Friday, November 14, 2008

இந்திய தூதரகத்தின் மற்றுமொரு கேளிக்கூத்து..!

"பிச்சை எடுக்கிறானாம் பெருமாளு, அதப் புடுங்குறானாம் அனுமானு" என்றொரு கிராமியப் பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் தான் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் செயற்பாடும் உள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய வமிசாவளியினர் இந்தியாவில் தமது சொந்த பந்தங்கள் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 20000 இந்திய பெறுமதிப் பணத்தை செலுத்தி அறிந்துகொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியப் பெறுமதியில் 20ஆயிரம் என்றால் இலங்கைப் பெறுமதிப்படி 44 ஆயிரத்து 800 ரூபா செலுத்த வேண்டும்.

இலங்கை மலையக மக்கள் (இந்திய வமிசாவளியினர்) இந்தத் தொகையை செலுத்துவதானால் கிட்டத்தட்ட 8மாதங்கள் உழைக்க வேண்டும். அதாவது சனி ஞாயிறு தினங்கள் உட்பட 8மாதச் சம்பளத்தையும் செலவுசெய்யாமல் சேமித்தால் தான் இந்தப்பணத்தை செலுத்த முடியும்.ஏனென்றால் அவர்களின் நாளாந்த வருமானம் 195ரூபா. இந்திய வமிசாவளியினருக்கு செய்யும்பேருதவி என இந்தியத் தூதரகம் இலவசமாக இந்தச் சேவையினை வழங்கியிருக்கலாம். அல்லது தொகையை குறைத்திருக்கலாம்.

இருப்பினும் மலையகத்தில் கால்வயிறு அரைவயிறு என வாழும் மக்கள் தமது பொருட்களை எல்லாம் விற்றாவது தமது இந்திய உறவுகளைப் பற்றி அறிய வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்தியத் தூதரகத்தின் இந்தத் திட்டம் பற்றி தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கு தருகிறேன்.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினர் தமது மூதாதையர்கள் தொடர்பாகவும் பூர்வீக இடம் குறித்தும் அறிந்துகொள்ள விரும்பினால் அதற்கான உதவிகளை வழங்கும் திட்டமொன்றை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

"வேர்களை கண்டறிதல்' என்ற தலைப்பிடப்பட்ட இத்திட்டத்தின் பிரகாரம் தமது பூர்வீகத்தை அறிந்துகொள்ள விரும்பும் இந்திய வம்சாளியினர் விண்ணப்பிக்க முடியும். ஆனால், இதற்கு குறிப்பிட்ட கட்டணமும் உதவி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தத் திட்டமானது விண்ணப்பதாரியின் முன்னோர்கள் பற்றிய தகவலை திரட்டி வழங்குவது மட்டுமே என்றும் விண்ணப்பதாரி தனது பூர்வீக இடத்திற்குச் செல்வதற்கான எந்தவொரு ஏற்பாடும் வழங்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமது மூதாதையரின் இடங்களுக்குச் செல்வதற்கு விண்ணப்பதாரர் விரும்பினால் அமைச்சு/ இன்டிரூட்ஸ் (அரசசார்பற்ற தொண்டர் நிறுவனம்) அதற்கான வசதிகளை செய்துகொடுக்கும். ஆனால், அதற்கான சகல செலவுகளையும் விண்ணப்பதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்திய நாணயம் 20 ஆயிரம் ரூபாவை விண்ணப்பதாரர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் விண்ணப்பங்களுடன் வைப்பிலிட முடியும். இலங்கை ரூபாவில் காசோலை அல்லது காசுக் கட்டளையை "இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு' என்ற பெயருக்கு செலுத்த முடியும். அமைச்சு விண்ணப்பங்களை "இன்டிரூட்ஸு'க்கு பாரப்படுத்தும்.

உயிருடன் இருக்கும் நெருங்கிய உறவினர்கள், தந்தை அல்லது தாய்வழி முன்னோர்களின் பூர்வீக இடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபரம் என்பனவற்றை "இன்டிரூட்ஸ்' தயாரிக்கும் அதன் பின் அந்த விபரம் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சுமார் 3 மாத காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இன்டிரூட்ஸிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல் பின்னர் உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பபடும். பின்னர் அது துரிதமாக விண்ணப்பதாரிக்கு தெரிவிக்கப்படும்.

5 comments:

S.Lankeswaran said...

இந்தியா எப்பொழுது தனது வம்வாளியை பற்றி கவலைப்பட்டுள்ளது? நானும் ஓர் இந்திய வம்சாவளி தமிழன் என்ற ரீதியில் எனக்கும் ஆதங்கம் உண்டு நிர்சன்

Anonymous said...

இந்திய அரசுக்கு தமிழினம் என்றால் இளிச்ச வாயர்கள் என்பதுதான் எண்ணம்.
இதையே குஜராத்தி மற்றவர்களுக்குச் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
புதுடில்லி இன்னும் தமிழர் எதிர்ப்புக் கூடாரமாகவே இருக்கின்றது.

ஜோசப் இருதயராஜ் said...

இந்த அறிவித்தல் நிச்சயம் மலையகம் சாராத மற்ற இந்திய வம்சாவளி மக்களுக்காகதான். ஏன்னா கட்டணத்தை பாருங்கள்.

அப்போது தானே மலையக தமிழர்களை இதை செய்ய விடாது தடுக்க முடியும், இல்லாட்டி தாங்கள் வெள்ளையர்களாளல் ஏமாற்றபட்டது தெரியவந்து அவுங்களும் அவர்களது பூர்விகத்தை முழுதுமாக தெரிந்து கொண்ட பின்னர் ஒரு வேளை இலங்கையை துறந்து தழிழகத்திற்கு இடம்பெயர தொடங்கினால் அவர்களை மறுக்க முடியாது போகும். அப்போது புது பிரச்சினைகள் தலையெடுக்க வாய்புகள் வரலாம் அதெல்லாம் உணர்ந்து தான் இந்த வேலை.

மலையக தழிழர்களின் வியர்வை துளிகள் தேநீருக்கு சுவை சேர்த்து விட்டு, வாழ்வின் இறுதியில் தங்களையும் அந்த தேயிலைச்செடிகளுக்கே உரமாக அர்ப்பணிக்கப்படும் தொடர் செயல்தான் நிகழ்காலத்துக்கும் தேவை என்ற தொடர் அரசியல் இருக்கும் வரை மேற்படி விளம்பரம் எல்லாம் நமக்கு குருவி தலையில் வைக்கும் பனங்காய் கதைதான்.

உண்மையில் மக்களின் எதிர்காலம் குறித்த உயரிய நோக்கத்தோடு இது செயற்படுத்தப்பட்டால் மலையக தமிழனை போன்ற ஒரு அதிர்ஷ்டசாலி உலகில் எங்கும் இருக்கமுடியாது.

Unknown said...

Nirsan,

44,000/= VITTU ,SRI LANKAVILA KANGIKKE VALI ILLAI. ITHULA NAMAKKU POORVEEGAM THEVAYA?

"MUDIYALA"

BALU

இறக்குவானை நிர்ஷன் said...

இலங்கேஸ்வரன், அனானி, இருதயராஜ், பாலு...

நன்றிகள்.
நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் இலங்கேஸ்வரன். அனானி சொல்வதைப் போல டில்லி இன்னும் தமிழர்களுக்கு சாதகமான பதிலை தரவில்லை.

//உண்மையில் மக்களின் எதிர்காலம் குறித்த உயரிய நோக்கத்தோடு இது செயற்படுத்தப்பட்டால் மலையக தமிழனை போன்ற ஒரு அதிர்ஷ்டசாலி உலகில் எங்கும் இருக்கமுடியாது//

நிச்சயமாக இருதயராஜ். ஆனால் இது வெறும் கண்துடைப்பாக இருந்தால் மீண்டும் ஏமாற்றப்படுபவர்களும் நம்மவர்கள்தான்.

பூர்வீகம் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் பாலு. இல்லாவிடின் வருங்கால சமுதாயம் இறந்தகால அறிவின்றி வளரக்கூடும்.