Monday, December 3, 2018

மனித வடிவில் கொடிய விஷம்; நாட்டை அச்சுறுத்தும் HIV




எனக்குத் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனைப் பெரிது படுத்தாமல் வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தேன்.
காய்ச்சல் குறைவடைந்தது.
 எனினும் எனது ஆண் உறுப்பிலும் அதனைச் சுற்றிலும் சிவப்புப் புள்ளிகள் தோன்றியிருந்ததை நான் அவதானித்தேன்.
அப்போது ஒருவித பயம்
என்னைப் பற்றிக்கொண்டது

-நிர்ஷன் இராமானுஜம்-

லங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மறைமுகமாக அதிகரித்து வருகிறது. யார்? எங்கே? எவ்வாறு? இதனைப் பரப்புகிறார்கள் என்பதை அறியவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதையும் வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத விஷம் சமூகத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம் தொடர்பிலும் இந்தக் கட்டுரையினூடாக முன்வைக்க முயற்சிக்கிறோம்.

எயிட்ஸ் இனால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலர் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இரண்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள். பெரும் மன உளைச்சலுக்கு மத்தியில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பலர் எம்மிடம் மனம் விட்டுப் பேசினார்கள். அவர்களில் சிலருடைய வாழ்க்கை அனுபவங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம்.

எயிட்ஸ் நோயாளிகள் பகிரும் அனுபவங்கள்

“எனக்குத் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனைப் பெரிது படுத்தாமல் வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தேன். காய்ச்சல் குறைவடைந்தது, எனினும் எனது ஆண் உறுப்பிலும் அதனைச் சுற்றிலும் சிவப்புப் புள்ளிகள் தோன்றியிருந்ததை நான் அவதானித்தேன். அப்போது ஒருவித பயம் என்னைப் பற்றிக்கொண்டது” - குருநாகலைச் சேர்ந்த 34 வயது இளைஞர் இவ்வாறு பேசத்தொடங்கிய போதே கண்ணீரும் கன்னத்தை நனைத்தது.

நீண்ட தாடி, நலிவடைந்த உடலுடன் இருந்த அவர் தரையைப் பார்த்தபடியே எம்மோடு உரையாடினார்.

“வைத்தியசாலைக்குச் சென்றவுடன் காய்ச்சல் அதிகம் என்பதால் என்னை தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். காய்ச்சலுக்கான மருந்து வகைகளை தந்து தாதியர்கள் என்னைக் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

நான்காவது நாள் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அடிக்கடி இரத்தமாதிரிகளைப் பெற்றுக்கொண்டார்கள். எனது அம்மாவும் தங்கையும் அடிக்கடி வைத்தியசாலைக்கு வந்து என்னைப் பார்ப்பதுண்டு.

ஐந்தாவது நாள் காலை வைத்தியர் ஒருவர் என்னிடம் வந்து என்னை ஆறுதலாக இருக்கும் படியும் மனதைத் தளரவிடாது தான் சொல்வதை புரிந்துகொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, வைத்தியரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

உங்களுக்கு எச்.ஐ.வி. பொசிட்டிவ். இன்னும் பல இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்து கட்டுப்படுத்த முடியுமா என நாம் ஆராய வேண்டியுள்ளது என்றார். என் உடம்பு கொதித்தது. பேரிடி விழுந்து நான் சுக்குநூறாகச் சிதறிப் போனதாய் உணர்ந்தேன். மூச்சும் வார்த்தையும் ஒரு கணம் நின்றுபோயிருந்தன. கழிவறைக்குச் சென்று கதறிக் கதறி அழுதேன். அம்மா, தங்கை, உறவினர்கள் எல்லாம் என் கண்முன் தோன்றி மறைந்தார்கள். அந்தச் சோகத்தை என்னால் சொல்ல முடியவில்லை.

அது 2016 ஆரம்ப காலப்பகுதி இருக்கும். உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று உடலை கட்டாகப் பேணி வந்தேன். பெண்கள் பலருடன் உடலுறவு கொண்டிருக்கிறேன். என்னை முதலில் பரிசோதித்த வைத்தியர்கள், ஆறு மாதகாலத்துக்கு முன்னரே எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இப்போதே அது வெளிப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். அந்த ஆறு மாத காலப்பகுதியில் நான் பலருடன் உறவு வைத்திருந்தேன். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது” என்றார்.

பதுளை, இரத்தினபுரி மற்றும் வவுனியா பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்கள் மூவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பதுளையைச் சேர்ந்த பெண், தரகர் ஒருவரால் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். ஆடைத் தொழிற்சாலையில் தொழில் செய்துகொண்டிருந்த சமயம், அந்தத் தரகரால் மூளைச்சலவை செய்யப்பட்டு மசாஜ் நிலையத்திலும் பகுதி நேரமாக தொழில் புரிந்திருக்கிறாள். இதன்போது ஏற்பட்ட தவறான உறவு காரணமாக இப்போது வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

இரத்தினபுரியிலிருந்து கம்பஹா பகுதிக்கு தனது 20 வயதில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிவதற்கு அவள் வந்திருக்கிறாள். அங்கு வேறொரு ஆடவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிந்து திருமண ஏற்பாடுகளுக்கான திகதியும் குறிக்கப்பட்டது. இதனிடையில் இருவரும் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் சில மாதங்களில் அந்த இளம் யுவதி நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியது தெரியவந்துள்ளது.

வைத்தியசாலை ஊழியர்களால் ஊருக்குக் கதை பரப்பப்பட்டதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் கூறுகிறாள் அப்பெண். பல தடவைகள் தற்கொலைக்கு முயன்று தற்போது ஏனையோருக்கு உதவுவதற்காக இந்த வீட்டில் அடிக்கடி வந்து தங்கியிருந்து சேவகம் புரிவதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் குடும்பச் சுமை காரணமாக திருமணமாகாத 42 வயது பெண்ணொருவர் தனது தூரத்து உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் சமையல் உதவிக்காக ஹோட்டல் ஒன்றில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். கல்கிசை பகுதியில் உள்ள அந்த ஹோட்டலில் இருந்து பலரது தொடர்பு கிடைத்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட பின்விளைவு காரணமாக நான்கு வருடங்களாக தனது வீட்டுக்குச் செல்ல முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள்.

இவர்கள் மாத்திரமல்ல, அங்கு தங்கியிருந்த பலரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். தமக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என அறிந்து அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் இவர்களோடு பாலியல் உறவு வைத்துக்கொண்ட இன்னும் பலர் வெளியுலகத்தில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் அச்சம் தரக்கூடிய விடயம்.

நாம் மேலே குறிப்பிட்ட வீடுகளில் தங்கிருப்போர் உட்பட மேலும் பலருக்கு உதவிகள் புரிந்து பராமரிப்பு செய்து வருவதும் ஒரு பெண்மணிதான். அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இவர் சமூக சேவையைச் செய்து வருகிறார். பிரின்சி மங்களிகா (அனுமதியுடன் பெயரும் புகைப்படமும் பிரசுரிக்கப்படுகிறது) என்ற 58 வயதுடைய இந்தப் பெண் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். அது மாத்திரமல்லாது எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகளையும் நடத்தி வருகிறார்.
Princy Mangalika
இவரது பராமரிப்பின் கீழ் எச்.ஐ.வி. இனால் பாதிக்கப்பட்ட 362 ஆண்களும் 354 பெண்களும் 41 சிறுவர்களும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.

பிரின்சி மங்களிகா, இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானது எப்படி? ஆம்! அவருக்கு எச்.ஐ.வி. தொற்று உண்டாகி 18 வருடங்களாகின்றன. ஜெர்மனியில் தொழில்புரிந்த கணவருக்கு எச்.ஐ.வி. தொற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிராமத்து மக்களின் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதன் பின்னர் பிரின்சியையும் இரத்த மாதிரியை பரிசோதனை செய்துகொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பிரகாரம் பரிசோதனை செய்துகொண்டபோது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

“எனது பரிசோதனை முடிந்து சில மணி நேரங்களிலேயே எமது வீட்டை கிராமத்தவர்கள் எரித்துவிட்டார்கள். எனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் நடுத்தெருவில் நின்றேன். கிராமத்தாரின் தூற்றுதல்கள், உறவினர்களின் நகைப்புக்கு மத்தியில் சில காலம் நாம் தனித்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

எனது பிள்ளைகளுக்கு இந்த நோய் தொற்றியிருக்கிறதா என்பதை ஆராயும் வரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இரு பிள்ளைகளினதும் இரத்த மாதிரிகளைப் பரிசோதித்த பின்னரே நான் பெருமூச்சு விட்டேன். அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றியிருக்கவில்லை.

நான் தவறான பாலியல் தொடர்பு கொள்ளவில்லை. ஆதலால் நான் யாருக்கும் பயப்படவும் இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எவ்வாறு மீள்வது என சிந்தித்து எனக்கு நானே ஆறுதல் கூறி என்னை மாற்றிக்கொண்டேன்.

இப்போது,எச்.ஐ.வி. இனால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நான் ஆறுதலாக இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமிதம் தான். இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் இன்னும் சில காலம் உயிர்வாழ்வார்கள் என்பதே நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை” என்றார்.

‘விழிப்புடன் இருப்போம் - இருமுறை சிந்திப்போம்’

நாட்டில் அண்மைக்காலமாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் இரு ஆண்களுக்கிடையே இடம்பெறும் சமபால் உறவின் காரணமாகவே அதிகமானோர் எயிட்ஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனை சுகாதார அமைச்சின் தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இது மிகவும் ஆபத்தான சமிக்ஞையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஆலோசகர் வைத்தியர் கே.ஏ.எம். ஆரியரத்ன, இது குறித்து விழிப்புணர்வு அவசியம் என்பதையும் தினக்குரலிடம் சுட்டிக்காட்டினார்.

சிறைக் கைதிகள், பாலியல் தொழிலாளர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள், கடற்கரை இளைஞர்கள் என பலதரப்பட்டோரிடம் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆண்களுக்கிடையே இடம்பெறும் பாலியல் உறவு காரணமாகவே அதிகமாக இந்நோய் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களில் 25 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டோரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு 186 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் ஆயிரத்து 500 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாண்டில் எயிட்ஸ் நோயாளிகள் 475 பேர் மரணத்தைத்  தழுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான சிலருக்கு சில மாதங்களிலேயே அறிகுறிகள் தென்படத் தொடங்குவதுடன் சிலருக்கு பல வருடங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தெரிவித்த கருத்துகளின் பிரகாரம் ஒரு சிலருக்கு 10 முதல் 12 ஆண்டுகளின் பின்னரே நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. அப்போது காலம் கடந்திருப்பதுடன் அதுவரை அவர்களால் மேலும் பலருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

இலங்கையைப் பொறுத்தவரையில் பாலியல் ரீதியிலான தொடர்பு காரணமாகவே அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவு இதற்கு முக்கிய காரணமாகும். கணவனும் மனைவியும் காதலிக்கும் போது அல்லது திருமணத்தின்போது எவ்வாறான அன்புடனும் புரிந்துணர்வுடனான உறவுடனும் இருக்கின்றனரோ, அதேபோல் வாழ்நாள் முழுவதும் தொடரும்போது இவ்வாறான பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றன எனக் கூறுகிறார்கள் எயிட்ஸ் இனால் பாதிக்கப்பட்டோர்.

ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் வேலைப்பளு காரணமாக பெண்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளாமையும் பெண்கள் சிலர் ஆண்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளாமையும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எது எவ்வாறாயினும் மனச்சாட்சியுடன் இருமுறை சிந்தித்தல் அவசியமாகும். மிகப் பழைமையான கலாசார பின்னணி கொண்ட நாம், அது தொடர்பில் சிந்திக்காமல் சிற்றின்பத்துக்கான நாட்டத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்கிறோம். நாம் சந்தித்த எயிட்ஸ் நோயாளிகளைத் தவிர அவர்களுக்குப் பரப்பியோரும் அவர்களால் பாதிக்கப்பட்டோரும் இன்னும் எமது சமூகத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கண்ணுக்குப் புலப்படாமல் கொடிய விஷத்தை ஏந்திக்கொண்டு சிற்றின்பத் தாகத்தோடு எங்கேயோ தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். இவை தொடர்பில் விழிப்புணர்வு கொண்டாலேயொழிய இந்த நோய்த் தாக்கத்திலிருந்து எம்மைக் காப்பாற்றிக்கொள்வது சிரமமான காரியமாகவே அமையும் என்பதுதான் உண்மை.

(நாட்டில் பெரும்பாலான வைத்தியசாலைகளில் எச்.ஐ.வி. பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன் இரகசியம் பேணப்படுகிறது. தொடர்பு: 0703 533633)

-நன்றி தினக்குரல் 02.12.2018-

No comments: