Monday, December 3, 2018

"ஏமாற்றும் நோக்கம் எமக்கில்லை" – அமைச்சர் செந்தில் தொண்டமான் விளக்கம்

புதிய மலையகம் தளத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த  ஆறுமுகனின் 1000 தந்திரங்கள்!  என்ற  கட்டுரைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் விளக்கமளித்தார். அந்தக் கட்டுரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாகவும் சம்பள விவகாரத்தில் முழுமையான அக்கறையுடன் தமது கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



அவரது விளக்கம் சுருக்கமாக வருமாறு,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் மக்கள் நலன் குறித்தே சிந்திக்கிறது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அது நியாயமான கோரிக்கை தானே?

பெருந்தோட்டத்தில் வெளியாள் ஒருவர் தொழில்புரிகையில் அவருக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க முடியுமாயின் ஏன் எமது தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியாது?

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கொடுப்பதற்கான சகல இயலுமைகளும் கம்பனிகளுக்கு உண்டு. ஆனால் அவர்கள் இலாபம் கருதி, அதாவது பன்மடங்கு இலாபம் கருதி இதனைத் தவிர்க்கிறார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பவர்கள் நான் இங்கே குறிப்பிடும் ஒரு விடயம் குறித்து சிந்திக்க வேண்டும்.

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் நூறு புள்ளிகள் பெற வேண்டும் எனப் படிக்கிறார்களா? அல்லது 50-60 புள்ளிகள் பெற வேண்டும் எனப் படிக்கிறார்களா? ஒவ்வொருவரினதும் நோக்கம் 100 புள்ளிகள் பெற வேண்டும் என்பதே. பரீட்சை எழுதும்போது அதில் மாற்றங்கள் உண்டாகலாம்.

இதேபோல நாமும் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். இதில் வெற்றியும் உண்டாகலாம், தோல்வியும் உண்டாகலாம். ஆனாலும் நாம் எமது முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. இங்கு எம்மை விமர்சிப்பவர்கள், இந்த விடயத்தில் எதிர்மறையான சிந்தனைகளை விடுத்து, எவ்வாறு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கலாம் என சிந்திக்க வேண்டும்.

இந்த விடயங்களை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு எம்மில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் எமது முயற்சிகளை கைவிடவில்லை. எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்படுகிறார்.

நாம், அண்மையில் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அதனை வெற்றிகரமாக செயற்படுத்தினோம். அதன்பிறகுதான் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. மக்களை வீதிக்கு இறக்காமல் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்கலாம்.

இங்கே இ.தொ.கா. அரசியல் இருப்புக்கான நாடகம் ஆடுகிறது என கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனாலும் எமது போராட்டம் மக்களின் பலத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் தமது தேவை குறித்த குரலை எழுப்பியிருக்கிறார்கள். அதனால் தான் நாம் இன்னும் உத்வேகத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் மக்களை ஏமாற்றுகிறோம் என நீங்கள் நினைப்பீர்களேயானால் அது முற்றுமுழுதாக தவறு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் நலனை விட்டுக்கொடுத்ததில்லை. கட்சி பேதங்கள் இன்றி அனைவருக்குமாகத் தான் நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம், போராடிக்கொண்டிருக்கிறோம்.

இதனை அனைவரும் உணர வேண்டும். நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது எமது கட்சிக்காரர்களுக்கு மாத்திரமல்ல. இதனைப் பலர்  புரிந்துகொள்வதில்லை.

எது எவ்வாறாயினும் நாம் எமது நோக்கத்தில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். எம்மை யார் விமர்சனம் செய்தாலும் எமது கடமையிலிருந்து பின்வாங்க மாட்டோம்.

No comments: