Friday, September 16, 2016

கருத்துப் பகிர்வு: வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் தற்போதைய போராட்டம் குறித்து அனேகருக்கு தெளிவில்லாத தன்மை காணப்படுகிறது. என்னுடன் கதைக்கும் நண்பர்கள் பலர் வைத்தியர்களின் போராட்டம் நியாயமானது என்று வாதிடுகிறார்கள்.

உண்மையில் இந்தப் போராட்டத்தினூடாக வைத்தியர்களுடைய சுயநலத்தின் உச்சகட்டம் புலப்படுகிறது என்பதே எனது கருத்து.

தங்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் அனுமதி வேண்டும் என்பதே அவர்களுடைய முதல் வாதம். அதாவது வைத்தியர்களுக்கு கிடைக்கும் இடமாற்றத்தினால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இதனால் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் அனுமதி வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இடமாற்றங்களின்போது ஏற்படும் சிக்கல்களுக்கு ஏற்கனவே தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதுவும் வைத்தியர்களுக்கு விசேட சலுகை எப்போதும் உண்டு.

எனினும் வைத்தியர்களுடைய தற்போதைய கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.


ஆரம்பத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் போராட்டம் நடத்தினார்கள். பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிக்கொண்டு அரச பணியை மாத்திரம் புறக்கணித்து போராட்டத்தில் வெற்றியும் கண்டார்கள்.

அதற்குப் பிறகு வாகன இறக்குமதியில் சலுகை கேட்டார்கள். அதற்காக தொடர்ச்சியான போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிக்கொண்டு அரச பணியை புறக்கணித்தார்கள். அந்தப் போராட்டமும் வெற்றியடைந்தது.

இரண்டு பிரதான கோரிக்கைகளை வென்றெடுத்ததினூடாக அரசாங்கத்தை ஆட்டிப்படைத்துவிடலாம் என்பதே வைத்தியர்களுடைய எண்ணமாக மாறியது.

அதற்காக மக்களின் வாழ்க்கையை துரும்பாக பயன்படுத்தி தற்போது மற்றுமொரு போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

சாதாரண ஏழை பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை வேண்டும் எனக் கோரியிருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் இங்கு முழுக்க முழுக்க சுயநலனை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சை முற்றுகையிடுவதிலும் அரசாங்கத்துக்கு எதிராக அறிக்கை விடுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

அவர்கள் இனங்கண்டுள்ளதாக கூறப்படும் 12 பாடசாலைகளில் மாத்திரம்தான் தங்களுடைய பிள்ளைகளுக்கு அனுமதி வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை.

உதாரணத்துக்கு ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

வைத்திய சங்கத்தினருக்கு கொழும்பு ரோயல் கல்லூரி அனுமதி வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி அனுமதி அவர்களுக்கு வேண்டாம் என்கிறார்கள்.

இது எந்த வகையிலான கோரிக்கை என்பது புரியவில்லை.

இதில் எங்கு நியாயத்தை தேடுவது என்பதும் தெரியவில்லை.

அரச வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நேர முகாமைத்துவத்தை கண்காணிக்க கைவிரல் பதியும் முறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு ஏற்கனவே தீர்மானித்தது.

அதற்கு எந்தளவான போராட்டங்கள் இடம்பெற்றன என்பதை முழு நாட்டு மக்களும் அறிவார்கள்.

குறிப்பாக வைத்தியர்கள் பலர் தனியார் வைத்தியசாலைகளில் அதிக நேரத்தை அக்கறையுடன் செலவிடுவதால் அரச வைத்தியசாலைகளுக்கு தாமதமாகவே வருகை தருகின்றனர்.

எங்கே வைத்தியர்களை எதிர்த்தால் தமது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என எண்ணி நோயாளர்களும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதில்லை. அதேபோன்று அரசாங்கமும் சற்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தான் இதுவரை காலமும் செயற்பட்டு வந்தது.

எனினும் தற்போதைய நிலை என்ன?

வைத்தியர்களின் தற்போதைய போராட்டம் குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

அனைத்து தொழிற்சங்கங்களையும் சமமாகவே பார்ப்பதாகவும் தொழில் ரீதியான பிணக்குகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நாட்டு மக்களின் நலனுக்காக தீர்த்து வைக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

வைத்தியர்களின் சங்கத்தைப் பற்றி நேரடியாக இங்கு குறிப்பிடப்படாவிட்டாலும் இதன் உள்ளர்த்தம் என்னவென்பது வெளிப்படையாகிறது.

அதேபோல் அனைத்து மாணவர்களையும் அரசாங்கம் சமமாகவே பார்ப்பதாகவும் பாகுபாட்டுக்கு இடமில்லை எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்தினை அமைச்சர் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளப்போகிறது என்பதை இங்கு கண்ணும் கருத்துமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

அத்துடன் இதில் அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானத்தை ஏனைய பிரதான தொழிற்சங்கங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

எது எவ்வாறாயினும் சாதாரண பொதுமக்களே பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். பணிப்புறக்கணிப்பு காலத்தில் அரசாங்கத் தொழிலை மறுக்கும் அரசாங்க வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் அதிக நேரத்தை செலவிடுகின்றமை கண்கூடு.

எனினும் இவ்வாறான விடயம் குறித்து பொதுமக்கள் அதிகமாக விழிப்புணர்வூட்டப்பட வேண்டிய தேவை உள்ளது. பொதுமக்களின் எழுச்சி மிக்க போராட்டங்களின் ஊடாகவே எழுந்தமானமாகவும் எதேச்சதிகாரத்துடனும் செயற்படுவோருக்கு நல்ல பாடம் கற்பிக்க முடியும்.

-இராமானுஜம் நிர்ஷன்-

Friday, September 9, 2016

சப்ரகமுவ தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வியோடு விளையாடுகிறதா கல்வி அமைச்சு?


-நிர்ஷன் இராமானுஜம்-

சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூல உயர்தர மாணவர்களுக்கு என்றுமில்லாதவாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கு வரப்பிரசாதமாக கல்வி இராஜாங்க அமைச்சு கிடைத்துள்ள போதிலும் சப்ரகமுவ மக்கள் மாற்றான்தாய் மனப்பான்மையோடே பார்க்கப்படுகின்றனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையிலும் உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகள் இல்லை. இதுவரை காலமும் அதற்கான எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை.
அதுமாத்திரமல்லாமல் கலை, வர்த்தக பிரிவுகளில் போதிய வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் நிலவுகிறது.
இந்நிலையில் தாம் விரும்பிய துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதற்காக வேறு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை இந்த மாணவர்கள் நாடுகின்றனர்.
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களை விட பொருளாதார ரீதியில் மத்திய மாகாணம் பொருந்தும் காரணத்தினால் பெற்றோர் மத்திய மாகாணத்தை நாடுகின்றனர்.
அத்துடன் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம் என்பதாலும் நம்பிக்கையுடன் அந்த மாவட்ட பாடசாலைகளை நாடுகின்றார்கள்.
மத்திய மாகாணத்தில் சப்ரகமுவ மாணவர்களை இணைத்துக்கொள்ளுவதானது இன்று நேற்று நடைபெறுவது அல்ல. மிக நீண்டகாலம் தொட்டே இந்த மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் கற்று சிறப்புத் தேர்ச்சியுடையவர்களாக வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நுவரெலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.
அதாவது பரீட்சைக்கு தோற்றுவதற்காக மாத்திரமே அவர்கள் மத்திய மாகாணத்தை நாடுவதாக அரசியல் பிரமுகர்கள் எண்ணுகின்றனர். அத்துடன் வெட்டுப்புள்ளியை காரணம் காட்டியும் மாணவர்கள் இணைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தவறான கண்ணோட்டமாகும்.
தமது எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொள்ளவே அத்தனை சிரமங்களையும் தாண்டி வேறு மாகாணங்களுக்கு செல்கிறார்கள். உரிய வளங்கள் தமது பகுதியில் இருந்தால் மாற்றிடங்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.
சப்ரகமுவவில் தமக்குரிய பாடத்திட்டங்கள் இல்லையென்றால் அந்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு உரிய பதில் அரசியல்வாதிகளிடம் இருக்குமானால் தயவுடன் அதை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த முறை மாணவர்களுக்கு நிகழ்ந்த அநீதி இங்கே குறிப்பிடுகிறேன்.
சப்ரகமுவ மாகாணத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 38 மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.
அவர்களுக்கான அனுமதி கடந்த ஜுன் மாதம் பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
அந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி தங்குமிடங்களையும் தெரிவு செய்து அதற்கான கொடுப்பனவையும் செலுத்தி அங்கு தங்கியிருந்தார்கள்.
அவர்களில் பலர் பாடசாலைகளுக்கு சென்று கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்வந்த பாடசாலைகளிலிருந்து அவர்கள் பலாத்காரமாக அனுப்பப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சரின் கடுமையான உத்தரவின்பேரில் பாடசாலைகளிலிருந்து அனுப்புவதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுடைய நோக்கம், கனவுகள் எல்லாம் சிதைக்கப்பட்டு இன்று செய்வதறியாது தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இதன்பிறகு கல்வி அமைச்சருக்கு ஊடகங்கள், அரசியல்பிரமுகர்கள், பெற்றோர்கள், பொதுமக்களால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இரத்தினபுரியில் இரண்டு பாடசாலைகளிலும் ஊவாவில் இரண்டு பாடசாலைகளிலும் உடனடியாக உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் உறுதியளித்திருந்தார்.
இந்தத் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம்.
ஆனால் உரிய வளங்களுடன் பூரணமாக குறித்த பிரிவுகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு இந்த மாணவர்கள் எப்போது பரீட்சை எழுதப்போகிறார்கள்?
இந்த அப்பாவி மாணவர்கள் மத்திய மாகாணத்தில் கல்வி கற்பதற்கான கோரிக்கையை விடுக்கிறார்களே தவிர வேறெந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பது உரியவர்களுக்குப் புரிகிறதா?
சப்ரகமுவவை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியிருக்கும் இருவரும் இதுவரை இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. கல்வி அமைச்சர் வேறு கட்சிதானே? அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்ற மனப்பான்மையில் அவ்விருவரும் இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மாவட்ட பாடசாலை சமூகத்திடையே பெரும் வெறுப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் இவர்களுடைய காதுக்கு எட்டாததன் காரணமும் பின்னணியும் எதுவென மக்கள் நன்கறிவார்கள்.
இது இவ்வாறிருக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சப்ரகமுவ மாகாணத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நோக்குவதற்கான காரணம் என்ன?
அவ்வாறெனின் தேசிய அமைச்சுகளை வாக்கு வங்கியை வளர்த்துக்கொள்வதற்காக மாத்திரம் பயன்படுத்திகிறார்களா?
மலையகம் என்றால் நுவரெலியா மாத்திரம் அல்ல. எமது தமிழ் அரசியல்தலைவர்கள் என நாம் உரிமையோடு கேட்கும்போது தலைசாய்த்து நியாயத்தை கேட்காமல் தட்டிக்கழிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கியிருக்கும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு மிக விரைவாக எட்டப்பட வேண்டும் என்பதே மக்களது கோரிக்கை.
சப்ரகமுவவில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அது நடைபெறும் வரையில் இந்த முறை மாத்திரமாவது மாணவர்கள் மத்திய மாகாணத்தில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை கல்வி அமைச்சு வழங்க வேண்டும்.