Wednesday, November 28, 2018

ஆறுமுகனின் 1000 தந்திரங்கள்!


-நிர்ஷன் இராமானுஜம்-



தொழிலாளர் நலனுக்காக, உரிமைகளைப் பேணுவதற்காக ஆரம்பிக்கப்படுகின்ற தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியாக மாத்திரம் செயற்படும் துரதிர்ஷ்டமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இலங்கையில் மலையகத்தைப் பொறுத்தவரையில், தொழிற்சங்கங்கள் முற்று முழுதாக ‘அரசியல்’ செய்வதையும் அதனைத் தவிர்க்க முடியாத சூழலுக்குள் இயங்கிக் கொண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதன் உச்ச கட்டமாக, அரசியல் இருப்புக்காக ‘ஆயிரம் ரூபா’ நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை வெளிப்படையாகத் தெரிந்தே, எதிர்க்க முடியாத சக்தியற்றவர்களாக தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ‘சக்தியற்றவர்களாக’ மாற்றியதும் இந்தத் தொழிற்சங்கங்கள்தான் என்பதும் இங்கு வெளிப்படை.

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தைக் கோரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் நடத்துமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களும் வீதியில் இறங்கி உரிமைக்காக போராடினார்கள். அதன்பின்னர், நேற்று (27) ஆறுமுகனின் அறிவிப்பு வெளியாகியது. அதாவது, போராட்டத்தின் காரணமாக நிதியமைச்சில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் ஆறுமுகன் தொண்டமானால் நிதி அமைச்சில் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை விடுக்க முடியாதா? இது இயல்பாக எழுகின்ற கேள்வி. ஆனாலும் ஆறுமுகனின் இராஜதந்திரம் எவ்வாறு அமைந்தது பாருங்கள்.

தொழிலாளர்களை வீதிக்கு இறக்கி, அதன்காரணமாகத் தான் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடு நடைபெற்றது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. நிதி அமைச்சு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பது இங்கே எத்தனை தொழிலாளர்கள் அறிவார்கள்?

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்வியும் ஆறுமுகன் தொண்டமானின் பதிலும் இவ்வாறு அமைந்தது.

கேள்வி: உங்களது பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மை இல்லையே?

பதில்: எனது அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையை நான் ஏன் வெளியில் சொல்ல வேண்டும். அவ்வாறானதொரு தேவை எனக்கில்லை. உங்கள் சொந்த வீட்டில் மனைவியுடன் நடைபெறும் கலந்துரையாடல்களை வெளியில் சொல்வீர்களா? உங்கள் நிறுவன எம்.டி. உங்களுடன் பேசும் விடயங்களை வெளியில் சொல்வீர்களா? அதேபோல் எனக்கும் எனது அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மலையகத்தில் மூத்த தொழிற்சங்க வரலாறு கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொறுப்பற்ற பதிலை உற்று நோக்குவோம். ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வா, சாவா பிரச்சினை. அவர்கள் சார்ந்த 20 இலட்சம் பொதுமக்களின் பிரச்சினை என்பதை எந்தளவுக்கு சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பொது விடயத்தை, தான்சார்ந்த மக்களின் பட்டினியுடன் தொடர்புடைய விடயத்தை இரகசியமாகப் பேசுவதும் அதனை வெளியிட முடியாது எனக் கூறுவதும் எந்த வகையில் நியாயம்?

கேள்வி: பெருந்தோட்டக் கம்பனிகள் நட்டத்திலா இயங்குகின்றன?

பதில்: அதை தெரிந்துகொள்ள நான் எக்கவுன்டன்ட் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது. எனது மக்களுக்கு ஆயிரம் ரூபா அவர்கள் தர வேண்டும்.அதுதான் எனது கோரிக்கை.

இந்தப் பொறுப்பற்ற பதிலையும் கவனியுங்கள். பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகின்றனவா? எந்தளவு இலாபம்? அந்த இலாபப் பங்கை தொழிலாளர்களுக்கு எவ்வாறு பெற்றுக்கொடுக்கலாம்? அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன? என்பது குறித்தான எந்தத் தகவலும் இந்தத் தலைவரிடம் இல்லை. அந்தப் பதிலை வெளிப்படையாகக் கூறாமல் தந்திரமாகச் சொல்லி சமாளிக்கிறார்.

அதேவேளை, மற்றுமொரு விடயத்தையும் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டுகிறார். முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் தோட்டத் தலைவர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது  என்பதுதான் அது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்களைக் கணக்கிட்டால் அதில் இதுவும் உள்ளடங்கும். இது குறித்த உண்மை நிலையை தொழிலாளர்கள் நன்கறிவார்கள்.

இதுவரைகாலமும் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை, யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் கையொப்பமிடும் வழக்கம் இருந்துவந்ததை மக்கள் அறியாமல் இல்லை. நாம் என்ன சொன்னாலும் அதனை தொழிலாளர்கள் எனும் அடிமைகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற எதேச்சதிகார செயற்பாட்டின் விளைவுகள் தான் இவை.

மக்களுக்குச் சேவை செய்வதில் நீயா?நானா? எனப் போட்டிபோட்டுக்கொண்டாலும் பரவாயில்லை. இங்கு அதிகாரத்துக்கான போட்டியே மேலோங்கிக் காணப்படுகிறது. வெறும் பொன்னாடைகளுக்கு மாத்திரம் ஆசைப்படும் அளவுக்குத்தான் அரசியல் மாற்றம் கண்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், மறுநாள் ஹட்டன் நகருக்குச் சென்றார் ஆறுமுகன் தொண்டமான். அங்கு அமோக  வரவேற்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன. வாகன நெரிசல் ஒருபுறம் இருக்க மறுபுறம் பட்டாசுச் சத்தத்துக்கும் பொன்னாடைக்கும் குறைவில்லாமல் ஆறுமுகன் வரவேற்கப்பட்டார். (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)

இதோ, ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைத்துவிட்டது என்பதுபோல இ.தொ.கா. ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள். ஆனால் இவை அனைத்தும் எதற்காக? யாருக்கு எதிராக? என்பதெல்லாம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இருக்கட்டும். கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை உண்மையாகவே முன்வைக்கப்பட்டுள்ளதா?

ஆயிரம் ரூபா கோரிக்கை வெறும் பேச்சளவிலேயே உள்ளது. தற்போது தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவை நூறு மடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது. இன்னுமொரு 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தோடு சேர்க்கப்படுவதாயின் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற சூத்திரம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கவில்லை. அதாவது மேலதிகமான 500 ரூபாவை எவ்வெந்த வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து ஆராயப்படவில்லை என்பதே உண்மை.

இதேவேளை, தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கப்போவதாக குறிப்பிடவும் இல்லை.

மகிந்த ராஜபக்ஷ, இது தொடர்பில் சகோதர மொழி ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்து இதுதான் “ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் அல்ல. மொத்தமாக தொள்ளாயிரம் கணக்கு வருகிறது. அவ்வாறானதொரு தொகையைத் தான் முதலாளிமார் சம்மேளனம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நட்டம் ஏற்படாத வகையில் தொழிலாளர்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் மொத்தமாக ஆயிரத்தை எவ்வாறு பெறலாம் என்பதை ஆராயுமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கும் அதிகாரிகளுக்கும் பணித்துள்ளேன்”.

இதேவேளை, தோட்டங்கள் காடாகிப்போயுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடிக்கடி குற்றம் சுமத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் (பிரிவு இல:3), தொழிலாளர்களின் வினைத்திறனை அதிகரிப்பது, தொழிற்துறையை விருத்தி செய்வது தொடர்பில் தொழிற்சங்கங்களும் பங்களிப்பு செய்வதாக இணங்கி கையொப்பம் இடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தொழிற்துறை பின்னடைவுக்கு தொழிற்சங்கங்களும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினர்தானே?

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துக்காக மூன்றரை வருடங்களாக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை காலம் இழுத்தடிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் தொழிலாளி ஒருவருக்கு சுமார் 70 ஆயிரம் ரூபா முதல் 80 ஆயிரம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டது. அவ்வாறாயின் அந்த பெருத்த இலாபத்தை கம்பனிகளுக்கு பெற்றுக்கொடுத்தது தொழிற்சங்கங்கள் தானே?

இந்த முறையும் இது நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற்சங்களின் அரசியல் இருப்பைத் தீர்மானிக்கின்ற துருப்புச் சீட்டு. இதனை சரியான நேரத்தில் பொருத்தமாகப் பயன்படுத்தாவிட்டால் அடுத்த நகர்வுகள் கேள்விக்குறியாகிவிடும். ஆதலால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிதானமான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.

எவ்வாறாயினும், அதிகாரத்துக்காகவும் அரசியல் இருப்புக்காகவும் தொழிலாளர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை எவ்வெந்த முறைகளில் பெறலாம் என்ற வழிமுறைகளை முதலில் ஆராயுங்கள். அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி தீர்மானத்துக்கு வாருங்கள்.

அதனை விடுத்து எத்தனை காலத்துக்குத் தான் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க முடியும்? நாளொன்றுக்கு 5 ரூபா ஏன் தர முடியாது என தொழிலாளர்களிடம் உரிமையாக கேட்க முடியுமென்றால், உறுதியளித்த தொகையை ஏன் பெற்றுத்தர முடியாது என தொழிலாளர்கள் கேட்பதற்கு ஆயிரம் மடங்கு உரிமை உண்டு என்பதையும் மறவாதீர்கள்.

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளித்திருந்தது. அந்தத் தொகை மக்கள் மனதில் அழுத்தமாக நிறைந்துவிட்டது.

அதற்காக தொழிலாளர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்கள், இளைஞர்கள், பல்கலை மாணவர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்துமே வீணாகிப் போய்விடாது என்ற நம்பிக்கை இந்த நிமிடம் வரையிலும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை.

இதனை மறுத்து இம்முறையும் துரோகம் இழைக்கப்படுமானால் அடுத்த கட்ட பின்விளைவுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உரிய தரப்பினர் நினைவிற்கொள்ள வேண்டும்.

Sunday, November 18, 2018

மலையகத் தொழிலாளியின் மரண வாக்குமூலம் - நிர்ஷன் இராமானுஜம்

ஏமாற்றங்களையும் வலிகளையும் தாங்கிய ஒரு மலையகத் தொழிலாளியின் மரண வாக்குமூலம் இது!

Image from Internet
மகனே,

இந்தத் தளர்ந்த வயதில், மரணம் அழைக்கும் தருவாயில் உனக்காக இந்த மடலை வரைகிறேன். வாய்திறக்க முடியாத எனது சோகங்கள் அனைத்தையும் நீ பாடமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது அவா.

அடர்ந்த காடுகளை அழகிய தேசமாக்கிய தன்னம்பிக்கை மிக்க சமூகம் நம்முடையது. எமது விதியோ என்னவோ குதிரைகளின் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டு வெள்ளையனுக்குச் சேவகம் செய்வதிலேயே காலம் கழிந்தது. மீசை முறுக்கிய அஜானுபாகுவான தோற்றத்தோடு உன் தாத்தா பீடியொன்றை பற்றவைத்துக்கொண்டு தன்னந்தனியாக இந்த மலைகளில் நடந்துவருவார். அவரோடு நடைபயின்றதால் என்னவோ எனக்கும் கொஞ்சம் திமிரும் இறுமாப்பும் கூடவே ஒட்டிக்கொண்டன. என்னதான் இருந்தாலும் வெள்ளையனின் பிரம்புக்குள் அத்தனையும் தொலைத்துப்போனதுதானனே உண்மை.

மகனே, இவற்றையெல்லாம் நீ மறந்துவிடக் கூடாது. வெள்ளையனின் ஆதிக்கத்தின் பின்னரும் எமக்கு நல்லகாலம் பிறக்கும் என நம்பியிருந்தோம். அதுவும் இந்த நிமிடம் வரை நடக்கவில்லை என்பதே பெருந்துயரம். எமது மக்களின் விடிவுக்காக குரல் கொடுக்கப்போகிறோம் என்று எழுந்துநின்றவர்கள் எல்லாம் இன்று அரசியல் சாக்கடைக்குள் விழுந்து விட்டார்கள். அதில் இன்பம் காணும் அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பது என்பது, நீரில் இருந்து ஈரத்தைப் பிரித்தெடுப்பது போன்று சிரமமானது.

ஆகட்டும், எனக்கு 50 ரூபா சம்பளம் கிடைத்த நாள் முதல் உன்னைப் படிக்க வைத்திருக்கிறேன். ஆனாலும் நம் தலைவர்களின் உண்மையான முகம் பற்றி நான் உனக்குக் கற்றுத்தரவில்லை. ‘தோட்டகாட்டான்’ எனும் பெயரோடு நீ கொழும்பில் தொழில்புரிகிறாய், ஆனால் உன்னால் தெரிவானவனோ ‘தலைவன்’ எனும் பெயரில் சுகம் அனுபவிக்கிறான்.

நீ ஒன்றைப் புரிந்துகொள், மலையகத்தில் அரசியல் எனும் பெயரில் நடத்தப்படும் அத்தனையும் நாடகம்தான். நாம் வெறும் கோமாளிகள் போல நாடகத்தைப் பார்த்து ஏமாந்துகொண்டிருக்கிறோம். நம் தோட்டத்தில் காத்தவராயன் கூத்தில் உன் தாத்தா வெறியோடு ஆடியதைக் கண்டு ஒரு வாரம் நான் அவரிடமிருந்து ஒதுங்கி நின்றேன். ஆயினும் அதைவிட ஒப்பற்ற வகையில் நாடகங்கள் தான் எம் தலைவர்களால் இன்று அரங்கேற்றப்படுகிறது.

கொழுந்து மாலைகளால் நாம் அவர்களை அலங்கரிக்கின்றோம். ஆனால் ஒரு சிறு தூசுக்கேனும் எம்மை அவர்கள் கவனிப்பதில்லை.

அரசியல் என்றும் அவன்தான் தலைவன் என்றும் கொடிபிடித்துத் திரிந்து கொண்டாடிக் களித்தது போதும் மகனே! இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாம் “ஐயா” போட்டுக்கொண்டே வாழ்வது? நமக்கென்று சுயமாய் ஒரு பாதையை நாம் வகுத்துக்கொள்ளக் கூடாதா?

ஐயாவின் வீட்டு மாட்டுத் தொட்டிலில் அதிகாலை 4 மணிக்கு பசும்பால் கறந்து கொடுத்திருக்கிறேன். சம்பளம் பெற்றுக்கொண்டதில்லை. கால் போத்தல் பாலுடன் வீட்டுக்கு வந்து உனக்கும் தங்கைக்கும் கொடுத்துவிட்டு மலைக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் வலிக்கவில்லை. வலிகளை நான் உணர்ந்ததும் இல்லை.

சின்னத்துரை எனக்கு ஒருநாள் பேர் போடவில்லை என முறைப்பாடு செய்ய ஐயாவின் அலுவலகத்துக்குச் சென்றேன். ஐயா என்னிடம் கேட்டாரே ஒரு கேள்வி…

“நீயெல்லாம் சம்பளம் எடுத்து என்ன செய்யப்போற? உன் புள்ள என்ன டொக்டராவா வரப்போறான்? அவனும் புல்லு வெட்டத்தானே போறான். போயிட்டு வேலயப்பாரு” என்றார்.

அப்போதுதான் வலித்தது மகனே. உன்னை என்னிலும் மேலாக உருவாக்க வேண்டும் என அப்போது நினைத்தேன். நான் இங்கே பிறந்ததும் இப்படி வளர்ந்ததும் என் தவறில்லையே? இறைவனின் தவறன்றோ என முச்சந்தி மாடசாமியிடம் விழுந்து விழுந்துக் கதறினேன்.

இவற்றையெல்லாம் நான் இதுவரை உன்னிடம் சொன்னதில்லை. என் வாழ்க்கையும் மரணமும் உனக்கு ஒரு பாடமாகட்டும். நீ எதற்கும் அஞ்சாதே, இளைஞன் என்ற நெஞ்சு நிமிர்த்திய பலம் உனக்கிருக்கிறது. அயராத உழைப்பும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் உனக்கிருக்கிறது. இனி எதற்கு, யாருக்கு பயப்பட வேண்டும்?

