Friday, November 25, 2011

யாருக்காக உழைக்கிறார்கள் மலையகத் தலைவர்கள்? (பகுதி 1)

பொதுவாகவே நான் யாருக்கும் எதிரி கிடையாது. அரசியலில் ஈடுபடும் எண்ணமும் கிடையாது. உண்மையை உள்ளவாறே கூறுவதால் பலர் என்னை எதிரியாகப் பார்க்கிறார்கள். எனக்கு அப்படியொரு மனோபாவம் கிடையாது.

மக்கள் சார்புப் பிரச்சினைகளை மக்களில் ஒருவனாக இருந்து அந்தப்பார்வையில் எழுதுகையில் ஏனோ உண்மைகள் பலவற்றை வெளிப்படையாகக் கூறிவிடுகிறேன். இதில் தவறில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

இருக்கட்டும்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களில் புரட்சியுடன் கூடிய இளைய தலைமுறையினர் மக்களின் நலனுக்காக உழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் அரசியல் சார்ந்தவர்கள் அல்லர். சுயலாபத்துக்காக வேசத்துடன் உழைப்பவர்களும் அல்லர். அவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.

பலர் எனக்குப் புதியவர்கள் அல்லர். அவர்கள் ஆரம்பகாலம் முதலே மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு திட்டங்களுடனும் தொடர்புடையவர்கள்.

அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுக்குப் பிறகு நாம் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தோம். மலையகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் அங்கு இருந்தார்கள்.

அப்போது பொதுவாக எல்லாரும் எழுப்பிய கேள்வி - "யாருக்காக உழைக்கிறார்கள் மலையகத் தலைவர்கள்?"

உண்மைதான். ஆரோக்கியமானதும் யதார்த்தத்துக்குப் பொருத்தமானதுமான கேள்வி இது.

பத்துப் பதினைந்து கூரைகள், விளையாட்டு உபகரணங்கள், ஒரு சில தொழில்வாய்ப்புகள், அனர்த்தங்களின்போது உதவிகள், வீதித் திருத்தம்...இப்படி குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கே உரித்தான சில பொதுச் சேவைகள் உண்டு. அவற்றைத்தான் காலம் காலமாகச் செய்துவருகிறார்கள்.

இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை.

உண்மையாகவே மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன?

அவர்களுக்குச் சொந்தமான வீட்டுக்கு இன்னும் உரிமைப்பத்திரம் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கென விலாசம் இல்லை. இது அடிப்படையில் அவர்களுக்குரிய பிரச்சினையாகும்.

அடுத்தது கல்வித் தேவைகள். மலையகத்தில் எத்தனை சிறுவர்கள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியிருக்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? செல்வந்தர்களின் வீடுகளில் எத்தனைபேர் வேலை செய்கிறார்கள்? அதன் உண்மை நிலை என்ன?

வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களில் எத்தனைபேர் பாதிக்கப்படுகிறார்கள்? ஏமாற்றப்படுகிறார்கள்?

இவை தொடர்பாக மலையக அரசியல் தலைவர்கள் செவி சாய்ப்பதில்லை. ஏனென்றால் இவை மிகப்பெரிய திட்டங்கள். இந்தத் திட்டத்தினால் மக்கள் நன்மையடைவார்களேயானால் அவர்களை ஏமாற்றிப் பிழைக்க முடியாது. அடிப்படைத் தேவைகளைத் தாமாகவே பூர்த்திசெய்துகொண்டு ஒரு சமுதாயம் தானாகவே முன்னேற்றம் காணுமானால் அரசியல் தலைவர்களுக்கு அங்கு வேலையிருக்காது.

ராகலையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அன்று வேதனையோடு கூறுகிறார்.

"எங்களது தோட்டத்தில் மகேந்திரன் என்ற பெயரில் மூவர் இருக்கிறார்கள். என்னுடைய பெயரும் மகேந்திரன். எனக்கு ஒரு கடிதம் வந்தால் மற்றைய மூவருக்கும் சென்றுதான் கடைசியில் என்னிடம் வரும். அப்படி வராமல் போன கடிதங்களும் உண்டு. எங்களுக்கு விலாசம் இல்லை என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி தேவைப்படுகிறது?"

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தோட்டங்கள்தோறும் உபதபால் நிலையங்கள் நிறுவப்பட்டன. எனினும் அவற்றில் பல இயங்காமை வருத்தத்திற்குரியதே.

இரத்தினபுரி டிப்டீன் என்ற தோட்டத்தில் கோப்பிமலை எனும் இடமிருக்கிறது. அங்கு பெரும்பான்மையினத்திருக்கு கூலித் தொழில் செய்யும் அடிமைகளாகத் தமிழர்கள் நடத்தப்படுகிறார்கள்.

பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் உடும்பு இறைச்சி சாப்பிட்டு கசிப்பு குடிக்கிறார்கள். இது எத்தனை அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்?

பதுளை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதி சிறுவர்களிடையே போஷாக்குக் குறைவாகக் காணப்படுகிறது. அவர்களின் பற்கள் செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.

சுத்தமான தண்ணீர் இல்லாமையும், போஷாக்கின்மையும்தான் காரணமாக இதற்குக் கூறப்படுகிறது. குறிப்பாக கோதுமை மாவை இவர்குள் அதிகம் உண்பதால் இப்பிரச்சினை உருவாகியிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

இதற்குரிய உண்மையான காரணம் என்ன? வறுமைதான். காலம் காலமாக உழைத்துக் களைத்து தலைவரின் பின்னாலேயே ஓடி ஓடி தேர்தல் காலத்தில் குடியும் குடித்தனமுமாக இருந்து விழிப்புணர்வுகளைத் தொலைத்த மக்களும் இதற்குக் காரணம்.

எப்படியிருந்தாலும் சுற்றிச்சுற்றி அதே அரசியல்வாதிகள் தான் நம் வீடுதேடி வருகிறார்கள். என்னதான் செய்வது நம் தலைவிதி என வாக்களிக்கிறோம் எனக் கூறுவோரும் இருக்கிறார்கள்.

பாரம்பரிய அரசியல் கலாசாரத்துக்கு அப்பால் புதிய வருகைகளை மக்கள் விரும்பினார்கள்.

ஸ்ரீரங்கா - தேர்தலுக்கு முன் மக்களோடு மக்களாக இருந்து மத்திய மாகாணமே தஞ்சம் என இருந்தார். அரசியல் கட்சித் தலைவர்களை வெளிப்படையாக விமர்சித்தார். ஹட்டன் வெலிஓய மக்களின் முழுமையான ஆதரவோடு இவருக்கு ஆதரவு அதிகரித்தது. வழமையாக தெரிவாகும் தலைவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள். புதிய சிந்தனையோடு மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் ரங்காவை தெரிவு செய்வோம் என மக்கள் தெரிவு செய்தார்கள். ஆனால் தற்போதைய நிலை?

அவரைக் காண்பதற்கே தவம் கிடக்க வேண்டியிருக்கிறது.

திகாம்பரம் - புரட்சியோடு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் முன்னேறினார். மக்களோடு மக்களாக இருந்து செயற்பட்டார். தேர்தல் காலங்களில் திகாம்பரத்தின் பேச்சு அனல் வீசியது. அதனால் இளைஞர்கள் பலர் அவரோடு இணைவதற்குத் தீர்மானித்தார்கள். அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டவர்கள் பலர் அவரோடு இணைந்துகொண்டார்கள். மக்களும் நம்பினார்கள். புதிய தலைமைத்துவம் உதயமாவதை எண்ணி மகிழ்ந்தார்கள்.

இறுதியில்? தேர்தலில் வெற்றிபெற்ற திகாம்பரம் வழமையான அரசியல்தான் புரிந்தார். ஆளும் கட்சியோடு இணைந்துகொண்டதால் புலி வாலைப் பிடித்த கதையாய் போயிற்று.

இப்போது நினைத்துப்பாருங்கள். மக்களின் கதி என்ன?

இருநூறு வருடங்களாக நாட்டின் முதுகெலும்பாய் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இதுவரை வீட்டுரிமைப் பத்திரம் பெற்றுக்கொடுக்க முன்வராதவர்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்?

-இராமானுஜம் நிர்ஷன்

(இதன் அடுத்த பகுதி விரைவில் எழுதுகிறேன்)

5 comments:

Anonymous said...

superb.......

யோ வொய்ஸ் (யோகா) said...

தொடருங்கள் நிர்ஷன்

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி யோகா

Unknown said...

//உண்மையை உள்ளவாறே கூறுவதால் பலர் என்னை எதிரியாகப் பார்க்கிறார்கள்//
இது உண்மைதான் அண்ணா, நல்லதொரு மக்களின் பிரச்சினையை வெளிக்கொணர்ந்த்திருக்கும் பதிவு

இறக்குவானை நிர்ஷன் said...

//இது உண்மைதான் அண்ணா, நல்லதொரு மக்களின் பிரச்சினையை வெளிக்கொணர்ந்த்திருக்கும் பதிவு//

நன்றி சகோதரா