Sunday, June 5, 2022

கந்தப்பளையில் காணி ஊழல்! காரணமானவர்கள் யார்?

 ரசியல்!
இந்தப் பெயரில் இடம்பெறும் ஊழல்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள் அனைத்தும் நமது நாட்டுக்கு கிடைத்த பெரும் சாபக்கேடு. இதனாலேயே அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு எந்தவொரு நல்ல அபிப்பிராயமும் இருப்பதில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளை நகரத்தில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஊழல் மேற்சொன்ன விடயத்தை புடம்போட்டுக் காட்டுகிறது.

கந்தப்பளை நகர், கொங்கோடியா தோட்ட மேற்பிரிவில் கோயிலுக்கு அருகில் சந்தைத் தொகுதிக்காக நுவரெலியா பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட காணி தனியாருக்கு விற்கப்பட்ட தகவல் எமக்குக் கிடைத்திருக்கிறது.

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ், கந்தப்பளை நகரில் சந்தைத் தொகுதி அபிவிருத்திக்கென குறிப்பிட்டளவு நிலப்பரப்பை காணி அமைச்சு, உடபுசல்லாவ பெருந்தோட்ட நிறுவனம், மாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றிடமிருந்து கோரியுள்ளார்.
அதன் அடிப்படையில் நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நுவரெலியா பிரதேச சபை நிர்வாகத்துக்குட்பட்ட 534ஆவது கிராம சேவகர் பிரிவில் சுமார் 90 பேர்ச்சர்ஸ் காணி கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த இடத்தில் அமையப்பெறப்போகும் கட்டடத்தொகுதி மற்றும் காணிக்குரிய வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்தக் காணியில் இருந்த தேயிலைகளுக்கான இழப்பீட்டுத் தொகையான 32 இலட்சத்து 36 ஆயிரத்து 554 ரூபா 73 சதம் பணத்தை தோட்ட நிறுவனத்துக்குச் செலுத்த இணங்கியுள்ளதாகவும் அதனால் அங்கு அபிவிருத்தித் திட்டத்தை செயற்படுத்த அனுமதியளிக்குமாறும் 2019.06.24 ஆம் திகதி நிதியமைச்சின் திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களத்திடம் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வே. யோகராஜ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் பின்னர் கொங்கோடியா தோட்ட நிர்வாகத்துக்கு நுவரெலியா பிரதேச சபை தலைவரால் 32,36,554.73 என்ற தொகை 2019.12.31ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்த இடம் மிகப்பெரிய தொகைக்கு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் பலகோடி ரூபா பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

மேற்சொன்ன இடத்தை 32,36,554.73 என்ற தொகையை கொடுத்து தான் பெற்றுக்கொண்டபோதிலும், நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் அதனை பெருந்தொகை பணத்துக்கு வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் 2021.09.01 ஆம் திகதி ஊஐடீ ஐ 23802 என்ற இலக்கத்தின் கீழ் இளங்கோவன் சஞ்சித் என்பவரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜால் 2019.12.31 ஆம் திகதி தோட்ட நிர்வாகத்துக்கு செலுத்தப்பட்ட (மேலே குறிப்பிடப்பட்டுள்ளது) 32,36,554.73 என்ற தொகையுடைய காசோலை கந்தப்பளை இலங்கை வங்கிக் கிளையில் உள்ள ஐ.சஞ்சித் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து காசோலை இலக்கம் 353058 ஊடாக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவரும் பிரதேச சபைத் தலைவருக்காக காசோலை கொடுத்தவரும் ஒருவரே என்பது இங்கு புலனாகிறது.

பிரதேச சபைக்காக கோரப்பட்ட நிலத்துக்குரிய பணம் தனி நபர் ஒருவரால் செலுத்தப்பட்டிருக்கிறது. பிரதேச சபை ஒழுங்கு விதிகள் இங்கே அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
இவ்வாறிருக்க, காணியில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது அதனை நிறுத்துமாறு மாகாண உதவி ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இராகலை உடபுசல்லாவை வீதி, கந்தப்பளை கோயிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் பணிகள் சட்டத்துக்கு உட்பட்டு செயற்படுத்தப்படவில்லையென்றும் 1982ஆம் ஆண்டு 04ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சட்டத்தின் 08யு(1) பிரிவை மீறும் வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் நுவரெலியா பிரதேச சபைத் தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக மாகாண உதவி ஆணையாளர் வை.பீ.விஜேவர்தனவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த அறிவிப்பையும் மீறி தன்னிச்சையாக கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

இப்போது இந்தக் காணியில் கட்டடத்தொகுதி அமைக்கப்பட்டு தனி நபர்களால் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட காணி தனியாருக்கு எவ்வாறு விற்பனைசெய்யப்பட்டது என்ற கேள்வி இங்கே எழுகிறது.
இது குறித்து நுவரெலியா பிரதேச சபையின் தொழில்நுட்ப அதிகாரி அத்தரகமவிடம் தொடர்புகொண்டு கேட்டோம்.

குறித்த காணியில் நுவரெலியா பிரதேச சபையின் எவ்விதத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

ஆக, நுவரெலியா பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட காணி தனியாருக்கு கைமாறப்பட்டுள்ளது. அங்கு நிர்மாணப் பணிகள் தனியாரால் மேற்கொள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மிகவும் சூட்சுமமான முறையில் காணி பெற்றுக்கொள்ளப்பட்டு பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இந்த விடயத்தில் நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரச காணியை எந்த அடிப்படையில் தனியாருக்கு விற்பனை செய்ய முடியும்? அவ்வாறு விற்பனை செய்வதாயின் அதற்குரிய சட்ட விதிமுறைகள் கையாளப்பட்டுள்ளனவா? விற்பனை செய்யப்பட்டமைக்கான ஆவணங்கள் உரிய நபர்களிடம் அல்லது பிரதேச சபையிடம் இருக்கின்றனவா? இதற்கு அனுமதியளித்தவர்கள் யார்?

கந்தப்பளையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்கள் வீடின்றி நிர்க்கதியாகியிருக்கும் நிலையில் அவர்களுக்கு காணியை பெற்றுக்கொடுக்க முன்வராத அரசியல்வாதிகள் சுயநல இலாபத்துக்காக எவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பது இந்த விடயத்தில் வெளிச்சமாகியிருக்கிறது.

நேர்மையாக நடந்து மக்களுக்காக பணிசெய்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்கிறார்கள். ஆனால் அவ்வாறு தெரிவானவர்கள் தாம் நியமிக்கப்பட்டமைக்கான நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. இதனாலேயே அசிங்கமான அரசியல் என இவ்வாறான அரசியல்வாதிகள் மீது நாம் உமிழ்கிறோம்.

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினராவார். இந்த மோசடி தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உடனடியாக உயர்பீடத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தப்பளை காணி மோசடியில் இ.தொ.காவின் அடுத்த கட்ட செயற்பாடுகள் எவ்வாறிருக்கப்போகின்றன என்பதை நாம் அவதானிக்கிறோம்.

அந்தக் கட்சியின் உயர்பீடம் இந்த விடயத்தை மூடி மறைக்க முயற்சிக்குமாயின் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே கருத முடியும். மக்கள் மீது அக்கறைகொண்ட, அவர்களின் துன்பங்களை நன்கறிந்து வெளிப்படையாக சேவையாற்றும் பண்புடையவர்களையே இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது. அவ்வாறானவர்களை உருவாக்கவில்லை என்ற கறுப்புப் புள்ளி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{க்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

மேலும், இந்த விடயத்தில் மலையக சமூகம் ஒன்றிணைந்து நியாயத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். எம் மத்தியில் உள்ள தவறான அரசியல்வாதிகள் களையெடுக்கப்பட்டால் மாத்திரமே சமூகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

-நிர்ஷன் இராமானுஜம்-








Sunday, October 24, 2021

Digital மோசடி - நிர்ஷன் இராமானுஜம்




“மிகப்பெரியதொரு தொகை கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் மனைவியின் நகைகளை அடகுவைத்து பணம் அனுப்பினேன். ஆயினும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது”. –இணையத்தள ஏமாற்றுப்பேர்வழியிடம் பணத்தை தொலைத்த நவீன் கண்ணீருடன் கூறிய வார்த்தைகள் இவை.

நவீன், தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகிப்பவர். வட்ஸ்அப் இல் ஆசைவார்த்தைகாட்டி ஒரு நயவஞ்சகனால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு நேர்ந்தவற்றை இப்படிப் பகிர்ந்துகொள்கிறார்.

“ஆறு மாதங்களுக்கு முன்னர் வட்ஸ்அப் இல் எனக்கு ஒருவரிடமிருந்து மெசேஜ் வந்தது. வெறும் Hi மட்டுந்தான், பதிலுக்கு நானும் ர்i என மெசேஜ் பண்ணினேன்.

அவரை கேன் என அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் யாரென எனக்குத் தெரியாது. ஆனாலும் Hi என்று ஆரம்பித்த எமது உரையாடல் நீண்ட நாட்களாக தொடர்ந்தது. நானும் எனது மனைவியும் அம்மாவும் ஒரு வீட்டில் வசிக்கிறோம். எனது குடும்பம் பற்றியும் எனது தொழில் பற்றியும் அந்த நபருடன் உரையாடியபோது தெரிவித்தேன். அதேபோல அவர் தபுதாரன் என்றும் பெண் குழந்தையுடன் லண்டனில் தனிமையாக வசிப்பதாகவும் என்னிடம் கூறினார்.

கொரோனா காலம், வாழ்க்கை, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், காதலித்த தருணங்கள் இப்படி எல்லாவற்றையும்மெசேஜ் ஊடாகவே பேசினோம். முகம் பார்த்துக்கொள்ளவில்லையெனினும், அவரது அன்பான உரையாடலுக்கு நான் அடிமையாகிப் போனேன்.

இப்படியே நாட்கள் நகர்ந்தபோது, எனக்கொரு சப்ரைஸ் தருவதாக அவர் கூறினார்.

அவர் சேமித்துவைத்த பணமும் சில பரிசுப் பொருட்களும் எனக்காக அனுப்பிவைப்பதாக என்னிடம் கூறினார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இப்படியான தருணங்கள் மிக அரிதானவை. அவர் அப்படிக்கூறியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஐபோன் ஒன்று, மனைவிக்கு தங்கச்சங்கிலி, கைப்பைகள் என எனக்காக அவர் வாங்கிய பொருட்களின் படங்களை அனுப்பினார். அதுமாத்திரமல்ல, 45 ஆயிரம் அமெரிக்க டொலர் பணம் அனுப்புவதாகவும் உறுதியளித்தார்.

இத்தனைநாள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகின்றன. எனக்கென வீடொன்றைக் கட்டிக்கொண்டு மனைவிக்குப் பிடித்தமான வாகனமொன்றை வாங்க வேண்டும். ஏதாவது வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து வாழ்க்கையை கொண்டுசெல்ல வேண்டுமென எண்ணினேன்.

எமது வட்ஸ்அப் உரையாடல் தொடர்ந்தது. அவரிடம் மேலும் நெருக்கமாக கதைக்கத்தொடங்கினேன். எனது நண்பர்களிடமும் இதுபற்றிக் கூறினேன்.

எனக்கு அனுப்புவதற்காக அவர் தயார்படுத்திய பொருட்களின் படங்களை அனுப்பினார். அதற்கென கொரியர் சேவைக்கு அவர் பாரப்படுத்தியமைக்கான பற்றுச்சீட்டையும் அனுப்பினார்.

நான் ஏமாறப்போகிறேன் என்பதை அப்போதும் நான் அறிந்திருக்கவில்லை.

கொரியர் சேவைக்கு 70 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளுங்கள் என கேன் என்னிடம் சொன்னார். கொரியர் சேவை நிறுவனத்தின் கணக்கு இலக்கங்களையும் மெசேஜ் பண்ணியிருந்தார்.

மிகப்பெரியதொரு தொகை கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் மனைவியின் நகைகளை அடகுவைத்து பணம் அனுப்பினேன். இரண்டு நாட்கள் அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

மூன்றாவது நாள் அவரிடமிருந்து மெசேஜ் வந்தது. ‘நான் அனுப்பிய பைக்குள் பணம் இருப்பதை கொரியர்காரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். நான் அவர்களுடன் பேசி ஒரு செட்டில்மன்ட்டுக்கு வந்துவிட்டேன். இன்னும் 90 ஆயிரம் பணம் அனுப்புங்கள். அதன் பின்னர் பொதி உங்களை வந்துசேரும்’ என எனக்குச் சொன்னார்.

எனக்கு 45 ஆயிரம் டொலர்கள் கிடைக்கப்போகின்றனவே? நண்பர்களிடம் கடன்வாங்கி அனுப்புவோம் என என் உள்மனது சொன்னது.

அவ்வாறே கடன்வாங்கி 90 ஆயிரம் ரூபா பணம் அனுப்பினேன்.

அவ்வளவுதான். எங்கள் உறவு அத்தோடு முற்றுப்பெற்றது. வட்ஸ்அப் இல் அவர் என்னை ப்ளொக் செய்திருந்தார்.

நான் உடைந்துபோனேன். எத்தனைபெரிய நம்பிக்கை துரோகம் இது?

அன்பாக பழகி, ஆசைவார்த்தைகாட்டி இப்படிச் செய்துவிட்டானே என ஆதங்கப்பட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக என்னையே நான் நொந்துகொண்டேன். யாரென்று தெரியாத ஒருவரிடம் நட்பு பாராட்டி, நம்பி இன்று பணத்தை இழந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போதே மனம் ரணம்கொள்வதை வார்த்தைகளால் விபரிக்க முடியாமற்போகிறது”

இப்படிச் சொல்லி முடிக்கிறார் நவீன்.

இதுவொரு சூட்சுமமான கொள்ளை. நவீன உலகம் நல்லவற்றுக்குப்போல தீயவற்றுக்கும் களம் வழங்கியிருக்கிறது. யார்? எந்த உருவத்தில்? எப்படி ஏமாற்றுவார்கள்? என்பதை பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை.

நவீனைப்போல இன்னும் பலர் இவ்வாறு ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

இது பற்றி பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வினவினோம். அவர்களிடமிருந்து கிடைத்த பதில் மேலும் ஆச்சரியத்தை தந்தது.

இப்படி ஏமாற்றமடைந்தவர்கள் நாளாந்தம் பொலிஸில் முறைப்பாடு செய்கிறார்கள். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது தான் இதனைத் தடுப்பதற்கான முதல்கட்ட செயற்பாடு என குற்றப் புலனாய்வுப் பிரிவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொலிஸார் எமக்களித்த தகவல்களின் பிரகாரம், இவ்வாறு ஏமாற்றுபவர்கள் பெரும்பாலும் நைஜீரியர்கள். உயிரிழந்த நபர்கள், கைத்தொலைபேசியை தொலைத்தவர்கள் என பலருடைய பெயர்களில் மொபைல் இலக்கங்களைப் பெற்றுக்கொண்டு இவ்வாறு ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.


இவர்களைத் தேடுவது மிகச் சிரமமானது. எந்த நாட்டிலிருந்து செயற்படுகிறார்கள்? எத்தனைபேர் இயங்குகிறார்கள் என்பதை கண்டறிவதெல்லாம் இலகுவான காரியமல்ல.

இலங்கையில் இவ்வாறு ஏமாற்றமடைந்து பணத்தை, சொத்துகளை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அரசியல் பெரும்புள்ளிகள், பிரபலமான வர்த்தகர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்குகிறார்கள்.

இராணுவ உயரதிகாரியொருவர் 8 கோடி ரூபா பணத்தை இவ்வாறு இழந்திருக்கிறார். இன்னும் ஏராளமான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமாற்றுக்காரர்கள் எந்த வடிவத்திலும் வரலாம். இணையத்தளத்தின் ஊடாக குற்றங்கள் இடம்பெறுகின்றபோது அதனை உடனடியாக கண்டுபிடிப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. ஆதலால் நாம் விழிப்பாக இருப்பதே இவ்வாறானவர்களிடமிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வழி.

அன்பான வார்த்தைகள் பரிமாறுவதில் ஏமாற்றுக்காரர்கள் கைதேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு தேவையானது பணம் என்ற ஒன்றுமட்டுந்தான். அதற்காக எந்த எல்லையையும் தொடுவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள்.

அவதானம்!

(இவ்வாறானசம்பவங்கள்,உரையாடல்கள் இடம்பெற்றிருந்தால் 119, 011 2444480, 011 2444483 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு பொலிஸாருக்கு அறிவியுங்கள்) 

-நிர்ஷன் இராமானுஜம்-
நன்றி தமிழன் 24.10.2021


Friday, April 10, 2020

கானல் நீராகிப்போன ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம்! பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?

லையக பெருந்தோட்ட மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் கறுப்புச் சரித்திரத்தில் மற்றுமொரு நாள் இன்று உதயமாகியிருக்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் இன்றுமுதல் வழங்கப்படும் என்ற, அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வாக்குறுதி மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளம் என்பதற்கும் அடிப்படைச் சம்பளம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. அரசியல்வாதிகளின் சாணக்கியமான காய்நகர்த்தலில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பல தடவைகள்,பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

கொரோனா அச்சுறுத்தலிலும் தேயிலைத் தேசத்தைக் காக்கும் மக்கள் இன்று சகலராலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

மலையக பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனச் சொல்லும் தலைவர்களின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாட்டை இன்று நாம் காண்கிறோம்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நழுவல்போக்கு, அரசியல்வாதிகளின் ஏமாற்று நாடகம் ஆகியவற்றின் சிலதுளிகளை விபரிக்க முயற்சிக்கிறேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதில் அரசாங்கத்துக்கு உள்ள சவால்கள் என்ன?
இலங்கை தேயிலையிலையில் 24.5 வீதமான உற்பத்தியை மாத்திரமே பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி 75.5 வீதமானவை சிறு தோட்டங்களில் உற்பத்தியாகின்றன.

ஒப்பீட்டு ரீதியில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமாயின் அதற்கு ஒத்தாற்போல சிறுதோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கும் சலுகைகள், நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியன இதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.

இதனால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

மறுபுறம் தேயிலை உற்பத்தி விலையேற்றம், தொழிலாளர்களிடம் வினைத்திறன் இன்மை (குறிப்பாக ஆண்கள்), தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, ஏற்றுமதியில் உள்ள தடைகள் ஆகியவற்றை முதலாளிமார் சம்மேளனம் காரணங்களாக முன்வைத்தது.

இதனால் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
(இன்னும் பல காரணங்கள் உண்டு)

இதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்கள் அதற்கான பொறிமுறைகளை சரியான முறையில் முன்வைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு, பொது மேடையில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுப்போம் என உறுதியளித்தார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

ஆனால் 2019 ஆம் ஆண்டு, “ஆயிரம் ரூபா எப்படி கொடுக்கப் போறீங்கனு ஜனாதிபதிகிட்ட கேட்டேன்” என்கிறார். இதன் மூலம் அடிப்படை பிரச்சினை என்னவென்பது தெளிவு.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொமேஷ் பத்திரனவின் கருத்துக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கருத்துக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன.

கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருக்கிறது, பேச்சுவார்த்தை நடத்துகிறோம், சாதகத்தன்மைகள் குறித்து ஆராய்கிறோம் என ரொமேஷ் பத்திரன கூறும்போது,
மறுநாள்
ஏப்ரல் 10 ஆம் திகதி உங்களுக்கு 1000 ரூபா சம்பளம் கைக்கு கிடைக்கும். இது நிச்சயம், நேத்தும் ஜனாதிபதியோட பேசினேன், பிரதமருக்கும் சொன்னேன் என்கிறார் ஆறுமுகன் தொண்டமான்.

(ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதால் பல தடவைகள், அமைச்சுப் பொறுப்பையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தவர்தானே? என மனதில் கேள்வி உதித்தால் நான் பொறுப்பல்ல தோழர்களே!)

வடக்கில் ஒருவிதமான தோரணையில் ஒரு கருத்தையும் நுவரெலியாவில் இன்னொரு விதமான தோரணையில் இன்னொரு கருத்தையும் அவர் முன்வைத்து வந்தார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஆறுமுகனின் தெளிவற்ற பேச்சு, சம்பள அதிகரிப்புக்கான நியாயத்தை எடுத்துக்காட்டவில்லை.

தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு இவ்விந்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என நிறுவுவதற்கு பலம்பொருந்திய (சொல்லப்படுகின்ற) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முடியவில்லை.

நிற்க,
இந்நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தினால் ஏன் அடிப்படைச் சம்பளம் ஆயிரத்தை வழங்க முடியாது என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

இலாபத்தை நோக்காகக் கொண்ட எந்தவொரு நிறுவனமும் அந்த நோக்கத்திலிருந்து பின்வாங்குவதைத் தவிர்க்கின்றன.

இறுதியாக முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்திடம் முன்வைத்த முன்மொழிவு பரிந்துரையின் அடிப்படையில் தொழிலாளி ஒருவருக்கு மொத்த சம்பளமாக மாதாந்தம் 25,000 வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.

அதுவும் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி அடங்கலாக வரவுக் கொடுப்பனவையும் உள்ளடக்கியது.
அந்த பரிந்துரை வருமாறு,


இங்கே, அடிப்படைச் சம்பளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை.

அத்துடன் தேயிலை, இறப்பர் தோட்டங்கள் காடாகிப் போயுள்ளமைக்கு தொழிலாளர்களையே குறை கூறி வருகின்றன.

அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் கொரோனா ஆபத்து குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதால் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இது வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கடும் வெயில் காலநிலை காணப்பட்டது. இதனால் தேயிலை தொழிற்சாலைகள் பல இயங்காமால் போயின. தேயிலை உற்பத்தியிலும் சிறு அளவிளான வீழ்ச்சி ஏற்பட்டது.

இவையும் முதலாளிமார் சம்மேனளத்தால், சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
கடந்த மார்ச் 20 ஆம் திகதி வரையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அரச தரப்பினர், தொழிற்சங்க தரப்பினர் ஆகியோர் 18 சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பு ஏல விற்பனையில் தேயிலைக்கு உரிய கேள்வி விலை நிர்ணயம் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய முதலாளிமார் சம்மேளனம், ஒரு சில நாடுகளுக்கான ஏற்றுமதியில் வீழ்ச்சி குறித்தும் வாதாடியிருந்தது.

அதேவேளை, கடந்த டிசம்பர் (2019) மாதத்தில் ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு 631 ரூபாவாக இருந்த வேளை, விற்பனை விலை 508 ஆக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியது.

வெளியார் உற்பத்தி முறைமை நடைமுறைப்படுத்தப்படுமாயின் அதிக சம்பளத்தை வழங்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதனை ஊக்குவிப்பதற்கு தொழிற்சங்கள் முன்வரவேண்டும் எனவும் முதலாளிமார் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, ஆண் தொழிலாளர்களின் செயற்திறனில் முதலாளிமார் சம்மேளனம் திருப்தியை வெளிப்படுத்தவில்லை.

அதுமாத்திரமல்லாது, இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 18 முதல் 21 கிலோ கிராம் தேயிலைக் கொழுந்து பறிக்கப்படும் அதேவேளை, இந்தியாவில் அது 40 கிலோ கிராமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரச தரப்பினர் கூறுவதுபோல ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்க முடியும் என்றால், அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஏன் அதனை வழங்க முடியாது என்ற கேள்வியும் முதலாளிமார் சம்மேளனத்தினால் எழுப்பப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உலகம் கொரோனா என்ற கொடிய நோய்க்கு முகங்கொடுத்திருக்கிறது. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தைகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
2020, பெப். 20 - பேச்சுவார்த்தை

2020, பெப்.20 - பேச்சுவார்த்தை
தேயிலை ஏற்றுமதியில் சலுகைகளைக் கொடுத்து, அதன் மூலமான பணத்தை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு பயன்படுத்தும் யோசனை ஆராயப்பட்ட போதும் அதன் சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஏனென்றால் அதன் விளைவு அரச ஏற்றுமதி வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (தற்போதைய சூழ்நிலை போல) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் தேயிலை ஏற்றுமதி பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆக, யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு தேயிலை ஏற்றுமதிகள் பாதிக்கா வண்ணம் தொழிற்சங்கங்கள் சாதகமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இங்கே, இந்த விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை மாத்திரம் குறைகூறுவது நியாயமற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்  தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் சந்தா பெற்றுக்கொள்ளும் ஏனைய தொழிற்சங்களும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை இனப் பலத்தோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை தாம்பாளத்தில் வைத்துத் தந்துவிடப்போவதில்லை. அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

வெறுமனே அறிக்கைகளால் மாத்திரம் சம்பள விடயத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதை  உணர்ந்து செயல்திறன் மிக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் வரை இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் கண்கூடு.

-நிர்ஷன் இராமானுஜம்-
10.04.2020

(இலங்கைத் தேயிலை ஏற்றுமதித்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள், உள்நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், தேயிலை மலைகள் தரிசு நிலமாகியதன் விளைவுகள் குறித்து புள்ளி விபரங்களோடு அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்)

Saturday, March 28, 2020

COVID 19 - எதிர்வரும் 10 நாட்களில் நாம் எதிர்கொள்ளப்போகும் அபாயம்! Dr. வாசனுடன் தமிழ் ஊடகத்துறையினரின் கலந்துரையாடல்!

நாட்டில் தற்போது, சிகிச்சை பெறுவோர், மறைமுகமாக வாழ்வோர் என கொரோனா தொற்றுடைய 550 பேர் இருப்பதாக கணிப்பீடுகள் மூலம் நம்புகிறோம்.
எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், அதாவது 7,8ஆம் திகதி ஆகும்போது நாட்டில் மொத்தமாக 19 ஆயிரம்பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாவர் என்ற ஊகமும் எமக்கு உண்டு.
நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணைந்து எதிர்ப்பதன் மூலம் பேரபாயத்தைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான வாசன் இரத்தினசிங்கம் நேற்று (27) மாலை பகிர்ந்துகொண்ட கருத்துகள் இவை.


இலங்கை இதழியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கத்துடன் தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இணைய வழி கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரை இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு முக்கியமான கருத்துகளை வைத்தியர் வாசன் பகிர்ந்துகொண்டதோடு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் வழங்கினார்.

வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் எம்மோடு பகிர்ந்துகொண்டவற்றை இரத்தினச் சுருக்கமாக இங்கே பதிவிடுகிறேன் (இயலுமானவரை முயற்சிக்கிறேன்)

சீனாவுக்குப் பிறகு, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளில் நாம் எதிர்பாராத வகையில் நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த நாளில் 17 ஆயிரம் பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

எமது நாட்டுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகள் அனைத்தும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றன. ஆனால் ஏன், எவ்வாறு இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது என்ற கேள்விகள் எமக்குள் எழுகின்றன.

அதேவேளை, இந்தப் பேராபத்தை எவ்வாறு நமது நாடு எதிர்கொள்ளப் போகிறது என்ற சவாலையும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொண்டிருக்கிறோம்.

சீனாவைத் தவிர ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆரம்ப காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதே நிலைமை தான் நம் நாட்டிலும் இருந்தது.


ஆனால் வாரங்கள் தள்ளிப்போகும்போது அந்த நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் எமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்தவித நிச்சயமும் இல்லை.

எமது கணிப்பு, ஆய்வுகளின் பிரகாரம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதி மிகத் தீர்க்கமானதாகும்.

இங்கே சுமார் 550 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதே எமது கணிப்பாகும். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளான நோய்க் காவிகளால் ஏப்ரல் மாத முற்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டக் கூடிய சாத்தியம் உள்ளது.

எயிட்ஸ் போன்ற பாலியல் நோய் ஏற்பட்டிருப்பதாக பலர் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வெளியில் வந்து தங்களையும் காத்து பிறரையும் காக்க முன்வரவேண்டும்.

இந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன?
பதில்: உலக சுகாதார அமைப்பின் தகவலின் பிரகாரம் கொவிட் 19 வைரஸ், காற்றில் 8 முதல் 10 மணித்தியாலங்களும் மரம், செடி போன்றவற்றில் சுமார் 10 மணித்தியாலங்களும் உலோகப் பொருட்களில் 14 முதல் 15 மணித்தியாலங்களும் உயிர்வாழக் கூடியது எனச் சொல்லப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, பிளாஸ்டிக் பொருட்களில் 72 மணித்தியாலங்களும் பால் வகைகளில் 2 நாட்களும் உயிர் வாழக்கூடியது.

அதேபோன்று நாம் மேற்கொள்ளும் சுயபாதுகாப்பு முறைகளும் இதற்கு தாக்கத்தை செலுத்துகின்றன.

உதாரணமாக நாணயத்தாள் பரிமாற்றங்களிலும் அவதானம் தேவை. பிஸ்கட் போன்ற பொதியிடப்பட்ட உற்பத்திகளைக் கழுவி சுத்தம் செய்ய முடியுமாயின், அது சிறந்தது.

மரக்கறிவகைகளை நன்றாகக் கழுவ வேண்டும். அதிக வெப்ப நிலையில் வேக வைத்து உண்ண வேண்டும்.

