




இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மகோற்சவ காலங்களில் சப்தம் எப்।எம் தான் வானொலிகளில் தவழும்। ஆனால் இவ்வருடம் பேரினவாதிகளின் சதியால் எமக்கு அந்த வானொலிச் சேவையை செய்ய முடியவில்லை। அந்தக் கவலையைத் தவிர திருவிழா சிறப்பாக நடைபெற்றது। இது தொடர்பான எனது கட்டுரையை வெளியிட்ட வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு எனது நன்றிகள்।
( எமது ஆலய திருவிழா பற்றிய வீரகேசரியில் கடந்த १९ ஆம் திகதி பிரசுரமாகிய கட்டுரையை இங்கு தருகிறேன்)
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்பவனி இன்று
இரத்தினபுரியின் இரத்தின நகரம் என்றழைக்கப்படும் இறக்குவானையில் எழுந்தருளி அருள்பாலித்து சர்வ வளங்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. அன்னை என்று அருள்வேண்டி வருவோருக்கு இன்னல் தீர்க்கும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மகோற்சவப் பெருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் மகோற்சவத்தின் பிரதான அங்கமாகிய தேர்பவனி இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது.
வேறுபட்;ட குணங்களுடைய ஆன்மாவை நன்முறையில் நெறிப்படுத்தி, தீய குணங்களினின்று நீக்கி, அன்பு அறம் அருள் நிறைந்ததாக்கும் தத்துவமே சமயமாகும். சமயத்துக்கு ஆற்றுப்படுத்தல் என்றொரு வியாக்கியானப் பொருளும் உண்டு. அன்பின் வழியாக ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் சமயங்களில் காலத்தால் முற்பட்டது இந்து சமயம். ஆன்மாவை அஞ்ஞான வழியிலிருந்து அகற்றி து}ய்மைத்தன்மையை அருளுடன் வழங்கும் இந்து சமயத்தில் ஆலயங்கள் இன்றியமையாதன. ஆன்மாவை லயப்படுத்தும் ஆலயங்களில் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்காகவே பல்வேறு கிரியைகள் இடம்பெறுகின்றன.
ஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக்கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாகவும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும். வுpழாவின் ஆரம்பமாக துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத் திருவிழா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்தி இறைவன்பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயிர்நிலைத் தத்துவத்தை விளக்கும் இக்கிரியையில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்பிகைக்கு தினமும் விசேட பூஜைகள் இடம்பெற்று வந்ததுடன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேட்டைத்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இரவு சப்பரத்திருவிழாவும் இனிதே நிறைவுபெற்றன.
இறைவனின் ஐந்தொழில்களையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் கிரியையாகவே மகோற்சவங்கள் ஆலயங்களில் நடைபெறுகின்றன. இதில் சிறப்புப் பெறுவது தேர்பவனியாகும். இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்பவனி இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறுகிறது. சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா செல்கிறாள்.
சிவனில் பாதியாகி இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவருவோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய வாசலில் கடவுளர்கள் தேவர்கள் ரிஷிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க நாயகியவள் நகர்வலம் வருகிறாள். அதனைத் தொடர்ந்து இரவு அம்பிகைக்கு குங்குமார்ச்சனை இடம்பெறுவதுடன் அடுத்துவரும் நாட்களில் பூங்காவனத் திருவிழா, தீர்த்தத்திருவிழா, கொடியிறக்கத் திருவிழா ஆகியன நடைபெற்று எதிர்வரும் 22 ஆம் திகதி வைரவர் மடையுடன் மகோற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாவின் அனைத்துக் கிரியைகளும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ மகேந்திர குருக்களின் தலைமையில் இடம்பெறுகின்றன.
இந்துமதம் மட்டுமே இறைவனை தயாகவும், தந்தையாகவும், தலைவனாகவும், தோழனாகவும், தான் விரும்பிய எந்த வடிவத்திலும் வணங்கும் சுதந்திரத்தை தந்திருக்கிறது. இந்நிறத்தான் இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத்துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம். சகலரும் தன்முன் பொதுவெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன, தத்துவம் உடையன.
நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவ இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே தேர்பவனியின் பொருளாகும். அதுமட்டுமன்றி ஊர்த்து}ய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒடுங்கும் நிலையை நெறியெனக் கூறும் இப்பெருவிழா சமய சடங்குகளில் தனித்துவம் நிறைந்தது. ஆகவே அம்பிகை அடியார்கள் து}ய ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து எல்லாம் வல்ல அன்னை அம்பிகையின் அருளைப் பெற்று சிறப்புப் பெறுவீர்களாக.
- இறக்குவானை நிர்ஷன்
நன்றி வீரகேசரி