பயங்கரமான மிருகங்கள், விஷ ஜந்துக்கள், பேய், பிசாசுகள் என அத்தனையையும் தாண்டி அடர்ந்த வனங்களை அழித்து தேயிலை செய்தோம்.

இந்த நிலம், இந்தக் கோயில், இந்த லயம், இந்த ஆறு என அனைத்துமே எமக்கே சொந்தம். எங்களுடைய கலாசாரம், எங்களுடைய பண்பாடு, எங்களுடைய விழுமியங்கள், எங்களுடைய தனித்துவங்கள் என அத்தனையயும் காக்க வேண்டியதும் பேண வேண்டியதும் உன்னுடைய பொறுப்புதான் மகனே.

அப்போதைய காலத்தில், கடும் மழையிலும் வெயிலிலும் எங்கள் களைப்பு தீர நாம் பாட்டு பாடுவோம். அந்தப் பாடல்கள் சுற்றியுள்ள மலைகளில் எதிரொலிக்கும்.

“வாரான்டி வாரான்டி சின்னத்தொர
பெரம்பெடுத்து வாரான்டி கட்டத்தொர
சுண்ணாம்பு செவக்கவில்ல – அவன்
கோவந்தான் செவந்திருக்கு”
இப்படி பாடினோம்.

“மாடசாமிக்கு ஆடு வெட்ட வாங்கடியோ –
அந்த மலச்சாமிக்கு கோழி கொண்டு வாங்கடியோ
வாழ எல சோறு
வாழ வைக்கும் பாரு
சோகமெல்லாம் போகும் - நம்ம
சொந்தமெல்லாம் சேரும்”

இப்படியும் பாடினோம்.

ஆனாலும், வாய்வழி வந்த இந்தப் பாட்டுப் போல நம்ம வரலாறும் மறைந்து போகிறது மகனே. அந்தக் கவலை மட்டுந்தான் என் நெஞ்சை அடைக்கிறது.

நான் போய் வருகிறேன் மகனே.

இனி உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது. போலித் தலைவனை நம்பி பின்னால் செல்வதா அல்லது நீயே தலைவனாகி உன் தலைமுறையைக் காப்பதா என்பதை சிந்தித்துத் தீர்மானித்துக்கொள். உன் எதிர்கால பாதையை முறையாகத் திட்டமிடு. யாருக்கும் எந்த வஞ்சகமும் ஏமாற்றமும் துரோகமும் செய்யாமல் தற்துணிவோடு முன்னோக்கிச் செல்.

எமது மக்களுக்கான நியாயமான எந்தவொரு பயணமும் தோற்றதாய் இதுவரை சரித்திரமில்லை மகனே. உன் வாழ்க்கையும் பயணமும் சரித்திரமாகட்டும். நம்மூர் மாடசாமி எப்போதும் உன் துணை நிற்பான்.

இப்படிக்கு,
உன் அன்பு அப்பா
எஸ். சிங்காரம்

Sunday, November 11, 2018

“ஆயிரம் ரூபா இயலாத காரியம் அரசியல் நலனுக்கான வாக்குறுதிகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது”

-நிர்ஷன் இராமானுஜம்-

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முடியாதென்றும் அரசியல்வாதிகள், அரசியல் நலனுக்காக மன்னர்கள் போல வாக்குறுதியளித்தமைக்கு தாம் பொறுப்பல்ல என்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

கேள்வி: பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை உங்களால் வழங்க முடியுமா? முடியாதா?
பதில்: முடியாது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எமக்கும் விருப்பம் உண்டு. ஆனாலும் அது சாத்தியமற்றது.

கேள்வி: அவ்வாறாயின் உங்களால் தர இயலுமான, இறுதிப்படுத்தப்பட்ட தொகை என்ன?
பதில்: அடிப்படைச் சம்பளம் 600 ரூபா உள்ளடங்களாக மொத்தமாக 940 ரூபா என்பதே இறுதிப்படுத்தப்பட்டதாகும்.

கேள்வி: அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா பெற்றுக்கொடுக்க முடியாமைக்கான காரணம் என்ன?
பதில்: அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பது 100 வீத அதிகரிப்பாகும். எந்தவொரு தொழிற்துறையிலும் 100 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவது சாத்தியமற்றது. அவ்வாறு வழங்கினால் நாம் நிறுவனத்தை கொண்டு நடத்த முடியாதல்லவா? எமது தேயிலைக்கு உரிய விலை சர்வதேச சந்தையில் கிடைப்பதில்லை. அத்துடன் உற்பத்திச் செலவு உள்ளிட்ட இதர செலவினங்களின் அதிகரிப்பையும் இங்கு நோக்க வேண்டும். தொழிலாளர் செலவு 67 வீதமாகவும் எரிபொருள், உரம் உள்ளிட்ட ஏனையவை 15 வீதமாகவும் சுகாதாரம், நலன்புரி, மின்சாரம், வரிகள் உள்ளிட்டவை 5 வீதமாகவும் உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை, மனிதவளம், அலுவலகம், முகாமைத்துவ செலவுகள் 9 வீதமாகவும் இதர செலவுகள் 4 வீதமாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் ஒரே தடவையில் பாரியதொரு தொகையை சம்பளமாக வழங்க முடியாத சூழ்நிலையே உள்ளது.

கேள்வி:  பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியகப் பயிரிடல் முறைமையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தொழிலாளர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறதே?
பதில்: அசௌகரியம் கிடையாது. அது போலியான பரப்புரை. அதுதான் சிறந்த முறை. அந்த முறையின் ஊடாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை தொழிலாளர்கள் வருமானமாகப் பெறுகிறார்கள். வெளிநாடுகளிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

கேள்வி: பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும் அதனால் சம்பளம் அதிகரிப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளமை பற்றி..?
பதில்: பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அவை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள். அமைச்சர் இதனை ஆராய்ந்து பார்த்து கருத்துகளை வெளியிட்டிருக்க வேண்டும்.

கேள்வி: ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கொடுக்க முடியாவிட்டால், தோட்டங்களை விட்டு வெளியேறுமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பகிரங்கமாகக் கூறியிருக்கிறாரே?
பதில்: நாம் எமது தரவுகளையும் தகவல்களையும் வெளிப்படையாகப் பேணுகிறோம். அரசியல்வாதிகள், அரசியல் நலனுக்காக மன்னர்கள் போல வாக்குறுதியளித்தமைக்கு தாம் பொறுப்பல்ல, அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. அவ்வாறெனின், நாம் தோட்டங்களை விட்டு வெளியேறத் தயார். மறுபுறம், இவ்வாறு குறிப்பிடும் தொழிற்சங்கவாதிகளும் பணம் படைத்தவர்கள்தான். அவர்களால் தோட்டங்களைக் கொண்டு நடத்த முடியும்தானே? அவ்வாறு தோட்டங்களை நிர்வகித்து ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுக்கலாம் தானே?

கேள்வி: தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமற்றது என நினைக்கிறீர்களா? அவ்வாறியின் தொழிலாளர்பக்கம் உள்ள பாதகத் தன்மை என்ன?
பதில்: நியாயமானதுதான். நாங்கள் கையில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லவில்லை. தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், ஆண் தொழிலாளர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 4 மணித்தியாலங்களே தொழில்புரிகிறார்கள். அதனால் உற்பத்தித் திறனும் குறைவடைகிறது.

கேள்வி: தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்கள் உங்களது நிர்வாகத்தின் பின்னர் காடாகிப் போயுள்ளதை கண்கூடாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறதே? நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளுக்கு ஏன் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்?
பதில்: தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் வேலைக்கு வருகை தராமை தான் காரணம். தற்போதைய இளைஞர்கள் தோட்டங்களில் தொழில்புரிவதை விரும்புவதில்லை. தொழிலாளர் வருகையீனம் காரணமாக தோட்டங்களை பராமரிப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம். இதுவே, அரச நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஊழியர்சேமலாப, நம்பிக்கை நிதியங்கள் வழங்கப்படுவதில்லை. முறையாக சம்பளம் கூட வழங்கப்படுவதில்லை.