கரட், வல்லாறை போன்ற பச்சையாக உணவில் சேர்த்துக்கொள்ளும் மரக்கறி வகைகளை அவ்வாறு உண்பதிலிருந்து கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கூடிய சாத்தியம் உண்டா?
நிச்சயமாக உண்டு. அது பொதுமக்களின் கைகளில் தான் இருக்கிறது. ஒவ்வொரு பொதுமகனும் இந்த நோய் குறித்து விளக்கமாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

உதாரணத்துக்கு சிங்கப்பூரை எடுத்துக்கொண்டால் சிறுவர்கள் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு கட்டமைப்பில் மாற்றம் இருக்கிறது.

நாம் அனைவரும் இணைந்து போராடினால்தான் இந்த வைரஸ் அபாயத்தைத் தவிர்க்க முடியும். கொவிட் 19 உடைய ஒருவர், மேலும் 8 பேருக்கு நோயைக் காவுவார் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் கணிப்பீடுகள் இடம்பெறுகின்றன.

SOCIAL DISTANCE என்று சொல்லப்படுகின்ற சமூக இடைவெளி மிக அவசியமானதாகும். அதனை நாம் அனைவரும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும். அதனை முறையாகக் கடைபிடிக்கும்போது கொரோனா எனும் ஆபத்தை மிக இலகுவாக எதிர்கொள்ளலாம்.

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் கண்காணிக்கப்படுவோரின் நிலை?
இலங்கையில் நோய்த் தொற்று உள்ளானவருக்கு மருத்துவம் வழங்குதல், அவர் சார்ந்தோரைக் கண்காணித்தல், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற செயற்பாடுகள் மிக வினைத்திறனுடன் நடைபெறுகின்றன.

தற்போது நால்வர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் நீண்டகாலமாக வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பதால் தாக்கம் அதிகரித்துள்ளது என்றே கூற முடியும்.

உயர் குருதி அழுத்தம், மாரடைப்பு, மாற்று அவயம் பொருத்தியிருத்தல், புற்று நோய் ஆகியவற்றில் எதுவேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டோருக்கு அவதானம் அதிகமாகத் தேவை. அத்துடன் வயது முதிர்ந்தோரும் கர்ப்பிணிப் பெண்களும் இதில் அடங்குவர்.

இந்த நோய்த் தொற்றில் காலநிலை தாக்கத்தை செலுத்துகிறதா?

ஆரம்பத்தில் அப்படிக் குறிப்பிட்டாலும் கூட காலநிலை தாக்கத்தை செலுத்துவதில்லை என்றே குறிப்பிட முடியும். வெப்ப, குளிர் பிரதேசங்கள் எதுவானாலும் மனித உடலின் வெப்பநிலை ஒரே நிலையில் தான் காணப்படும்.

மனித உடலின் வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸ் ஆகும்போது, அது வைரஸை கொல்லும். ஆனால் நமது உடல் வெப்பநிலை அந்தளவுக்கு உயர்வாக இருப்பதற்கான சாத்தியம் இல்லை.

கொரோனா தொற்று உடைய ஒருவருக்கான பிரதான அறிகுறிகள் எவை?

உயர் காய்ச்சல் - சுவாசப்பாதை உலர்ந்திருத்தல் - சுவாசிக்க சிரமமாயிருத்தல்.

கட்டாய தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் இருக்க வேண்டியது அவசியம் தானா?
நிச்சயமாக அவசியம்.

கொவிட் 19 தொற்றுடையவர்களுக்கு 5 முதல் 14 நாட்களுக்குள் தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். ஒரு சிலருக்கு இறுதி ஓரிரு நாட்களிலேயே அறிகுறிகள் தென்படுகின்றன.

கொரோனா தொற்றுடைய ஒருவர் உயிரிழந்துவிட்டால் எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

இறுதிச் சடங்கில் இயலுமானவரை பங்கேற்காமல் இருப்பதே சிறந்தது. உயிரிழந்தவரின் சடலத்தை நல்லடக்கம் செய்வதை விட தகனம் செய்வது மிக நன்மை பயக்கும்.

இலங்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்ற எண்ணிக்கை சரியானதா என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்?
சரியானவை.
கொரோனா தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனைக்கு சுமார் 18,000 ரூபா செலவாகிறது. ஆதலால் சந்தேகிக்கப்படும் எல்லோருக்கும் இந்தச் சோதனை செய்ய முடியாது, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அறிகுறிகள் தென்படுமாயின் மாத்திரமே அதற்கான பரிசோதனை செய்யப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் களத்தில் இருந்து பணியாற்றும் போது எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
PPE என்று சொல்லப்படுகின்ற PERSONAL PROTECTIVE EQUIPMENT ஐ உபயோகிக்கலாம். அது சிரமமாகத் தோன்றும் பட்சத்தில் ஏனைய உடைகள் பரவாயில்லை.

எவ்வாறெனினும் வீட்டுக்குச் சென்ற பிறகு உடைகளை நன்றாக சவர்க்காரமிட்டுத் துவைக்க வேண்டும். நீங்களும் குளித்து சுத்தமாக வேண்டும்.

துவைத்த துணிகளை நேரடி சூரிய வெளிச்சம் படும்படியாக உலர வைக்க வேண்டியது அவசியமாகும்.

ஊடகவியலாளர்கள் உபயோகிக்கும் கமரா, மைக் போன்றவற்றை, பணி நிறைவடைந்ததும் செனிடைசர்ஸ் கொண்டு நன்றாகத் துடைத்துவிடலாம்.

இலங்கையில் கொவிட் 19 ஐ முற்றாக ஒழிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

அதனை உறுதியாகச் சொல்ல முடியாது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்து இன்னும் ஆட்டிப்படைக்கிறது.

இலங்கையில் இதனை ஒழிப்பதற்கு மேலும் 5 அல்லது 6 மாதங்கள் ஆகலாம் என ஊகிக்கிறோம்.
அதற்கு முக்கியமாக,
01. தற்காப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் கையாள வேண்டும்.
02. அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும்.
03. சமூக இடைவெளியைப் பேண வேண்டும்.

இந்த வைரஸை நீக்குவதில் செனிடைசர்கள் பாதுகாப்பானவையா? அதில் எல்கஹோல் இருக்கிறது என்பதை அறிந்தவுடன் அதனைப் பயன்படுத்துவதற்கு எனது நண்பர் ஒருவர் தயங்கினார். இந்நிலையில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் உண்டல்லவா?
செனிடைசர்கள் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன என உத்தரவாதம் அளிக்க முடியாது. 65 முதல் 75 வீதமான எல்கஹோலுடன் ஏனைய தொற்றுநீக்கி பதார்த்தங்கள் அதில் சேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் கிருமிகளை ஒழிக்கக் கூடியதாக இருக்கும்.

எனினும் செனிடைசர்களை நாம் மிகக் குறைவாகவே பயன்படுத்துவதால் முழுமையாக தொற்றினை நீக்கி விட முடியும் என கருத முடியாது.

செனிடைசர்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் சவர்க்காரத்தை உபயோகிக்கலாம். சவர்க்காரத்தைக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் எவ்வாறு பரிந்துரைத்துள்ளதோ அதன்பிரகாரம் கைகளைக் கழுவினால் தொற்று அண்டாது.

தொடர்ச்சியாக செனிடைசர்களைப் பயன்படுத்துவதால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படுமா?
எமது தோல்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களும் உண்டு. அடிக்கடி செனிடைசர்கள் பயன்படுத்துவதன் மூலம் அவை மரணிக்கக் கூடும்.

ஆனால் சாதாரண பொதுமக்கள் வீட்டிலிருக்கும் போது அடிக்கடி செனிடைசர்கள் உபயோகிக்க வேண்டியதில்லை. மருத்துவத் துறைக்கு கட்டாயமாக அது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனபோதும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை விட கொரோனாவைக் கட்டுப்படுத்துவது நமக்கு மிக முக்கியம் தானே?

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஒருவருக்கு மீண்டும் அந்நோய் தொற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டா?
மிகக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர் குணமாகிய பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கும். ஆதலால்தான் ஏனைய நோயாளிகளுக்கு இரத்தம் வழங்குவதற்குக் கூட பரிந்துரைக்கப்படுகிறது.

கொவிட் 19 ஐ, L வகை – S வகை என இரு வகைப்படுத்துகிறார்கள். இலங்கையில் பரவுவது எந்த வகையான வைரஸ்?
அது பற்றி ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நாம் ஆரம்பகட்ட பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.

இந்த வகைகளைக் கூட கண்டறிய முடியாவிடின் அது எமது சுகாதாரத்துறை அல்லது மருத்துவ நிபுணர்களின் தேர்ச்சி மீது கேள்வி எழுப்புகிறதல்லவா? அல்லது ஆய்வுகளை நடத்துவதற்காக அரசாங்கத்திடம் தூர நோக்கத் திட்டமிடல்கள் இல்லையா?

அவ்வாறு சொல்ல முடியாது. இப்போதைக்கு அதற்கான தேவை இல்லை என்றே கூற முடியும்.

- நிர்ஷன் இராமானுஜம் - 28.03.2020 - 

(இந்தக் கலந்துரையாடலை காலத்தின் தேவை கருதி ஏற்பாடு செய்த இலங்கை இதழியல் கல்லூரியின் பிரதம நிர்வாகி குமார் லோப்பஸ் மற்றும் விரிவுரையாளர், திரை இயக்குநர், நண்பர் நடராஜா மணிவானன் ஆகியோருக்கு புதிய மலையகத்தின் நன்றிகள் உரித்தாகட்டும்)

Thursday, February 27, 2020

தியகலையில் அமைச்சர் ஆறுமுகனின் மகனும் கூட்டாளிகளும் போதையில் வெறியாட்டம்!

மைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தனது சகாக்கள் சகிதம் கினிகத்தேனை, தியகல தோட்டத்தில் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25ஆம் திகதி இரவு இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் போதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை மூடி மறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாம் நேற்றிரவு (26) களத்துக்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்தோம்.

கினிகத்தேனை நகரிலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர் தூரத்தில் சிவனொளிபாதமலை வீதியையொட்டி இருக்கிறது தியகல தோட்டம். அங்கு 110 குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

அந்தத் தோட்டத்துக்கு மைதானம் ஒன்றின் அவசியப்பாடு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்தையா பிரபாகரன் எனும் நபர் அங்கு வருகை தந்து 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாகவும் உடனடியாக மைதானத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும் இளைஞர்களிடம் கூறியுள்ளார்.

முத்தையா பிரபாகரன் என்பவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அனுமானிக்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் 26ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு என்ன நடந்தது என்பதை எஸ்.சரவணன் (32), எஸ். சசிகுமார் (44) ஆகியோர் இவ்வாறு விளக்குகின்றனர்.

இதேவேளை, தங்களுக்கு நிகழ்ந்த இந்த மோசமான அனுபவங்கள் குறித்துதனது மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார் கே. சரோஜா (54).


இந்த சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்ட நபர்கள் எனக் கூறப்படுகின்ற ஒருசிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமையில் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தியகல தோட்டத்தைச் சேர்ந்த எஸ். சரவணன் (32), எஸ். சசிகுமார் (44), எஸ். சுpவகாந்தன் (32), எஸ். ஜீவா (29), டபிள்யு. ஜி. பிரியந்த (35) ஆகியோர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

"ஜீவன் சேர்ட கால்ல விழுந்து பொம்பளைங்க நாம கெஞ்சினோம்"
"எல்லாரும் போதையில இருந்தாங்க"
"சசிய வெட்டி கொன்னுட்டுதான் போவோம்னு துடிச்சாங்க"
"நாங்க இல்லனா, இன்னைக்கு எங்க தோட்டத்துல மூனு சாவு விழுந்திருக்குங்க"
"கத்திய எடு, இவன வெட்டுவோம்னு அவங்க கத்தும்போது… என் அர உசுரு போயிருச்சிங்க தம்பி”

இப்படியான அனுபவங்களை அழுகையோடு அந்த மக்கள் சொல்லும்போது மனம் ரொம்பவும் பாரமாகிப்போனது.

இருக்கட்டும்.

மைதானம் அமைப்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதனை முதலில் பேசித் தீர்த்திருக்கலாம். அடாவடித்தனம்தான் அதற்கு தீர்வு என்பதை ஜீவன் தொண்டமான் வெளிநாட்டில் கற்றுத் தேர்ந்திருக்கிறார் போல!

இந்த நாட்டில் யாருக்கும் எங்கும் அரசியல் செய்வதற்கும், யாரும் யாருக்காவது வாக்களிப்பதற்கும் உரிமை இருக்கிறது. அதனை துப்பாக்கி முனையில் மாற்றியமைக்க தீர்மானிப்பதானது மடைமையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சாதாரண பொதுமகனாக என் மனதில் உதிக்கும் கேள்விகள் இவை,

* நான்கு வாகனங்கள், 18 முதல் 22 பேர் வரையான அடியாட்கள், துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்கள் இவற்றோடு வலம் வருவதற்கான அதிகாரத்தை ஜீவன் தொண்டமான் எனும் நபருக்கு யார் வழங்கினார்கள்?
* நம் நாட்டுப் பிரஜைகளை, தொழிலாளர்களைத் தாக்குவதற்கு ஜீவன் எனும் நபர் யார்?
* அந்த மக்களின் சந்தாப்பணத்தில் ஒரு துளி உப்பேனும் உங்கள் சாதத்தில் கலக்கவில்லையா?
* அந்த மக்களின் வியர்வையில் ஒரு துளியேனும் உங்கள் தேநீர் கோப்பையில் இருந்ததில்லையா?
* அதிகாரம் எனும் பயமற்ற தன்மையா? தந்தையின் வழிநடத்தலா அல்லது என்ன செய்தாலும் தொழிலாளர்கள் தங்களை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற அசட்டு நம்பிக்கையா?

உண்மையில் அந்த மக்களின் நிலைமை, அன்றைய சம்பவம் தொடர்பாக அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களைக் கேட்டபோது தொண்டமான் பரம்பரையில் இரத்தம் உறிஞ்சும் அடுத்த நரி உருவாகியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இனியாவது திருந்துங்கள் - அல்லது மாற்று நடவடிக்கைகளுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை உணர்வதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள்.

-நிர்ஷன் இராமானுஜம்-
தியகலையிலிருந்து 27.02.2020

Sunday, November 3, 2019

சூரியன் வானொலியின் செய்திகள்- ஒரு சாமானியனின் பார்வை!


லங்கையில் சூரியன் வானொலிக்கு என்று தனியிடம் உண்டு. ஊடகப் பரப்பிலும் சூரியன் என்ற பெயருக்கு களங்கம் எதுவும் இல்லை.

அண்மைக் காலமாக சூரியனை நான் மிக அதிகமாகவே விமர்சித்து வந்திருக்கிறேன். சூரியன் இணையத்தளச் செய்திகளின் மிக மோசமான போக்கு குறித்து அதன் ‘பாஷை’யில் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் காலப்பகுதியில் சூரியனுக்கு எதிரான பதிவுகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன. சுருக்கமாகச் சொல்லப்போனால், பொழுதுபோகாத சந்தர்ப்பங்களில் சூரியன் செய்திகளுக்கு பேஸ்புக்கில் வரும் பின்னூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு.

நான் சூரியன் வானொலியின் அபிமானி. ஆரம்ப காலத்தில் பிரதி வெள்ளிக் கிழமைகளில் காலை நேரத்தில் இலக்கியம் பற்றிய நிகழ்ச்சி இடம்பெறும். அந்த நிகழ்ச்சியை நான் பெரும்பாலும் தவறவிட்டதில்லை. செய்தி அறிக்கைகளையும் அப்படித்தான்.

இப்போது அடிக்கடி வானொலி கேட்பதில்லை. காலை நேர நிகழ்ச்சியில் 7.30 மணி, பொற்காலப் புதனில் பெரும்பாலும்- அவ்வப்போது செய்தியறிக்கைகள் எனக் கேட்பதுண்டு.

சூரியன் செய்திகள் பக்கசார்பாக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அது பெரும் பணக்கார முதலையின் சொத்து என்பதால் அநேகமாக அலட்டிக் கொள்வதில்லை.

ஆனாலும் செய்தி அறையில் தொழில்புரியும் ஊடகவியலாளர்களின் நேர்மையை நான் நன்கறிவேன்.

ஆயினும் என்னதான் செய்திகளை எழுதினாலும் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது வாசிப்பாளர்கள்தான். அவர்களுடைய அண்மைக்கால போக்கு மிக மோசமாக இருக்கிறது.

உச்சரிப்பு என்ற பெயரில் நச்சரிக்கிறார்கள். அதை சூரியனின் மேலிடம் தான் ஒரு ட்ரெண்டுக்காக உருவாக்கிப் பின்தொடர வைக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் அதனைக் கேட்கும்போது நெஞ்சு அழுத்துகிறது.

எல்லா அறிவிப்பாளர்களுடைய வாசிப்பும் அல்ல. ஒருசிலரின் வாசிப்பு….. ம்ம்ம் வார்த்தைகள் இல்லை.

தமிழில் ஒரு மாத்திரைச் சொற்களை மூன்றரை மாத்திரைக்கு இழுத்துச் செல்வதும், தங்களுடைய பெயரை உச்சரிப்பதில் காட்டும் அழுத்தத்தை ஏனைய முக்கியமான வரிகளுக்கு வழங்காமல் இருப்பதையும் நான் அவதானிக்காமல் இல்லை.

இதை, சூரியனின் பாஷையில் கூறியதற்கு விளக்கம் கேட்டு அழைப்புகள் பல வந்திருந்தன. அதன் விளக்கமாகவே இந்தப் பதிவை மேற்கொள்கிறேன்.
இது மோசமான பதிவு என்று, இன்று விமர்சிப்பவர்கள் - கடந்த காலங்களில் நான் ஏனைய வானொலிகளை, தொலைக்காட்சியை கடுமையாக விமர்சித்தபோது கூடிப் பேசி மகிழ்ந்தவர்கள் என்பதையும் நான் அறியாதவனில்லை.

நிற்க:
வானொலி என்பது ஒரு வீட்டின் குழந்தை போல, அறிவிப்பாளர்கள் எனச் சொல்லிக் கொள்ளுகின்ற பெரும்பாலானவர்களுக்கு இந்த விடயம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

மயான அமைதியிலும் எங்கோ ஒரு மூலையில் தன்னந்தனியாக ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலியை நேசிப்பவர்கள் மிக அதிகம். அந்தக் குழந்தை சிரிக்கும் போது சிரிப்பதும் அழும்போது அழுவதுமாக நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.

அதேபோன்று குழந்தை நல்லது செய்யும் போது பாராட்டுவதும் முறை தவறும்போது கண்டிப்பற்குமான அத்தனை உரிமையும் நமக்கிருக்கிறது.

இதனை யாரும், எந்த வகையிலும் மறுக்க முடியாது.

சூரியன் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் மக்கள் எதிர்த்துக் கேட்க மாட்டார்கள் என்ற மனநிலை ஒருசிலருக்கு இருக்குமானால் அது மிக மோசமான பின்விளைவை ஏற்படுத்தும். சூரியனை விரும்பாத பலர் மாற்று வானொலிகளைக் கேட்பதில்லையா? இணைய வானொலிகளைச் செவிமடுப்பதில்லையா?

சூரியனோடு நெடுங்காலம் பணிபுரியும் பலருக்கு அதன் தற்போதைய போக்கு பற்றிய விவாதத்தைக் கருப்பொருளாகக் கொள்ளும்போது என்னுடைய பதிவுகள் நிச்சயமாக மனதைப் புண்படுத்திவிடாது.

அறிவும், பண்புகளுக்குமான தேவைகளைத் தாண்டி காசு, காசு என்று - பணம்தான் முக்கியம் என்பதைத் தூண்டிவிட்டதும் சூரியன்தானே? என்று என் நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

அந்தக் கேள்விக்கு என் பதில் மௌனமாகவே இருந்தது.

இங்கே அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சிகளைப் பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இல்லை. நான் முழுவதுமாக ஆதங்கப்படுவது செய்தி அறிக்கைகள் பற்றித்தான் என்பதை திருத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மூத்தவர்களிடம் கற்று அறிந்த அறிவிப்பாளர்கள் சூரியனில் இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாளைக்கு செய்தி வாசிக்கட்டும். வித்தியாசத்தை நேயர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

நேயர்களின் இரசனையை மாற்றி, இப்படித்தான் தமிழ் மொழிநடை இருக்க வேண்டும் என ஒரு மாயை ஏற்படுத்தப்படுவது ஆரோக்கியமானதல்ல.

அடுத்ததாக, எனது பேஸ்புக் கணக்கு தனிப்பட்டது. அது, இறக்குவானையில் பிறந்த நிர்ஷன் இராமானுஜம் என்ற சாமானியனின் கணக்கு. அதில் எனக்குத் தெரிந்ததை, நான் அறிந்ததை, கிண்டல், குழப்பங்களை, கவிதைகளை, இரசனைகளை என எல்லாவற்றையும் பதிவிடுவேன்.

அதனையும் ஊடகத் தொழிலையும் இணைத்துப் பேசுவது விமர்சிப்பது… அடடா…. ஒரு சிலருக்கு இது தொழிலாகிப் போய்விட்டது.

ஊடகவியலாளர்களாக நாம் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். தொழிலில் போட்டித்தன்மை இருக்கலாம், அதற்காக நமது சுயமான அன்பை, பிணைப்பை எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை.

எனது பேஸ்புக் கணக்கு, ஊடகவியல் தொடர்புபட்டது என்றால் எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நான் எங்கே பதிவிடுவது? இது நியாயமான கேள்விதானே தோழர்களே?

ஆக, சூரியன் மீதான என் அண்மைய பதிவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டோரும் இல்லாமல் இல்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டு, அந்தக் காற்றில் தீயையும் மூட்ட முயற்சித்தவர்கள் இருக்கிறார்கள். இதுதானே உலகம்?

இனியும் என் பயணம் இதேபோன்று தொடரும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. நாம் பக்கசார்பற்ற செய்தியறிக்கையைத் தருகிறோம், தமிழ்ப் புலமைமிக்க அறிவிப்பாளர்கள்தான் செய்தி வாசிக்கிறார்கள் என நியாயம் வழங்கப்படுமாக இருந்தால், அதனைக் கடந்து செல்லவும் பிரயத்தனப்படுகிறேன். ஏனென்றால், இங்கே எல்லாமே சிலகாலம் தான்.

-நிர்ஷன் இராமானுஜம்-
இறக்குவானை.
03.11.2019

Monday, October 14, 2019

Digital யுகத்தில் மலையகத்தின் குரலாக ஒலிக்கும் மலையகம்.lk – அங்குரார்ப்பண விழா பற்றிய பார்வை


மலையகம்.lk இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் மலையக சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும் ஹற்றன் புனித பொஸ்கோஸ் கல்லூரியில் நேற்று (13) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மலையகத்தின் தனித்துவமான கலை அம்சங்களைத் தாங்கி, பாரம்பரிய அடையாளங்களை வெளிக்கொணரும் வகையில் இவ்விழா மிக நேர்த்தியாகவும் மனதைக் கவரும் விதத்திலும் இடம்பெற்றது.


மலையகம்.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் கே. தனபாலசிங்கத்தின் (ஆர்.ஜே. தனா) தலைமைத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் நிறைந்த இளைஞர் பட்டாளம் முன்னின்று இந்த நிகழ்வை நேர்த்தியாக வடிவமைத்திருந்தது.

இந்த விழா குறித்தான என்னுடைய பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.


ஆரம்பம்
கல்லூரி வளாகத்திலிருந்து தப்பு இசையோடு காவடியாட்டத்துடன் அதிதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பக்திப் பரவசத்தோடு அவர்கள் அந்தக் கலையை நிகழ்த்திய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது.

விழாவின் ஆரம்பமாக மலையகம்.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் கே. தனபாலசிங்கம் (தனா) வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்பு மாத்திரமன்றி இணையத்தளத்தின் ஆரம்பம், இளைஞர்களை இணைத்துக்கொண்டமை, திட்டமிடல்கள், சிரமங்கள், சவால்கள் என அத்தனையும் அவரது உரையில் பதிவு செய்தார்.

“நான், வீட்டு வேலைகளை அதிகமாகக் கவனித்தது கிடையாது. இப்படியொரு இணையத்தளத்தை என் மண்ணுக்காக உருவாக்கும் கனவு இன்று மெய்ப்பட்டிருக்கிறது. இதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம் உண்டு. அவற்றையெல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாவிட்டாலும், அவை அத்தனையும் இன்று மகிழ்ச்சிப் பூக்களாக என் மனதை ஆராதித்துக்கொண்டிருக்கின்றன.
இனிமேல் என் குடும்பத்துக்காக நேரத்தைச் செலவிடுவேன். அம்மா, அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்களை இனி கவனித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என மிக உருக்கமாக கருத்து வெளியிட்டார்.

அவ்வேளையில், சபையில் மத்திய இருக்கைகளில் அமர்ந்திருந்த தனாவின் பெற்றோர் நெகிழ்ச்சியடைந்ததை பலர் அவதானித்திருக்க வாய்ப்பில்லை.

நிகழ்வு
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் பட்ட துன்ப, துயரங்களை அடிப்படையாகக் கொண்டும் மலையக மக்களின் பாரம்பரிய கலைவடிவங்களோடும் டிக்கோயா நுண்கலை கல்லூரி மாணவர்கள் முதல் நிகழ்ச்சியைப் படைத்தார்கள்.

“காடுகளே போய்வரவா..” என்ற பாடலோடு, தத்தளிக்கும் கப்பலில் மண்ணைவிட்டு, சொந்தங்களை விட்டு வேறு தேசத்துக்குப் பெயர்ந்த எம் மக்களின் கண்ணீரை அந்த மாணவர்கள் யதார்த்தமாக வெளிக்கொண்டு வந்திருந்தார்கள்.

குறிப்பாக, “வெளையாத காட்டவிட்டு
வெளையாண்ட வீட்டவிட்டு
வெள்ளந்தியா வெகுளிச்சனம்
வெளியேறுதே..
வாழ்வோடு கொண்டு விடுமோ
சாவோடு கொண்டு விடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி நீளுதே..!
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே
வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே” என்ற வரிகளை மாணவர்கள் பாடி, நடித்தபோது சபையினர் கண் இமைக்காமல் பார்த்திருந்தனர்.

அதனையடுத்து கண்டிச்சீமைக்கு வந்த மக்கள் வேதனையோடு தொழில்புரிந்தாலும் தமது மண்சார்ந்த, வாழ்வியல் சார்ந்த பாடல்களைப் பாடி மகிழ்ந்த விதத்தையும் மாணவர்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை.

“மலையோரம் காட்டுக்குள்ள
கொழுந்தெடுக்கப் போறபுள்ள” என்ற காதல் துளிர்க்கும் பாடல் முதல் ஒப்பாரிப்பாடல் வரை ஒரு முழுமையான படைப்பை மேடையேற்றியிருந்தார்கள்.

இந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் மற்றும் சிறப்பு அதிதிகளால் மலையகம்.lk இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

மலையகத்தில் அனைத்து விதத்திலும் பேசப்படும் பாடசாலையாகத் திகழும் கேகாலை, கந்தலோயாவின் மாணவர்கள் மேலும் விருந்தளித்தார்கள் என்றே சொல்ல முடியும். அதிலும் குறிப்பாக பறை இசையில் கைதேர்ந்தவர்களாக தனித்துவமான படைப்புகளை வழங்கினார்கள்.

பறை என்பதை பலர் தாழ்த்தப்பட்டதாக நினைப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள் அது தமிழரின் பாரம்பரிய இசை என்பதை வலியுறுத்தியிருந்தார்கள்.

அதுமாத்திரமா? பறையின் இசை வடிவங்களைச் சொல்லி அதற்கேற்றாற்போல இசையமைத்துக் காட்டியமையால் கரகோஷத்தால் நிறைந்தது அரங்கு.

விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட மலையகக் கலைஞர்களும் தமது திறமையை மேடையில் வெளிக்காட்டியிருந்தார்கள்.

கௌரவம்
மலையகத்தில் பல்வேறு துறைசார்ந்து பங்களிப்பு வழங்கிவரும் படைப்பாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு இதன்போது கௌரவம் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் முக்கியஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

நாட்டார் பாடல் கலைஞர், நாட்டார் பாடல்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பண்டாரவளை கதிர்வேல் விமலநாதன், காமன் கூத்துக் கலையை காலங்காலமாகப் பேணிவரும் மஸ்கெலிய லங்கா தோட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் ராமர் மற்றும் சின்னையா சுப்ரமணியன் ஆகியோர் தங்களது அளவில்லாத மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொண்டனர்.

அதுமாத்திரமல்லாது புரட்சிக் கவிதைகள் மூலம் நற்கருத்துகளை விதைத்துவரும் பொகவந்தலாவை ப. கணகேஸ்வரன், மலையகத்தில் இளம் படைப்பாளர், நூலாசிரியர் கணேசன் பிரவீனா, இளம் விஞ்ஞானி விஷ்ணு தர்ஷன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை பாராட்டுக்குரியது.

