Saturday, May 20, 2017

முஸ்லிம்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கண்டி, அஸ்கிரிய மல்வத்து பீடத்துக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தனர்..




இதன்போது தற்போதைய நிலைமை தொடர்பாக பீடாதிபதிகளுக்கு விளக்கமளித்ததாக ஞானசார தேரர் தெரிவித்ததுடன் முஸ்லிம்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

அங்கு சந்திப்பின் பின்னர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் இவை,

நாட்டின் தற்போதைய நிலைமை தெடர்பாக நாம் விளக்கமளித்தோம் விசேடமாக இந்த நாட்களில் தீவிரவாத போக்குடைய முஸ்லிம் பிரிவினரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.

அவர்கள் இந்த அரசியலுக்குள் இருந்துகொண்டு எங்களுடைய மூத்த அண்ணாமாராக, தந்தையராக, சித்தப்பாமாராக நடந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.

இதனை நல்லவிதமாக அல்லது கெட்டவிதமாக நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மறுபுறத்தில் நாம் இன்று பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம்.

நாட்டில் நீதி, சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கம் இன்று வேறு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளே இதற்கு காரணம். இந்த ஆட்சிக்காலத்தில் அவர்களால் எவற்றை பெற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.

அதன் கட்டங்களாகத்தான், கிழக்கில் தேசிய சொத்துகளை அழித்தல், நல்லிணக்க பெயர்ப்பலகையின் கீழே புத்தர் சிலையை நிறுவவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த தேசிய சொத்துக்களால் எமக்கு எந்தப் பயனும் இல்லை என அந்த மக்கள் சொல்லுமளவுக்கு இன்று காலம் மாற்றமடைந்திருக்கிறது.

அங்கு காடழித்தல் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாம் நேற்று அறிவித்தோம்.

இந்த நிலையில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஞானசார உள்ளிட்ட தேரர்கள், அமைப்புகளுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிடப்போவதாக நாம் கேள்விப்பட்டோம். ஞானசார உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் முஸ்லிம் உறுப்பினர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்களாம். நான் கேட்கிறேன், அதென்ன கடும் நடவடிக்கை? அதனை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மறுபுறத்தில் நான் கவலையையும் வெளிப்படுத்துகிறேன்.

பாராளுமன்றத்தில் 225 பேர் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் எவ்வாறான இன உணர்வுடன் முஸ்லிம்கள் ஒன்றிணைகிறார்கள்? இதே உணர்வு பாராளுமன்றத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இல்லை என்பதை நினைத்து கவலையடைகிறேன்.

முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். முஸ்லிம்கள் ஒன்றிணைவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுக்கென பிரச்சினை வரும்போது ஒற்றுமையாக இருப்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், எங்களுடைய உறுப்பினர்கள், ஆகக்குறைந்தது 10,12 பேராவது ஒன்றிணைந்து எமது பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசவில்லை.

ஆதலால் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதியை நிலைநாட்டுமாறு நாம் கோரி நிற்கின்றோம். எமக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை.
அதனை, வில்பத்துவை அழித்த பதியுதீனிடமிருந்து ஆரம்பியுங்கள். எங்களை கொன்றுவிட்டு தானும் இறப்பதாக கூறிய அசாத் ஸாலியிடமிருந்து ஆரம்பியுங்கள். மூத்த அண்ணனைப் போல இருந்துகொண்டு, தீவிரவாத எண்ணத்துடன் எங்களுடன் மோதவரும் முஜிபுர் ரஹ்மானிடமிருந்து நீதியை நிலைநாட்டிக்கொண்டு வாருங்கள்.

அப்படியென்றால் நாம் நீதிக்கு கட்டுப்படுகிறோம்.

அதைவிடுத்து அரசியல் பலத்தை உபயோகித்துக்கொண்டு எங்களை கட்டுப்படுத்த நினைத்தால் அது அவர்களின் தவறாகும் என்றே நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளை சொல்வதற்கு யாரும் இல்லை. இதை கேட்பதற்கு தலைவர் ஒருவர் இல்லை.

சிங்களவர்களுக்கு தலைவர் இல்லை, பௌத்தர்களுக்கு தலைவர் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். ஏனைய இனங்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

இன்று நாங்கள் அராஜகங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையை சொல்வதானால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருக்கும் ஒருவருக்கு பயந்துகொண்டு இருப்பது போன்ற நிலைமைதான் இன்று.

நாம் இதை உணர்வுபூர்வமாக கதைப்பதற்கு காரணம், நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள் உணர்வுபூர்வமாக இருப்பதால் தான். அவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் இந்த நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள். என்ன புதுமை என்றால், உலகில் இப்படியானதொரு சகவாழ்வு உள்ள நாடு இருக்கிறதா? இப்படியானதொரு பௌத்த சூழல் இருக்கின்ற நாட்டில், இருவேளையும் பிரித் கேட்கின்ற மக்கள் வாழ்கின்ற நாட்டில் எந்தக் கள்ளத்தோணிகள் இல்லாமல் இருக்கிறார்கள். சகவாழ்வை பற்றி கற்றுக்கொடுத்த எங்களுக்கு வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள் எமக்கே கற்றுக்கொடுக்க பார்க்கிறார்கள்.

அறநெறிப்பாடசாலைகளில் எங்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் சகவாழ்வை கற்றுக்கொடுக்கிறார்கள். முஸ்லிம்களின் மத்ரசாக்களில் தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கிறார்கள்.

அது இங்கே சரிவாராது என்பதை தான் எளிமையாக என்னால் சொல்ல முடியும்.

-இராமானுஜம் நிர்ஷன்-

Monday, May 1, 2017

இனியொரு புதுத் தேசம் மலரட்டும்!

இனியொரு புதுத் தேசம் மலரட்டும்


அன்புக்குரிய மகனே,
துரோகிகளும் ஏமாற்றுவித்தைக்காரர்களும் நிறைந்து வாழும் தேசம் இது. சுற்றுச்சூழ நாம் காணும் இயற்கையை கொண்டு சுவர்க்க பூமி என எடைபோட்டு விடாதே. மலைக்காட்டை அழித்து தேயிலை விதைத்து பச்சை தேசத்தை சமைத்தார்கள் எங்கள் மூதாதையர்கள்.


காடழிக்கும் பணிக்கு சென்ற ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. பகடைக்காய்களாய் அங்குமிங்கும் அடிபட்டிருக்கிறோம். எம்மை வைத்து இலாபம் தேடிய முதலாளிமார் இன்னும் சுகமாகத்தான் வாழ்கிறார்கள்.
நாம் இதயசுத்தியானவர்கள். எங்களுக்கு ஏமாற்றம், துரோகம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகத்தான் தெரியும். காமன் கூத்தில் மாத்திரம் தான் எங்கள் கிராமத்து மக்கள் நடிப்பார்கள்.

நமது சோகமெல்லாம் மலைக்காற்றிடையே மறைந்திருக்கிறது. எமது கண்ணீர்கூட தேயிலைக்கு உரமாகியிருக்கிறது.

இங்கே தலைவர்கள் என சொல்லிக்கொள்வோர் வந்துபோவதுண்டு. எம்மை ஆளப்பிறந்தவர்களாகவும் அன்பின் இருப்பிடமாகவும் அவர்கள் காட்டிக்கொள்வதுண்டு. அவர்களின் புன்னகைக்குப் பின்னால் போலித்தனத்தின் உச்சம் மறைந்திருக்கிறது.

நாம் இதை கண்டுகொள்ள காலம் எடுத்தது குழந்தையே. நீ எங்கள் வரலாற்றை முதலில் கற்றுக்கொள். அவை சொல்லித் தரும் பாடத்தை விட எந்தத் தத்துவங்களும் உணர்த்திவிடப் போவதில்லை.

கூடை சுமந்து கூனிப் போனேன், கொழுந்து கிள்ளிக் களைத்துப் போனேன்
ஒரு ரொட்டித் துண்டில் வயிற்றை நிரப்பி உன்னை கருவாய் சுமந்தேன். கால்கிலோ குறைந்ததென்று அரைநாள் சம்பளத்தோடு வீடு திரும்பிய நாட்கள் அதிகமாகவே உண்டு.


பசியும் ஏமாற்றமும் கல்நெஞ்சக்காரக் கடவுள் எமக்கு கொடுத்த வரங்கள். நாம் பணத்தால் ஏழைகளே தவிர மனதால் மிக உயர்ந்தவர்கள்.

நான் சிறுபராயத்தில் இருக்கும்போது பௌர்ணமி இரவில் ஊரார் இணைந்து கதை பேசுவார்கள். அப்போது மூத்தவர்கள் பலரும் தாங்களே இயற்றிய பாடல்களை பாடுவார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏராளமான வலிகள் புதைந்திருக்கும். ஆனால் அதே பாடல்கள்தான் வலிகளை போக்கும் மருந்தாகவும் இருந்தன.

அந்தக்காலம் இப்போதில்லை. காலம் முழுவதும் கடவுளைத் தூற்றிக்கொண்டே காலமாகிப் போகிறோம்.

உன்னைப் போல எத்தனையோ குழந்தைகள் கொழும்பில் பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகம் தெரியாது. பாத்திரம் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் சாதித்தது கிடையாது.

என் உதிரம் கொடுத்து உனக்கு உயிர்கொடுத்திருக்கிறேன். உன்னை கடைசிவரை உயிராகக் காக்கும் வரம் எனக்கு கிடைக்குமோ தெரியாது. எனக்கு பொன்,பொருள்,மாளிகையொன்றும் தேவையில்லை. 

என்னைப்போல எத்தனையோ தாய்மாருக்கு மகனாக வளர்ந்து இந்த தேசத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்திடு.
எனக்கு ஆயிரமாயிரம் கனவுகள் உண்டு. என் உயிர் துறக்கும் தருவாயில் அவையும் என்னுடனேயே இந்த மண்ணுக்குள் புதைந்து போகும். அரசியலில் நல்லவர்கள் இருப்பார்கள், சமூகத்தில் துரோகிகளல்லாத நல்லுள்ளம் படைத்தவர்கள் இருப்பார்கள் என்பதை இந்த உலகுக்கு காட்டு.

தூய சிந்தனையுடனான உன் வளர்ச்சி கண்டு இந்த மண்ணுக்குள் புதைந்துபோன எங்கள் மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இனியொரு புதுத் தேசம் உன்னிலிருந்து மலரட்டும்!

அன்புடன் அம்மா.

எழுத்து: இராமானுஜம் நிர்ஷன்
படங்கள்: சொரின் பர்ஸோய் (அல்-ஜசீரா)