கேள்வி: சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்குக் கிராக்கி இருக்கிறதல்லவா?
பதில்: ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஏலத்தில் உரிய விலை கிடைப்பதில்லை. இது பற்றி அநேகர் அறிந்திருக்காததன் காரணமாகத்தான் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். ஏற்கனவே, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எமது தேயிலைக்கான கேள்வியை நாம் இழந்திருக்கிறோம். எதிர்வரும் காலம் எமக்கு மிகவும் சவாலாக அமையக்கூடும்.

கேள்வி: தொழிலாளர்களின் மனிதாபிமானம் சார்ந்த விடயங்களிலும் அவர்களின் நலன்களிலும் கம்பனிகள் அக்கறை செலுத்துவதில்லையே?
பதில்: தவறு. தொழிளார்கள் மற்றும் அவர்கள்சார்ந்த ஒரு மில்லியன் மக்களுக்கு எமது சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இயற்கை அனர்த்தங்களின்போது நாம் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கிறோம். உதாரணமாக, 61 வைத்தியசாலைகள், ஆயிரத்து 474 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. இன்னும் பல்வேறு விடயங்களைக் குறிப்பிடலாம்.

கேள்வி: ஆங்காங்கே, தொழிலாளர்சார்ந்த விடயங்களில் கூட்டு ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறதே?
பதில்: நாம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செயற்படுகிறோம். குற்றங்கள் முன்வைப்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். இங்கே மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி: இறப்பர் தொழிலாளர்கள் குறித்து தொழிற்சங்கங்களும் அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் வாய்திறப்பதில்லை. ஏன்?
பதில்: இறப்பர் தொழிற்துறை பெரும் நட்டத்தில் இயங்குகிறது. காலநிலை மாற்றம், வெளிநாடுகளில் உள்ள கேள்வி உள்ளிட்டவை இதில் தாக்கத்தை செலுத்துகின்றன. எவ்வாறாயினும் நாம் உறுதியளித்த சம்பளத் தொகையை வழங்கி வருகிறோம்.

கேள்வி: இலங்கையில் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சிக்கு பெருந்தோட்டக் கம்பனிகளும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: நீங்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். 1992 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 27 ஆயிரம் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டார்கள். இப்போது அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரமாகக் குறைவடைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து வெளியிடங்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். தொழிற்துறை பாதிப்புக்கு இதுவே பிரதான காரணியாகும்.

கேள்வி: ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக கொடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனவே?
பதில்: எமது நிலைப்பாடு குறித்து தொழிற்சங்கங்கத் தலைவர்களும் நன்கறிவார்கள். நாம் விளக்கமளித்துள்ளோம்.

கேள்வி: சம்பள விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தாரா?
பதில்: ஆமாம். இதே நிலைப்பாட்டைத்தான் நாம் அவரிடமும் எடுத்துரைத்தோம்.

நன்றி தினக்குரல்
11.11.2018

Tuesday, October 30, 2018

மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள்!

ஒரு மலையகத் தமிழனாக, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக வரலாற்றில் மிகக் கேவலமானதொரு அரசியல் தலைமையை சமகாலத்தில் கண்டிருக்கிறேன் என்பதை மிக வேதனையுடன் பதிவு செய்து தொடர்கிறேன்.



வடிவேல் சுரேஷ்
- மலையகத்தின் மீட்பர் போல தீவிரமான பேச்சு, போலிச்சிரிப்பு, அவ்வப்போது நாடகம் என அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அப்பாவி மக்களின் வாக்குகளால் தெரிவான நபர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வியூகம் அமைத்து வெற்றி பெற்றாலும் காலம் இவரை மக்கள் மத்தியில் பல சந்தர்ப்பங்களில் அடையாளம் காட்டியிருக்கிறது.

நேற்று முன்தினம் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததை மக்கள் அறியாமல் இல்லை. ஆனாலும் நேற்று ஐக்கிய தேசிய கட்சியினருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதன் பின்னர் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்த கருத்துக்களும் நியாயமான சிந்தனையுடையவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தன.
இதில் குறிப்பிடத்தக்க சில கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.

“நான் கட்சி மாறியதாக கூறியதில் எந்த உண்மையும் இல்லை. மரியாதையின் நிமித்தமே மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தேன். நான் ஒரு பச்சைத் தமிழன், இந்து, எனக்கு நன்றிக்கடன் என்ற கடமை இருக்கிறது. அதற்காக நான் அவர்களுடன் இணைந்துகொண்டதாக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயற்படுகிறேன். அதனூடாக மக்கள் சேவை செய்யவே விரும்புகிறேன்”

இப்படிக் கூறிய வடிவேல் சுரேஷ், அன்றையதினமே மாலை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கே மக்கள் முன்வைக்கும் கேள்விகள்தான் என்ன?

நீங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராகவே இருந்திருக்கலாம். எதற்காக மீண்டும் கட்சி மாறி நாடகம் ஆடினீர்கள்?

அன்று மாலையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு பேச்சுவார்த்தைகளின்போது எட்டிய இணக்கப்பாடுகள் அல்லது கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்ன?

உங்களது இந்த செயற்பாட்டினால் ஒட்டுமொத்த மலையக மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா?

வெறும் பதவிக்காக தாவும் நீங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் இத்தனை நாள் நடைபெற்ற பேச்சுவார்;த்தைகளின் போது மக்களின் நியாயங்களையும் போராட்டங்களையும் காட்டிக்கொடுத்து கையொப்பம் இட்டதன் உண்மையான காரணம் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா?

மலையகத்தில் பட்டினிக்கான போராட்டம் நடைபெறுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரான நீங்கள் மக்களின் நிலைப்பாடு, வேண்டுகோள் பற்றி முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களே, மக்களுக்கு சேவையாற்றவே கட்சி மாறினேன் என வெகு இலகுவாக நீங்கள் கூறிவிட்டுச் செல்லலாம். ஆனால் காலம் உங்களுக்குக் குத்தியிருக்கின்ற கறுப்புப் புள்ளியை என்றுமே மறைக்க முடியாது.

மலையக மக்கள் ஏமாற்றுப்பேர்வழிகள், கொஞ்ச காலம் கோபமாக இருப்பார்கள், பின்னர் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தை துடைத்தெறியுங்கள். ஒரு மலையக சமூகத்தைச் சார்ந்தவனாக, உங்களைப் போன்றவர்களை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்.

உங்களுடைய கட்சித்தாவலுக்கும் கடைசிநேர சதுரங்க ஆட்டத்துக்கும் பிரதான காரணம் என்ன என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். உங்களை அமைச்சுப் பொறுப்பில் அமர்த்தியவர்களின் முக்கிய நோக்கம் என்ன?

நீங்கள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதா? அல்லது பெரும்பான்மையை நிரூபித்து தமிழ்மக்கள் தங்களோடு இருக்கிறார்கள் என்பதை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்பதா?

நான் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தவன் அல்லன். மனச்சாட்சியுள்ள பெருந்தோட்டவாசியாக மக்கள் மனதில் உள்ள குமுறல்களை வார்த்தையாக்கிக்கொண்டிருக்கிறேன்.



ஆகட்டும், இப்போது நீங்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள். இனி மக்களின் கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றப்போகிறீர்கள்? புதிய பிரதமரும் அவர் சார்ந்த குழுவினராலும் இது தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாடு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக ஒக்டோபர் 10ஆம் திகதி தங்களுடைய தொழிற்சங்க அலுவலகத்தில் நாம் சந்தித்திருந்தோம். ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தராமல் ஓயமாட்டேன் என உறுதியளித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இனி உங்களுக்கு ஒரு தொழிற்சங்கம் இல்லை. இனியும் ஒரு தொழிற்சங்கம் வேண்டுமானால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் தஞ்சம் கோரலாம். ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் அங்கும் எவ்வாறான சித்துவிளையாட்டுகளை நடத்தினீர்கள் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

எந்தவொரு சுயலாபமும் (?) இன்றி மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்தால் அந்தக் கடமையை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்வதற்கு இனியாவது முயற்சி செய்யுங்கள் அமைச்சரே. அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அங்குமிங்கும் தாவித்திரிவதால் உங்களை மாத்திரமன்றி சமூகத்தையும் காட்டிக்கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள் பல இருக்கின்றன. இப்போது மக்களுக்கு முக்கியமானதொரு தேவை இருக்கிறது. அது சம்பளத் தேவை. அதனைக்காரணம் காட்டி கட்சி தாவுவது மிக இலகுவான விடயம் தான். ஆனாலும் இனிவரும் காலம் சவால்மிக்கதொரு நிலைமையைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அத்தோடு மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இருநூறு வருட கடும் உழைப்போடு இன்றும் தமது உழைப்பை மாத்திரமே நம்பியிருக்கும் அப்பாவித் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். உங்களை அறியாமல், மலையகத்தில் மாற்றத்தை வேண்டி பாரியதொரு இளைஞர் சக்தி உருவாகி வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



மேலும் பல முதலைகள் பற்றி தொடர்ந்தும் பேசுவோம்.

-இராமானுஜம் நிர்ஷன்-

Monday, November 13, 2017

வாய்ச் சொல்லில் வீரர்கள்

இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  
தேர்தல் காலங்களில் இந்த விடயம் பிரதான பேசுபொருளாகவும் முதலாவது வாக்குறுதியாகவும் அமைந்திருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது.  
ஆனால், அதற்குப் பின்னரான காலத்தில் தமிழ்ப் பாடசாலை குறித்து, வாக்குறுதியளித்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் மௌனமாகவே இருந்து வருகின்றனர்.  
இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலையொன்று ஏன் அவசியமாகிறது?  
இந்த மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை எதுவும் இல்லை. ஆகக்குறைந்தது விளையாட்டு மைதானம் கூட இல்லாத பாடசாலைகள் ஏராளமாக இருக்கின்றன. வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கோ, பயற்சி பெறுவதற்கோ பொது விளையாட்டு மைதானங்களையே நாட வேண்டியுள்ளது.   
அதைத்தவிர, நீச்சல், டென்னிஸ் போன்ற இதர விளையாட்டுகளுக்கான ஆகக்குறைந்த வாய்ப்புகள் கூட எந்தப் பாடசாலையிலும் இல்லை. அத்துடன் வாசிகசாலை, விஞ்ஞான கூடம், மனையியற்கூடம், கணினி பயிற்சிக்கூடம், கேட்போர் கூடம் என அடிப்படை வசதிகள் இல்லாத பாடசாலைகளும் இருக்கின்றன.   
இந்த மாவட்டத்தின் சிங்கள பாடசாலைகளின் வளர்ச்சி, அபிவிருத்தி, வளங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்ப் பாடசாலைகளில் பாரிய பின்னடைவு காணப்படுகிறது. குறிப்பாக நகர பாடசாலைகளை விட பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தியில் மாகாண அமைச்சு உரிய கவனம் எடுப்பதில்லை. பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் மாணவர்கள், அதன்பின்னர் நகரப் பாடசாலைகளில் இடைநிலை, உயர்தரக் கல்வியைத் தொடர்கின்றனர். ஆரம்பக் கல்வியைத் தொடருவதற்கான அடிப்படை வசதிகள் தோட்டப் பாடசாலைகளில் இல்லாமை காரணமாக கல்வி, விளையாட்டு மற்றும் இதர திறன்களில் அடைவு மட்டம் குறைவாகவே காணப்படுகிறது.  
இவை அத்தனை காரணங்களுக்காகவும் இரத்தினபுரி மாவட்டத்தில் மத்திய நகரம் ஒன்றில் தமிழ்ப் பாடசாலையொன்று சகல வசதிகளுடனும் அமையப்பெற வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.  
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இரத்தினபுரியில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.  
அதற்காக, இரத்தினபுரி புதிய நகரத்தில் காணியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.   
ஆயினும் தேர்தலுக்குப் பின்னர் அவர் அதனை முற்றாகவே மறந்துவிட்டார். அப்போதைய தேர்தல் கூட்டங்களில், இந்த விடயம் மிக முக்கியமாகப் பேசப்பட்டது.  
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கணபதி இராமச்சந்திரனும் இது பற்றி வாய்திறக்கவில்லை. ஆக, தேர்தல் வெற்றி என்ற ஒன்றுக்காக மாத்திரமே இந்த விடயத்தை பேசுபொருளாக்கி, மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது.  
தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனிடமும் இது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அது, எந்தளவுக்குச் சாத்தியமான தீர்மானங்களாக அமையும் என்பதில் கேள்விக்குறியே நீளுகிறது.  
இரத்தினபுரியில் புதிய தமிழ்ப் பாடசாலை அமையப்பெற வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள பாடசாலையொன்று தரமுயர்த்தப்பட்டு, அந்தப் பாடசாலைக்குச் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.  
இரத்தினபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தைத் தரம் உயர்த்த முடியும் என்றாலும் கூட, பாடசாலையை விஸ்தரிப்பதற்கான இட வசதிகள் அங்கு காணப்படவில்லை.   
பலாங்கொடை கனகநாயகம் பாடசாலை மற்றும் இறக்குவானை பரியோவான் கல்லூரி ஆகியவற்றைத் தரமுயர்த்தி, மத்திய அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. அந்தப் பாடசாலைகள் இரத்தினபுரி மாவட்டத்தின் மையப்பகுதிகளாக, அனைவருக்கும் வசதியான சூழலில் அமையாததும் காரணமாகும்.  
ஆகையால், சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகரான இரத்தினபுரி நகரில் புதிதாகப் பாடசாலையொன்று அமையப்பெறுவதே சாலப் பொருத்தமானதாகும்.  
இதற்காக, அனைத்துத் தரப்பினரும் முன்வந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.  
இரத்தினபுரியில், தமிழ் மொழிமூலமான பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்படாமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த காலங்களில் இதற்காகப் பல்வேறு விதமான போராட்டங்கள் இடம்பெற்ற போதிலும் உரியவர்கள் கவனமெடுக்காமையால் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இராஜாங்க கல்வி அமைச்சு, கிடைக்கப்பெற்றவுடன் இரத்தினபுரி மாவட்டத்துக்கு விடியல் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இழந்து வருகிறார்கள்.  
இரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு மாகாண அமைச்சு மந்த கதியிலேயே செயற்பட்டு வந்தது. சப்ரகமுவ மாகாண கல்வி, கலாசாரம், தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் அமைச்சர் பானு முனிப்பிரிய, தமிழ்ப் பாடசாலைகளின் வளர்ச்சியில் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாண சபையில் இருந்த தமிழ் உறுப்பினர்கள் இருவரும் இது தொடர்பில் உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்காமையும் இதற்குக் காரணமாகும்.  
இரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கல்வி இராஜாங்க அமைச்சரிடம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இரத்தினபுரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள், உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடநெறிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது.  
கடந்த காலங்களில் இந்த மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் உள்வாங்கப்பட்ட போதிலும், கடந்த வருடம், மத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்களால் அதற்கான கதவும் அடைக்கப்பட்டது.  
இதன்காரணமாக, உயர்தரத்தில் தாம் விரும்பிய பாடநெறியைத் தொடர முடியாமல் மாணவர்கள் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.  
வெளிமாவட்ட மாணவர்களை நுவரெலியா மாவட்டத்துக்கு உள்வாங்கக் கூடாது என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.   
அந்தச் சந்தர்ப்பத்தில் இரத்தினபுரி மாவட்ட மாணவர்களின் நிலையை எடுத்துக் கூற, மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் மத்திய மாகாண முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றிருந்தனர். அப்போது, “மாகாண பாடசாலைகள் அவ்வந்த மாகாண நிர்வாகத்தின் கீழேயே செயற்படுகின்றன. ஆதலால் எமக்கு ஒன்றும் செய்ய முடியாது” எனக் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.   
அதேபோன்று, “எந்தக் காரணம் கொண்டும் வெளிமாவட்ட மாணவர்களை இணைத்துக்கொள்ள மாட்டோம். இது நான் எடுத்த தீர்மானம் அல்ல, தமிழ் அரசியல் பிரமுகர்கள் எடுத்த தீர்மானமே” என முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.  
தமது கனவுகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஏமாற்றத்தில் திரும்பினர்.  
இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கடந்த காலங்களில் இரத்தினபுரி மாவட்டத்துக்கு விஜயம் செய்தபோது, இதற்கான உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்.  
குறிப்பாக, சப்ரகமுவ மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் பானு முனுப்பிரிய மற்றும் கல்வி அதிகாரிகள், அதிபர்களுடனான சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆயினும் இராஜாங்க அமைச்சர், இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின்னிற்பதாகவே தெரிகிறது.  
இங்கே, மலையக அரசியல் பிரமுகர்களிடத்தில் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, மலையகம் என்றால் நுவரெலியா மாவட்டத்தை மாத்திரமாகக் கொண்டுதான் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவே அனைத்தும் நடைபெறுகின்றன.  
மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் கூட, மலையக மக்கள் பல மாவட்டங்களில் வாழ்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.  
அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் ஒரே மாவட்டத்துக்குச் சென்றடைவது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். ஒப்பீட்டு ரீதியில், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன.  
கல்வித் துறையைப் பொறுத்தவரையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலத்தில், இரத்தினபுரி மாவட்டம் பெரும் வளர்ச்சி கண்டுவந்தது.  
பேதங்களைத் தவிர்த்து, மலையக மக்கள் வாழும் சகல மாவட்டங்களுக்கும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அவருக்குப் பின்னரான காலத்தில் வெறும் தேர்தலுக்கு மாத்திரமான சேவையாகவே பலர் தமது திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  
மேடைகளிலும் முகநூலிலும் தமக்கு எதிரானவர்களைத் திட்டித்தீர்ப்பதிலும் மக்கள் பணத்திலான சேவைகளைச் சொந்தப் பணத்தில் செய்வதைப் போல காட்டிக்கொள்வதிலும் ஆர்வம் காட்டும் அரசியல் தலைமைகள், உண்மையாகவே ஒடுக்கப்பட்ட சமூகத்துக்குக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.  

