Thursday, February 27, 2020

தியகலையில் அமைச்சர் ஆறுமுகனின் மகனும் கூட்டாளிகளும் போதையில் வெறியாட்டம்!

மைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தனது சகாக்கள் சகிதம் கினிகத்தேனை, தியகல தோட்டத்தில் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25ஆம் திகதி இரவு இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் போதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை மூடி மறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாம் நேற்றிரவு (26) களத்துக்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்தோம்.

கினிகத்தேனை நகரிலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர் தூரத்தில் சிவனொளிபாதமலை வீதியையொட்டி இருக்கிறது தியகல தோட்டம். அங்கு 110 குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

அந்தத் தோட்டத்துக்கு மைதானம் ஒன்றின் அவசியப்பாடு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்தையா பிரபாகரன் எனும் நபர் அங்கு வருகை தந்து 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாகவும் உடனடியாக மைதானத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும் இளைஞர்களிடம் கூறியுள்ளார்.

முத்தையா பிரபாகரன் என்பவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அனுமானிக்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் 26ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு என்ன நடந்தது என்பதை எஸ்.சரவணன் (32), எஸ். சசிகுமார் (44) ஆகியோர் இவ்வாறு விளக்குகின்றனர்.

இதேவேளை, தங்களுக்கு நிகழ்ந்த இந்த மோசமான அனுபவங்கள் குறித்துதனது மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார் கே. சரோஜா (54).


இந்த சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்ட நபர்கள் எனக் கூறப்படுகின்ற ஒருசிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமையில் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தியகல தோட்டத்தைச் சேர்ந்த எஸ். சரவணன் (32), எஸ். சசிகுமார் (44), எஸ். சுpவகாந்தன் (32), எஸ். ஜீவா (29), டபிள்யு. ஜி. பிரியந்த (35) ஆகியோர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

"ஜீவன் சேர்ட கால்ல விழுந்து பொம்பளைங்க நாம கெஞ்சினோம்"
"எல்லாரும் போதையில இருந்தாங்க"
"சசிய வெட்டி கொன்னுட்டுதான் போவோம்னு துடிச்சாங்க"
"நாங்க இல்லனா, இன்னைக்கு எங்க தோட்டத்துல மூனு சாவு விழுந்திருக்குங்க"
"கத்திய எடு, இவன வெட்டுவோம்னு அவங்க கத்தும்போது… என் அர உசுரு போயிருச்சிங்க தம்பி”

இப்படியான அனுபவங்களை அழுகையோடு அந்த மக்கள் சொல்லும்போது மனம் ரொம்பவும் பாரமாகிப்போனது.

இருக்கட்டும்.

மைதானம் அமைப்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதனை முதலில் பேசித் தீர்த்திருக்கலாம். அடாவடித்தனம்தான் அதற்கு தீர்வு என்பதை ஜீவன் தொண்டமான் வெளிநாட்டில் கற்றுத் தேர்ந்திருக்கிறார் போல!

இந்த நாட்டில் யாருக்கும் எங்கும் அரசியல் செய்வதற்கும், யாரும் யாருக்காவது வாக்களிப்பதற்கும் உரிமை இருக்கிறது. அதனை துப்பாக்கி முனையில் மாற்றியமைக்க தீர்மானிப்பதானது மடைமையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சாதாரண பொதுமகனாக என் மனதில் உதிக்கும் கேள்விகள் இவை,

* நான்கு வாகனங்கள், 18 முதல் 22 பேர் வரையான அடியாட்கள், துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்கள் இவற்றோடு வலம் வருவதற்கான அதிகாரத்தை ஜீவன் தொண்டமான் எனும் நபருக்கு யார் வழங்கினார்கள்?
* நம் நாட்டுப் பிரஜைகளை, தொழிலாளர்களைத் தாக்குவதற்கு ஜீவன் எனும் நபர் யார்?
* அந்த மக்களின் சந்தாப்பணத்தில் ஒரு துளி உப்பேனும் உங்கள் சாதத்தில் கலக்கவில்லையா?
* அந்த மக்களின் வியர்வையில் ஒரு துளியேனும் உங்கள் தேநீர் கோப்பையில் இருந்ததில்லையா?
* அதிகாரம் எனும் பயமற்ற தன்மையா? தந்தையின் வழிநடத்தலா அல்லது என்ன செய்தாலும் தொழிலாளர்கள் தங்களை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற அசட்டு நம்பிக்கையா?

உண்மையில் அந்த மக்களின் நிலைமை, அன்றைய சம்பவம் தொடர்பாக அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களைக் கேட்டபோது தொண்டமான் பரம்பரையில் இரத்தம் உறிஞ்சும் அடுத்த நரி உருவாகியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இனியாவது திருந்துங்கள் - அல்லது மாற்று நடவடிக்கைகளுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை உணர்வதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள்.

-நிர்ஷன் இராமானுஜம்-
தியகலையிலிருந்து 27.02.2020