Tuesday, September 29, 2009

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..!


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

ஊருக்கே ஒன்றென
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ

கையில் சிகரட்டோடும்
கசிப்பு போத்தலோடும்
வாசலில் அப்பா

எதிர்த்துப்பேச நாவில்லாமல்
வெற்றிலை தின்று
இடைவிடாமல்
காறித்துப்பும் அம்மா

பகல்முழுதும் கூத்தடித்து
பாதிப்போதையோடு
கதவைத் தட்டும் அண்ணா

உதவி ஒத்தாசையென்றுகூறி
ஓரமாய் ஒளிந்திருந்து
மாரை வெறித்துப்பார்க்கும் மாமா

இத்தனைக்கும் மத்தியில்…

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!

-இராமானுஜம் நிர்ஷன்

Thursday, September 24, 2009

வன்னி மக்களுக்கு உதவுகிறார் அம்மாபகவான்

யுத்தம் எனும் கொடூர அரக்கனிடமும் கடத்தல் என்ற பிசாசிடமும் ஆகக்குறைந்தது தமது குடும்பத்தில் ஒருவரையேனும் இழந்துவிட்ட நம் மக்களின் துயரை அம்மாபகவான் முற்றாக நீக்கப்போகிறார்.

இதுபற்றி அவரது சீடர்களுக்கு கனவில் காட்சியளித்து கூறியிருக்கிறார்.

இந்த செய்தியுடன் கொழும்பிலிருந்து வன்னி,திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல கொழும்புச் சீடர்கள் தயாராகிவிட்டார்கள். அதற்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றிருப்பது எனக்கு நேற்று தான் தெரியவந்தது.

நம்ம பாஷையில கதய சொல்றேன் -

அம்மா பகவான் சீடர்கள்னு சொல்லிக்கிட்டு இங்க பலபேர் சுத்துறாங்க. தீட்சை கொடுக்கிறதா சொல்லி பள்ளிப் பசங்களையும் வீணாக்கிய நெறய பேரோட கள்ளத்தனம் வெளிய கசிய தொடங்கிருக்கு.

இப்படி சீன் நடந்துக்கிட்டு இருக்கிற நேரம்,

கொழும்புல உள்ள தனவந்தரோட கனவுல (அவர் அம்மா பகவானின் சீடராம்) அம்மாபகவான் வந்திருக்காரு. அதுவும் காலையில 4 மணிக்காம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமயம் பார்த்து உதவ இருப்பதாவும் தன்ன ஆழமா மனசுல நினைச்சு வழிபடுறவங்கள சீக்கிரம் சொந்த இடத்துக்கு அனுப்பி பணக்கார வாழ்க்கை வாழவைப்பதாவும் அம்மாபகவான் சொல்லியிருக்காரு.
அதுமட்டுமா, அந்த தனவந்தரோட தலைமையில சீடர் குழுவ நியமிச்சு தான் சொன்ன செய்திய மக்கள் காதுக்கு எட்டச் செய்யனும் னு வேற சொல்லியிருக்காரு.

மறுநாள் காலையில எழுந்ததும் தன்னோட சகவாசி(யர்)களுக்கு விசயத்த சொன்ன உடன எல்லாரும் ஆனந்தக் கண்ணீர் வடிச்சாங்களாம். பகவானோட உத்தரவு னு சொல்லித்தான் கூட்டம் நடந்திருக்கு.

காலம் போற போக்கப் பாருங்க….

சரி,
இதுவரைக்கும் வராத அம்மாபகவான் இப்போ எப்படி வந்தாரு?
பசி பட்டினியோட வாடும்போது இவர் எங்கே போனாரு?

ஆகட்டும்.
பிந்திக்கிடைச்ச செய்தியின் படி,
பாதிக்கப்பட்டவங்கள பார்க்கப்போற உறவினர்களோட சேர்ந்து இந்த சீடர்கள் போய் குருவின் உத்தரவை செயலில் காட்டப்போறாங்களாம்।

(இதுக்குப் பொருத்தமான பாட்டு ஒன்னு நினைவுக்கு வருது)

மிச்சம் சொச்சம் காதுக்கு எட்டியவுடன் சொல்றேன்.

Tuesday, September 22, 2009

“தாம் நினைத்ததைப்போல நாடகமாடுவதற்கு மக்களின் வாழ்க்கை திறந்த மேடையல்ல”

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனிதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தலின் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.

“தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்” என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்கள் உட்பட இன்னும் கேளிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அணல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல்கட்சியாயினும் சரி மக்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால், அது இறுதிவரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள், சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் பேச்சில்போன்று செயலிலும் தீரத்தை காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயமாக எழுதப்படும்.

ஆனால் அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெற்று வருகின்றன. அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் என காட்ட முற்படுகிறார்கள். மலையகத்தில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயினும் மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கங்களாயினும் அவற்றுக்கென்று தனிக்கொள்கை, தனிச்செயற்பாடு, தனிநோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்களை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையக தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஐந்நு}று ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவோம். எந்தவொரு தொழிற்சங்கமும் எமது நோக்கத்துக்கு தடையாக இருக்கக்கூடாது என ஆரம்பத்தில் கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர்கள் தொழிலாளர்களுக்கு கூறும் பதில் என்ன? பொது நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதாக கூறும் அனைத்து தமிழ் அரசியல்தலைவர்களும் மக்களின் நலனுக்காக இணைந்து குரல்கொடுக்காமைக்கு காரணம் என்ன?

பாதைசெப்பனிடுவதும்,கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான எண்ணத்தினை அரசியல்தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்துவைப்பதன் மூலம் மலையகத்தில் பலகாலமாக இருந்துவரும் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

மலையகத்தில் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததனால் அவர்களின் கல்வி வளர்ச்சியும் குன்றுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

அதேபோன்று “சிறுவர் தொழிலாளர்கள்” என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்குப் பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கியமான காரணம் எனினும் வறுமையே து}ண்டுகோலாக அமைகிறது. இங்கு சம்பள அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது அரசியலின் உண்மையான சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.


அமைச்சர் ஆறுமுகனுக்கு:

* உங்களால் 500ரூபா சம்பளம் பெற்றுத்தரமுடியாது என்று ஆரம்பத்திலிருந்து நீங்கள் அறிந்துகொண்டீர்கள். ஆனாலும் மக்களை ஏமாற்றுவதற்காக ஏன் போலி வாக்குறுதிகளை கொடுத்தீர்கள்?

* வேறு தொழிற்சங்கங்கள் தலையிடாமல் இருந்தால் நிச்சயமாக 500ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியும் என்று உறுதிபடச்சொன்ன நீங்கள் இப்போது சாதாரண தொழிலாளியின் முகத்தை எந்த மனச்சாட்சி கொண்டு பார்க்கப்போகிறீர்கள்?

* தலைமைத்துவம் என்பதை உங்களுடைய மக்களுக்கு சரியாகச் செய்தீர்கள் என்பதில் நு}று வீதம் உடன்பாடு உங்களுக்கு உண்டா?

அமைச்சர் முத்துசிவலிங்கத்துக்கு:
*“உன்னை வெள்ளைவேனில் து}க்குவேன்। நாய்களை வைக்கவேண்டிய இடத்தில் தான் வைக்கவேண்டும்” என்று பாரவத்தை தோட்டத்தில் பகிரங்கமாக ஒரு தொழிலாளரைப் பார்த்துக் கேட்ட உங்களையும் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது வெட்கப்படுகிறேன்।

* ரூபா 285 என்பது நியாயமான சம்பள உயர்வுதான் என நாகூசாமல் சொல்லும் நீங்கள், உண்மையில் அந்த மக்களோடு வாழ்ந்திருக்கிறீர்களா என்பதில் சந்தேகம் எழுகிறது?

ஊவா மாகாணசபை உறுப்பினர் வேலாயுதத்துக்கு:
*ரூபா। 285 என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன் தனிப்பட்ட முடிவாகும். ஆதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 500 ரூபா பெற்றுக்கொடுக்க தொடர்ந்து பேச்சுநடத்துவோம் என்று வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்துவிட்டு மறுபுறம் கபடநாடகம் ஆடிய உங்களுக்கும் சாதாரண துரோகிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

* முதலாளிமார் இணைந்து உங்கள் அனைவருக்கும் கொடுத்த மதுபானத்தில் மனச்சாட்சி கரைந்துபோய் சுயநினைவற்றுதான் மறுபக்கம் சாய்ந்தீர்கள் என வெளியில் பேசிக்கொள்ளவதை உங்கள் மௌனம் ஏற்றுக்கொள்கிறதா?

* அடுத்த தேர்தலிலும் சம்பள உயர்வை கருப்பொருளாக வைத்து போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதால் தான் இந்தத் துரோகத்தை மக்களுக்கு செய்தீர்களா?

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

-இராமானுஜம் நிர்ஷன்