சூரியன் வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் உதவி முகாமையாளர் அஜித் குமார், கந்தலோயா பாடசாலையின் அதிபர் கருணாகரன், சாதனை ஓட்ட வீரர் சண்முகேஸ்வரன், தேசாபிமானி பதூர் பாபா ஆகியோரையும் மலையகம்.lk குழு கௌரவித்தது.
பத்தனை ஸ்ரீபாத அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் திருமதி. சந்திரலேகா, விரிவுரையாளர் திருமதி. ரூபாராணி, மலையக சமூக ஆய்வு மைய இணைப்பாளர் சிவன் பிரபா, சமூக செயற்பாட்டாளர் பொன் பிரபா ஆகிய சிறப்பு அதிதிகளும் விழாவில் கௌரவம் பெற்றனர்.











நிறைகள்:
நமது தனித்துவமான கலைகள் மேடையேற்றப்பட்டமையை நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அனைவரும் மனம் திறந்து பாராட்டினார்கள். நிகழ்ச்சிகள், மேடைப் பேச்சுகள் அனைத்தும் வெகு நேரம் எடுத்துக்கொள்ளப்படாமல் ஏற்பாட்டாளர்கள் முக்கிய அவதானம் செலுத்தியிருந்தார்கள். சித்திரக் கலைஞர் கணேஷ் வெகுவாகப் பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டமையும் நினைவுகூர வேண்டும்.

முக்கிய கவனம் செலுத்தப்பட்ட விடயம்:
இந்த விழாவின் வெற்றிக்கு அறிவிப்பாளர்களின் பங்கு பாரியளவில் பக்கபலமாக அமைந்திருந்தது. சுதர்ஷன், விநோத், நவீன் ஆகிய இளையோர்கள் மூவர் சபையினரின் மனதில் இடம்பிடித்துக்கொண்டார்கள். அவர்களது நிகழ்ச்சித் தொகுப்பு, கம்பீரமான குரல் என்பன அரங்கை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தன.

இதேவேளை, கௌரவத்தின்போது யாருக்கும் பொன்னாடை போர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அரசியல்வாதிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படாமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

விமர்சனங்கள்:
இந்தப் பாரிய விழாவினை நடத்துவதற்கு புனித பொஸ்கோஸ் கல்லூரியின் கேட்போர் கூடம் பொருத்தமானதாக இல்லை. மேடையில் போதியளவு வெளிச்சம் இல்லாமையால் முதல் நிகழ்ச்சியில் ஒருவகை தொய்வு காணப்பட்டது.

சவால்கள்:
மலையகம் சார்ந்து பல்வேறு இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் நமது வாழ்வியலை அடையாளப்படுத்துவதாக, தனித்துவத்தைப் பேணுவதாக, சமூக அவலங்களை ஆதாரங்களோடு வெளிப்படுத்துவதாக, நமது பாரம்பரிய கலை வடிவங்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்வதாக அமைவதில்லை.

ஆனால் மலையகம்.lk என்ற இணையத்தளக் குழுவினருக்கு இந்தத் தார்மீகப் பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயப்பாடு உண்டு.

இப்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் இனிவரப்போகும் அதையும் தாண்டிய நவீன காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களோடு பயணிக்க வேண்டிய தேவையும் உண்டு.

வெறுமனே இணையத்தளத்தை ஆரம்பித்துவிட்டோம், இனி இயலுமானதைச் செய்துகொண்டு தொடருவோம் என்றுதான் பலர் இணையத்தளங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் அரசியல் தேவைக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் பொழுதுபோக்குக்காக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கே, இவற்றைத் தாண்டி இணைய வெளியில் மலையகத்தின் தாய் இணையத்தளமாக அதனை மாற்றியமைத்து மக்களின் மனதில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக் கூடிய வகையில் மலையகம்.lk இணையத்தளக் குழுவினர் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

-நிர்ஷன் இராமானுஜம்-
இறக்குவானை
14.10.2019

Thursday, August 15, 2019

ஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா? துரோகிகளா?


சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் கட்சியின் அரசியல் பிரமுகர்கள் நியாயப்படுத்தி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் ஆறுமுகன் தொண்டமான், வழமைபோல தனது விசுவாசிகளின் மீது பாரத்தைச் சுமத்திவிட்டு அமைதியாய் தப்பிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

வெகு இலாவகமாகத் தப்பித்துக்கொள்ளும் வழி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனபோதும் அந்தக் கட்சி செய்துள்ள மாபெரும் நம்பிக்கைத் துரோகம் அதன் தொடர் பயணத்துக்கு இன்னுமின்னும் தடையாக அமையும் என்பதே உண்மை.

ஆறுமுகன் என்ற நபருக்கு, தொழிலாளர்கள் எனப்படுகின்றவர்கள் எப்போதும் மூன்றாம் பட்சம் தான். தொழிலாளர்களைப் பயன்படுத்தி எந்தளவுக்கு நன்மை அனுபவிக்க முடியுமோ அந்தளவுக்கு அதன் உச்சத்தை அடைவதுதான் அவருடைய எண்ணம் என்பதற்கு கடந்த கால நடவடிக்கைகளே கண்கூடு.

கூட்டு ஒப்பந்தம் பற்றியதான தொழிலாளர்களின் கோபமும் வேகமும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே என்பதை ஆறுமுகன் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். அதற்கு ஏற்றாற் போல தொழிலாளர்களும் அவரை நம்பி, நம்பியே ஏமாற்றமடைந்து வருகிறார்கள்.

நிற்க,
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே சந்தாப்பணம் (மூன்றில் ஒன்றாக) அதிகரிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அறிக்கைகளுக்குப் பெயர்போனவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எந்தவொரு இடத்திலும் அவ்வாறனதொரு சரத்து இடம்பெறவில்லை.

இறுதியாக முழுமைப்படுத்தப்பட்ட 2003 ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பாகம் 2, இரண்டாம் பகுதியில் அ. பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அ. உறுப்பினர் ஒருவரிடமிருந்து அறவிடப்படக் கூடிய சந்தாப் பண விபரத்தை, சந்தா தொடர்பான விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டு, தொழிற்சங்கத்தின் தலைமையகம் வாயிலாக மாதத்தில் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறியத்தருவதுடன் எந்த மாதத்திலிருந்து அந்தத் தொகையை கழிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இதற்கு அடுத்ததான பிரிவுகளில் ஏனைய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆக, இங்கே தொழிலாளர்களின் அனுமதி இல்லாமல் சந்தாவை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. அதேவேளை, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்காமல் அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லை.

அவ்வாறெனின் யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? யாரால் யார் ஏமாற்றப்படுகிறார்கள்?

தொழிலாளர்கள், தங்கள் தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கை என்ற ஆயுதத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பியிருக்கிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். தொழிற்சங்க ரீதியில் தங்களை விட்டால் யாருமில்லை என்ற இறுமாப்பும் அதீத கர்வமும்தான் இதற்குக் காரணம்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மக்களை வீதியில் இறக்கி, இறுதியில் நிலுவைப் பணத்தைக் கூட பெற்றுக்கொடுக்காமல் வெறும் 20 ரூபாவை அதிகரித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தங்களுடைய சுய இருப்பு கருதி 63 ரூபாவை கௌரவப் பிச்சையாக எடுத்துக்கொண்டுள்ளது.

சந்தாவை மாத்திரம் அதிகரித்துக்கொண்ட இ.தொ.கா., கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தொழிற்சங்கம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பிலும் உற்பத்தி அதிகரிப்பில் பங்களிப்பு தொடர்பிலும் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன?

மக்களின் இயலாமையையும் பலவீனத்தையும் சாதகமாகப் பயன்படுத்துவதில் ஆறுமுகனுக்கு நிகர் ஆறுமுகனே தான் என்றால், அது சாலப் பொருத்தமாகும்.

அது ஒருபுறமிருக்க, தற்போதைய அரசாங்கத்தில் பலம் மிக்க அமைச்சராக இருக்கும் பழனி திகாம்பரத்தின் செயற்பாடு தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவரது அலுவலர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அமைச்சர் மீதான நம்பிக்கையீனத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பான தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தின் மூலம் பெறப்பட்டு தினக்குரல் பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது.

அந்தச் சட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவல்களை முன்னிறுத்தி ஊடகவியலாளர் கருப்பையா பிரசன்னகுமார் கட்டுரையை எழுதியிருந்தார். இந்நிலையில் கட்டுரையில் உள்ள தகவல்கள் பிழை எனக் கூறி அமைச்சர் திகாம்பரம், ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அது மாத்திரமன்றி மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியுள்ளார்.

தலைவனின் வழியில் தொண்டன் என்ற வகையில் அமைச்சரின் ஊழியர் ஒருவரும் அவரது பங்கை விட்டு வைக்கவில்லை. தினக்குரல் ஆசிரிய பீடத்துக்கு வந்து விசாரிப்போம் எனவும் ஊடகவியலாளரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அழைப்பை எடுப்பதாகவும் மிரட்டியிருக்கிறார்.

சமூகத்துக்கான தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வது ஓர் ஊடகவியலாளனின் கடமைகளில் ஒன்றாகும். கடமையைச் செய்த ஊடகவியலாளருக்கு அமைச்சர் கொடுத்த பரிசு தான் ‘கொலை அச்சுறுத்தல்’.

'சரி... மலையகத்தைச் சார்ந்த ஊடகவியலாளன் தானே? மிரட்டினால் இனி எழுத மாட்டான்' என அமைச்சர் நினைத்திருப்பார் போலும்.

இங்கே ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன், இதே கட்டுரையை எழுதிய பிரசன்னா என்ற ஊடகவியலாளர் தான் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினத்துக்கான ஒருநாள் செலவு 50 இலட்சம் என்ற உண்மையையும் வெளிக்கொண்டு வந்தார்.

தினக்குரல் வெளியிட்ட தகவல் பிழை என்றால் அந்த ஊடகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம், அல்லது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் பிழை என்றால் அது தொடர்பில் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருக்கலாம். அதைவிடுத்து ஊடகவியலாளரை மிரட்டும் சிறுபிள்ளைத்தனமான செயலைச் செய்ததை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விடயத்தை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டித்திருந்தது.

ஊடகவியலாளர் ஏன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதன் பின்னணியில் சமுதாய அக்கறை உண்டு என்பதையும் சில காரணங்களையும் காலம் வரும்போது அவர் முன்வைப்பார் என நம்புகிறோம்.

மிக அண்மைக்காலத்தில் நடைபெற்ற இவ்விரு விடயங்களையும் உற்று நோக்கும் போது மனதில் பல கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

அதில் முதலாவது, “இவர்கள் தலைவர்களா?” என்பதே.

தலைவர் எனப் பெயர் வைத்துக்கொண்டவர்கள் எல்லோரும் மக்களின் மனதில் தலைமைத்துவ இடத்தை நிரப்பிவிட முடியாது. மலையகத்தைப் பொருத்தவரையில் அராஜக அரசியல் இடம்பெற்றுள்ளதை நாம் அறியாமல் இல்லை.

அது தொடர வேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தார்களேயானால் அதன் பிரதிவிளைவுகள், பெரும் பாடம் புகட்டுவதைத் தவிர்க்க முடியாது. அத்தோடு மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சுயநலனுக்காகப் பயன்படுத்தி, அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் அது எத்தனை பெரிய துரோகம்?

எங்கள் ஊரில் வாய்மொழி வழக்கு ஒன்று  உண்டு.

“முனியாண்டி வேணாம்னு மாடன்கிட்ட போனோம். அவனும் பலி கேக்குறான்”

இது ஆறுமுகனுக்கும் திகாம்பரத்துக்கும் புரியுமா?

-நிர்ஷன் இராமானுஜம்-

Saturday, February 16, 2019

உண்மைச் சம்பவம்: வஞ்சிக்கப்பட்ட நட்பால் 23 இலட்சம் பறிபோன கதை!


வாசுவும் சாமரவும் மிக நெருங்கிய நண்பர்கள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாசு வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகிறான். அரசாங்க நிறுவனம் ஒன்றில் தொழில்புரிந்து வருகிறான் சாமர. இருவருக்கும் இடையில் மூன்று வருட நட்பு இருந்துள்ளது.

ஒரு தேநீர் கோப்பையில் இருவரும் பகிர்ந்து நுகரும் வகையிலும் ஒரே உணவைப் பகிர்ந்து உண்ணும் வகையிலும் நட்பு வளர்ந்திருந்தது. சாமர தனது நண்பர்கள் சிலரையும் (சிங்களவர்கள்) வாசுவுக்கு அறிமுகப்படுத்தத் தவறவில்லை.

இப்படியிருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாமர தனது திட்டம் ஒன்றுகுறித்து வாசுவுடன் கலந்துரையாடியுள்ளான். அந்தத் திட்டத்தை இவ்வாறு விபரித்துள்ளான்.

அதிர்ஷ்டலாபச் சீட்டு தயாரிப்பவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சீட்டில் உள்ள இலக்கங்கள் தெரிவுசெய்யப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். சரியாக குறிப்பிட்ட தினத்தில் சனிக்கிழமை அதிர்ஷ்டத்தில் திட்டமிடப்பட்ட குறித்த இலக்கங்கள் தெரிவாகும். கிட்டத்தட்ட 15 கோடி பணம் இதன்மூலம் கிடைக்கும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் இப்படி திட்டம் ஒன்றை அரங்கேற்றலாம். 
இப்படி செய்வதற்கு 25 இலட்சம் ரூபா செலவாகும். ஆனால் வருமானம் அதை விட பன்மடங்கு கிடைக்கும்.

இங்கே, சீட்டு தயாரிப்பவர், இலக்கத்தை தெரிவு செய்பவர், அச்சிடுபவர் என ஐந்து பேருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. நீ பணம் தந்தால், அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்குச் செல்லாம்” என நம்பிக்கையூட்டியுள்ளான் சாமர.

இந்த விடயத்தை முழுமையாக நம்பிய வாசு, எதைப்பற்றியும் யோசிக்காமல் சம்மதித்துள்ளான். அதுமட்டுமல்லாது சாமர கோரிய முதல்கட்டப் பணத்தொகையான 5 இலட்சத்தையும் கொடுத்துள்ளான்.

இப்படி கட்டம் கட்டமாக 23 இலட்ச ரூபா பணம் வாசுவால் சாமரவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சமார, இரண்டு அதிர்ஷ்டலாபச் சீட்டுகளை வாசுவுக்கு கொடுத்த போதிலும் அதில் எந்தவொரு இலக்கமும் தெரிவு செய்யப்படவில்லை.

இப்படி காலம் நகர்கையில், சமரவின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாசுவைச் சந்திப்பதிலிருந்து அவன் தவிர்த்துவந்தான். இதனால் சந்தேகம் கொண்ட வாசு தான் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளான்.

இந்த நிலையில், வாசுவை மதிய உணவு விருந்துக்காக தனது வீட்டுக்கு அழைத்தான் சாமர. இனி நடந்த விடயங்களை வாசு இப்படி விபரிக்கிறான்.

அன்று மதியவேளை சாப்பாட்டுக்குப் போனேன். சாமரவும் அவனது மனைவியும் வீட்டில் இருந்தார்கள். சாமரவின் மனைவிதான் எனக்கு உணவு பரிமாறினாள். அன்றுதான் அவளை நான் முதல் முதலாகப் பார்த்தேன். ஆனாலும் அவளுடைய நடத்தையில ஏதோ மாற்றம் இருந்தது. என்னருகில் இருந்து என்னை உரசிக்கொண்டே இருந்தாள். பார்வையும் வித்தியாசமாக இருந்தது.

நான் சாப்பிட்டு முடியும் முன்பே சாமர எழுந்துவிட்டான். அந்த நேரத்தில் என்னுடைய கோப்பையின் கீழ் ஏதோ காகிதத்தை வைத்துவிட்டு உள்ளே சென்றாள் சாமரவின் மனைவி. நான் அதை எடுத்துப் பார்த்தேன். அது கைத்தொலைபேசி இலக்கம்.

நான் கொஞ்ச நேரத்தில அங்கிருந்து வந்துவிட்டேன். அன்றிரவு அந்தத் தொலைபேசி இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சாமரவின் மனைவி எனக்கு அழைத்திருந்தாள். நான் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும் என்னைச் சந்திக்க வேண்டும் எனவும் கூறினாள். 
இப்படி சில நாட்கள் நகர்ந்தன. 

ஒருநாள் அவள் எனக்கு அழைப்பு எடுத்தாள். ‘சாமர அனுராதபுரத்துக்குச் சென்றிருக்கிறார். நாளை மாலை தான் வருவார். நீங்கள் இன்றிரவு வீட்டுக்கு வர முடியுமா? இரவு 10 மணிக்கு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

சாமரவின் மனைவி அழகானவள். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நான் சாமரவின் வீட்டுக்குச் சென்றேன். அவள் செக்ஸியாக ஆடை அணிந்திருந்தாள். எனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டாள். நான் எதுவும் பேசாமல் அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் அவள் என்னை இறுகக் கட்டி அணைத்துக்கொண்டாள். நானும் அணைத்துக்கொண்டேன்.

திடீரென கதவைத் திறந்துகொண்டு சிலர் வந்தனர். அவர்களில் சாமரவும் இருந்தான். எதுவும் பேசாமல் என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான் சாமர. மற்றொருவன் என் பின் பக்கத்திலிருந்து மார்போடு பிடித்து கைகள் அசையா வண்ணம் இறுக்கிக்கொண்டான். இன்னொருவன் வீடியோ பதிவு செய்தான். மற்றுமொருவன் கதவுக்கு அருகில் நின்றான்.

சாமர என்னைக் கேவலமாகத் திட்டித் தீர்த்தான். என்னைப் பொலிஸில் ஒப்படைப்பதாகவும் மிரட்டினான். சாமரவின் மனைவி அறைக்குள் இருந்து என்னைக் கிண்டலாகப் பார்த்ததை நான் அவதானித்தேன்.

பின்னர் நான் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டேன்.

என்னுடைய 23 இலட்சம் பணத்தின் கணக்கைத் தீர்க்க கணவனும் மனைவியும் இணைந்து நடத்திய நாடகம் இதுவென நான் பின்னர் அறிந்துகொண்டேன்.

எனது பணத்தைத் தருமாறும், மனைவியின் வேண்டுகோளுக்கு அமையவே வீட்டுக்கு வந்ததாகவும் நான் அவனுக்கு அழைப்பு எடுத்து கூறினேன். ‘உன்னோடு இனி எந்தத் தொடர்பும் இல்லை. உன்னைப் பொலிஸ் நிலையத்தில் பிடித்துக்கொடுப்பேன். எங்கேயாவது ஓடியொளிந்துகொள். நீ ஒரு கேவலமான நாய்’ எனப் பதில் கிடைத்தது”
என நடந்த சம்பவத்தை விபரித்தான் வாசு.

நூதனமான திருட்டுச் சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. அதற்கு வாசுவின் இந்தக் கதை ஓர் உதாரணம். வஞ்சகர்கள் நிறைந்த இந்த உலகத்தில் சூழ்ச்சியோடு திட்டமிடப்பட்டு இந்தக் கொள்ளை அரங்கேறியிருக்கிறது. இங்கே நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை. சில பலவீனங்களைப் பயன்படுத்தி இப்படியும் கொள்ளைகள் இடம்பெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டவே முனைந்துள்ளேன்.

அவதானமாக இருப்போம்.

-நிர்ஷன் இராமானுஜம்-
16.02.2019