Tuesday, December 11, 2018

'அடிப்படை 600 ரூபாவுக்கு மேல் வழங்க முடியாது'- முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு

'அடிப்படை 600 ரூபாவுக்கு மேல் வழங்க முடியாது' 'நாளாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம்' 'நாம் இனி பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள மாட்டோம்' - முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு (நிர்ஷன் இராமானுஜம்) மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 600 ரூபாவை வழங்கும் தமது தீர்மானத்தில் மாற்றமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம்இ இனிவரும் காலங்களில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை எனவும் தெரிவித்தது. அத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெறும் காலப்பகுதியில் வேலைநிறுத்தம் செய்வது கூட்டுஒப்பந்த மீறல் எனவும் இதனால் நாள் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அச் சம்மேளனம்இ தமக்கு எதிரான கொலை அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.

PICTURE BY. V. Harendran
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இன்று (11) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்ளம் 600 ரூபாவுடன் மொத்த சம்பளமாக 940 ரூபாவழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். தற்போதைய அடிப்படை சம்பளத்துடன்(500ரூபா) ஒப்பிடும் போது நாம் 20 வீத அதிகரிப்பை வழங்குகின்றோம். இது தொடர்பில் தொழிற்சங்களுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இலங்கையில் பெருந்தோட்ட தொழிற்துறையை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும். ஆயினும் எம்மால் இயன்றளவு சம்பளத்தை மாத்திரமே வழங்க முடியும்.தற்போது ஜப்பானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இது எமக்கு பாரிய இழப்பாகும். அதுமாத்திரமல்லாது மத்திய கிழக்கு நாடுகளும் ரஷ்யாவும் எமது தேயிலையை புறக்கணிக்கும் பாரிய அச்சுறுத்தலுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம். கடந்த 150 வருடங்களாக வளர்ந்து வரும் இத்துறை மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எமது எண்ணமாகும். ஆயினும்இ தொழிற்சங்கங்கள் அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இதனால் வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்படுகின்றது. வேலைநிறுத்தம் செய்வது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். எனினும் இதன் காரணமாக தேயிலை துறையில் மாத்திரம் நாள் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதுடன் வாரத்திற்கு 1.25 பில்லியன் ரூபாவும் மாதம் ஒன்றுக்கு 6.25 பில்லியன் ரூபாவும் இழப்பு ஏற்படும். இது எமது பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக அமைந்துள்ளது. இதேவேளை முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழிலாளர்களால் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளோம். எமது தொழிற்துறையை பாதுகாப்பதற்காகவும் இவ்வாறான அச்சுறுத்தல்களை தடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்வி (ஆர். நிர்ஷன்) : தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்களால் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டதா? பதில்: (எஸ். ஸ்ரீகுமார்- ஆலோசகர் முதலாளிமார் சம்மேளனம்) ஆமாம். ஆனால் இதர கொடுப்பனவுகள் பற்றி முன்மொழியப்படவில்லை. கேள்வி: முதலாளிமார் சம்மேளனம் இனி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாதற்கான காரணம் என்ன? பதில்: எமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்கங்கள் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும். கேள்வி (ஆர்.நிர்ஷன்) : பெருந்தோட்டங்கள் காடாகிப் போயுள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். உதாரணமாக, டிப்டீன், ஓபாத உள்ளிட்ட தோட்டங்கள் தொடர்பான ஆதாரங்கள் உண்டு. மாதம்பை தோட்ட தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும் அல்லவா? பதில்: ஆமாம். இதற்கு நாம் மாத்திரம் பொறுப்பாளியாகி விடமுடியாது. அரசாங்கத்தினால் குறிப்பிட்டதொரு களைநாசினிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 3 இலட்சத்து 27 ஆயிரமாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை இன்று ஒரு இலட்சத்து 56 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. இதுவும் இந்நிலைமைக்கு காரணமாகும். கேள்வி: இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரின் அதிகரிப்பு காரணமாக ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கின்றதல்லவா? பதில்: அவ்வாறு கூறப்பட்டாலும் தேயிலையில் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒரு கிலோ தேயிலைக்கான செலவு 630 ரூபாவாக இருக்கும் அதேவேளை 570 ரூபாவுக்கே தேயிலை விற்பனை செய்யப்படுகின்றது. கேள்வி (ஆர்.நிர்ஷன்): பெருந்தோட்ட பகுதிகளில் வெளிவாரி உற்பத்தி முறை மூலமாக உற்பத்தியையும் செயன் திறனையும் அதிகரிப்பதற்கு கடந்த ஒப்பந்தத்தில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதே? பதில் : ஆமாம். இருந்த போதிலும் தொழிற்சங்கங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. கேள்வி (வி.ஹரேந்திரன்): இவ்வாறானதொரு நிலை தொடர்ந்தால் தொழிற்துறை பாதிப்பு ஏற்படுமல்லவா? பதில்: அவ்வாறு இடம்பெறக் கூடாது என்பதே எமது எண்ணம். கேள்வி (வி.ஹரேந்திரன்): ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன? பதில்: அது நூறுவீத அதிகரிப்பாகும். உலகில் எந்தவொரு தொழிற்துறையிலும் இவ்வாறு இடம்பெறுவதில்லை. நாம் எமது இயலுமைக்கேற்ற வகையில் தான் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறோம். கேள்வி: உங்களால் முடியாவிட்டால் பெருந்தோட்டங்களை அரசாங்கத்துக்கு பாரப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனவே? பதில்: அரசாங்கத்துக்கு முடியாது என்பதால் தான் எம்மிடம் அந்தப் பொறுப்பை தந்தார்கள். அரசாங்கத்துக்குக் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியைக் கூட செலுத்துவதில்லை.

No comments: