Tuesday, December 4, 2007

மந்தைகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தின் தொடர்மெளனமும் !


கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் என்றுமில்லாதளவுக்கு கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை இந்தத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன் போது கொழும்பு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலும் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி பூஸா முகாம் கடந்த இரு நாட்களில் தமிழர்களால் முற்றாக நிறைந்து விட்டதால் நேற்று முழுநாளும் கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் தெற்கில் களுத்துறைச் சிறைக்கும் கொழும்பிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்றுக்காலை வீதிகளில் இறங்கியவர்கள் அனைவரும் ஏதோவொரு பகுதியில் படையினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களிலும் அதிகாலை முதல் பிற்பகல் வரை அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அவற்றில் வந்தவர்கள் ஒருவர் விடாது பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதனால் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை கொழும்பு நகரில் நுழைவாயில் பகுதிகள் ஒவ்வொன்றிலும் பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்தன.
கொழும்பு நகருக்குள் பிரவேசித்த தமிழர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, படையினர் அந்தந்தப் பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது பெற்றோரும் உறவினர்களும் பொலிஸ் நிலையங்களுக்கு படையெடுத்ததால், நேற்று முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் மறைவான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
கொழும்பின் மேற்குப் பகுதியில் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் வீடுகள், வீதிகளில் கைது செய்யப்பட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றப்பட்டு கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு நண்பகல் வரை விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பெரும்பாலானோர் சிறைச்சாலைகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
ஆண், பெண் வேறுபாடின்றியும் வயது வேறுபாடின்றியும் தமிழர்கள் என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள சிங்களப் பாடசாலை ஒன்றுக்குள் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மிக நீண்டநேரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை விடுவித்துச் செல்வதற்காக பெற்றோரும் உறவினர்களும் மணித்தியாலக் கணக்கில் காத்திருந்தனர்.
இதேநேரம், கொழும்பு பாலத்துறை (தொட்டலங்கா) பகுதியிலும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை நிலையமூடாக கொழும்பு நகருக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வாகனங்கள் நேற்றுக் காலையிலிருந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தன.
இதனால், கொழும்பு - நீர்கொழும்பு வீதியல் பல மைல் தூரத்திற்கு வாகனநெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துத் தடையுமேற்பட்டது.
கொழும்பு நகருக்குள் வரும் நுழைவாயில்களிலெல்லாம் இவ்வாறு தீவிர சோதனைகளும் கைதுகளும் நடைபெற்றுக் கெண்டிருந்தபோது, கொழும்பு நகருக்குள் கொழும்பு-1 முதல் கொழும்பு-15 வரையான அனைத்துப் பகுதிகளிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர். இதன் போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
கொழும்பு நகருக்குள் இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நகருக்கு வெளியே வத்தளை, ஹெந்தளை, மாபொல, தெஹிவளை, கல்கிசை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றன.
காலை, மாலையெனப் பாராது மட்டக்குளி, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொஞ்சிக்கடை, கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடத்தப்பட்டன.
கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பஸ்நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்திலும் முப்படையினரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சின் விஷேட உத்தரவின் பேரிலேயே இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் கைதுகளும் இடம்பெறுவதாக படைத்தரப்பு தெரிவித்தது.
கிழமை நாட்களில் வெளியிடங்களிலிருந்து பெரும்பாலும் சிங்கள மக்களே கொழும்பு நகருக்குள் வருவர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு நகரில் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே இருப்பதால் நேற்று இந்தத் தேடுதல்களும் கைதுகளும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. பல்லாயிரக்கணக்கானோர் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இந்தத் தேடுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீர்கொழும்பு நகரிலும் நேற்றுக் காலை தேடுதல்களும் சோதனைகளும் இடம்பெற்றன.
இங்கு மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல லொறிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தத் தேடுதல்கள் மற்றும் கைதுகளுக்கு அஞ்சி நேற்று கொழும்பு நகரில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை। வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்।கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறது। கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு கிழக்கு தமிழர்கள் பெரும் சித்திரவதைகளுக்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ளாக்கப்படுவதை யாரால் தடுக்க முடியும்?. தமிழர்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதாக கூறும் கலைஞர் கருணாநிதி இந்த விடயத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன்? .

என்னதான் நடந்தாலும் இவ்வாறான விடயங்கள் குறித்து கருணாநிதி மெளனம் சாதிப்பது கவலைக்குரியதாகவே உள்ளது।

15 comments:

மங்களூர் சிவா said...

//
என்னதான் நடந்தாலும் இவ்வாறான விடயங்கள் குறித்து கருணாநிதி மெளனம் சாதிப்பது கவலைக்குரியதாகவே உள்ளது।
//
:((((((

Anonymous said...

பேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை
தொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை
கடமையை செய்வோம்
உரிமையை பெற்றுக்கொள்வோம்
தடையை தகர்த்தெறிவோம்-அது
மற்றவரின் தலையாய்இருந்தாலும்
பரவாயில்லை!

இறக்குவானை நிர்ஷன் said...

என்ன பண்ண சிவா! நீங்களாவது குரல்கொடுக்கக்கூடாதா?


அதென்ன அனானியாக வந்து நான் சொன்னதையே சொல்றாங்களே? தாங்கமுடியலப்பா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கருணாநிதி மௌனம் சாதிப்பது, அவருடைய பதவியை காப்பாத்திக்கொள்ள. தமிழ் இரத்தம் ஓடுது அப்படின்னு சொன்னார். அப்படின்னா அவருடைய மத்திய அரசாங்கம் ஏன் சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்குது? யாரை கொல்ல? என் தமிழனைக் கொல்லவா? உனக்கு தமிழ் இரத்தம் ஓடினால் என்ன? பண இரத்தம் ஓடினால் என்ன? உன்னால் ஒண்ணும் ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு.


அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com

Anonymous said...

புலிப் பினாமிகளின் பொய்ப்பிரச்சாரங்களை தமிழக மக்கள் இனங்காணவேண்டும்.

- முல்லை ஈஸ்வரன்.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பற்றி தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் சுயலாபம் கருதி செய்து வருகின்ற பொய்ப்பிரச்சாரங்கள் குறித்து தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு நிலை இன்று தோன்றியுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் தமிழகப் பினாமிகளாக செயற்படுகின்ற வை. கோபாலசாமி, பழ. நெடுமாறன், தொல். திருமாவளவன், எஸ். ராமதாஸ், கி. வீரமணி, கொளத்தூர் மணி, சுப. வீரபாண்டியன் போன்றோர் தமிழக மக்களின் வாக்கு வேட்டைக்காக அன்றி புலிகளால் மாதாந்தம் வழங்கப்படுகின்ற இலட்சக் கணக்கான பணத்துக்காகவே இலங்கை தமிழர்கள் பற்றி இல்லாத பொல்லாத பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் புலிகளுக்கு ஆதரவாக செய்கின்ற பிரச்சாரங்களால் கவரப்பட்டு தமிழக மக்கள் இவர்களுக்கு வாக்களித்திருந்தால், தமிழகத்தின் ஆளும் கட்சியாக வராவிட்டாலும் இவர்கள் மூன்றாவது நான்காவது பெரிய கட்சியாகத் தன்னும் வந்திருக்க வேண்டும். அனால் இவர்கள் தேர்தல்களில் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் இவர்களது புலி ஆதரவுப் பிரச்சாரத்துக்கு தமிழக மக்கள் எவ்வளவு தூரம் செவிசாய்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மறுபக்கத்தில் இவ்வரசியல்வாதிகள் தமிழ் இன உணர்வால்தான் புலிகளை ஆதரிக்கிறார்கள் எனவும் வாதிட முடியாது. ஏனெனில் அவ்வாறு இவர்கள் தீவிர தமிழ் இன உணர்வாளர்களாக இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களின் தலைவர்களான அ. அமிர்தலிங்கம், வெ. யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், அ. தங்கத்துரை, நீலன் திருச்செல்வம் போன்றோரையும், போராளி இயக்கத் தலைவர்களான பத்மநாபா, சிறீ சபாரத்தினம், மாத்தையா போன்றோரையும், அறிஞர்களான ராஜினி திராணகம, அதிபர் ஆனந்தராஜன், லோகநாதன் கேதீஸ்வரன் போன்றோரையும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களையும் புலிகள் படுகொலை செய்ததை இவர்கள் கண்டித்திருக்க வேண்டும்.

இதனைவிடவும் இவர்களது சொந்த நாட்டின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியையே படுகொலை செய்து, அதன் காரணமாக இந்தியாவாலும், கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல்கள், போதை வஸ்துக்கள் கடத்தல்கள், மிரட்டிப் பணம் பெறுதல் என்பவற்றுக்காக உலக நாடுகளாலும் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள புலிகளை, இந்த தமிழக பிழைப்புவாதிகள் ஆதரிப்பதென்றால் அதற்கு வேறுகாரணம் இருக்க வேண்டும். அது புலிகள் வீசியெறியும் பணம் எனும் எலும்புத் துண்டே தவிர வேறு எதுவுமல்ல. இதில் சற்று ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமான விடயமென்னவென்றால், கடந்த காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஓரளவு சரியான கண்ணோட்டத்ததைக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தா. பாண்டியன் போன்றோரும் அண்மைக் காலமாக இந்த சந்தர்ப்பவாதக் கூட்டுடன் சேர்ந்து அறிக்கைகள் விடுத்துவருவதுதான். இருப்பினும் இந்தியாவின் மிகப் பெரிய இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்விடயத்தில் சரியாகவும் நிதானமாகவும் இருப்பது உற்சாகம் தருவதாகும். இந்த தமிழக பிழைப்புவாதிகள் தமிழக மக்களிடையே செய்து வரும் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மையை எடுத்து நோக்குவோமானால் இவர்களது பித்தலாட்டங்களை, பொய்களை அறிந்து கொள்ள முடியும். இவர்கள் செய்யும் ஒரு பிரச்சாரம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களை இலங்கை அரச படைகள் வகை தொகையில்லாமல் தினசரி கொன்று குவிக்கின்றனர் என்பதாகும். இன்னொரு பிரச்சாரம் அரசாங்கம் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாமல் அவர்களை பட்டினி போட்டுக் கொல்லுகின்றது என்பதாகும். இக் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை எடுத்து நோக்குவது அவசியமானது.

கொலைகளைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் தினசரி பல உயிர்கள் பலியாகின்றன என்பது உண்மைதான். இதில் ஒருவகை உயிரிழப்புகள் யுத்த களங்களில் நடப்பவை. அவற்றில் அரசபடையினரும் புலிகளும் இறக்கின்றனர். இன்னொரு பிரிவினர் பொதுமக்கள் என்று சொல்லப்படுகின்ற முரண்பட்ட கோஷ்டிகளாகும். அதாவது பொதுமக்களென்ற போர்வையில் நடமாடும் புலிகள் மற்றும் புலிகளுக்காக உளவு பார்ப்போர், ஆயுதம் பதுக்கி வைத்திருப்போர், கப்பம் வசூலிப்போர் போன்றோரை அரச புலனாய்வுப் படையினரும் மாற்று இயக்கத்தினரும் கொலை செய்வது நடைபெறுகின்றது. அதேபோல தமக்கு எதிரானவர்கள் என்று கருதுவோரை – கடந்த 20 வருடங்களில் பல ஆயிரக்கணக்கானவர்களை – புலிகள் கொலை செய்து வருகின்றனர். எனவே இது ஒரு வழிப்பாதையல்ல. இது தவிர சாதாரண அப்பாவித் தமிழ் மக்களை அரசபடைகள் காரணமின்றி கொலை செய்கின்றன என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அவ்வாறு கொலை நடைபெற்றிருக்குமாயிருப்பின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எவரும் இன்று இருந்திருக்க மாட்டார்கள். படை நடவடிக்கைகளின் போது கூட படையினர் மிகக் கவனமாகவே செயல்படுகின்றனர். உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் சம்பூர், வாகரை, கொக்கட்டிச் சோலை, தொப்பிகல போன்ற பகுதிகளை விடுவிக்கும் பாரிய படை நடவடிக்கைகளின் போது மொத்தமாக இரண்டு டசின் பொதுமக்கள் கூட கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியில் பெரும்பாலும் தினசரி இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்ற போதிலும், இதுவரையில் இரண்டோ மூன்று பொதுமக்களே கொல்லப்பட்டு சிலர் காயமடைந்தும் உள்ளனர். அதுவும் புலிகளின் பிரதான முகாம்களுக்கு மிகவும் அருகில் வசித்தவர்களே அவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்கள். பெரும்பாலும் புலிகளின் முகாம்களே துல்லியமாக இலக்கு வைக்கப்படுவதால், வன்னியில் அதிகளவில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு வாய்ப்பெதுவும் இல்லை. புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் மீதான தாக்குதல் அரச படையினரின் தெளிவான இலக்குகளுக்கு உதாரணமாகும். அரச படையினரின் துல்லியமான தாக்குதல் காரணமாக அச்சமடைந்திருக்கும் புலிகளின் தலைமை அதைத் திசை திருப்புவதற்காகவே அரச படைகள் பொது மக்களை தாக்கி கொலை செய்து வருவதாக தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதே உண்மையாகும். இது ஒரு புறமிருக்க தமிழ் பகுதிகளுக்கு அரசாங்கம் உணவுப் பொருட்களை அனுப்புவதில்லை என்ற குற்றச்சாட்டும் பொய்ப் பிரச்சாரமாகும்.

கடந்த பல வருடங்களாகவே இடம் பெயர்ந்த மக்களுக்கு இருவாரத்துக்கு ஒரு முறை அரசாங்கம் அரிசி, மாவு, சீனி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் மக்களுக்கும் இவ்வுணவுப் பொருட்கள் பாரபட்சமின்றி வழங்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே தனது எதிரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேச மக்களுக்கும் இலவசமாக நிவாரணங்கள் வழங்குவதென்பது இலங்கையில் மட்டுமாகத்தான் இருக்கும். அந்த உணவுப் பொருட்களைக் கூட மக்களுக்கு வழங்கவிடாமல் புலிகள் கொள்ளை அடித்துச் செல்வது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்த விடயம். இது புலிகளின் தமிழகப் பினாமிகளுக்கு தெரியுமோ தெரியாது. புலிகளின் தமிழகப் பினாமிகள் பிதற்றுவது போல அரசாங்கம் உணவு அனுப்பாமல் யாராவது பட்டினியால் இறந்ததாக இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை. புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி அரசாங்கம் கடற்படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை கப்பல்களில் தொடர்ந்து அனுப்பி வருகின்றது. அரசாங்கம் அனுப்பும் பொருட்களின் விபரங்களை யாராவது அறிய விரும்பினால் கொழும்பில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடமோ அல்லது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் தமிழ் பிரதேசங்களின் அரசாங்க அதிபர்களிடமோ அல்லது சமாதான செயலகத்தின் இணையத்தளத்தின் வாயிலாகவோ அறிந்து கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு அடிக்கடி தட்டுப்பாடு நிலவுவதும் விலைகள் கூட்டி விற்கப்படுவதும் நடைமுறையாக உள்ளது உண்மையே. இதற்கும் புலிகளே காரணம். புலிகள் வர்த்தகர்களை மிரட்டிப் பெரும் தொகைப் பணத்தை கப்பமாகப் பெறுவதாலும், கொள்ளை இலாபம் பெற நினைக்கும் வர்த்தகர்கள் புலிகளைச் சாட்டி பொருட்களை பதுக்கி வைப்பதாலுமே அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. எந்த வழியில் பார்த்தாலும் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு புலிகளே சூத்திரதாரிகளாக உள்ளனர். முன்பு யாழ்பாணத்தை தென்னிலங்கையுடன் இணைக்கும் பிரதான வீதியான ஏ9 வீதியால் தரைமார்க்கமாக பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்பொழுதும் கூட எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புலிகள் கப்பம் அறவிட்டதால், அரசாங்கம் அதை மூடியது. இருந்தும் புலிகளின் இடைய+றின்றி வாகனத தொடரணி மூலம் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களையும் இதர அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்ல அரசாங்கம் விரும்பியும் புலிகள் அதற்கு மறுத்து விட்டனர். மன்னார் - ப+நகரி பாதை மூலம் எடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் வேண்டுகோளையும் புலிகள் நிராகரித்துவிட்டனர். இதிலிருந்து தெரிவது என்ன? வடக்கில் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதிலும் விலை உயர்வை ஏற்படத்துவதிலம் புலிகளே சூத்திரதாரிகளாக திட்டமிட்டுச் செயற்படுகின்றனர் என்பதாகும். நிலைமை இவ்வாறிருக்க புலிகளின் தமிழகப் பினாமிகள் புலிகளிடம் கைநீட்டி பெறும் பணத்துக்காக தமிழக மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவது எவ்வளவு மோசடித்தனமானது. எனவே தமிழக மக்களும் உண்மையான தமிழின உணர்வாளர்களும் புலிகளினதும் அவர்களது தமிழகப் பினாமிகளினதும் ஏமாற்று வித்தைகளைப் புரிந்து கொள்வது அவசியமானது. அதேவேளை இன்னொன்றையும் தமிழக மக்களுக்கு தெரியப் படுத்துவது அவசியமானது. அதாவது தமிழகப் பினாமிகள் சொந்த இலாபத்துக்காக செய்யும் இவ்வகையான பிரச்சாரங்களை, இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் என்றுமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதே அதுவாகும்.

courtesy: http://www.thenee.com/html/071207.html

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி... தொடர்பில் இருங்கள்.


அனானியாக கருத்து தெரிவித்த உங்களுக்கு நன்றி தலைவா.. விடுதலைப் புலிகளைப் பற்றியல்லாது தமிழ்மக்கள் மீதாவது கரிசனைகொள்ளலாம் அல்லவா?

Anonymous said...

தமிழர்கள் பிரிந்து நிட்பதால் தான் இவளவு பிரசனை தமி்ழக அரசின்மேல் குறைகூறுவது நியாயமல்ல.. ஈழமக்களின் பிரச்சனைகளை உலகுக்கு எடுத்துச்சென்றதுபோல் மலயகமக்கழின் பிரச்சனைகளை உலகுக்கு எடுத்துரைக்க மக்கள் பிரதிநிதிகளோ அல்லது புத்திஜீவிகளோ முன்வராமை வேதனைக்குரியது..

என்னதான் எம் பிரச்சனைகளை மாற்றார்க்கு எடுத்துரைத்தாலும் அவர்களால் அனுதாபப்படவும் அறிக்கை விடவும் மட்டுமே முடிகின்றது ஏனெனில் அவர்கழும் பூனைக்கு அப்பம் பகின்ற குரங்கு போன்றவர்களே.. சிந்தித்துச்செயற்பட்டால் வெற்றி நம் கையில்..

இறக்குவானை நிர்ஷன் said...

இலங்கையில் தமிழர்கள் வதைக்கப்படுவதில் ஈழமக்கள் வேறு மலையக மக்கள் வேறு என்ற சிந்தனையில் பார்க்காதீர்கள் கவி. மற்றவிடயங்களில் நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன்... வருகைக்கு நன்றி.

Anonymous said...

கவி சொல்வது நூற்றுக்கு நூறுவீதம் உண்மை.மலையக அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் என்பது சொல்லியா தெரியவேண்டும்?

Anonymous said...

உள்ளது। வார்த்தை கவலைக்குரியதாகவே உள்ளது।


உன் இக் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை எடுத்து நோக்குவது .வேண்டும்?
வதைக்கப்படுவதில் ஈழமக்கள் வேறு மலையக மக்கள் வேறு



பேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை

இறக்குவானை நிர்ஷன் said...

// ஈழமக்கள் வேறு மலையக மக்கள் வேறு
//

கேட்கக் கவலையாகத்தான் இருக்கிறது கவி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு!!
ஒரு கை ஓசை தராது!!! நாமே கொஞ்ச பேர் தான் இருக்கிறோம். இருவருக்கும் ஒரே எதிரி தான். அதிலும் இப்படி பிரிஞ்சு கிடந்தால் எப்படி எதிரியை வீழ்த்துவது.

அன்புடன்
ஜோதிபாரதி

இறக்குவானை நிர்ஷன் said...

உண்மைதான் ஜோதிபாரதி.. சம்பந்தப்பட்டவர்களுக்கு விளங்க வேண்டுமே? வருகைக்கு நன்றி.

Anonymous said...

மலையகத்தழிழகர்க்கு ஈழதமிழர்கள் என்னசெய்துள்ளார்கள்

Anonymous said...

நல்ல பட்டங்கள் கொடுத்துள்ளார்கள் தோட்டகாட்டன் வடக்கத்தியான் நாடத்தவர்கள் என்று சிங்களவருக்கு காட்டி கொடுத்து நாடு கடத்த உதவியவர்கள்