Friday, September 9, 2016

சப்ரகமுவ தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வியோடு விளையாடுகிறதா கல்வி அமைச்சு?


-நிர்ஷன் இராமானுஜம்-

சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூல உயர்தர மாணவர்களுக்கு என்றுமில்லாதவாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கு வரப்பிரசாதமாக கல்வி இராஜாங்க அமைச்சு கிடைத்துள்ள போதிலும் சப்ரகமுவ மக்கள் மாற்றான்தாய் மனப்பான்மையோடே பார்க்கப்படுகின்றனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையிலும் உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகள் இல்லை. இதுவரை காலமும் அதற்கான எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை.
அதுமாத்திரமல்லாமல் கலை, வர்த்தக பிரிவுகளில் போதிய வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் நிலவுகிறது.
இந்நிலையில் தாம் விரும்பிய துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதற்காக வேறு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை இந்த மாணவர்கள் நாடுகின்றனர்.
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களை விட பொருளாதார ரீதியில் மத்திய மாகாணம் பொருந்தும் காரணத்தினால் பெற்றோர் மத்திய மாகாணத்தை நாடுகின்றனர்.
அத்துடன் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம் என்பதாலும் நம்பிக்கையுடன் அந்த மாவட்ட பாடசாலைகளை நாடுகின்றார்கள்.
மத்திய மாகாணத்தில் சப்ரகமுவ மாணவர்களை இணைத்துக்கொள்ளுவதானது இன்று நேற்று நடைபெறுவது அல்ல. மிக நீண்டகாலம் தொட்டே இந்த மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் கற்று சிறப்புத் தேர்ச்சியுடையவர்களாக வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நுவரெலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.
அதாவது பரீட்சைக்கு தோற்றுவதற்காக மாத்திரமே அவர்கள் மத்திய மாகாணத்தை நாடுவதாக அரசியல் பிரமுகர்கள் எண்ணுகின்றனர். அத்துடன் வெட்டுப்புள்ளியை காரணம் காட்டியும் மாணவர்கள் இணைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தவறான கண்ணோட்டமாகும்.
தமது எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொள்ளவே அத்தனை சிரமங்களையும் தாண்டி வேறு மாகாணங்களுக்கு செல்கிறார்கள். உரிய வளங்கள் தமது பகுதியில் இருந்தால் மாற்றிடங்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.
சப்ரகமுவவில் தமக்குரிய பாடத்திட்டங்கள் இல்லையென்றால் அந்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு உரிய பதில் அரசியல்வாதிகளிடம் இருக்குமானால் தயவுடன் அதை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த முறை மாணவர்களுக்கு நிகழ்ந்த அநீதி இங்கே குறிப்பிடுகிறேன்.
சப்ரகமுவ மாகாணத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 38 மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.
அவர்களுக்கான அனுமதி கடந்த ஜுன் மாதம் பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
அந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி தங்குமிடங்களையும் தெரிவு செய்து அதற்கான கொடுப்பனவையும் செலுத்தி அங்கு தங்கியிருந்தார்கள்.
அவர்களில் பலர் பாடசாலைகளுக்கு சென்று கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்வந்த பாடசாலைகளிலிருந்து அவர்கள் பலாத்காரமாக அனுப்பப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சரின் கடுமையான உத்தரவின்பேரில் பாடசாலைகளிலிருந்து அனுப்புவதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுடைய நோக்கம், கனவுகள் எல்லாம் சிதைக்கப்பட்டு இன்று செய்வதறியாது தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இதன்பிறகு கல்வி அமைச்சருக்கு ஊடகங்கள், அரசியல்பிரமுகர்கள், பெற்றோர்கள், பொதுமக்களால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இரத்தினபுரியில் இரண்டு பாடசாலைகளிலும் ஊவாவில் இரண்டு பாடசாலைகளிலும் உடனடியாக உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் உறுதியளித்திருந்தார்.
இந்தத் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம்.
ஆனால் உரிய வளங்களுடன் பூரணமாக குறித்த பிரிவுகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு இந்த மாணவர்கள் எப்போது பரீட்சை எழுதப்போகிறார்கள்?
இந்த அப்பாவி மாணவர்கள் மத்திய மாகாணத்தில் கல்வி கற்பதற்கான கோரிக்கையை விடுக்கிறார்களே தவிர வேறெந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பது உரியவர்களுக்குப் புரிகிறதா?
சப்ரகமுவவை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியிருக்கும் இருவரும் இதுவரை இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. கல்வி அமைச்சர் வேறு கட்சிதானே? அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்ற மனப்பான்மையில் அவ்விருவரும் இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மாவட்ட பாடசாலை சமூகத்திடையே பெரும் வெறுப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் இவர்களுடைய காதுக்கு எட்டாததன் காரணமும் பின்னணியும் எதுவென மக்கள் நன்கறிவார்கள்.
இது இவ்வாறிருக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சப்ரகமுவ மாகாணத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நோக்குவதற்கான காரணம் என்ன?
அவ்வாறெனின் தேசிய அமைச்சுகளை வாக்கு வங்கியை வளர்த்துக்கொள்வதற்காக மாத்திரம் பயன்படுத்திகிறார்களா?
மலையகம் என்றால் நுவரெலியா மாத்திரம் அல்ல. எமது தமிழ் அரசியல்தலைவர்கள் என நாம் உரிமையோடு கேட்கும்போது தலைசாய்த்து நியாயத்தை கேட்காமல் தட்டிக்கழிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கியிருக்கும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு மிக விரைவாக எட்டப்பட வேண்டும் என்பதே மக்களது கோரிக்கை.
சப்ரகமுவவில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அது நடைபெறும் வரையில் இந்த முறை மாத்திரமாவது மாணவர்கள் மத்திய மாகாணத்தில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை கல்வி அமைச்சு வழங்க வேண்டும்.



1 comment:

Pon Kulendiren said...

மலையகத் தெயிலைத் தொட்டத்து தொழிலாளி ஒருவரி;ன் கதையை ஆங்கிலத்தில் GENERATIONS என்ற தபை;பில் நாவலாக வெயிட்டுள்ளேன். தமிழிலும் “தலைமுறைகள்” என்ற தலைப்பில் வெகு விரைவில் வெளிவரும். அதை வாசிக்க என்னோடு தோடர்பு கொள்ளவும். Kulendiren2509@gmail.com.