Friday, November 13, 2009

கலைஞர் கருணாநிதிக்கு!

பேரன்புக்குரிய கலைஞர் கருணாநிதிக்கு,
வணக்கம்.

பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச்சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்।

நிற்க:
பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக்கொண்டிருக்கின்றன। தாகம்தீர்க்க மழையில்லை। இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது என்றிருந்த காலமும் மாறி நாமும் கொஞ்சம் மாறியிருக்கிறோம்.

குடும்பத் தலைவன் உயிருடன் இல்லை. பிள்ளை கண்ணிவெடியில் சிக்கி கால்களை இழந்திருக்கிறது, தங்கை சித்தப்பிரம்மையாய் அலைகிறாள், மனைவியோ எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு.... என பலருடைய காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

மீளக் குடியமர்த்துகிறார்கள். உண்மைதான். வேதனைகளின் ஈரம் இன்னும் காயாமல் இருக்கும்போது பழைய கிராமத்தை பார்க்க முடியவில்லை. அரசமரத்தடிப் பிள்ளையார் முதல் அஞ்சலகம் வரை எதுவுமில்லை. அடையாளமும் இல்லை. அ

தே சந்தோசத்தை, அதே நினைவுகளை இனிவரும் காலம் மீளப்பெற்றுத்தருமா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு.

ஆம்! நாம் மீளக்குடியமர்த்தப்பட்டோம் குடிதண்ணீர் இல்லாமல்...
மீளக்குடியமர்த்தப்பட்டோம் மின்சாரம் இல்லாமல்...

எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்। ஏன் நீங்கள் கூடத்தான்।
எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும்போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம்நிறைந்து களிக்கிறேன்। காலம் தள்ளிப்போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப்போகின்றன। ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு, நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...

உங்களுக்குத் தெரியாது ஐயா।
அனுபவித்தால் தான் தெரியும்। கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?
நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார்நிலத்தை நாம் பறித்தோம்?யார் உரிமைக்கு இடம்கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள்। வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது।

போகட்டும்।
இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள்। அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவிவிலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள்। ஏன் ஆனால் மௌனம் காத்தீர்கள்?
இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள்। தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள்।
ஆனால் பதில்கேட்க மறுத்தீர்கள்.
போராட்டத்துக்கு அழைத்தீர்கள்। சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம்। இடைநிறுத்தினீர்கள்.

எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக்காட்டினீர்கள்। என்ன பயனாயிற்று?

எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை। அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன்।

நான் மட்டுமல்ல। இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்। பனைமரங்களுக்குள் நாம் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக்கொண்டிருப்போம்।
அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்துவிடாதீர்கள்।

எம்மை ஏமாற்றத்துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்தபின்னும் எம் ஆன்மா சாபமிடும்। இது நிச்சயமான உண்மை।

கலைஞரே,
எமக்கான தேவையை இந்த வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது. முடியுமானால் எம்மை நீங்கள் வந்து பாருங்கள். நீங்கள் தவறு செய்தீர்களா இல்லையா என்பதை அப்போது உணர்வீர்கள்.

ஐயா,
நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பலர் சொல்லிக்கொள்கிறார்கள்। எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை। எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லிவிடுங்கள்। கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக்கொண்டே புள்ளிவைத்து முடித்துவிடுகிறோம்। கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது।

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம்। ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்।

அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு!
எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்।

இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்

அச்சுவலைச் சந்திப்பு 03














Wednesday, November 11, 2009

“அது அவரோட ஸ்டைல்”

குரு இலிங்க சங்கம வழிபாடு என்பார்கள். இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்த மூன்றும் இறைவன் தான். அஞ்ஞானத்தை அகற்றும் ஆசாரியன், வழிபாட்டுக்குரிய இலிங்கம், சங்கமம் எனப்படும் சிவனடியார்கள் ஆகிய மூன்று பகுதியினருக்கும் சமமான மதிப்பு உண்டு.

இலிங்கத்துக்கு முதலாக ஏன் குரு சொல்லப்படுகிறார் என்றால், இறைவன் தான் குருவாக வந்து தன்னைப் பற்றியும் மும்மலங்கள், பஞ்சபூதங்கள் பற்றியும் விளக்குகிறார் என்பதால் தான். ஆசாரியன் எனப்படும் ஆசிரியர்கள், தாம் அந்த நிலையில் தான் இருக்கிறோமா என்பதை எப்போதும் சுயமதிப்பீடு செய்துகொள்ளல் அவசியமாகும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் கொட்டாஞ்சேனை என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு பிரபலமான தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்தக் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் லீலைகள் குறித்தான பதிவுதான் இது.

காலத்துக்குத் தேவையான மிக முக்கியமான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் அவர். வெள்ளவத்தையிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிப்பதுடன் பிரத்தியேக வகுப்புகளையும் நடாத்துகிறார்.

வயதுடைய அவர் தனது வகுப்புகளில் கற்பிக்கும்போது இரட்டை அர்த்த வசனங்களைத் தான் அதிகம் உபயோகிக்கிறார்.
கையில் பேனையை வைத்துக்கொண்டு மாணவியரின் அந்தரங்கப் பகுதியை குத்தி பிழைதிருத்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் இவர்,
மாணவன் ஏதாவது பிழைவிட்டால், “வா… இங்க வா… உனக்கெல்லாம் என் மேசைக்குக் கீழ் இருக்கும் வேலை தான் சரி” என்பாராம்.

மாணவரியர் பலரின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை வாங்கிக்கொண்டு இரவுவேளைகளில் குறுஞ்செய்தி அனுப்புவதுதான் இவரது பொழுதுபோக்கு.

இதுபற்றி அந்த கல்விநிறுவனத்தின் நிர்வாகத்தினர் அக்கறை எடுப்பாக இல்லை. அது அவரோட ஸ்டைல் என்கிறார்கள் அனுபவத்தில் முதிர்ந்த ஆசிரியர்கள்.

ஆசிரியரின் பெயரோடு நான் எழுதவேண்டும் என்றிருந்தேன். ஆனால் நான் அவ்வாறு எழுதிய பிறகு, அந்த ஆசிரியரிடம் கல்விகற்க தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் வருத்தப்படுவார்கள்.

மாணவர்களின் கட்டிளமைப் பருவம் வித்தியாசமானது. எது நல்லவழி எது தீயவழி என்பதை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் ஒரு புள்ளியில் ஊஞ்சல்போல் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆசியர்கள் தான் அவர்களை சரியான வழிக்கு இட்டுச்செல்ல வேண்டும்.

சில அநாவசியமான வார்த்தைகள் அவர்கள் மனதில் காம எண்ணத்தை தூண்டுவதாக இருந்தால் அதன் பிரதிபலன் அதிமோசமாக இருக்கும் என்பதை இவ்வாறான ஆசிரியர்கள் உணராதவர்களா?

பெண்களின் உள்ளாடைகளைப் பற்றியே வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் சமுதாயத்துக்கு செய்யும் சேவை இதுதானா?

அந்தப் பொறுப்புக்குரியவர்கள் அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். தன் உயிரிலும் மேலாக அன்புசெலுத்தி ஆசிரியர்களை நம்பி வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு சம்பந்தப்பட்டவர்கள் செய்யும் பிரதியுபகாரமா இது?

திருடனாய்ப் பார்த்து திருந்த வேண்டும்.

Tuesday, November 10, 2009

அச்சுவலைச் சந்திப்பு 02

இளையதம்பி தயானந்தா – ஆசிரியர் - இருக்கிறம்

நான் இல்லாதபோதும் கூட அச்சுவலைச் சந்திப்பு நன்றாக நடந்துகொண்டிருக்கிறது. பதிவர்கள், ஊடகவியலாளர்கள் நான் நினைத்ததற்கும் அதிகமானோர் வந்திருக்கிறார்கள்.

இது வெறும் சந்திப்புதான்.

எமது விழுமியங்களையும் மொழியையும் காக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இன்றைய உலகம் இணையத்தின் பங்களிப்போடு தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் இணையத்தையும் ஊடகத்தையும் இணைக்கவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.

நாம் எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம்? எதற்காக எழுதுகிறோம்? நாம் எழுதுவதானால் ஏற்படும் அனுகூலங்கள் என்ன என்பது பற்றி சிந்தித்து எழுதுபவர்களை நான் குறைவாகவே காண்கிறேன். ஆகையால் நமது மொழிசார்ந்த அக்கறையாளர்கள் என்ற வகையில் இதற்குத் தீர்வு காணும் அடிப்படையாக இந்த சந்திப்பினை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இனியும் நாங்கள் சந்திப்போம். இருக்கிறம் எப்போதும் உங்களுக்காக இருக்கிறது.

இந்திய சஞ்சிகைகளின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் பல சவால்களுடன் இந்தப் பெயர்கொண்டு ஆரம்பித்தோம். பத்திரிகைகளையும் இந்திய சஞ்சிகைகளையும் பார்த்துப்பழகிய நம்மவர்களை ஓர் ஈழத்துச் சஞ்சிகை எவ்வாறு கவரவேண்டும்? எவ்வாறான தகவல்களை உள்ளடக்கலாம் என பல மாதங்களாக திட்டமிட்டோம். ஏன் இன்னும்கூட அது நடக்கிறது.

தமிழனாக இருந்து தமிழனுக்காக சஞ்சிகை நடாத்துவதன் சிரமங்களை நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் நாம் உழைக்கப் பிறந்தவர்கள். ஏதோ ஒருவகையில் இந்தத் துறைக்குள் ஈர்க்கப்பட்டு இன்றுவரை அதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமது சமுதயாம், மொழிக்காக பாடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பேசிய விடயங்கள் :

முன் அட்டை, இந்திய சினிமா போன்ற விடயங்களை சந்தைப்படுத்தலுக்காக கையாள வேண்டிய கட்டாயம் உண்டு. வருமானத்தினூடாகத்தான் இதனை நடாத்திச்செல்ல முடியும்.

மொழி வழக்கைப் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். சில எழுத்துப்பிழைகள், தவறுகள் இருக்கின்றன என்பதற்கான நாம் மொழிப்பற்றற்றவர்கள் என்ற நிலைப்பாடு கொள்ளலாகாது.

நமக்கென உரிய மொழிச்சொற்கள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மொழிப்பயன்பாட்டோடு பாதுகாக்க முதுசரம் சஞ்சிகையை வெளியிட நினைத்தோம்.

இனிவரும் காலம் பல நல்ல முயற்சிகளுக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

நடராஜா குருபரன் - ஊடகவியலாளர்

காலத்தின் சோதனையால் நாம் இன்று பிரிந்துநிற்கிறோமே தவிர மனதால் ஒன்றுபட்டிருக்கிறோம். உங்களை எல்லாம் நேரில் சந்திக்கவில்லையே என்ற ஆதங்கத்தை இருக்கிறம் போக்கியிருக்கிறது. தயானந்தா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடன் ஊடகங்களில் பணியாற்றிய நிறைய நண்பர்களை, எனக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தவர்களை இன்று பார்க்கிறேன்.

தயா அண்ணா கூறியதுபோல எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்றில்லாமல் நன்றாக சிந்தித்து, அது பொழுதுபோக்கு அமிசமாயினும் சரி, நடைமுறைவிடயங்களாயினும் சரி காத்திரமாக வழங்கப்படல் வேண்டும்.

குறிப்பாக பால்நிலை சமத்துவத்தை நாம் பேணவேண்டும். பல வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இழிநிலை வார்த்தைப் பிரயோகங்களை நான் பார்த்துவருகிறேன். இது நமது சமுதாயத்தை மேலும் கீழ்தரத்துக்கு தள்ளும் செயலாகும்.

நாம் ஏன் இன்று இவ்வாறிருக்கிறோம்? நமக்கான களம் என்ன? என்றெல்லாம் சிந்திப்பவர்கள் இவ்வாறு எழுதுவதில்லை.

குறிப்பாக ஊடக தர்மம் குறித்து சிந்திப்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இதனை ஒரு குறையாக நினைத்துக்கொள்ள வேண்டாம். செம்மைப்படுத்தலின் அவசியம் காலத்தின் தேவை என்பதாலேயே நான் இதைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு விடயத்தை எழுதும்போது அதனால் மற்றொரு சமூகமோ, வர்க்கமோ, மொழியோ அல்லது இதர விடயங்களோ பாதிக்கப்படக்கூடாது. அதனால் நாம் எழுதுவதன் காத்திரத்தன்மையை இழந்துவிடுகிறோம்.

ஒரு தளத்தில் வருவதை அவ்வாறே பிரதிபண்ணி தமது இணைங்களிலும் வலைத்தளங்களிலும் பதிந்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். நான் எழுதும் பல கட்டுரைகள் பெயர்கூட குறிப்பிடப்படாமல் பல தளங்களில் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறானவற்றைத் தவிர்த்து தரமான தகவல்களை நாங்கள் வழங்க முன்வரவேண்டும். தமிழால் சாதனை படைப்பதற்கு நிறைய இருக்கிறது. அந்த சாதனை படைப்பதற்கான வழியை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்திப்பு அதற்கான ஏற்பாடாக அமையட்டும்.

எழில்வேந்தன் - ஊடகவியலாளர்

இணையத்தளங்களில் நாம் எழுதும் விடயங்கள் குறித்து இங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. தமிழில் விடப்படுகின்ற தவறுகள் பற்றி வித்தியாதரன் நன்றாக எடுத்துக்கூறினார்.

இவ்வாறான பிழைகளைத் தவிர்த்து முறையாக எழுதவேண்டியது நமது கடமையாகும்.

நான் ஒரு விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
நமது கலாசாரம், நமது மொழி என பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியச் சொற்கள், இந்திய படங்களை ஏன் நாம் நம்பியிருக்க வேண்டும். இருக்கிறம் சஞ்சிகையில் தற்போது அவ்வாறான போக்கு காணப்படுகிறது. எனக்குத் தந்த சஞ்சிகையில் கூட இந்திய சினிமாவுக்கே அட்டைப்படத்துடன் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்.

இதற்கான விளக்கத்தை நான் இருக்கிறம் நிர்வாகத்தினரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

…………………………………………………………..
முகுந்தன் (வலைப்பதிவரல்லாமல் ஆர்வத்தின் காரணமாக வந்தவர்), சட்டத்தரணி மர்சூம், அறிவிப்பாளர் முகுந்தன், பிரதீப், ஒளிபரப்பாளர் முஷாரப் என ஒரு பட்டாளமே அங்கு தமது கருத்துக்களை முன்வைத்தது.
அனைவரினதும் பேச்சுக் குறிப்புகள் என்னிடம் இருக்கின்றன.

எனினும் அது இருக்கிறம் சஞ்சிகையின் வளர்ச்சிகான விமர்சனங்கள் என்பதால் நான் இங்கு எழுதவில்லை.
(தொடரும்)

சுவாமி ஆத்மகனானந்தா

துறவிகள் என்றவுடன் இறைதியானத்திலும் பூஜைகளிலும் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள் என்ற பொதுநிலைப்பாடு நம் அனைவரிடத்திலும் உண்டு. ஆனால் அதனையும் தாண்டி சமூகத் தொண்டுதான் இறைவனுக்கான தொண்டு. ஏழையின் சிரிப்பும் தியானத்தின் ஈற்றும் ஒன்று. மற்றவர் மனம்நோகாதபடி நடந்துகொள்ளுதல் தான் நமது முதற்கடமை என வாழ்ந்துகொண்டிருப்பவர் சுவாமி ஆத்மகனானந்தா.

------------------------------------------------------------------
சமயம்சார்ந்த மூட நம்பிக்கைகளை அடியோடு வெறுப்பவன் நான். சாமி பார்த்தல் என நாம் பொதுவாக குறிப்பிடும் “குறி சொல்லுதல்” பற்றி சிறுவயதுமுதலே எனக்கு அறியும் ஆவல் இருந்தது. 1995 ஆம் ஆண்டில் ஒரு நாள் சுவாமிஜி பரியோவானுக்கு (எனது பாடசாலை) வருகை தந்திருந்தார். அவருடைய பணிவான நடத்தையும், அன்பான ஆறுதலான பேச்சும் எனக்குள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.

அவர் வந்துசென்ற பின்னர் குறிசொல்லுதல் உண்மையா? கடவுள் உண்மையாகவே மனித உடம்புக்குள் வருகிறாரா? எனக் கேள்விகள் கேட்டு சுவாமிக்கு கடிதம் எழுதினேன். அப்போதுதான் அவர் இராமகிருஷ்ண மிஷனின் பீடாதிபதி என அறிந்தேன்.
குறிசொல்லுதலானது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒரு சக்தியே. அது தீய சக்திகளினாலேயே பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. தூய்மையான மனதும் உடலும் இருந்து கடவுளை மனப்பூர்வமாக தியானித்தால் அந்தப் பரம்பொருள் நமக்குள் காட்சியளிக்கும். உலகத்தை தாண்டிய அமைதியைத் தரும். அது சிரமப்படுத்தாது. அதிகம் பேசவைக்காது என விரிவான கடிதம் எழுதி நேரம் கிடைத்தால் சந்திக்கும்படி வேண்டினார்.

நான் முதன்முதல் சுவாமியைப் பார்க்க வந்தபோது பல சிறுவர்கள் சுவாமியைச் சுற்றி நின்றுகொண்டு கதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாமி அவர்களுக்கு இனிப்பு கொடுத்த வண்ணம் (எப்போதும் சிறுவர்களுக்காக இனிப்பு வைத்திருப்பார்) பேசிக்கொண்டிருந்தார்.

என்னை அவர் நேரடியாக பார்த்தபோதே உள்ளம் சிலிர்த்தது. எழுத்துக்களால் சொல்லமுடியாதளவுக்கு அமைதி அந்த முகத்தில்.

வீரத்துறவி விவேகானந்தர் தான் என்னுடைய மானசீகக் குரு. கோயிலைத் தவிர்த்து மக்களின் விடிவுக்காக போராடிய துறவியைப் பற்றி எந்த புத்தகங்கள் இருந்தாலும் வாங்கிப் படிப்பேன் (இப்போதும் வீட்டில் விவேகானந்தரின் பெரிய படம் இருக்கிறது).

விவேகானந்தரைப் பற்றி சுவாமியிடம் கூறியபோது அவர் இராமகிருஷ்ணரைப் பற்றி தெளிவுபடுத்தி அவர்தான் தமக்குக் கடவுளும் குருவும் எனக் கூறினார். அந்த சந்தர்ப்பங்களை மறக்க முடியாது.

அதன்பிறகு ஏற்பட்ட சந்திப்பு பல வருடங்களாக தொடர்ந்தது. எங்கேயோ ஊர்சுற்றிக்கொண்டு உலகம் இதுதான் என ஒரு வட்டத்துக்குள் இருந்த என்னை இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என பார்க்கவைத்தார்.

எப்படி தியானம் செய்வது? எவ்வாறான விடயங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும், மாணவர்களிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதிலிருந்து பலவற்றையும் படிப்படியாக கற்றுக்கொடுத்தார்.

ஏழைகளுக்கு உதவுவதில் அப்படியொரு அக்கறை அவருக்கு உண்டு. எத்தனையோ சிறுவர் இல்லங்களை இலங்கை முழுவதும் நிறுவி அதற்குத் தேவையான சகல உதவிகளையும் செய்திருக்கிறார்.

அவரிடம் எனக்குப் பிடித்த குணங்களில் ஒன்றுதான் சகிப்புத் தன்மை. சுவாமி இன்று வாகனம் எதுவும் இல்லை. பஸ்ஸில் பயணிக்கலாம் என்றால் உடனடியாக சரி எனக்கூறிவிடுவார்.

முகுந்தன் அண்ணாவை (கிருத்தியம் - தங்க முகுந்தன்) மூளாயில் வைத்து சுட்டுவிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்தச் செய்தியை பொலிஸாரிடமிருந்து நான் திரட்டுகிறேன். செய்தியை எழுதிவிட்டு மீண்டும் வாசித்துப் பார்த்தபோதுதான் தங்க முகுந்தன் அண்ணாவைத் தானே…. ஏன நினைவுக்கு வந்தது. (சம்பவத்தை கூறியதற்கு முகுந்தன் அண்ணா மன்னிக்க வேண்டும்)

உடனே நான் என்னுடைய உறவினர்களுக்கு அறிவித்துவிட்டு சுவாமிக்கு சொன்னேன்.

நிர்ஷன், இன்று உங்களால் வரமுடியுமா எனக் கேட்டார். அதிக வேலைகள் காரணமாக முடியாது எனச் சொன்னதும் அவர் சொன்ன பதில் இதுதான்.
நான் முகுந்தனுக்காக பிரார்த்தனை செய்யப்போகிறேன். நீங்கள் மனதுக்குள் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். அதேபோல் நாம் பிரார்த்தனை செய்தோம்.

இப்படி பல அனுபவங்கள் சுவாமியுடன்…..

அந்த அளவுக்கு உயிர்கள் மீது பற்றுக்கொண்டவர். அவரைப் பற்றி நிறையவே கூறிக்கொண்டு போகலாம்.

ஒருவகையில் சுவாமியைப்போன்ற குரு எனக்கு வாய்த்தமைக்கு இறைவனுக்கு நன்றியுடையவனாய் இருக்கும் அதேவேளை பிரிவுக்கு வித்திட்டதால் கோபமும் கொண்டுள்ளேன்.

சுமார் 13 வருடங்களாக சேவை செய்து மீண்டும் இந்தியாவுக்கு செல்லப்போகிறார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் உண்மையில் கண்கள் கலங்கியவண்ணம் தான் மிஷனுக்கு சென்றேன்.

இதை எழுதும்போதுகூட நான் உணர்கிறேன்.

அங்கே முதியவர்கள், இளையவர்கள், சிறுவர்கள் என சுவாமியின் கைகளையும் கால்களையும் தொட்டு பலர் அழுதுகொண்டிருந்தார்கள். சுவாமியோ அமைதியாக புன்முறுல் பூத்துக்கொண்டிருந்தார்.

சுவாமி, நீங்கள் இந்தியாவுக்கு போகும்வரை தினமும் நான் உங்களை வந்து பார்ப்பேன் எனக்கூறினேன். அவர் அதனை மறுத்துவிட்டார்.

சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றைத் தந்து ஏராளமான விடயங்களைக் கூறி அப்போதும் சிரிப்போடு தான் என்னை வழியனுப்பி வைத்தார்.

சுவாமி இப்போது இந்தியாவின் விவேகானந்தா ஆச்சிரமத்தில் இருக்கிறார்.

Monday, November 9, 2009

நட்சத்திர நாளில் சந்தோசமான செய்தி!

யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்த அதன் நிர்வாகத்தினருக்கு நன்றிகள். இந்த நட்சத்திர நாளில் சந்தோசமான செய்தியொன்றை உங்களோடு பகிர்கிறேன். உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை பின்னூட்டத்தினூடாக பகிர்ந்துகொள்ளுங்கள்.
................................................................................

பதிவுலக நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்,
வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் உலகில் தகவல்களை உடனுக்குடன் வழங்குவதில் இணையத்தளங்கள், வலைத்தளங்கள் பிரதான பங்குவகிக்கின்றன. எழுத்துத் துறையில் சரியான களம் கிடைக்காத காத்திரமான நல்ல படைப்பாளிகள் இன்று தமது படைப்புகளை வலைத்தளங்களினூடாக வெளியிட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.

அவ்வாறான எழுத்தாளர்களையும் வளரும் எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் முகமாக பதிவர்களின் ஆக்கங்களை வீரகேசரி இணையத்தளத்தில் பிரசுரிக்க அதன் ஆசிரியபீடம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில், உள்நாட்டில் (கிடைக்கப்பெறாத) கலைத்துறை தொடர்பான தகவல்கள், நிகழ்வு விமர்சனங்கள், கட்டுரை ஆக்கங்கள், சினிமா விமர்சனங்கள், சுய படைப்புகள் என குறிப்பிட்ட சில வரையறைகளுக்குள் ஆக்கங்களை நீங்கள் எழுதக்கூடியதாக இருக்கும்.

உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழ்மக்களை இணையத்தினூடாக இணைப்பதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைப்பதுடன்,ஆக்கங்கள் அனைத்தும் வரைமுறையன்றி அனைவரையும் சென்றடையக்கூடிய வாய்ப்பும் ஏற்படுவதுடன் சர்வதேச விருதுகளை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

தமிழுலகோடு கடந்த 79 வருடங்களாக இணைந்திருக்கும் வீரகேசரி, தனது இணையத்தளத்தினூடாக செம்மைத் தகவல்களை வழங்குவதற்காக புதிய திட்டமிடல்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதன் ஓரங்கமாகவே இந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

உங்கள் அனைவரினதும் பதில்களும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்
ஆசிரியபீடம்
வீரகேசரி இணையம்
கொழும்பு
இலங்கை.

Saturday, November 7, 2009

அச்சுவலைச் சந்திப்பு 01

வலைப்பதிவுகளில் சூடான வாதங்கள் சில நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஒதுங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து எனது கருத்துகளை சொல்வதை சில மாதங்களாக வழமையாக்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பதிவுகளுக்கு வரும் அனானிகளின் அம்புத் தொல்லைகள் தான் இதற்குப் பிரதான காரணம்.

தாமதமான பதிவுக்கு மன்னிக்கவேண்டும். வலைப்பக்கம் வரமுடியாதளவுக்கு வேலைகள் அதிகம்.

ம்ம்ம்ம்……
இருக்கிறம் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த அச்சுவலைச் சந்திப்புக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள். இதுபற்றி பதிவர்களிடையே பல்வேறு வகையான விமர்சனங்களை காணக்கூடியதாக இருந்தது. என்னதான் இருந்தாலும் ஏதோ ஒருவகையில் எமது ஒன்றுகூடலுக்கு களம் அமைத்துக்கொடுத்து முகம்தெரியாத சகோதரர்களை சந்திக்கச் செய்தமைக்கு இருக்கிறம் நிர்வாகத்தினருக்கு என் அன்பை பகிர்கிறேன்.

எனது கருத்துகளை சொல்லுமுன்னர் அன்றைய சந்திப்பில் நடந்த முழுமையான விபரங்களை முடியுமானளவு சரியாக தர முயற்சிக்கிறேன்.

சந்திப்புஅச்சுவலைச் சந்திப்பானது நவம்பர் மாதம் 2ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் மாலை 4.06 மணிக்கு ஆரம்பமானது. இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் அருளானந்தம் சஞ்சீத் “மன்னிக்கவேண்டும்” என ஆரம்பித்து தனது அறிமுக உரையினை நிகழ்த்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பதிவர்கள் தம்மை அறிமுகம்செய்துகொண்டனர்.

பின்னர் உரையாற்றிய வைத்தியர், பதிவர் எம்.கே. முருகானந்தன்
“வலைப்பதிவுகளை சுதந்திரமான ஊடகங்கள் என்றுகூட குறிப்பிடலாம். ஆனால் முழுமையான சுதந்திரத்துடன் அவற்றை வெளியிட முடியுமா என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதிலுமுள்ள இணையவாசகர்கள் எமது வலைத்தளங்களை பார்வையிடுகிறார்கள். சில கட்டுப்பாடுகளை பேணுவது பல சந்தர்ப்பங்களில் அவசியமாகிறது.
எனக்கு ஆரம்பகாலங்களில் வலைப்பதிவு குறித்த போதிய அறிவு இல்லை. ஏன் இப்போதும் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வலைப்பதிவுகளை வாசகரிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பிரதான இடம் வகிக்கின்றன. அவற்றில் தமிழ்மணம், யாழ்தேவி, தமிழ்வெளி போன்ற வலைத்திரட்டிகளை புதிய பதிவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை ஏனைய பொழுதுபோக்கு அமிசங்களைவிட வலைப்பதிவுகளில் எழுதுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு பதிவை எழுதிவிட்டு என்ன பின்னூட்டம் வருகிறது என அடிக்கடி பார்த்த முதற்கால அனுபவங்களை இப்போதும் மறக்க முடியாது. பின்னூட்டங்கள் தான் எம்மை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன.

நான் வைத்தியத் துறையை சேர்ந்தவன். எனக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு. ஆனாலும் என்னுடைய சொந்த அனுபவங்களை, வைத்தியம் குறித்தான தகவல்களை எமது மக்களுக்கு கொடுப்பதில் நான் பெரிதும் மகிழ்வடைகிறேன். என்னிடம் பல்வேறு விதமான நோய்களையுடைய, குறைபாடுகளையுடைய நோயாளிகள் வருகின்றனர். அவர்களின் பெயர் குறிப்பிடாமல் அவர்களின் தவறுகள், பிரதிபலன்கள், வைத்திய முறைகள் ஆகியன பற்றி பதிவிட்டு வருகிறேன்.

இனிவரும் காலங்களிலும் நல்ல காத்திரமான பதிவுகளை வழங்கமுடியும் என எதிர்பார்க்கிறேன். இந்தச் சந்திப்பினூடாக பலரை நான் சந்திக்கக்கூடியதாக இருந்தது. அதனால் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்தும் நல்ல பதிவுகளை வழங்குமாறு கூறி விடைபெறுகிறேன்.

திருமதி சாந்தி சச்சிதானந்தம் (நிர்வாக ஆசிரியர்- இருக்கிறம்)


இணைய உலகைப் பொறுத்தமட்டில் வலைத்தளங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன. உலகம் எங்கிலும் பரந்துவாழும் எமது மக்களிடையே எமது கருத்தினை சுதந்திரமாக கொண்டுசெல்லக்கூடியளவுக்கு வலைத்தளங்கள் இருப்பதையிட்டு நான் மகிழ்வடைகிறேன்.
எனினும் எனக்கு இதில் தனிப்பட்ட ரீதியில் உள்ள கருத்துதான் பெண்களின் பங்களிப்பு என்பது.

இங்கு எத்தனை பெண் வலைப்பதிவாளர்கள் வந்திருக்கிறார்கள்? குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் இணையத்தளங்களில் பெண்களின் வருகையும், பங்களிப்பும் குறைவாகவே இருக்கிறது. விழுதுகள் - ஆற்றல் மேம்பாட்டு மையத்தினூடாகவும் அகவிழி சஞ்சிகையினூடாகவும் எம்மால் இயன்ற பல்வேறு விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகளை செய்துவருகிறோம்.

பெண்களும் ஜனநாயக நீரோட்டத்தில் இணையவேண்டும். எத்தனையோ பெண் சாதனையாளர்கள் போல வளரவேண்டும். நல்ல சிந்தனைகள், சமூகம்சார் அனுபவங்கள் போன்றன காத்திரமான ஆக்கங்களை எழுதுவதற்கு வழிவகுக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் இவற்றை கருத்திற்கொள்ள வேண்டும். இங்கு வருகைதந்துள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவகையில் எழுத்தாளர்கள் தான்.
ஆகையால் சரியான கருத்துருவாக்கத்துடன் கூடிய பெண்களின் தனித்துவத்தினை பேணக்கூடிய பெண் எழுத்தாளர்களை வளர்க்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் - முகாமையாளர் வெற்றி எப்.எம்
இருக்கிறம் நிர்வாகத்தினர், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கும் வலைப்பதிவாளர்களுக்கும் இடையில் எற்படுத்திய சந்திப்பு வரவேற்கத்தக்கது. ஊடகங்கள் எனும்பொழுது பல்வேறு சிந்தனை நோக்கு கொண்ட, பல்வேறு வயதெல்லைகொண்ட, வித்தியாசமான நேயர்கள், வாசகர்கள் இருப்பதால் நடுநிலைமையுடன் நடந்துகொள்ளவேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதுதான் கடமையும்கூட என்று சொல்லலாம்.

ஆனால் வலைப் பதிவுகளைப் பொறுத்தவரை ஊடகம் என்ற நடுநிலைமைக்கு அப்பால் எமது சொந்த கருத்துக்கள் இதுதான் என்பதை சுயமாக சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.இதனை பலரும் தவறாக நினைப்பதானது அதில் சரியான தெளிவினைக் கொண்டிருப்பதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறான சந்திப்புகள் நம் மத்தியில் மிக அவசியமாகும். நமது சமூகம், நமது மொழி, நமது கலாசாரம் ஆகியவற்றை எம்மால் முடிந்தளவு காத்திரமாக பேணுவதில் வலைப்பதிவாளர்களுக்கும் பங்குண்டு என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

என்.வித்தியாதரன் - பிரதம ஆசிரியர் – சுடர் ஒளி, உதயன்

நான் ஆரம்பகாலங்களிலிருந்தே வலைப்பதிவுகளை வாசித்துவருகிறேன். குறிப்பாக நமது நாட்டு பதிவர்கள் எவ்வாறு பதிவிடுகிறார்கள், அவர்கள் ஒருவிடயத்தை எந்த நோக்கில் கையாளுகிறார்கள் என்பதை உற்றுக் கவனித்திருக்கிறேன்.இனிவரும் காலங்களில் எமது பதிவர்களின் நல்ல படைப்புகளை எனது பத்திரிகையிலும் பிரசுரிக்க தீர்மானித்துள்ளேன்.

ஆனாலும் ஒருவிடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதை எனது வேண்டுகோளாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து தமிழை கொல்லாதீர்கள். தமிழ்க் கொலையாளி என்ற பட்டத்தை வாங்கிக்கொள்ளாதீர்கள்.

வலைப்பதிவு என்ற பெயரில் பலரும் இன்று அதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒரு வசனம் எழுதும்போது எங்கே “ஒரு” போட வேண்டும் எங்கே “ஓர்”போட வேண்டும் என்பதை இங்கு எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அதேபோன்று இரு,ஈர் என்ற பதங்கள் இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

பதற்றம் என்கிறோம். பதட்டம் என்கிறோம். எது சரியானது? பதறு என்ற வினையடியிலிருந்து வருகின்ற சொல்லாதலால் பதற்றம் என்பதே சரி.

சைக்கிளில் வந்த நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். என்பதில் உள்ள தவறென்ன?சைக்கிள் என்பதை விடுவோம். அது நாம் ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்திவரும் சொல். வந்த என்பது அஃறிணையை குறிப்பது.

இன்று இலங்கையிலுள்ள பல பத்திரிகைகள் இவ்வாறான தவறுகளை சுமந்துதான் வெளிவருகின்றன. ஏன் எமது பத்திரிகையிலும் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். அங்கு நான்தான் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், செய்தியாளர்,ஒப்புநோக்காளர் என எல்லாம். சில வேளைகளில் பக்கத்தை வடிவமைப்பதும் நான்தான்.

செய்திப் பத்திரிகைகளில் எழுதுவதற்கும், சஞ்சிகைகளில் எழுதுவதற்கும், இணையத்தளங்களில் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனை நாங்கள் நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். தமிழை வளர்க்கிறோம் என்றுகூறி கண்டதையும் எழுதி மொழிக்குற்றம் செய்யாதீர்கள். இதுதான் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் மொழி.

(வந்தார் பிரபாகரன்! என்று தலைப்பிட்ட கதை, இந்திய ஊடக அனுபவங்கள் குறித்து வித்தியாதரன் பேசிய விடயங்களை தனிப்பதிவாக தருகிறேன்)

(தொடரும்)