கள். பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகின்றனவா? எந்தளவு இலாபம்? அந்த இலாபப் பங்கை தொழிலாளர்களுக்கு எவ்வாறு பெற்றுக்கொடுக்கலாம்? அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன? என்பது குறித்தான எந்தத் தகவலும் இந்தத் தலைவரிடம் இல்லை. அந்தப் பதிலை வெளிப்படையாகக் கூறாமல் தந்திரமாகச் சொல்லி சமாளிக்கிறார்.

அதேவேளை, மற்றுமொரு விடயத்தையும் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டுகிறார். முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் தோட்டத் தலைவர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது  என்பதுதான் அது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்களைக் கணக்கிட்டால் அதில் இதுவும் உள்ளடங்கும். இது குறித்த உண்மை நிலையை தொழிலாளர்கள் நன்கறிவார்கள்.

இதுவரைகாலமும் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை, யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் கையொப்பமிடும் வழக்கம் இருந்துவந்ததை மக்கள் அறியாமல் இல்லை. நாம் என்ன சொன்னாலும் அதனை தொழிலாளர்கள் எனும் அடிமைகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற எதேச்சதிகார செயற்பாட்டின் விளைவுகள் தான் இவை.

மக்களுக்குச் சேவை செய்வதில் நீயா?நானா? எனப் போட்டிபோட்டுக்கொண்டாலும் பரவாயில்லை. இங்கு அதிகாரத்துக்கான போட்டியே மேலோங்கிக் காணப்படுகிறது. வெறும் பொன்னாடைகளுக்கு மாத்திரம் ஆசைப்படும் அளவுக்குத்தான் அரசியல் மாற்றம் கண்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், மறுநாள் ஹட்டன் நகருக்குச் சென்றார் ஆறுமுகன் தொண்டமான். அங்கு அமோக  வரவேற்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன. வாகன நெரிசல் ஒருபுறம் இருக்க மறுபுறம் பட்டாசுச் சத்தத்துக்கும் பொன்னாடைக்கும் குறைவில்லாமல் ஆறுமுகன் வரவேற்கப்பட்டார். (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)

இதோ, ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைத்துவிட்டது என்பதுபோல இ.தொ.கா. ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள். ஆனால் இவை அனைத்தும் எதற்காக? யாருக்கு எதிராக? என்பதெல்லாம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இருக்கட்டும். கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை உண்மையாகவே முன்வைக்கப்பட்டுள்ளதா?

ஆயிரம் ரூபா கோரிக்கை வெறும் பேச்சளவிலேயே உள்ளது. தற்போது தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவை நூறு மடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது. இன்னுமொரு 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தோடு சேர்க்கப்படுவதாயின் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற சூத்திரம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கவில்லை. அதாவது மேலதிகமான 500 ரூபாவை எவ்வெந்த வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து ஆராயப்படவில்லை என்பதே உண்மை.

இதேவேளை, தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கப்போவதாக குறிப்பிடவும் இல்லை.

மகிந்த ராஜபக்ஷ, இது தொடர்பில் சகோதர மொழி ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்து இதுதான் “ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் அல்ல. மொத்தமாக தொள்ளாயிரம் கணக்கு வருகிறது. அவ்வாறானதொரு தொகையைத் தான் முதலாளிமார் சம்மேளனம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நட்டம் ஏற்படாத வகையில் தொழிலாளர்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் மொத்தமாக ஆயிரத்தை எவ்வாறு பெறலாம் என்பதை ஆராயுமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கும் அதிகாரிகளுக்கும் பணித்துள்ளேன்”.

இதேவேளை, தோட்டங்கள் காடாகிப்போயுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடிக்கடி குற்றம் சுமத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் (பிரிவு இல:3), தொழிலாளர்களின் வினைத்திறனை அதிகரிப்பது, தொழிற்துறையை விருத்தி செய்வது தொடர்பில் தொழிற்சங்கங்களும் பங்களிப்பு செய்வதாக இணங்கி கையொப்பம் இடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தொழிற்துறை பின்னடைவுக்கு தொழிற்சங்கங்களும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினர்தானே?

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துக்காக மூன்றரை வருடங்களாக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை காலம் இழுத்தடிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் தொழிலாளி ஒருவருக்கு சுமார் 70 ஆயிரம் ரூபா முதல் 80 ஆயிரம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டது. அவ்வாறாயின் அந்த பெருத்த இலாபத்தை கம்பனிகளுக்கு பெற்றுக்கொடுத்தது தொழிற்சங்கங்கள் தானே?

இந்த முறையும் இது நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற்சங்களின் அரசியல் இருப்பைத் தீர்மானிக்கின்ற துருப்புச் சீட்டு. இதனை சரியான நேரத்தில் பொருத்தமாகப் பயன்படுத்தாவிட்டால் அடுத்த நகர்வுகள் கேள்விக்குறியாகிவிடும். ஆதலால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிதானமான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.

எவ்வாறாயினும், அதிகாரத்துக்காகவும் அரசியல் இருப்புக்காகவும் தொழிலாளர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை எவ்வெந்த முறைகளில் பெறலாம் என்ற வழிமுறைகளை முதலில் ஆராயுங்கள். அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி தீர்மானத்துக்கு வாருங்கள்.

அதனை விடுத்து எத்தனை காலத்துக்குத் தான் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க முடியும்? நாளொன்றுக்கு 5 ரூபா ஏன் தர முடியாது என தொழிலாளர்களிடம் உரிமையாக கேட்க முடியுமென்றால், உறுதியளித்த தொகையை ஏன் பெற்றுத்தர முடியாது என தொழிலாளர்கள் கேட்பதற்கு ஆயிரம் மடங்கு உரிமை உண்டு என்பதையும் மறவாதீர்கள்.

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளித்திருந்தது. அந்தத் தொகை மக்கள் மனதில் அழுத்தமாக நிறைந்துவிட்டது.

அதற்காக தொழிலாளர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்கள், இளைஞர்கள், பல்கலை மாணவர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்துமே வீணாகிப் போய்விடாது என்ற நம்பிக்கை இந்த நிமிடம் வரையிலும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை.

இதனை மறுத்து இம்முறையும் துரோகம் இழைக்கப்படுமானால் அடுத்த கட்ட பின்விளைவுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உரிய தரப்பினர் நினைவிற்கொள்ள வேண்டும்.

No comments: