Saturday, March 28, 2020

COVID 19 - எதிர்வரும் 10 நாட்களில் நாம் எதிர்கொள்ளப்போகும் அபாயம்! Dr. வாசனுடன் தமிழ் ஊடகத்துறையினரின் கலந்துரையாடல்!

நாட்டில் தற்போது, சிகிச்சை பெறுவோர், மறைமுகமாக வாழ்வோர் என கொரோனா தொற்றுடைய 550 பேர் இருப்பதாக கணிப்பீடுகள் மூலம் நம்புகிறோம்.
எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், அதாவது 7,8ஆம் திகதி ஆகும்போது நாட்டில் மொத்தமாக 19 ஆயிரம்பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாவர் என்ற ஊகமும் எமக்கு உண்டு.
நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணைந்து எதிர்ப்பதன் மூலம் பேரபாயத்தைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான வாசன் இரத்தினசிங்கம் நேற்று (27) மாலை பகிர்ந்துகொண்ட கருத்துகள் இவை.


இலங்கை இதழியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கத்துடன் தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இணைய வழி கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரை இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு முக்கியமான கருத்துகளை வைத்தியர் வாசன் பகிர்ந்துகொண்டதோடு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் வழங்கினார்.

வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் எம்மோடு பகிர்ந்துகொண்டவற்றை இரத்தினச் சுருக்கமாக இங்கே பதிவிடுகிறேன் (இயலுமானவரை முயற்சிக்கிறேன்)

சீனாவுக்குப் பிறகு, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளில் நாம் எதிர்பாராத வகையில் நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த நாளில் 17 ஆயிரம் பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

எமது நாட்டுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகள் அனைத்தும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றன. ஆனால் ஏன், எவ்வாறு இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது என்ற கேள்விகள் எமக்குள் எழுகின்றன.

அதேவேளை, இந்தப் பேராபத்தை எவ்வாறு நமது நாடு எதிர்கொள்ளப் போகிறது என்ற சவாலையும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொண்டிருக்கிறோம்.

சீனாவைத் தவிர ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆரம்ப காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதே நிலைமை தான் நம் நாட்டிலும் இருந்தது.


ஆனால் வாரங்கள் தள்ளிப்போகும்போது அந்த நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் எமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்தவித நிச்சயமும் இல்லை.

எமது கணிப்பு, ஆய்வுகளின் பிரகாரம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதி மிகத் தீர்க்கமானதாகும்.

இங்கே சுமார் 550 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதே எமது கணிப்பாகும். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளான நோய்க் காவிகளால் ஏப்ரல் மாத முற்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டக் கூடிய சாத்தியம் உள்ளது.

எயிட்ஸ் போன்ற பாலியல் நோய் ஏற்பட்டிருப்பதாக பலர் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வெளியில் வந்து தங்களையும் காத்து பிறரையும் காக்க முன்வரவேண்டும்.

இந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன?
பதில்: உலக சுகாதார அமைப்பின் தகவலின் பிரகாரம் கொவிட் 19 வைரஸ், காற்றில் 8 முதல் 10 மணித்தியாலங்களும் மரம், செடி போன்றவற்றில் சுமார் 10 மணித்தியாலங்களும் உலோகப் பொருட்களில் 14 முதல் 15 மணித்தியாலங்களும் உயிர்வாழக் கூடியது எனச் சொல்லப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, பிளாஸ்டிக் பொருட்களில் 72 மணித்தியாலங்களும் பால் வகைகளில் 2 நாட்களும் உயிர் வாழக்கூடியது.

அதேபோன்று நாம் மேற்கொள்ளும் சுயபாதுகாப்பு முறைகளும் இதற்கு தாக்கத்தை செலுத்துகின்றன.

உதாரணமாக நாணயத்தாள் பரிமாற்றங்களிலும் அவதானம் தேவை. பிஸ்கட் போன்ற பொதியிடப்பட்ட உற்பத்திகளைக் கழுவி சுத்தம் செய்ய முடியுமாயின், அது சிறந்தது.

மரக்கறிவகைகளை நன்றாகக் கழுவ வேண்டும். அதிக வெப்ப நிலையில் வேக வைத்து உண்ண வேண்டும்.

கரட், வல்லாறை போன்ற பச்சையாக உணவில் சேர்த்துக்கொள்ளும் மரக்கறி வகைகளை அவ்வாறு உண்பதிலிருந்து கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கூடிய சாத்தியம் உண்டா?
நிச்சயமாக உண்டு. அது பொதுமக்களின் கைகளில் தான் இருக்கிறது. ஒவ்வொரு பொதுமகனும் இந்த நோய் குறித்து விளக்கமாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

உதாரணத்துக்கு சிங்கப்பூரை எடுத்துக்கொண்டால் சிறுவர்கள் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு கட்டமைப்பில் மாற்றம் இருக்கிறது.

நாம் அனைவரும் இணைந்து போராடினால்தான் இந்த வைரஸ் அபாயத்தைத் தவிர்க்க முடியும். கொவிட் 19 உடைய ஒருவர், மேலும் 8 பேருக்கு நோயைக் காவுவார் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் கணிப்பீடுகள் இடம்பெறுகின்றன.

SOCIAL DISTANCE என்று சொல்லப்படுகின்ற சமூக இடைவெளி மிக அவசியமானதாகும். அதனை நாம் அனைவரும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும். அதனை முறையாகக் கடைபிடிக்கும்போது கொரோனா எனும் ஆபத்தை மிக இலகுவாக எதிர்கொள்ளலாம்.

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் கண்காணிக்கப்படுவோரின் நிலை?
இலங்கையில் நோய்த் தொற்று உள்ளானவருக்கு மருத்துவம் வழங்குதல், அவர் சார்ந்தோரைக் கண்காணித்தல், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற செயற்பாடுகள் மிக வினைத்திறனுடன் நடைபெறுகின்றன.

தற்போது நால்வர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் நீண்டகாலமாக வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பதால் தாக்கம் அதிகரித்துள்ளது என்றே கூற முடியும்.

உயர் குருதி அழுத்தம், மாரடைப்பு, மாற்று அவயம் பொருத்தியிருத்தல், புற்று நோய் ஆகியவற்றில் எதுவேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டோருக்கு அவதானம் அதிகமாகத் தேவை. அத்துடன் வயது முதிர்ந்தோரும் கர்ப்பிணிப் பெண்களும் இதில் அடங்குவர்.

இந்த நோய்த் தொற்றில் காலநிலை தாக்கத்தை செலுத்துகிறதா?

ஆரம்பத்தில் அப்படிக் குறிப்பிட்டாலும் கூட காலநிலை தாக்கத்தை செலுத்துவதில்லை என்றே குறிப்பிட முடியும். வெப்ப, குளிர் பிரதேசங்கள் எதுவானாலும் மனித உடலின் வெப்பநிலை ஒரே நிலையில் தான் காணப்படும்.

மனித உடலின் வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸ் ஆகும்போது, அது வைரஸை கொல்லும். ஆனால் நமது உடல் வெப்பநிலை அந்தளவுக்கு உயர்வாக இருப்பதற்கான சாத்தியம் இல்லை.

கொரோனா தொற்று உடைய ஒருவருக்கான பிரதான அறிகுறிகள் எவை?

உயர் காய்ச்சல் - சுவாசப்பாதை உலர்ந்திருத்தல் - சுவாசிக்க சிரமமாயிருத்தல்.

கட்டாய தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் இருக்க வேண்டியது அவசியம் தானா?
நிச்சயமாக அவசியம்.

கொவிட் 19 தொற்றுடையவர்களுக்கு 5 முதல் 14 நாட்களுக்குள் தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். ஒரு சிலருக்கு இறுதி ஓரிரு நாட்களிலேயே அறிகுறிகள் தென்படுகின்றன.

கொரோனா தொற்றுடைய ஒருவர் உயிரிழந்துவிட்டால் எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

இறுதிச் சடங்கில் இயலுமானவரை பங்கேற்காமல் இருப்பதே சிறந்தது. உயிரிழந்தவரின் சடலத்தை நல்லடக்கம் செய்வதை விட தகனம் செய்வது மிக நன்மை பயக்கும்.

இலங்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்ற எண்ணிக்கை சரியானதா என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்?
சரியானவை.
கொரோனா தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனைக்கு சுமார் 18,000 ரூபா செலவாகிறது. ஆதலால் சந்தேகிக்கப்படும் எல்லோருக்கும் இந்தச் சோதனை செய்ய முடியாது, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அறிகுறிகள் தென்படுமாயின் மாத்திரமே அதற்கான பரிசோதனை செய்யப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் களத்தில் இருந்து பணியாற்றும் போது எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
PPE என்று சொல்லப்படுகின்ற PERSONAL PROTECTIVE EQUIPMENT ஐ உபயோகிக்கலாம். அது சிரமமாகத் தோன்றும் பட்சத்தில் ஏனைய உடைகள் பரவாயில்லை.

எவ்வாறெனினும் வீட்டுக்குச் சென்ற பிறகு உடைகளை நன்றாக சவர்க்காரமிட்டுத் துவைக்க வேண்டும். நீங்களும் குளித்து சுத்தமாக வேண்டும்.

துவைத்த துணிகளை நேரடி சூரிய வெளிச்சம் படும்படியாக உலர வைக்க வேண்டியது அவசியமாகும்.

ஊடகவியலாளர்கள் உபயோகிக்கும் கமரா, மைக் போன்றவற்றை, பணி நிறைவடைந்ததும் செனிடைசர்ஸ் கொண்டு நன்றாகத் துடைத்துவிடலாம்.

இலங்கையில் கொவிட் 19 ஐ முற்றாக ஒழிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

அதனை உறுதியாகச் சொல்ல முடியாது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்து இன்னும் ஆட்டிப்படைக்கிறது.

இலங்கையில் இதனை ஒழிப்பதற்கு மேலும் 5 அல்லது 6 மாதங்கள் ஆகலாம் என ஊகிக்கிறோம்.
அதற்கு முக்கியமாக,
01. தற்காப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் கையாள வேண்டும்.
02. அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும்.
03. சமூக இடைவெளியைப் பேண வேண்டும்.

இந்த வைரஸை நீக்குவதில் செனிடைசர்கள் பாதுகாப்பானவையா? அதில் எல்கஹோல் இருக்கிறது என்பதை அறிந்தவுடன் அதனைப் பயன்படுத்துவதற்கு எனது நண்பர் ஒருவர் தயங்கினார். இந்நிலையில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் உண்டல்லவா?
செனிடைசர்கள் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன என உத்தரவாதம் அளிக்க முடியாது. 65 முதல் 75 வீதமான எல்கஹோலுடன் ஏனைய தொற்றுநீக்கி பதார்த்தங்கள் அதில் சேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் கிருமிகளை ஒழிக்கக் கூடியதாக இருக்கும்.

எனினும் செனிடைசர்களை நாம் மிகக் குறைவாகவே பயன்படுத்துவதால் முழுமையாக தொற்றினை நீக்கி விட முடியும் என கருத முடியாது.

செனிடைசர்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் சவர்க்காரத்தை உபயோகிக்கலாம். சவர்க்காரத்தைக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் எவ்வாறு பரிந்துரைத்துள்ளதோ அதன்பிரகாரம் கைகளைக் கழுவினால் தொற்று அண்டாது.

தொடர்ச்சியாக செனிடைசர்களைப் பயன்படுத்துவதால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படுமா?
எமது தோல்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களும் உண்டு. அடிக்கடி செனிடைசர்கள் பயன்படுத்துவதன் மூலம் அவை மரணிக்கக் கூடும்.

ஆனால் சாதாரண பொதுமக்கள் வீட்டிலிருக்கும் போது அடிக்கடி செனிடைசர்கள் உபயோகிக்க வேண்டியதில்லை. மருத்துவத் துறைக்கு கட்டாயமாக அது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனபோதும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை விட கொரோனாவைக் கட்டுப்படுத்துவது நமக்கு மிக முக்கியம் தானே?

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஒருவருக்கு மீண்டும் அந்நோய் தொற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டா?
மிகக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர் குணமாகிய பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கும். ஆதலால்தான் ஏனைய நோயாளிகளுக்கு இரத்தம் வழங்குவதற்குக் கூட பரிந்துரைக்கப்படுகிறது.

கொவிட் 19 ஐ, L வகை – S வகை என இரு வகைப்படுத்துகிறார்கள். இலங்கையில் பரவுவது எந்த வகையான வைரஸ்?
அது பற்றி ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நாம் ஆரம்பகட்ட பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.

இந்த வகைகளைக் கூட கண்டறிய முடியாவிடின் அது எமது சுகாதாரத்துறை அல்லது மருத்துவ நிபுணர்களின் தேர்ச்சி மீது கேள்வி எழுப்புகிறதல்லவா? அல்லது ஆய்வுகளை நடத்துவதற்காக அரசாங்கத்திடம் தூர நோக்கத் திட்டமிடல்கள் இல்லையா?

அவ்வாறு சொல்ல முடியாது. இப்போதைக்கு அதற்கான தேவை இல்லை என்றே கூற முடியும்.

- நிர்ஷன் இராமானுஜம் - 28.03.2020 - 

(இந்தக் கலந்துரையாடலை காலத்தின் தேவை கருதி ஏற்பாடு செய்த இலங்கை இதழியல் கல்லூரியின் பிரதம நிர்வாகி குமார் லோப்பஸ் மற்றும் விரிவுரையாளர், திரை இயக்குநர், நண்பர் நடராஜா மணிவானன் ஆகியோருக்கு புதிய மலையகத்தின் நன்றிகள் உரித்தாகட்டும்)

No comments: