Friday, November 14, 2008

இந்திய தூதரகத்தின் மற்றுமொரு கேளிக்கூத்து..!

"பிச்சை எடுக்கிறானாம் பெருமாளு, அதப் புடுங்குறானாம் அனுமானு" என்றொரு கிராமியப் பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் தான் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் செயற்பாடும் உள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய வமிசாவளியினர் இந்தியாவில் தமது சொந்த பந்தங்கள் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 20000 இந்திய பெறுமதிப் பணத்தை செலுத்தி அறிந்துகொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியப் பெறுமதியில் 20ஆயிரம் என்றால் இலங்கைப் பெறுமதிப்படி 44 ஆயிரத்து 800 ரூபா செலுத்த வேண்டும்.

இலங்கை மலையக மக்கள் (இந்திய வமிசாவளியினர்) இந்தத் தொகையை செலுத்துவதானால் கிட்டத்தட்ட 8மாதங்கள் உழைக்க வேண்டும். அதாவது சனி ஞாயிறு தினங்கள் உட்பட 8மாதச் சம்பளத்தையும் செலவுசெய்யாமல் சேமித்தால் தான் இந்தப்பணத்தை செலுத்த முடியும்.ஏனென்றால் அவர்களின் நாளாந்த வருமானம் 195ரூபா. இந்திய வமிசாவளியினருக்கு செய்யும்பேருதவி என இந்தியத் தூதரகம் இலவசமாக இந்தச் சேவையினை வழங்கியிருக்கலாம். அல்லது தொகையை குறைத்திருக்கலாம்.

இருப்பினும் மலையகத்தில் கால்வயிறு அரைவயிறு என வாழும் மக்கள் தமது பொருட்களை எல்லாம் விற்றாவது தமது இந்திய உறவுகளைப் பற்றி அறிய வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்தியத் தூதரகத்தின் இந்தத் திட்டம் பற்றி தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கு தருகிறேன்.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினர் தமது மூதாதையர்கள் தொடர்பாகவும் பூர்வீக இடம் குறித்தும் அறிந்துகொள்ள விரும்பினால் அதற்கான உதவிகளை வழங்கும் திட்டமொன்றை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

"வேர்களை கண்டறிதல்' என்ற தலைப்பிடப்பட்ட இத்திட்டத்தின் பிரகாரம் தமது பூர்வீகத்தை அறிந்துகொள்ள விரும்பும் இந்திய வம்சாளியினர் விண்ணப்பிக்க முடியும். ஆனால், இதற்கு குறிப்பிட்ட கட்டணமும் உதவி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தத் திட்டமானது விண்ணப்பதாரியின் முன்னோர்கள் பற்றிய தகவலை திரட்டி வழங்குவது மட்டுமே என்றும் விண்ணப்பதாரி தனது பூர்வீக இடத்திற்குச் செல்வதற்கான எந்தவொரு ஏற்பாடும் வழங்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமது மூதாதையரின் இடங்களுக்குச் செல்வதற்கு விண்ணப்பதாரர் விரும்பினால் அமைச்சு/ இன்டிரூட்ஸ் (அரசசார்பற்ற தொண்டர் நிறுவனம்) அதற்கான வசதிகளை செய்துகொடுக்கும். ஆனால், அதற்கான சகல செலவுகளையும் விண்ணப்பதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்திய நாணயம் 20 ஆயிரம் ரூபாவை விண்ணப்பதாரர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் விண்ணப்பங்களுடன் வைப்பிலிட முடியும். இலங்கை ரூபாவில் காசோலை அல்லது காசுக் கட்டளையை "இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு' என்ற பெயருக்கு செலுத்த முடியும். அமைச்சு விண்ணப்பங்களை "இன்டிரூட்ஸு'க்கு பாரப்படுத்தும்.

உயிருடன் இருக்கும் நெருங்கிய உறவினர்கள், தந்தை அல்லது தாய்வழி முன்னோர்களின் பூர்வீக இடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபரம் என்பனவற்றை "இன்டிரூட்ஸ்' தயாரிக்கும் அதன் பின் அந்த விபரம் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சுமார் 3 மாத காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இன்டிரூட்ஸிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல் பின்னர் உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பபடும். பின்னர் அது துரிதமாக விண்ணப்பதாரிக்கு தெரிவிக்கப்படும்.

Thursday, November 6, 2008

பிரார்த்தனையும் வேண்டுதலும்..!

எல்லாரும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்। நான் நல்லாயிருக்கனும், வீட்டார் நல்லாயிருக்கனும், பக்கத்துவீடு, முன்வீடு எல்லாம் சந்தோஷத்துல நிறையனும், கல்வி வேணும், காசு வேணும் என (இன்னும் ஏகப்பட்ட) பிரார்த்திக்கிறோம்।
ஏதோ கடைசியா வாயில் வந்தா எல்லாரும் நல்லாயிருக்கனும் என்று பிரார்த்திப்போம்। இதுவரை எனது பிரார்த்தனைகள் எல்லாம் அப்படித்தான் இருந்துவந்தன।
ஆனால் எமது நாடு, எமது மக்கள், எமது மொழி இதைவைத்து அரசியல் அரங்கில் முளைவிட்டுக் காய்க்க எண்ணும் கலைஞர்கள் ( இங்கு கலைஞர்கள் எனக் குறிப்பிட்டது நடிப்பில் தேர்ந்தவர்கள் என்பதால்) , தீவிரமாக பின்பற்றப்பட்டுவரும் கொலைக்கலாசாரம், யாராலும் தண்டிக்கப்டாத வெறியர்களின் அடாவடித்தனம், கொன்றுகுவிக்கப்படும் பிணங்கள் என இத்தனையும் பார்த்து எனது பிரார்த்தனையை மாற்றிக்கொண்டேன்।
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்பதிலிருந்து விலகி இப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்।
சமூகத்துரோகிகள்,மொழித்துரோகிகள்,தேசத்துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு வாழ்வு கிடைக்குமல்லவா?
எனது கோரிக்கைகளை இறைவன் ஏற்றுக்கொள்வாரா என்பதுதான் சந்தேகம்॥!
*****************************************
இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய உறவுகளின் எழுச்சி, உணர்வுகளைத் தீண்டி இழுத்து பயமின்றி நிமிர்ந்து நிற்கச் செய்கிறது। இருப்பினும் குறிப்பிட்ட சிலர் இந்த விடயத்தில் தெளிவில்லாததால் பதிவிடல் என்ற பெயரில் ஏதேதோ எழுதி வருகிறார்கள்।
இலங்கைப்பிரச்சினை பற்றி எழுதினாலும் பின்னூட்டம் தந்தாலும் புலி ஆதரவாளர்கள் என்றும் நாம் வடிப்பது முதலைக்கண்ணீர் என்றும் கூறி மனம் நோகச்செய்கிறார்கள்। இவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று மட்டும்தான்। (எனது வேண்டுதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்).
தமிழ் மக்கள் வடிக்கும் கண்ணீரை தயவுசெய்து உங்கள் எழுத்துக்களால் கொச்சைப்படுத்தாதீர்கள்।

( யுத்தத்தினால் மட்டுமல்ல। யுத்தம் சாராத எத்தனையோ இழிநிலைப் பிரச்சினைகளுக்கு தமிழர்கள் முகங்கொடுத்து வருகின்றமை வெளிவராத உண்மைகளாக மறைந்து காய்ந்து போகின்றன।
சரியாக இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழர்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற தீவிரம் அதிதீவிரமாக தலைதூக்கத்தொடங்கியது। இதே காலகட்டத்தில் அப்போது நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களின் மார்புகள் இனவெறிக்காடையர்களால் அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள்। இது தொடர்ந்தும் இடம்பெற்றது। இவ்வாறான கசப்பான கறைபடிந்த வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கணவரைக் கண்முன் கொல்லுவோம் என அச்சுறுத்தி மனைவியை பலவந்தமாக பாலியல் குற்றத்துக்கு உட்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? )

*****************************************
நான் முதல் சொன்ன விடயத்துக்கும் பின்சொன்ன விடயத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உள்ளதாக நினைத்தாலும் தவறில்லை।

Thursday, October 30, 2008

திலகருடனான நேர்காணல்: இந்திய வமிசாவளி தமிழர்களைப்பற்றி உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?


வலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனான நேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது। ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம்। சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்।
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது। அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்। படத்தை சொடுக்கியும் பார்க்கலாம்।


உங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன?

ஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும்। இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது।இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

என் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.


இந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா? அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன?

இவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம். இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.

இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)

மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.

இவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள். அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.
நான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக்கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர். இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்?
நான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம்.

அதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர். மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர்.

அவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.

மலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா?

நிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்துக்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன? முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட.

அதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன். ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா?

இல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும். மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துபேராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம். (பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை.

தமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும், மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே. இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும்.
இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.

ஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன. அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.

சந்திப்பு: சேவியர்

Friday, October 3, 2008

ஓர் அனுபவப்பகிர்வு - கசப்பான அப் "பொழுது"

எழுதக்கூடாது என நான் நினைத்திருந்த விடயத்தை எனது அன்பு நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதுகிறேன்। இலங்கையின் மிகச்சிறந்த அறிவிப்பாளர்களில் பெரிதும் பேசப்படும் நான் அதிகம் நேசிக்கும் லோஷன் அண்ணாவின் ஒரு பதிவு கூட இதனை எழுதுவதற்கு ஒரு காரணம்।
ஊடகத்துறை என்னுடைய இலட்சியத் துறை।வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைவதற்கு முன்னர் நேர்முகத்தேர்வுக்காக நான் ஏறி இறங்கிய ஊடக நிறுவனங்கள் ஏராளம்। தமிழ்மொழிக்கு தாம்தான் என ஆங்கிலத்தால் அலங்கரித்து தம்மை முதல்தரம் என இப்போது சொல்லிக்கொள்ளும் நிறுவனம் ஒன்றுக்கு அப்போது மவுசு அதிகம்।
2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அந்த நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றேன்। உயர்தரம் எழுதிவிட்டு முதன்முறையாக செல்லும் நேர்முகத்தேர்வு அது। ஊடக நிறுவனம் என்பதால் நான் எழுதிய அனைத்து பத்திரிகை ஆக்கங்களையும் சான்றிதழ்களையும் எடுத்துச்சென்றேன்।
என்னை தேர்வுக்குட்படுத்தியவர் "அழகு" அண்ணா என அழைக்கப்பட்ட அப்போது உயர்பதவியில் இருந்த அறிவிப்பாளர்।
ஒரு மணிநேரம் எனக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் தரப்பட்டன। என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்துமுடித்தேன்। அவருக்கு சந்தோஷமாய் இருந்தது। அதனை முகத்தில் கண்டுகொண்டேன்। தமிழில் தட்டச்சு செய்ய முடியுமா எனக்கேட்டார்। ஒரு மாதத்தில் பழகிக்கொள்வேன் என நம்பிக்கையுடன் கூறினேன்।
மீண்டும் எனது சான்றிதழ்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சொன்னார்। எங்களுக்கு பத்து நாட்களுக்குள் ஒருவரை எடுத்தாக வேண்டும்। உங்களுக்கு ஒரு வாரத்தில் தொழில் உறுதிப்பத்திரமும் வேலைக்கு வரவேண்டிய நாள் குறிப்பிட்டு ஒரு கடிதமும் வீட்டு விலாசத்துக்கு வரும்। அதை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட திகதியில் வேலையில் இணையுங்கள் என்றார்।
எல்லா தெய்வத்தையும் ஒருமுறை மனதில் பிரார்த்தித்தேன்। எனது இலட்சியத்தில் முதலடி எடுத்துவைக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை। அந்த தரமான நல்ல நிகழ்ச்சிபடைக்கக்கூடிய சிறந்த அறிவிப்பாளரிடம் வேலை செய்யப்போகிறேன் என்பதே பெருமை தந்தது।
இன்னும் சற்று நேரத்தில் கேட்டார்,

அவர்: தம்பி கேட்க மறந்திட்டன்। உமது சொந்த இடம் எங்கே?
நான்: இறக்குவானை
அவர்:றக்குவானையா? அது எங்கே இருக்கிறது? எந்த மாவட்டம்?
நான்: இரத்தினபுரி மாவட்டம்। இரத்தினபுரியிலிருந்து 53கிலோ மீற்றர் தூரத்தில
அவர்: (தலையை பேனையால் சுரண்டிக்கொண்டார்।மற்றைய கை வழமைபோல் தாடையை உரசிக்கொண்டிருந்தது)
இரத்தினபுரி மலையகமே?
நான்: ஆமாம் சார்
அவர்: ஓ... முதலிலேயே சொல்லியிருக்கலாமல்லோ? ..............................................ம்ம் சரி பிரச்சினையொன்டும் இல்ல. உங்களுக்கு கடிதம் வரும்

கடைசியாகச் சொன்ன வசனங்களில் ஏதோ வெறுப்பும் ஏன் இவ்வளவு நேரத்தை செலவுசெய்தோம் என்ற மனநிலையும் தெரிந்தது. முகமும் மாற்றமுற்றது.ஒன்றும் புரியாதவனாக இருந்தேன். சரி தம்பி கடிதம் வரும் என்றார் சற்று எரிச்சல் தொனியில்.

நம்பிக்கையுடன் திரும்பினேன். நண்பர்கள் உறவினர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன். தொழில் என்பதை விட எனது இலட்சியம் என்பதில் தான் அளவில்லா களிப்பு எனக்கு.

ஆனாலும் எதிர்பார்த்திருந்த எனக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. ஒருமாதத்திற்குப் பிறகு அந்த நிறுவனத்துக்கு அழைப்பினை எடுத்து தட்டச்சுப் பிரிவில் தொழில்செய்த அண்ணாவின் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
அவர் சொன்ன பதில் இதுதான்.
"தம்பி கவலப்படாதீங்க.நீங்க தோட்டத்திலருந்து(மலையகம்) வந்தனாலதான் வேலை கிடைக்கல. இங்க இன்னொருத்தர எடுத்திட்டாங்க. இன்னொரு நாள் சந்தர்ப்பம் வரும். ட்ரை பண்ணுங்க. இன்னும் நிறைய பேப்பருக்கு எழுதுங்க. சரி எனக்கு இப்ப கதைக்க முடியாது. பிறகு எல்லா விஷயத்தையும் அண்ணாகிட்ட சொல்றேன்" என்றார்.
இறுதியில் நான் நிறைய விடயங்களை படித்தேன். மலையக மக்களின் வாழ்க்கையை விரிவாக படிக்கவேண்டும் என நினைத்தேன்.
துறைசார்ந்த பலவற்றை பலருக்கு சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்திய இவரா இப்படி நடந்துகொண்டார் என நினைக்கையில் கவலையாகத்தான் இருந்தது. உண்மையில் இன்னும் அதை நினைத்து வேதனைபட்ட பொழுதுகள் நிறைய இருக்கின்றன.
சரி பிரச்சினையில்லை. ஆனாலும் தோட்டப்பகுதி(மலையகம்) என்னை வெறுத்ததால் அதனை உடைத்தெரிந்து ஊடகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நிறையவே அடிபட்டு வீரகேசரியில் இணைந்தேன். எத்தனையோ விடயங்களை வெளிப்படுத்தியதால் வீரகேசரியும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையும் நல்ல களமாக அமைந்தன.ஆசிரிய பீடத்தின் நல்ல ஒத்துழைப்பு எனக்கு ஊக்கம் தந்தது.
எனக்கு நடந்த இந்தக் கசப்பான சம்பவம் பற்றி மூத்த அறிவிப்பாளரும் அரச ஒலிபரப்பு நிறுவனத்தின் பணிப்பாளருமான மதிப்பின் பாத்திரமான விஸ்வநாதன் அவர்களிடம் கூறியபோது அவர் சொன்னார்
என்ன தம்பி?இப்படி கவலைப்பட்டிருந்தால் நானும் எப்போதோ விழுந்திருப்பேன்.எல்லாரும் நாம் எதிர்பார்ப்பதுபோல் இல்லை. எமக்கான வழியை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.

Wednesday, September 17, 2008

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் பற்றி...

மல்லியப்பூ சந்தி திலகர் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பவர்। தன்னலம், அரசியல்அடிபணிவுகள் இல்லாமல் சுயமாக இயங்கும் திலகர் புதிய மலையகத்துக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றை பதிவாக இங்கு தருகிறேன்।

"..................... மலையக மக்களின் போராட்டங்கள், அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்துப் பதிவாவதென்பது குதிரைக் கொம்பாகத்தானிருக்கின்றது। இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகைகளின் வாயிலாக கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையக தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியே சொல்லவே வேண்டாம். எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது ? ......................"

"..................... அவர்களை கடுமையாக சுரண்டிக் கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர், அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திவரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிடும் ஆதிக்க சாதிக் குழுக்கள், பேரினவாத மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவரால் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்கையில் அவர்களுக்காக பேசுவதையோ போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவையோ தாம் தர வேண்டாம் அவர்களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன? ............"

"..................... இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கல் வாங்கல்களையும் செய்து இன்று பெரும் மாநாட்டையே நடத்துகின்றோம். ................."

"..................... ஆனால் இன்று மின்சார வசதிகளைக் கூட அடையாமல், கல்வி hPதியில் வளாச்சியடைய விடாமல், வெறும் 1 ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகமறியாத வண்ணம் உள்ளன. ........."

"..................... ஈழத் தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புக்கள் மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தை சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப் போராட்ட சார்புத் தகவல் தொட்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்து விட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத் தான் இருக்கின்றதே ஒழிய, மலையக தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். ........."

"..................... தமிழகத்தை மையமாகக் கொண்டும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளில் இருந்தும் பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணம் உள்ளன. ஆனால் இதில் எத்தனை தூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ட போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன?..................."

"..................... நிச்சயமாக மலையகத்தவர் பற்றி எமது அக்கறையின்மையையும், அசட்டையையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். ................"

"..................... இத்தகைய பின்னணியில் இருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும் நோக்க வேண்டும். இன்று தமிழ் தேசப் பிரச்சினையை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக்கிய தகவல் தொழிநுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புக் குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும் ஒரு அரசையும் கொண்டிருக்கின்ற சிங்கள பேரினவாதம், தமிழரின் தகவல் தொழிநுட்ப ஆற்றல், வளங்கள் என்பவற்றை எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு, தடுமாறி நிலைகுலைந்து போகும் அளவிற்கு, தமிழர்கள் தகவல் தொழிநுட்பத்தை அடைந்திருக்கின்றார்கள் ................."

"..................... தமிழ் தேச போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலை தரும் விடயமாகும். சக தேசம் ஒன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக் கொள்ளுதல் அவசியம்............"

"..................... மலையக தேசத்தவரைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ் தேசப் போராட்டத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையக தேசம் உள்ளாவதைக் கவனித்தாதல் வேண்டும். இந்தியாவின் மீதும் இவர்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ........"

"..................... இலங்கையில் செயல்படும் தமிழ் தொடர்பூடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும். .........."

இரண்டாயிரமாம் (2000) ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னையில் இடம்பெற்ற தமிழினி மாநாட்டில் இலங்கை பத்திரிகையாளர் 'சரிநிகர்' என். சரவணன் (தற்போது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்வதாக அறிகிறேன்). அவர்களால் வாசிக்கப்பட்ட மலையகத்தவர் பற்றிய ஒரே ஒரு கட்டுரையின் மேற்கோள்களே மேலே காட்டப்பட்டன. (விரிவான கட்டுரையை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்)

-திலகர்

(நன்றி திலகர்)

Thursday, September 4, 2008

இந்தியத்தாய் உதைத்துத்தள்ளிய மலையகக் குழந்தைகள்!!!

நண்பர் சேவியரினால் எழுதப்பட்ட ஈழக்கவிஞருடனான சந்திப்பு http://xavi.wordpress.com/2008/09/01/malliyappu_santhi/ என்ற பதிவும் அதில் மல்லியப்பூ சந்தி திலகரின் http://www.malliyappusanthi.com/ பின்னூட்டமும் தான் இந்த ஆக்கத்துக்கு வித்திட்டன।
திலகருடன் கதைத்தபோது அவர்கூறிய யதார்த்தத்துக்குள் மூழ்கிப்போன சில விடயங்கள் எமது இருப்பிற்கான கேள்வியை என்னுள் எழுப்பியது।

இலங்கையிலுள்ள மலையக மக்கள் பற்றிய இந்தியாவின் ஈடுபாடு மிகவும் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது। இலங்கையை முழுமையாக அவதானித்து வருவதாக கூறும் இந்தியத்தலைவர்கள் மலையக மக்கள் குறித்தும் அவர்களது அன்றாட பிரச்சினைகள் குறித்தும் பாராமுகமாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது।
மலையக மக்கள் எந்தளவுக்கு வாழ்க்கைச்சுமையை அனுபவிக்கிறார்கள் என்பதனை விட அவர்களின் வருகை வரலாற்றை மீள்நினைவூட்டுவது அவசியம் என நினைக்கிறேன்.

மலையக மக்கள்
மலையத்தொழிலாளர்கள் என்போர் யார்? என்ற கேள்விக்கு எத்தனை பேருக்கு பதில் தெரியும்। இந்திய வமிசாவளியினர், இந்தியத் தமிழர்கள் என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்டதொரு தொழிலாளர் சமுதாயம் மலைநாட்டார் என்றும் நாடற்றோர் என்றும் பின்னிலை படுத்தி பல புல்லுறுவிகளால் விமர்சிக்கப்பட்டு மலையகத் தமிழர்கள் என தற்போது அடையாளப்படுத்தும் இந்த மக்களின் கசப்பான வரலாற்றை தமிழர்களே மறந்துவிட்டார்கள்।

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது 1844ஆம் ஆண்டு மத்தியமலைப் பகுதியில் தேயிலைத் தோட்டப்பயிர்ச்செய்கைக்கென இந்தியாவிலிருந்து 14பேர் (கம்பளை என்ற இடத்துக்கு )அழைத்துவரப்பட்டனர்। இதுவே இந்தியாவிலிருந்து தொழிலாளர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட முதல் தமிழர்களாவர்।

இருப்பினும் அதற்கு முன்னரும் இந்தியத் தொழிலார்கள் மலையகப் பகுதிகளில் தோட்ட வேலைகள் செய்ததாக வரலாறு கூறுகிறது। கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தேயிலை பயிரிடப்பட்டது।
தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்। 1827ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ஆம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது.
1933ஆம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர்। இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது.

ஒரு சோக வரலாறு
தென்னிந்தியாவிலிருந்து கால்நடையாக இராமேஸ்வரம் வந்த மக்கள் கடல்மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்து அங்கிருந்து கால்நடையாகவே மலையகப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்। போதியளவு உணவு, சுகாதாரம், தங்குமிட வசதிகள் இன்றி பல மாதகாலமாக கால்நடையாக வந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளார்களும் குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் அப்போதைய கதைகள் உண்டு.

வாக்குரிமை
1931ஆம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்। மு ।நடேசு ஐயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர் அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார்।
புதுக்கோட்டை அரசமரபினர் வழிவந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மக்களின் நலனுக்காக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வந்தார்। அவரோடு இணைந்து முஹம்மது அஸீஸ் என்ற தொழிற்சங்கத் தலைவரும் பலவகையிலும் போராட்டத்துக்குக் கைகொடுத்து தலைமைதந்தார்।

நாடற்றவர்களாயினர்
1948இல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை பிரஜாவுரிமை சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர்।

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அனைத்து மக்களும் பிரித்தானியர்கள் எனக் கொள்ளப்பட்ட போதிலும் சுதந்திரத்தின் பின்னர் இந்த மக்களுக்கு தாம் இலங்கையர்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது। அதாவது தமது தந்தைவழியில் அல்லது தாய்வழியில் இலங்கை பிரஜை என்பதை ஆதாரப்படுத்தவேண்டியிருந்தது। போதியளவு கல்வித்தகைமை இல்லாததால் பிறப்புச்சான்றிதழ் உட்பட ஏனைய அத்தியாவசிய ஆவணங்களை பெறத்தவறிய அப்பாவி மக்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டனர்। இவர்களில் பலர் சிங்களப் பெயர் கொண்டிருந்தமையால் தப்பித்தனர்। எனினும் அதிகமானோர் தாமாக மீண்டும் இந்தியாவுக்கு சென்றனர்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்
அடுத்து வந்த காலங்களில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது। இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது। மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர்। பெரும்பாலானோர் இலங்கை மலையகப் பகுதிகளிலேயே தங்கிவிட்டனர்।

தொடர்குடியிருப்பும் வாழ்வும்
அக்காலத்தில் தொழிலாளர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட தொடர்குடியிருப்புகளில் (லயன்கள் என அழைக்கப்படுகிறது) தங்கியிருந்த மக்கள் சுமார் 160ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அதே லயன் குடியிருப்புகளில் தான் வாழ்ந்து வருகின்றனர்। இவர்களின் நலன்கள் தொடர்பாக பல இந்திய தலைவர்கள் அக்கறை எடுத்துக்கொண்ட போதிலும் அவை நிரந்தரமான தீர்வினைத்தரவில்லை எனலாம்।

ஈழப்போராட்டமும் மலையகத் தமிர்களும்
அத்துடன் ஈழப்போராட்டம் ஆரம்பித்தபின்னர் அது பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து இந்த அப்பாவி மக்களின் பட்டினிப் போராட்டம் வெளிக்கொண்டுவரப்பாடமலே போனது। வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு மலையக மக்கள் அந்தக்காலம் முதல் ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர். ஆரம்பகாலத்தில் தந்தை செல்வா மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்டவும் செய்ததுடன் வாக்குரிமை நீக்கும் முயற்சிக்கு எதிராக கடுமையாகப் போராடிக் குரல்கொடுத்தார்।
1989ஆம் ஆண்டு இ।இரத்தினசபாபதி பாராளுமன்றி்ல் ஆற்றிய உரையொன்றில்,
"இச்சந்தர்ப்பத்தில் மலையகம் சார்ந்த எமது பிரதிநிதித்துவம் பற்றி சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதற்காக சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க விழைகின்றேன்.
இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுபட்டபோது மலையக மக்களின் வாக்குரிமையும் பிரஜா உரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டான 1948-ஆம் ஆண்டையே ஆரம்பமாகக் கொண்டு இதை நோக்க வேண்டியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை ஈட்டிக் கொடுத்த இம்மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளாகக் கொச்சைப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இங்கிருப்பது சிங்கள இனத்துக்கே ஆபத்தானதென இனவெறி கிளப்பி விடப்பட்டது. இவர்களை வெளியேற்றுவதற்காக 1964-இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது.
இதுவே இனவாதத்தின் முதலாவது அடையாளமாகவும், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்கியிருக்கிறது" எனக் குறிப்பிட்டு நீண்ட உரையாற்றினார்। இது தவிற யாழ்த்தலைவர்கள் பலரும் மலையக மக்களுக்காக போராடினர்।

மக்களின் எதிர்பார்ப்பு
என்னதான் இருந்தாலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தமிழர்கள் இந்தியாவையே தமது தாய்நாடு என இன்னும் கொள்கின்றனர்। அன்று முதல் இன்று வரை இந்தத் தொழிலாளர்களின் நலன்காக்க எத்தனையோ தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் இருந்துவருகின்ற போதிலும் இன்னும் அவர்களின் தேவைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை।
இப்போது ஏறத்தாள 10இலட்சத்துக்கும் அதிகமான மலையக தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர்। மூன்றாவது தலைமுறையிலும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்।

தமது கோரிக்கைக்காக நித்தமும் போராடி பட்டினியுடனும் போதியளவு வசதிகள் இன்றியும் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களை அந்நியப்படுத்தி பலரும் "தோட்டகாட்டான்" என அழைப்பது வேதனைக்குரியது। பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்। ஆனால் நிகழ் சமுதாயத்தில் இவ்வாறானதொரு நிலை இருப்பதை இந்தியா உட்பட சர்வதேசக் கல்விச்சமூகம் உணரவேண்டும்। தமது குழந்தைகளை தாமே அந்நியப்படுத்தி உதைக்கும் வரலாற்றுக் கறையை இந்தியா ஏற்படுத்திவிடக்கூடாது।

Monday, August 25, 2008

நல்லதொரு அடி!!!!!


இலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் பாரிய பிரச்சினைகள் எதுவுமின்றி நடந்துமுடிந்தது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகபட்ச ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

தமிழர்களுக்கு தங்களை விட்டால் யாருமில்லை என்ற தோரணையில் தேர்தலில் போட்டியிட்ட மலையக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்பேசும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இவர்களால் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சம்பளப் போராட்டத்தின்போது துரோகம் இழைத்த தலைவர்களுக்கு இப்போது இரத்தினபுரி மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழ்வாக்காளர்களில் இரத்தினபுரியில் பிரதான மலையக தமிழ்க் கட்சி பெற்றுக்கொண்டது வெறும் 5135வாக்குகளே.

மக்களை ஏமாற்றும் தமிழ்த்தலைவர்களுக்கு இரத்தினபுரி மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தேர்தல் தொடர்பான கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சேவை செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் நம்ம தலைவர்களுக்கு இதைவிட வேறு எப்படி கவனிக்க முடியும்?

Tuesday, August 19, 2008

சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமிழர்கள் !


இலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் மீண்டும் அரசியல்வாதிகளின் சாட்டையடிக்கு மாடாய் மாறி மானம்போக்கும் அவலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் தீர்க்கமான,வரலாற்றின் மிகத்தேவையான தேர்தலுக்கு வரும் 23 ஆம் திகதி சப்ரகமுவ தமிழ்பேசும் மக்கள் முகங்கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் பிரிவினைவாதத்திற்கு தமிழர்களே வித்திட்டு தமக்குத்தாமே எதிர்விளைவுப் பாதை வகுக்கும் வழமையான நிலையில் மக்கள் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு பதவிப் பேராசை ஏராளமாய் உண்டு. தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி அவர்களை தெய்வம் எனக்கூறி அரசியல் இலாபம் தேட நல்ல ஆசாமிகளாக மாறிவிடுவார்கள்.

ஏமாற்றத்துக்குத் தயாரானது போலவே எமது மக்களும் அவர்களின் ஊதுகுழலுக்கு தேவைக்கு அதிகமாகவே ஆடுவார்கள். இறுதியில் அந்தத் தலைவர்களைப் பார்ப்பதற்குக் கூட சந்தர்ப்பம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் மரியாதையில்லாமல் நடத்தப்படுவதும் கீழ்த்தரமாக ஒதுக்கப்படுவதும் வரலாறு படிப்பித்த உண்மை.
இரத்தினபுரி மாவட்டம் தமிழர்கள் செறிந்துவாழும் அரசியலின் பிரதான இடம் என்பதால் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் அங்கு வாடகை வீடு வாங்கித் தங்கியிருந்து மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிரதான அரசியல் கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரையில் தமிழர்கள் அளவுக்கு அதிகமாகவே வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பெரும்பான்மையினரின் ஆட்சி நிரூபணமாகி தமிழர் அபிலாஷைகள் அனைத்தும் உடைத்தெறியப்படவேண்டும் என்ற பெரும்பான்மையின் விருப்பிற்கிணங்க தேர்தல் முடிவு இருக்கப்போவது உண்மை.

இறக்குவானைக்கு கடந்த தேர்தலின் போது வந்த அரசியல்வாதிகள் இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்கள். நீங்கள் தான் எங்கள் உயிர். உங்களுக்காகத்தான் நாங்கள் என்கிறார்கள்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து பட்டினியுடன் பலவாரங்கள் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தந்த அரசியல்வாதிகள் இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்டு மண்டியிடுகிறார்கள்?
சப்ரகமுவ தமிழ்மாணவர்களுக்கு வரலாற்றிலேயே உயர்தர விஞ்ஞான,கணித பிரிவினை ஏற்படுத்தித்தராமல் அதைவைத்தே வாக்கு கேட்கும் இவர்களுக்கு வெட்கம் எங்கே போனது?

இந்த அரசியல்வாதிகளின் முகமூடி தெரிந்தும் அவர்கள் பக்கம்சார்ந்து வாக்கு கேட்கும் வேட்பாளர்களுக்கு இதுவரை அந்தக் கட்சிகள் செய்தது என்ன? தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கச்செய்து வரலாற்றுத்தவறினை செய்யப்போவதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்.

மலையக அரசியல்வாதிகளின் வேஷம் மலையக மக்களாலேயே களைக்கப்படும் என்ற நம்பிக்கை இன்னும் இரத்தினபுரி தமிழ் இளைஞர்களிடம் உண்டு.

காலம் பதில்சொல்லும் நிச்சயமாக.

மலையகத் தொழிலாளர்கள் பற்றிய
பாவையின் பதிவொன்று, http://paavais.blogspot.com/2006/12/blog-post_13.html

Friday, June 20, 2008

இலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா?

குறிப்பிட்ட சில நண்பர்களுடன் சேரும்போது சில காத்திரமான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதுண்டு।அவ்வாறு எமக்குள் பரிமாறப்படும் பல தகவல்கள் இதுவரை அறிந்திராத புதியனவற்றை புகுத்துவதாக இருந்துள்ளதையும் நான் உணர்ந்திருக்கிறேன்।
யுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் உளத்தாக்கங்கள் பற்றி நண்பர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் வாதித்துக்கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்து இதுதான்।
யுத்தத்தில் எத்தனையோ பிரதிவிளைவுகள் ஏற்படுகின்றன என்பது உண்மை। ஆனால் இலங்கையில் குறிப்பாக ஈழத்தில் சாதிப் பிரச்சினை ஒழிவதற்கு யுத்தம் பிரதான காரணமாக இருந்துள்ளது। வெவ்வேறு சாதிப்பிரிவினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தியது என்று தனது வாதத்தை தொடங்கினார்। யாழ் தீவுப் பகுதியைச் சேர்ந்த அந்த நண்பர்சொன்ன தகவல்கள் அறியும் ஆவலை என்னுள் தூண்டின।
சாதி மோகம் என்று யாராவது பேசினால் எதிர்த்து நாலு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்பதுதான் எனது ஆவல்। ஆனால் நண்பர் கூறிய சில கருத்துக்கள் என்னை யோசிக்க வைத்தன। இந்தளவுக்கு, ஏன் இப்படியும் இருந்ததா என சிந்தித்தேன்।
அவர் சொன்ன கருத்துக்கள் இதுதான்।
ஈழப் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னர் வடபகுதியில் பல்வேறு சாதிப்பிரிவுகள் இருந்தன। அந்தப் பிரிவினையால் பூதாகரமான பிரச்சினை உருவாகி கொலைக்கலாசாரம் நிலவியதும் உண்டு। தீண்டாமை உட்பட கீழ்சாதிக்காரனின் வயலில் கால்வைத்து நடந்து சென்றால் கூட மறுபுரத்தில் சுடுநீரும் மஞ்சளும் கலந்து நீராடித்தான் செல்வது வழக்கம் என்ற சாதியினரும் இருந்தனர்। மீனவர்களை, குயவர்களை, தொழிலாளர்களை மதிக்காதவர்கள் ஏராளமாக இருந்தனர்। ஆனால் என்று ஈழப் போராட்டம் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்தச் சாதிப்பிரச்சினை குறைந்தது। இப்போதும் இல்லை என்றில்லை। ஆனால் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது।
போராட்டத்தின் போது அதிலும் குறிப்பிட்ட சில காலப்பகுதிக்கு பின்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் சாதி பார்க்கவில்லை। அதிலும் சாதி என்ற ஒன்றுக்கு இயக்கத்தால் தடைவிதிக்கப்பட்டது। தமது சாதியினரின் நிலங்களுக்கு மட்டும் வேற்று சாதியினரின் நிழல்,காற்று கூட படாமல் பலர் பாதுகாத்து வந்தனர்। யுத்தத்தால் இடம்பெயர இடம்பெயர அவர்களது பேராசையில் மண் விழுந்தது।
ஈழமண் என்ற எண்ணம் பலரிடையே துளிர்விட ஆரம்பித்தபோது சாதிக்கு இடமில்லாமல் போனது। எனினும் இன்னும் பலர் சாதி சாதி என அலைந்து கொண்டிருக்கிறார்கள்। சாதி என்று பார்த்து நாற்பது வயது வரை தமது மகளை திருமணம் முடித்துக்கொடுக்காதவர்கள் இருக்கிறார்கள்। என்னதான் இழப்புகள் ஏற்பட்டாலும் சாதி பிரச்சினை குறைந்தது இந்த யுத்தத்தால் தான்। அப்படி இல்லாவிடின் சாதி என்ற பெயரால் ஈழமே பிளவுபட்டு மக்கள் பிரிவுகள் பல உண்டாகியிருக்கும் என்றார்।

ஆம்... இதுபற்றி நிறைய ஆராய வேண்டும்। எனக்கு அந்தளவுக்கு தகவல் தெரியாது। மலையகப் பகுதிகளைப் பொருத்தவரையில் சாதி என்று பார்க்கப்பட்டாலும் அது பெரிதாக பேசப்படுவதில்லை। வறுமை,ஏழ்மை என்பன அவற்றை மறக்கவைத்துவிட்டன।
இந்த நண்பர் குறிப்பிட்டதைப் போல யுத்தம் இல்லாவிட்டால் சாதிமுறையால் எமது சமுதாயம் பிளவுபட்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது। பதிவர்களே பதில் தெரிந்தால் சொல்லுங்கள்।

ஈழத்தில் (எனக்குத் தெரிந்தவரையில்)
அம்பட்டர்,
இடையர்,
கடையர்,
கரையார்,
கன்னார்,
கள்வர்,
குயவர்,
குறவர்,
கைக்கோளர்,
கொல்லர்,
கொத்தர்,
கோவியர்,
சக்கிலியர்,
சான்றார்,
சிவியார்,
செட்டியார்,
சேணியர்,
தச்சர்,
தட்டார்,
தவசிகள்,
திமிலர்,
துரும்பர்,
நளவர்,
பரதேசிகன்,
பரம்பர்,
பரவர்,
பள்ளர்,
பறையர்,
பாணர்,
பிராமணர்,
மடைப்பள்ளியர்,
மறவர்,
முக்கியர்,
வண்ணார்,
வேளாளர்,
இத்தனை சாதிப்பிரிவுகள் (இன்னும் இருக்கலாம்) இருந்துள்ளன। இப்போது எவ்வாறான நிலை இருக்கிறது என்பதை யாழ் நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.

Friday, June 6, 2008

யுத்தத்தின் மற்றுமொரு கோரத் தாண்டவம் (படங்கள்)






இலங்கையில் ஒரு வாரம் நிறைவடைவதற்குள் மற்றுமொரு குண்டுத்தாக்குதல்.... இன்றைய (தெஹிவளை) குண்டுவெடிப்பில் அப்பாவிகள் 26பேர் பலியானதுடன் 60இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர்। யுத்தத்துக்கு இனவெறியை சந்தர்ப்பமாக வைத்து தெஹிவளை பகுதியில் தமிழர்கள் கண்டபடி தாக்கப்பட்டும் உள்ளனர்।

இன்றைய சம்பவப் படங்கள்தான் இவை। யுத்தத்தின் மற்றுமொரு கோரத்தாண்டவம்!!!