Wednesday, October 28, 2009

கம்பவாரிதிக்கு ஒரு மடல்

பேரன்பும் பெருமதிப்புக்கும் உரிய கம்பவாரிதி ஐயாவுக்கு,
வணக்கம்.

ஏகனாகவும் அநேகனாகவும் எங்கும் எதிலும் எல்லாமாகவும் வியாபித்து அண்டங்கள் அனைத்திற்கும் கர்த்தாவான மூலப்பரம்பொருளின் பேரருள் தங்கள் நலனை என்றும் காக்க வேண்டி மடலைத் தொடர்கிறேன்.

இலங்கைத் தமிழர்களிடையே தங்களுடைய பெயரும் புகழும் எவ்வாறு பரவப்பெற்று எந்தளவுக்கு மதிப்புநிறைந்து விளங்குகின்றது என்பதை நான் சொல்லி அறியவேண்டியதில்லை. தமிழ்,சமயம்,சமூகத்துக்கு உங்களுடைய அர்ப்பணிப்புடனான சேவையும் அயராத உழைப்பினூடான பங்களிப்பும் மக்கள் உள்ளத்தில் நம்பிக்கை நாற்றுகளை விதைத்திருக்கின்றன என்றால் மிகையில்லை.

ஐயா,
உங்கள் புகழை தமிழ் உலகம் அறிந்திருக்கும் இவ்வேளையில், நான் இதைக் குறிப்பிட்டது வெறும் வார்த்தைப் புகழ்ச்சிக்காகவல்லாது இணையவாசகர்கள் தங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே.

நமது நாட்டில் மொழிப்பற்று மதப்பற்று கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சமூக சேவகர்களா அல்லது சமூக ஆர்வலர்களா என்று சிந்தித்தால் எனக்கென்னவோ திருப்திகரமான பதில் கிடைப்பதில்லை.

பெரும்பாலான கல்விமான்கள் மேடைப்பாராட்டுக்காகவும் தற்புகழ்ச்சிக்காவும் மாத்திரமே “சேவை” என்ற பெயரில் ஆங்காங்கே சில நிகழ்ச்சிகளுக்கு தலைமைதாங்கி வருகிறார்கள். ஆனால் தங்களைப் போன்ற குறிப்பிடத்தக்க சிலர் தான் சமுதாயம் இழிவழியில் செல்லக்கூடாது என்பதில் அக்கறை கொண்டுள்ளார்கள். இதற்கு, கடந்த அக்டோபர் 14ஆம் திகதி புதன்கிழமை தினக்குரல் நாளேட்டில் வெளியான “கந்த சஷ்டி விரத ஆரம்பம் 19ஆம் திகதியே” என்ற கட்டுரை ஒரு சமீபத்திய சான்றாகும்.
விரத தின நிர்ணயம் குறித்து ஏற்கனவே நமக்குள் எழுந்த பல்வேறு சிக்கல்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தாங்கள் அளித்திருந்த பதில்கள் முறையான விளக்கங்களாக அமைந்திருந்தன என்பதில் நிறைவுண்டு.

விரதங்கள் மற்றும் விழாக்கள் குறித்து அவ்வப்போது இவ்வாறான பிரச்சினைகள் எழுவது சாதாரணமாகிவிட்ட நிலையில் கந்த சஷ்டி குறித்த தங்களது ஆக்கம் கல்வியாளர்களிடத்தில் நல்லதொரு புரிந்துணர்வை ஏற்படுத்தியதே தவிர அடிமட்ட மக்களை சென்றடையவில்லை என்பதே என்னுடைய ஆதங்கமாகும். இதுவே இந்த மடலை எழுதுவதற்குக் காரணமாயும் அமைந்தது.

கொழும்பில் இயங்கும் பல தலங்களை அடியொட்டியே ஏனைய பல பிரதேச ஆலயங்களில் விழாக்கள் நிர்ணயமாவதை பல சந்தர்ப்பங்களில் நோக்கியிருக்கிறேன். அப்படியிருக்கையில் முறையான விரதநெறியை தலைநகர ஆலயங்களில் பின்பற்றப்படுவது மிகஅவசியமாகும்.

கந்த சஷ்டியானது பிரதமையில் ஆரம்பிப்பதே மரபு. அதற்கமைவாக அக்டோபர் 19ஆம் திகதியே கந்த சஷ்டியின் ஆரம்ப தினமாகும் என்பதை சகல ஆதாரங்களோடும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை எல்லா ஆலய நிர்வாகங்களும் பின்பற்றவில்லை. பல ஆலயங்களில் 18ஆம் திகதியே பின்பற்றப்பட்டன.

ஆயினும்,
கந்த சஷ்டி விரதாரம்பம் 19ஆம் திகதி என்பதை தாங்கள் 14ஆம் திகதிதான் குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வேளையில் பெரும்பாலான ஆலயங்களில் திகதி நிர்ணயிக்கப்பட்டு விளம்பரப்படுத்தலும் நடாத்தியாயிற்று. சில ஆலயங்களில் உண்மை நிலை தெரியவந்தபோதும் தமது ஏற்பாடுகள் காரணமாக சரியான முறையினை பின்பற்ற முடியவில்லை. இதற்கு தாமதமான விளக்கமே காரணமாகும்.

இது இவ்வாறிருக்க,
நாட்டில், இந்துகலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்துமாமன்றம் உட்பட பல்வேறு ஆலய அமைப்புகள் மற்றும் பலம்மிக்க கழகங்கள் மன்றங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் யாருமே இதுகுறித்து அக்கறை கொள்ளாதபோது தாங்கள் முன்வந்து விளக்கமளித்ததை, பாராட்டுவதற்கு தகுதியற்றவனாய் அதனை அன்போடு வரவேற்கிறேன்.

ஆக,
இவ்வாறான விளக்கங்கள் காலதாமதமின்றி வெளியிடப்படுதல் அவசியமாகும். இந்து சமயம் சுதந்திரமான சமயம் என்பதால் எப்படியும் இருந்துவிடலாம் என்றில்லை. அதற்கென ஆகம,வேத முறைகள் உண்டு என்பதை சரியான நேரத்தில் விளக்கமளிப்போமானால் தவறான நடத்தைகளை தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

தங்களைப்போன்றவர்கள் வெளியுலகுக்கு உண்மையை உரைக்கும்போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். இனியொரு நிலைமை இவ்வாறு தோன்றும்பட்சத்தில் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் விதத்தில் முன்கூட்டியே அறிவிப்பது தேவையாகும். அத்துடன் நாட்டில் இயங்கும் அனைத்து இந்து மன்றங்கள் கலகாங்களினு}டாக விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அனைவரையும் சென்றடையும் விதத்திலும் அமையும்.

அடியேனின் கருத்துக்களை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற எண்ணத்துடனும் பலருக்கு குருவாய் இருக்கும் உங்களிடம் சாதாரண குடிமகான் என்ற நேசத்திலும் உரிமையோடு இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

பத்து சமயக் கட்டுரைகள் பத்திரிகைகளுக்கு எழுதி பொதுமண்டபத்தில் பொன்னாடை போர்த்திக்கொள்ளும் பலருக்கு நமது சமூகம், நமது சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து அக்கறையே இல்லை. இவ்வாறிருக்கும்போது தங்களைப்போன்ற முன்னோடிகளின் காத்திரமான முன்னுதாரண விளக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேற்சொன்னது போல உரிமையோடு சொல்கிறேன். இது தங்களுக்கான இந்தச் சிறியேனின் தனிப்பட்ட மடல் தான். தனிப்பட்ட கழகங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை. விழா என்ற பெயரில் வேற்று நாட்டு அறிஞர்களுக்கு பணத்தை வாரியிறைத்து பேருக்காவும் புகழுக்காகவும் மட்டும் நிகழ்ச்சி நடாத்துபவர்களுக்கு இதைச் சொல்லுங்கள்.

குறிப்பிட்ட ஒருசாரார் நல்ல பண பலத்துடனும் கல்வித்தகுதியுடனும் இருந்துகொண்டிருக்கிறார்கள். பாமரர்களுக்கு யார் உதவுவார்கள்? என்று கேளுங்கள்.

இந்து என்ற பெயரில் எங்கோ ஒரு மூலையில் பல குடும்பங்கள் அடிப்படையே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வாழ்காலத்தில் அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்பதை மனச்சாட்சியோடு கேட்கச் சொல்லுங்கள்.

எல்லாவற்றையும் விட ஏழைகளுக்காக உழைப்பதே மேல் என்பதை எடுத்துச்சொல்லுங்கள்.

அவ்வாறில்லையெனின்,
யாரையும் நம்பியிருக்கத் தேவையில்லை. சமூக அக்கறைமிக்கவர்களோடு வாருங்கள். வீதிக்கு இறங்குவோம். இதுதான் உண்மை என்பதை தக்க தருணத்தில் உரைப்போம்.

இந்த மடலினை எனது வலைத்தளத்தில் பிரசுரித்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

உள்ளம் நிறைந்த நன்றிகள்.

இவ்வண்ணம்,
இறைதிருநாமங்களோடு
பணிவன்புடன்,

இராமானுஜம் நிர்ஷன்

Thursday, October 22, 2009

இலங்கை ஊடகங்களில் செய்தித் தவறுகள்…!?


வந்தியின் அடுத்த முதல்வன் யார்? என்ற பதிவே இந்தப் பதிவையும் எழுதக் காரணமானது.நமது தொலைக்காட்சிகளில் பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தவிர ஏனைய நிகழ்ச்சிகளை பார்ப்பதை நான் தவிர்த்துவருகிறேன். அதனால் நிகழ்ச்சிகளைப் பற்றி அவ்வளவாக குறிப்பிடத் தெரியாது.

ஆனாலும் சாமானியன் என்ற வகையிலும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ளவேண்டிய குடிமகன் என்ற ரீதியிலும் செய்திகளை பார்ப்பதும் கேட்பதும் உண்டு।

செய்தி எழுதுவதும் தொகுப்பதும் தனியொரு கலை. படித்தவருக்கும் பாமரருக்கும் விளங்கும் வகையிலும் பிழைகளைத் தவிர்த்தும் கருத்துப் பிசகாமலும் எழுத வேண்டும். அதனால் தான் செய்தியாசிரியர்களுக்கும் தொகுப்பாசிரியர்களுக்கும் (இருவருக்கும் வித்தியாசம் உண்டு) அதிக மதிப்பு இருக்கிறது.

செய்திகளில் அடிக்கடி இடம்பெற்ற சில தவறுகளை நான் குறிப்பெடுத்துக்கொள்வேன். ஏனென்றால் அடுத்தமுறை நான் அந்தப் பிழையை விடக்கூடாது என்பதற்காக.

நான் குறிப்பெடுத்துக்கொண்டதில் சிலவற்றை மட்டும் (பெயர், இடங்களை மாத்திரம் மாற்றி) இங்கு தருகிறேன்.
நான் தமிழ்ப்புலமை பெற்றவன் அல்ல. எனக்குப் பட்டவற்றை சொல்கிறேன்.

பிழையிருப்பின் அடியேனையும் மன்னித்தருள்க.


*நேற்றுமாலை புறக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தொன்றில் முன்னாள் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் பெயரிலி படுகாயமடைந்தார்.

அநேகமான இலங்கை ஊடகங்களில் இந்தத் தவறு இடம்பெறுவதை கவனிக்கக் கூடியதாக உள்ளது.

சம்பவங்களைக் குறிப்பிடும்போது இடத்திற்குப் பிறகுதான் காலத்தைச் சொல்ல வேண்டும். அது தவிர கொழும்பு மாநகரசபையை முன்னாள், இந்நாள் என இருவேறாக குறிப்பிட முடியாது. அது எப்போதும் அப்படியே தான் இருக்கிறது. இங்கு உறுப்பினரின் பதவிக்காலம் தான் குறிப்பிடுபொருள்.

சரியாயின்,
புறக்கோட்டையில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தொன்றில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் பெயரிலி படுகாயமடைந்தார்.

(சிலருக்கு முன்னாள் என்பதற்கும் முன்னால் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமலிருப்பது கவலைக்குரியது).

*விபத்தில் உயிரிழந்தோருக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது என்பதை எழுதுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

*நீர்கொழும்பு கடற்கரைப்பகுதி நீர்நிலைகளில் கிருமிநாசினிகள் கலந்துள்ளமையால் மீன்கள் அதிகமாக உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உயிரிழந்த மீன்களை விற்பனை செய்ய அப்பகுதியில் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பதில் அதிகமாக குறைவாக என்று சொல்ல முடியாது. இங்கு மீன்களின் எண்ணிக்கையை சுட்ட பயன்படும் அதிகமாக என்ற சொல் தவறான இடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. சரியாயின் அதிகமான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக…. என தொடர வேண்டும்.

அத்துடன்,
உயிரிழந்த மீன்கள் தான் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. ஆதலால் செய்தி இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

நீர்கொழும்பு கடற்கரைப்பகுதி நீர்நிலைகளில் கிருமிநாசினிகள் கலந்துள்ளமையால் அதிகமான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் கிருமிநாசினி காரணமாக உயிரிழந்த மீன்களை விற்பனை செய்ய தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

*மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த நபர் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எந்தவொரு வாக்கியத்தையும் குறித்த என்ற பதத்துடன் ஆரம்பிப்பது தவறாகும். குறித்த என்ற பதத்துக்கு பதிலாக அந்த என்ற பதத்தை உபயோகிக்கலாம்.

அல்லது,
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் குறித்த நபர் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(வசனத்தின் நீளம் வாசகர்/நேயர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் என்பதால் சுருக்குதல் சிறந்தது)

*வெலிகமவில் இன்று காலை தனியார் பயணிகள் பஸ் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு வயது குழந்தையொன்று வீதியில் நடந்து கொண்டிருந்த சமயம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்தே இந்தத் தீ வைப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு குழந்தைமீது மோதிய பஸ் தீ வைக்கப்பட்டுள்ளது.

இங்கு இறுதி வசனம் தேவையற்ற ஒன்று என்பது நான் சொல்லித்தான் புரியவேண்டும் என்றில்லை.

*……………. செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது இடம்பெயர்ந்து என்பதில் உள்ள மயக்கத்தை கவனிக்க வேண்டும். சந்திப்பின்போது யாரும் இடம்பெயரவில்லை.
சரியாயின்,
……இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது.

*எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தங்கவைக்க வேண்டுமென… என்பதே சரியானதாகும்.

*இடம்பெயர் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தினயும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் என்ற சொல் நிகழ்காலத்தை குறிப்பிடும் தொக்கிநிற்கும் சொல்லாக இருக்கிறது. இதன் அர்த்தம் தற்போது இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களை …. எனக்கொள்ளலாம்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை..... என ஆரம்பிப்பதே சிறந்தது.

*புத்தளம் நிவ்செட்ல்மென்ட் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் ஒருவர் வாள்வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு சம்பவம் என்றால் வாள்வெட்டுக் காயம் தான். ஏற்கனவே வாள்வெட்டு என்ற சொல் உபயோகித்துள்ள படியால் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில்…. என தொடர்தல் பொருத்தமானதாகும்.

----------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு எந்தவொரு ஊடகத்தையும் தாக்கும் எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல. ஊடகங்களைப் பொறுத்தவரையில் சில சில தவறுகள் இடம்பெறுவதை ஏற்றுக்ககொள்ள வேண்டும். ஆயினும் அது தொடர்கதையாயின் ஏற்றுக்கொள்ள முடியாது. நேரமிருப்பின் முழுமையான விபரப் பதிவினைத் தர முயற்சிக்கிறேன்.