Tuesday, November 10, 2009

சுவாமி ஆத்மகனானந்தா

துறவிகள் என்றவுடன் இறைதியானத்திலும் பூஜைகளிலும் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள் என்ற பொதுநிலைப்பாடு நம் அனைவரிடத்திலும் உண்டு. ஆனால் அதனையும் தாண்டி சமூகத் தொண்டுதான் இறைவனுக்கான தொண்டு. ஏழையின் சிரிப்பும் தியானத்தின் ஈற்றும் ஒன்று. மற்றவர் மனம்நோகாதபடி நடந்துகொள்ளுதல் தான் நமது முதற்கடமை என வாழ்ந்துகொண்டிருப்பவர் சுவாமி ஆத்மகனானந்தா.

------------------------------------------------------------------
சமயம்சார்ந்த மூட நம்பிக்கைகளை அடியோடு வெறுப்பவன் நான். சாமி பார்த்தல் என நாம் பொதுவாக குறிப்பிடும் “குறி சொல்லுதல்” பற்றி சிறுவயதுமுதலே எனக்கு அறியும் ஆவல் இருந்தது. 1995 ஆம் ஆண்டில் ஒரு நாள் சுவாமிஜி பரியோவானுக்கு (எனது பாடசாலை) வருகை தந்திருந்தார். அவருடைய பணிவான நடத்தையும், அன்பான ஆறுதலான பேச்சும் எனக்குள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.

அவர் வந்துசென்ற பின்னர் குறிசொல்லுதல் உண்மையா? கடவுள் உண்மையாகவே மனித உடம்புக்குள் வருகிறாரா? எனக் கேள்விகள் கேட்டு சுவாமிக்கு கடிதம் எழுதினேன். அப்போதுதான் அவர் இராமகிருஷ்ண மிஷனின் பீடாதிபதி என அறிந்தேன்.
குறிசொல்லுதலானது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒரு சக்தியே. அது தீய சக்திகளினாலேயே பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. தூய்மையான மனதும் உடலும் இருந்து கடவுளை மனப்பூர்வமாக தியானித்தால் அந்தப் பரம்பொருள் நமக்குள் காட்சியளிக்கும். உலகத்தை தாண்டிய அமைதியைத் தரும். அது சிரமப்படுத்தாது. அதிகம் பேசவைக்காது என விரிவான கடிதம் எழுதி நேரம் கிடைத்தால் சந்திக்கும்படி வேண்டினார்.

நான் முதன்முதல் சுவாமியைப் பார்க்க வந்தபோது பல சிறுவர்கள் சுவாமியைச் சுற்றி நின்றுகொண்டு கதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாமி அவர்களுக்கு இனிப்பு கொடுத்த வண்ணம் (எப்போதும் சிறுவர்களுக்காக இனிப்பு வைத்திருப்பார்) பேசிக்கொண்டிருந்தார்.

என்னை அவர் நேரடியாக பார்த்தபோதே உள்ளம் சிலிர்த்தது. எழுத்துக்களால் சொல்லமுடியாதளவுக்கு அமைதி அந்த முகத்தில்.

வீரத்துறவி விவேகானந்தர் தான் என்னுடைய மானசீகக் குரு. கோயிலைத் தவிர்த்து மக்களின் விடிவுக்காக போராடிய துறவியைப் பற்றி எந்த புத்தகங்கள் இருந்தாலும் வாங்கிப் படிப்பேன் (இப்போதும் வீட்டில் விவேகானந்தரின் பெரிய படம் இருக்கிறது).

விவேகானந்தரைப் பற்றி சுவாமியிடம் கூறியபோது அவர் இராமகிருஷ்ணரைப் பற்றி தெளிவுபடுத்தி அவர்தான் தமக்குக் கடவுளும் குருவும் எனக் கூறினார். அந்த சந்தர்ப்பங்களை மறக்க முடியாது.

அதன்பிறகு ஏற்பட்ட சந்திப்பு பல வருடங்களாக தொடர்ந்தது. எங்கேயோ ஊர்சுற்றிக்கொண்டு உலகம் இதுதான் என ஒரு வட்டத்துக்குள் இருந்த என்னை இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என பார்க்கவைத்தார்.

எப்படி தியானம் செய்வது? எவ்வாறான விடயங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும், மாணவர்களிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதிலிருந்து பலவற்றையும் படிப்படியாக கற்றுக்கொடுத்தார்.

ஏழைகளுக்கு உதவுவதில் அப்படியொரு அக்கறை அவருக்கு உண்டு. எத்தனையோ சிறுவர் இல்லங்களை இலங்கை முழுவதும் நிறுவி அதற்குத் தேவையான சகல உதவிகளையும் செய்திருக்கிறார்.

அவரிடம் எனக்குப் பிடித்த குணங்களில் ஒன்றுதான் சகிப்புத் தன்மை. சுவாமி இன்று வாகனம் எதுவும் இல்லை. பஸ்ஸில் பயணிக்கலாம் என்றால் உடனடியாக சரி எனக்கூறிவிடுவார்.

முகுந்தன் அண்ணாவை (கிருத்தியம் - தங்க முகுந்தன்) மூளாயில் வைத்து சுட்டுவிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்தச் செய்தியை பொலிஸாரிடமிருந்து நான் திரட்டுகிறேன். செய்தியை எழுதிவிட்டு மீண்டும் வாசித்துப் பார்த்தபோதுதான் தங்க முகுந்தன் அண்ணாவைத் தானே…. ஏன நினைவுக்கு வந்தது. (சம்பவத்தை கூறியதற்கு முகுந்தன் அண்ணா மன்னிக்க வேண்டும்)

உடனே நான் என்னுடைய உறவினர்களுக்கு அறிவித்துவிட்டு சுவாமிக்கு சொன்னேன்.

நிர்ஷன், இன்று உங்களால் வரமுடியுமா எனக் கேட்டார். அதிக வேலைகள் காரணமாக முடியாது எனச் சொன்னதும் அவர் சொன்ன பதில் இதுதான்.
நான் முகுந்தனுக்காக பிரார்த்தனை செய்யப்போகிறேன். நீங்கள் மனதுக்குள் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். அதேபோல் நாம் பிரார்த்தனை செய்தோம்.

இப்படி பல அனுபவங்கள் சுவாமியுடன்…..

அந்த அளவுக்கு உயிர்கள் மீது பற்றுக்கொண்டவர். அவரைப் பற்றி நிறையவே கூறிக்கொண்டு போகலாம்.

ஒருவகையில் சுவாமியைப்போன்ற குரு எனக்கு வாய்த்தமைக்கு இறைவனுக்கு நன்றியுடையவனாய் இருக்கும் அதேவேளை பிரிவுக்கு வித்திட்டதால் கோபமும் கொண்டுள்ளேன்.

சுமார் 13 வருடங்களாக சேவை செய்து மீண்டும் இந்தியாவுக்கு செல்லப்போகிறார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் உண்மையில் கண்கள் கலங்கியவண்ணம் தான் மிஷனுக்கு சென்றேன்.

இதை எழுதும்போதுகூட நான் உணர்கிறேன்.

அங்கே முதியவர்கள், இளையவர்கள், சிறுவர்கள் என சுவாமியின் கைகளையும் கால்களையும் தொட்டு பலர் அழுதுகொண்டிருந்தார்கள். சுவாமியோ அமைதியாக புன்முறுல் பூத்துக்கொண்டிருந்தார்.

சுவாமி, நீங்கள் இந்தியாவுக்கு போகும்வரை தினமும் நான் உங்களை வந்து பார்ப்பேன் எனக்கூறினேன். அவர் அதனை மறுத்துவிட்டார்.

சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றைத் தந்து ஏராளமான விடயங்களைக் கூறி அப்போதும் சிரிப்போடு தான் என்னை வழியனுப்பி வைத்தார்.

சுவாமி இப்போது இந்தியாவின் விவேகானந்தா ஆச்சிரமத்தில் இருக்கிறார்.

3 comments:

தங்க முகுந்தன் said...

பதிவை வாசித்ததும் கண்கள் பனித்தன! அருமை! நன்றி!

///(சம்பவத்தை கூறியதற்கு முகுந்தன் அண்ணா மன்னிக்க வேண்டும்)///

நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத்தானே நீங்கள் ஊடகவியலாளர் என்ற கோதாவில் குறிப்பிட்டுள்ளீர்கள்! உம்மீது எனக்கு எதற்கு கோபம்! ஏனைய ஒரு சில ஊடகவியலாளர்மீது ஒரு வித கோப உணர்வு இருந்தாலும் - நீர் என்னடைய உயிர் நண்பனுடைய ஒன்றுவிட்டதம்பியல்லவா? உம்மை நான் சிறிய வயதுமுதலே அறிந்திருக்கிறேன். அதனால் அப்படி எதுவும் தவறாக உம்மை நினைந்து கொள்ள மாட்டேன்! மேலும் எனக்காக - நான் எழுதவேண்டும் என்பதற்காக கிருத்தியம் என்ற பெயரையும் தேர்ந்தெடுத்து அந்த வலைப்பதிவை உருவாக்கியவரே தாங்கள் தானே!

நானும் சுவாமியைப் பற்றி எழுதி அதில் சில படங்களையும் இணைத்திருக்கிறேன். அதில் சுவாமியுடன் நீங்களும் நிற்கிறீர்கள் அந்த வைபவத்தை ஒலிபரப்புச் செய்தது தாங்கள் தானே! நான் மறந்துவிடவில்லை.

இன்று சுவாமியைப் பற்றிய பதிவைப் பார்த்ததும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி - உம்முடனும் தொடர்பு கொண்டு நீண்ட நாட்களாக நீர் எழுதவேண்டும் என்று நான் எதிர்பார்த்த இக்கட்டுரையின் தாமதத்தையும் வினவினேன். சுவாமியுடன் பேசவேண்டும் என்ற ஆவல் ஒருபுறம். உடனடியாகவே நீர் என்னுடன் வலைத்தொடர்பில் இருந்தபோதே கன்னியாகுமரி விவேகானந்த ஆச்சிரமத்தின் சுவாமி ஸ்ரீ சைதன்யானந்த மகராஜ் அவர்களுடன் தொடர்புகொண்டு சுவாமி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜின் தொடர்பு இலக்கத்தைப் பெற்று அவருடனும் நீண்ட நாட்களின்பின்னர் ஒரு சில நிமிடங்கள் பேசினேன். உம்முடைய பதிவுபற்றியும் குறிப்பிட்டேன். அவருடைய பேச்சு உமக்குத் தெரியும்தானே!

Unknown said...

நான் கிட்டத்தட்ட நாத்திகன் என்பதாலும், மத சம்பந்தமானவர்களை பெரிதாக விரும்புவதில்லை என்றாலும் மத போதகர்களாக இருந்துகொண்டு சமூக முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்பவர்களை எப்போதும் விரும்பியிருக்கிறேன்...
உங்கள் சுவாமியும் அப்படி இருந்திருக்கிறார், இருக்கிறார் என்றால் மகிழ்ச்சியே...
அப்படியே மத போதகர்கள் என்றால் சமூகத்திற்கு எதுவும் செய்யத் தேவையில்லை என்ற நிலையில் இருக்கும் ஏனையவர்களையும் மாற்ற முயற்சி எடுப்பாரானால் நல்லது.
ஏனேன்றால் பலர் இப்போது இதை வியாபாராமாக மாற்றி வருகிறார்கள்....

sundar said...

Dear Nirshan,

I feel elated. I know him personally and I am really very happy to read about him. I studued in ramakrishna mutt and I lived with him for 5 years before he traveled to colombu. I still remember the day when he left. I had the oppurtunity to interact with him on several topic.
He is an Incredible person.
Thanx for the post.

Sundar