Wednesday, October 14, 2015

ஹிட்ஸை அள்ளிக்கொள்ள மனிதத்தை கொலை செய்வதா?


கொத்மலையில் (ஹெல்பொட தோட்டம்) சிறுமியின் சீருடைகளுடன் பொலிஸாரின் வலையில் சிக்கிய இளைஞர் பற்றிய செய்திகள் பல்வேறு இணையத்தளங்களில் வெவ்வேறு விதமாக எழுதப்பட்டன.

காலத்துக்குப் பூக்கும் காளான்கள் போல துளிர்விடும் இணையத்தளங்கள் பல, செய்தி என்ற வடிவில் ஹிட்ஸை அள்ளுவதற்காக செய்யும் வேலைகளால் சமூகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இந்த இளைஞர் குறித்த செய்தியில்,

* வித்தியா, சேயாவுக்கு அடுத்ததாக கொத்மலையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: காமுகன் சிக்கினான்

* ஹெல்பொட தோட்டத்தில் மற்றுமொரு சிறுமி கற்பழிப்பு

* ஹெல்பொட தோட்டத்தில் சிறுமியின் சீருடைகளுடன் சிக்கிய இளைஞன்: சிறுமி காட்டுக்குள் தப்பியோடியிருக்கலாம்? (படங்கள்)

* சிறுமியின் உள்ளாடைகளுடன் ஹெல்பொடயில் சிக்கிய இளைஞன் நையப்புடைப்பு (காணொளி)

* கொத்மலையில் பரபரப்பு: சிறுமியை பலாத்காரப்படுத்திய இளைஞன் பொலிஸாரிடம் சிக்கினான்

* சிறுமியின் உள்ளாடைகளுடன் இருந்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்: கொத்மலையில் சம்பவம் (படங்கள் உள்ளே)

* கொத்மலை ஹெல்பொட தோட்டத்தில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞர் வசமாக சிக்கினார், நடந்தது என்ன? (முழு விபரம்)

இப்படி பல்வேறு இணையத்தளங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன. அதிலும் குறிப்பாக கைது செய்யப்பட்ட இளைஞரின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பதிவிட்டிருந்தன.

உண்மையில், அந்த இளைஞன் சிறுமியை காணவேயில்லை. அப்படியொரு வல்லுறவு சம்பவம் நடைபெறவுமில்லை.

இதற்கிடையில் சில இணையத்தளங்கள் இணைந்து அப்பாவி இளைஞனை குற்றவாளியாகவே சித்தரித்துவிட்டன. இப்போது என்ன செய்வது? அந்த இளைஞர் பக்கத்திலிருந்து பார்த்தால் இங்கே குற்றவாளிகள் யார்?

இளைஞரின் புகைப்படத்தை தரவேற்றியதால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பதிலளிக்கப்போவது யார்? எதிர்காலம் என்னாவது?

ஊடக ஒழுக்கவியல் தொடர்பில் அனைத்து இணையத்தள நடத்துநர்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் செய்தி தொடர்பில் ஆராய்ந்து எழுதுவதே சிறந்ததாகும்.

உதாரணத்துக்கு,
உங்கள் கண்முன்னாலேயே X என்பவர் Y என்பவரை கொலை செய்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். இங்கு X என்பவரை குற்றவாளி என எழுதிவிட முடியாது. அதனை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதுவரை அவர் சந்தேக நபர்தான்.

வெள்ளவத்தையில் தாய்,தந்தை,சகோதரியை கொலை செய்த குமாரசாமி பிரசான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

செய்தி என்ற பெயரில் பரபரப்பை உண்டாக்குவதற்காக மனிதத்தை கொன்றுவிடாதீர்கள்.

-நிர்ஷன் இராமானுஜம்-