இரத்தினபுரி மாவட்டத்தில் உழைக்கும் தொழிலாளர்களிடமிருந்து சந்தா பெற்றுக்கொள்ளும் அரசியல் தொழிற்சங்கங்கள், ஏன் இதுகுறித்துச் சிந்திப்பதில்லை?  
காலம் காலமாக தொழிற்சங்கங்களுக்குச் சந்தா செலுத்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இது குறித்துக் கேட்பதற்கு உரிமை இல்லையா?  
வெறுமனே வாய்ச்சொல்லில் மாத்திரம் உறுதி வழங்கிவிட்டு, தங்களுடைய பகுதிகளுக்கு மாத்திரம் அபிவிருத்திகளை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம்?  
மாதாந்தம் தொழிற்சங்க சந்தாவைப் பெற்றுக்கொள்ளும் கட்சிகள், அந்தப் பணத்துக்காக மனச்சாட்சியுடன் சேவையாற்றுகிறோமா என்பதைச் சிந்திக்கின்றனவா?  
ஆதலால், இரத்தினபுரி மாவட்ட மக்களின் இந்தக் கோரிக்கை குறித்து, உரியவர்கள் பொருத்தமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.  
மலையகம் அபிவிருத்தியடைய வேண்டும் என உண்மையாக நேசிக்கும் தலைவர்கள் இதுபற்றிய அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வார்கள் என மக்கள் நம்புகிறார்கள்.  
சப்ரகமுவ மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வந்துள்ளதுடன் அதன் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பேச்சுகள் இரத்தினபுரியில் அதிகமாகவே உருவாகத் தொடங்கிவிட்டன.  
இந்நிலையில், இரத்தினபுரிக்குப் படையெடுக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் தமிழ்ப் பாடசாலை குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.  
ஏற்கெனவே இந்த விடயத்தைத் தேர்தலின் வெற்றி வியூகமாக்கி அதன்பின்னர் மறந்துபோன தலைவர்கள் இப்போது எந்த நோக்கில் மக்களை சந்திக்கப்போகிறார்கள்? 
இரத்தினபுரியில் சகல வசதிகளையும் கொண்டு தமிழ்ப் பாடசாலை என்ற கருப்பொருளை மையமாக வைத்தே தொடர்ச்சியாக வாக்குக் கேட்டவர்களுக்கு இந்தமுறை, அந்த வாக்குறுதியை வழங்குவது ஒன்றும் புதிதாக இருக்காது.  
ஆனாலும், போலி முகங்களோடு வாக்குறுதியளித்துவிட்டு காணாமல் போகும் தலைவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கும் மக்கள் தயாராக உள்ளார்கள்.  
பருவத்துக்குப் பூக்கும் காளான்கள் போல, தேர்தல் காலங்களில் முகாம் அமைத்து எண்ணிலடங்கா உறுதிகள் வழங்கும் தலைவர்கள், தமது பெயர் கறுப்புப் புள்ளியாக வரலாற்றில் இடம்பெறாதவண்ணம் செயற்படுவார்கள் என நம்புகிறோம்.  

-இராமானுஜம் நிர்ஷன்-

Saturday, May 20, 2017

முஸ்லிம்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கண்டி, அஸ்கிரிய மல்வத்து பீடத்துக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தனர்..




இதன்போது தற்போதைய நிலைமை தொடர்பாக பீடாதிபதிகளுக்கு விளக்கமளித்ததாக ஞானசார தேரர் தெரிவித்ததுடன் முஸ்லிம்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

அங்கு சந்திப்பின் பின்னர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் இவை,

நாட்டின் தற்போதைய நிலைமை தெடர்பாக நாம் விளக்கமளித்தோம் விசேடமாக இந்த நாட்களில் தீவிரவாத போக்குடைய முஸ்லிம் பிரிவினரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.

அவர்கள் இந்த அரசியலுக்குள் இருந்துகொண்டு எங்களுடைய மூத்த அண்ணாமாராக, தந்தையராக, சித்தப்பாமாராக நடந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.

இதனை நல்லவிதமாக அல்லது கெட்டவிதமாக நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மறுபுறத்தில் நாம் இன்று பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம்.

நாட்டில் நீதி, சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கம் இன்று வேறு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளே இதற்கு காரணம். இந்த ஆட்சிக்காலத்தில் அவர்களால் எவற்றை பெற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.

அதன் கட்டங்களாகத்தான், கிழக்கில் தேசிய சொத்துகளை அழித்தல், நல்லிணக்க பெயர்ப்பலகையின் கீழே புத்தர் சிலையை நிறுவவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த தேசிய சொத்துக்களால் எமக்கு எந்தப் பயனும் இல்லை என அந்த மக்கள் சொல்லுமளவுக்கு இன்று காலம் மாற்றமடைந்திருக்கிறது.

அங்கு காடழித்தல் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாம் நேற்று அறிவித்தோம்.

இந்த நிலையில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஞானசார உள்ளிட்ட தேரர்கள், அமைப்புகளுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிடப்போவதாக நாம் கேள்விப்பட்டோம். ஞானசார உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் முஸ்லிம் உறுப்பினர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்களாம். நான் கேட்கிறேன், அதென்ன கடும் நடவடிக்கை? அதனை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மறுபுறத்தில் நான் கவலையையும் வெளிப்படுத்துகிறேன்.

பாராளுமன்றத்தில் 225 பேர் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் எவ்வாறான இன உணர்வுடன் முஸ்லிம்கள் ஒன்றிணைகிறார்கள்? இதே உணர்வு பாராளுமன்றத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இல்லை என்பதை நினைத்து கவலையடைகிறேன்.

முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். முஸ்லிம்கள் ஒன்றிணைவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுக்கென பிரச்சினை வரும்போது ஒற்றுமையாக இருப்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், எங்களுடைய உறுப்பினர்கள், ஆகக்குறைந்தது 10,12 பேராவது ஒன்றிணைந்து எமது பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசவில்லை.

ஆதலால் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதியை நிலைநாட்டுமாறு நாம் கோரி நிற்கின்றோம். எமக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை.
அதனை, வில்பத்துவை அழித்த பதியுதீனிடமிருந்து ஆரம்பியுங்கள். எங்களை கொன்றுவிட்டு தானும் இறப்பதாக கூறிய அசாத் ஸாலியிடமிருந்து ஆரம்பியுங்கள். மூத்த அண்ணனைப் போல இருந்துகொண்டு, தீவிரவாத எண்ணத்துடன் எங்களுடன் மோதவரும் முஜிபுர் ரஹ்மானிடமிருந்து நீதியை நிலைநாட்டிக்கொண்டு வாருங்கள்.

அப்படியென்றால் நாம் நீதிக்கு கட்டுப்படுகிறோம்.

அதைவிடுத்து அரசியல் பலத்தை உபயோகித்துக்கொண்டு எங்களை கட்டுப்படுத்த நினைத்தால் அது அவர்களின் தவறாகும் என்றே நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளை சொல்வதற்கு யாரும் இல்லை. இதை கேட்பதற்கு தலைவர் ஒருவர் இல்லை.

சிங்களவர்களுக்கு தலைவர் இல்லை, பௌத்தர்களுக்கு தலைவர் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். ஏனைய இனங்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

இன்று நாங்கள் அராஜகங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையை சொல்வதானால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருக்கும் ஒருவருக்கு பயந்துகொண்டு இருப்பது போன்ற நிலைமைதான் இன்று.

நாம் இதை உணர்வுபூர்வமாக கதைப்பதற்கு காரணம், நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள் உணர்வுபூர்வமாக இருப்பதால் தான். அவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் இந்த நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள். என்ன புதுமை என்றால், உலகில் இப்படியானதொரு சகவாழ்வு உள்ள நாடு இருக்கிறதா? இப்படியானதொரு பௌத்த சூழல் இருக்கின்ற நாட்டில், இருவேளையும் பிரித் கேட்கின்ற மக்கள் வாழ்கின்ற நாட்டில் எந்தக் கள்ளத்தோணிகள் இல்லாமல் இருக்கிறார்கள். சகவாழ்வை பற்றி கற்றுக்கொடுத்த எங்களுக்கு வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள் எமக்கே கற்றுக்கொடுக்க பார்க்கிறார்கள்.

அறநெறிப்பாடசாலைகளில் எங்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் சகவாழ்வை கற்றுக்கொடுக்கிறார்கள். முஸ்லிம்களின் மத்ரசாக்களில் தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கிறார்கள்.

அது இங்கே சரிவாராது என்பதை தான் எளிமையாக என்னால் சொல்ல முடியும்.

-இராமானுஜம் நிர்ஷன்-

Monday, May 1, 2017

இனியொரு புதுத் தேசம் மலரட்டும்!

இனியொரு புதுத் தேசம் மலரட்டும்


அன்புக்குரிய மகனே,
துரோகிகளும் ஏமாற்றுவித்தைக்காரர்களும் நிறைந்து வாழும் தேசம் இது. சுற்றுச்சூழ நாம் காணும் இயற்கையை கொண்டு சுவர்க்க பூமி என எடைபோட்டு விடாதே. மலைக்காட்டை அழித்து தேயிலை விதைத்து பச்சை தேசத்தை சமைத்தார்கள் எங்கள் மூதாதையர்கள்.


காடழிக்கும் பணிக்கு சென்ற ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. பகடைக்காய்களாய் அங்குமிங்கும் அடிபட்டிருக்கிறோம். எம்மை வைத்து இலாபம் தேடிய முதலாளிமார் இன்னும் சுகமாகத்தான் வாழ்கிறார்கள்.
நாம் இதயசுத்தியானவர்கள். எங்களுக்கு ஏமாற்றம், துரோகம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகத்தான் தெரியும். காமன் கூத்தில் மாத்திரம் தான் எங்கள் கிராமத்து மக்கள் நடிப்பார்கள்.

நமது சோகமெல்லாம் மலைக்காற்றிடையே மறைந்திருக்கிறது. எமது கண்ணீர்கூட தேயிலைக்கு உரமாகியிருக்கிறது.

இங்கே தலைவர்கள் என சொல்லிக்கொள்வோர் வந்துபோவதுண்டு. எம்மை ஆளப்பிறந்தவர்களாகவும் அன்பின் இருப்பிடமாகவும் அவர்கள் காட்டிக்கொள்வதுண்டு. அவர்களின் புன்னகைக்குப் பின்னால் போலித்தனத்தின் உச்சம் மறைந்திருக்கிறது.

நாம் இதை கண்டுகொள்ள காலம் எடுத்தது குழந்தையே. நீ எங்கள் வரலாற்றை முதலில் கற்றுக்கொள். அவை சொல்லித் தரும் பாடத்தை விட எந்தத் தத்துவங்களும் உணர்த்திவிடப் போவதில்லை.

கூடை சுமந்து கூனிப் போனேன், கொழுந்து கிள்ளிக் களைத்துப் போனேன்
ஒரு ரொட்டித் துண்டில் வயிற்றை நிரப்பி உன்னை கருவாய் சுமந்தேன். கால்கிலோ குறைந்ததென்று அரைநாள் சம்பளத்தோடு வீடு திரும்பிய நாட்கள் அதிகமாகவே உண்டு.


பசியும் ஏமாற்றமும் கல்நெஞ்சக்காரக் கடவுள் எமக்கு கொடுத்த வரங்கள். நாம் பணத்தால் ஏழைகளே தவிர மனதால் மிக உயர்ந்தவர்கள்.

நான் சிறுபராயத்தில் இருக்கும்போது பௌர்ணமி இரவில் ஊரார் இணைந்து கதை பேசுவார்கள். அப்போது மூத்தவர்கள் பலரும் தாங்களே இயற்றிய பாடல்களை பாடுவார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏராளமான வலிகள் புதைந்திருக்கும். ஆனால் அதே பாடல்கள்தான் வலிகளை போக்கும் மருந்தாகவும் இருந்தன.

அந்தக்காலம் இப்போதில்லை. காலம் முழுவதும் கடவுளைத் தூற்றிக்கொண்டே காலமாகிப் போகிறோம்.

உன்னைப் போல எத்தனையோ குழந்தைகள் கொழும்பில் பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகம் தெரியாது. பாத்திரம் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் சாதித்தது கிடையாது.

என் உதிரம் கொடுத்து உனக்கு உயிர்கொடுத்திருக்கிறேன். உன்னை கடைசிவரை உயிராகக் காக்கும் வரம் எனக்கு கிடைக்குமோ தெரியாது. எனக்கு பொன்,பொருள்,மாளிகையொன்றும் தேவையில்லை. 

என்னைப்போல எத்தனையோ தாய்மாருக்கு மகனாக வளர்ந்து இந்த தேசத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்திடு.
எனக்கு ஆயிரமாயிரம் கனவுகள் உண்டு. என் உயிர் துறக்கும் தருவாயில் அவையும் என்னுடனேயே இந்த மண்ணுக்குள் புதைந்து போகும். அரசியலில் நல்லவர்கள் இருப்பார்கள், சமூகத்தில் துரோகிகளல்லாத நல்லுள்ளம் படைத்தவர்கள் இருப்பார்கள் என்பதை இந்த உலகுக்கு காட்டு.

தூய சிந்தனையுடனான உன் வளர்ச்சி கண்டு இந்த மண்ணுக்குள் புதைந்துபோன எங்கள் மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இனியொரு புதுத் தேசம் உன்னிலிருந்து மலரட்டும்!

அன்புடன் அம்மா.

எழுத்து: இராமானுஜம் நிர்ஷன்
படங்கள்: சொரின் பர்ஸோய் (அல்-ஜசீரா)

Friday, September 16, 2016

கருத்துப் பகிர்வு: வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் தற்போதைய போராட்டம் குறித்து அனேகருக்கு தெளிவில்லாத தன்மை காணப்படுகிறது. என்னுடன் கதைக்கும் நண்பர்கள் பலர் வைத்தியர்களின் போராட்டம் நியாயமானது என்று வாதிடுகிறார்கள்.

உண்மையில் இந்தப் போராட்டத்தினூடாக வைத்தியர்களுடைய சுயநலத்தின் உச்சகட்டம் புலப்படுகிறது என்பதே எனது கருத்து.

தங்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் அனுமதி வேண்டும் என்பதே அவர்களுடைய முதல் வாதம். அதாவது வைத்தியர்களுக்கு கிடைக்கும் இடமாற்றத்தினால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இதனால் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் அனுமதி வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இடமாற்றங்களின்போது ஏற்படும் சிக்கல்களுக்கு ஏற்கனவே தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதுவும் வைத்தியர்களுக்கு விசேட சலுகை எப்போதும் உண்டு.

எனினும் வைத்தியர்களுடைய தற்போதைய கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.


ஆரம்பத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் போராட்டம் நடத்தினார்கள். பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிக்கொண்டு அரச பணியை மாத்திரம் புறக்கணித்து போராட்டத்தில் வெற்றியும் கண்டார்கள்.

அதற்குப் பிறகு வாகன இறக்குமதியில் சலுகை கேட்டார்கள். அதற்காக தொடர்ச்சியான போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிக்கொண்டு அரச பணியை புறக்கணித்தார்கள். அந்தப் போராட்டமும் வெற்றியடைந்தது.

இரண்டு பிரதான கோரிக்கைகளை வென்றெடுத்ததினூடாக அரசாங்கத்தை ஆட்டிப்படைத்துவிடலாம் என்பதே வைத்தியர்களுடைய எண்ணமாக மாறியது.

அதற்காக மக்களின் வாழ்க்கையை துரும்பாக பயன்படுத்தி தற்போது மற்றுமொரு போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

சாதாரண ஏழை பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை வேண்டும் எனக் கோரியிருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் இங்கு முழுக்க முழுக்க சுயநலனை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சை முற்றுகையிடுவதிலும் அரசாங்கத்துக்கு எதிராக அறிக்கை விடுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

அவர்கள் இனங்கண்டுள்ளதாக கூறப்படும் 12 பாடசாலைகளில் மாத்திரம்தான் தங்களுடைய பிள்ளைகளுக்கு அனுமதி வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை.

உதாரணத்துக்கு ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

வைத்திய சங்கத்தினருக்கு கொழும்பு ரோயல் கல்லூரி அனுமதி வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி அனுமதி அவர்களுக்கு வேண்டாம் என்கிறார்கள்.

இது எந்த வகையிலான கோரிக்கை என்பது புரியவில்லை.

இதில் எங்கு நியாயத்தை தேடுவது என்பதும் தெரியவில்லை.

அரச வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நேர முகாமைத்துவத்தை கண்காணிக்க கைவிரல் பதியும் முறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு ஏற்கனவே தீர்மானித்தது.

அதற்கு எந்தளவான போராட்டங்கள் இடம்பெற்றன என்பதை முழு நாட்டு மக்களும் அறிவார்கள்.

குறிப்பாக வைத்தியர்கள் பலர் தனியார் வைத்தியசாலைகளில் அதிக நேரத்தை அக்கறையுடன் செலவிடுவதால் அரச வைத்தியசாலைகளுக்கு தாமதமாகவே வருகை தருகின்றனர்.

எங்கே வைத்தியர்களை எதிர்த்தால் தமது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என எண்ணி நோயாளர்களும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதில்லை. அதேபோன்று அரசாங்கமும் சற்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தான் இதுவரை காலமும் செயற்பட்டு வந்தது.

எனினும் தற்போதைய நிலை என்ன?

வைத்தியர்களின் தற்போதைய போராட்டம் குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

அனைத்து தொழிற்சங்கங்களையும் சமமாகவே பார்ப்பதாகவும் தொழில் ரீதியான பிணக்குகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நாட்டு மக்களின் நலனுக்காக தீர்த்து வைக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

வைத்தியர்களின் சங்கத்தைப் பற்றி நேரடியாக இங்கு குறிப்பிடப்படாவிட்டாலும் இதன் உள்ளர்த்தம் என்னவென்பது வெளிப்படையாகிறது.

அதேபோல் அனைத்து மாணவர்களையும் அரசாங்கம் சமமாகவே பார்ப்பதாகவும் பாகுபாட்டுக்கு இடமில்லை எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்தினை அமைச்சர் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளப்போகிறது என்பதை இங்கு கண்ணும் கருத்துமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

அத்துடன் இதில் அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானத்தை ஏனைய பிரதான தொழிற்சங்கங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

எது எவ்வாறாயினும் சாதாரண பொதுமக்களே பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். பணிப்புறக்கணிப்பு காலத்தில் அரசாங்கத் தொழிலை மறுக்கும் அரசாங்க வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் அதிக நேரத்தை செலவிடுகின்றமை கண்கூடு.

எனினும் இவ்வாறான விடயம் குறித்து பொதுமக்கள் அதிகமாக விழிப்புணர்வூட்டப்பட வேண்டிய தேவை உள்ளது. பொதுமக்களின் எழுச்சி மிக்க போராட்டங்களின் ஊடாகவே எழுந்தமானமாகவும் எதேச்சதிகாரத்துடனும் செயற்படுவோருக்கு நல்ல பாடம் கற்பிக்க முடியும்.

-இராமானுஜம் நிர்ஷன்-

Friday, September 9, 2016

சப்ரகமுவ தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வியோடு விளையாடுகிறதா கல்வி அமைச்சு?


-நிர்ஷன் இராமானுஜம்-

சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூல உயர்தர மாணவர்களுக்கு என்றுமில்லாதவாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கு வரப்பிரசாதமாக கல்வி இராஜாங்க அமைச்சு கிடைத்துள்ள போதிலும் சப்ரகமுவ மக்கள் மாற்றான்தாய் மனப்பான்மையோடே பார்க்கப்படுகின்றனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையிலும் உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகள் இல்லை. இதுவரை காலமும் அதற்கான எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை.
அதுமாத்திரமல்லாமல் கலை, வர்த்தக பிரிவுகளில் போதிய வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் நிலவுகிறது.
இந்நிலையில் தாம் விரும்பிய துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதற்காக வேறு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை இந்த மாணவர்கள் நாடுகின்றனர்.
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களை விட பொருளாதார ரீதியில் மத்திய மாகாணம் பொருந்தும் காரணத்தினால் பெற்றோர் மத்திய மாகாணத்தை நாடுகின்றனர்.
அத்துடன் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம் என்பதாலும் நம்பிக்கையுடன் அந்த மாவட்ட பாடசாலைகளை நாடுகின்றார்கள்.
மத்திய மாகாணத்தில் சப்ரகமுவ மாணவர்களை இணைத்துக்கொள்ளுவதானது இன்று நேற்று நடைபெறுவது அல்ல. மிக நீண்டகாலம் தொட்டே இந்த மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் கற்று சிறப்புத் தேர்ச்சியுடையவர்களாக வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நுவரெலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.
அதாவது பரீட்சைக்கு தோற்றுவதற்காக மாத்திரமே அவர்கள் மத்திய மாகாணத்தை நாடுவதாக அரசியல் பிரமுகர்கள் எண்ணுகின்றனர். அத்துடன் வெட்டுப்புள்ளியை காரணம் காட்டியும் மாணவர்கள் இணைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தவறான கண்ணோட்டமாகும்.
தமது எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொள்ளவே அத்தனை சிரமங்களையும் தாண்டி வேறு மாகாணங்களுக்கு செல்கிறார்கள். உரிய வளங்கள் தமது பகுதியில் இருந்தால் மாற்றிடங்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.
சப்ரகமுவவில் தமக்குரிய பாடத்திட்டங்கள் இல்லையென்றால் அந்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு உரிய பதில் அரசியல்வாதிகளிடம் இருக்குமானால் தயவுடன் அதை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த முறை மாணவர்களுக்கு நிகழ்ந்த அநீதி இங்கே குறிப்பிடுகிறேன்.
சப்ரகமுவ மாகாணத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 38 மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.
அவர்களுக்கான அனுமதி கடந்த ஜுன் மாதம் பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
அந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி தங்குமிடங்களையும் தெரிவு செய்து அதற்கான கொடுப்பனவையும் செலுத்தி அங்கு தங்கியிருந்தார்கள்.
அவர்களில் பலர் பாடசாலைகளுக்கு சென்று கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்வந்த பாடசாலைகளிலிருந்து அவர்கள் பலாத்காரமாக அனுப்பப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சரின் கடுமையான உத்தரவின்பேரில் பாடசாலைகளிலிருந்து அனுப்புவதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுடைய நோக்கம், கனவுகள் எல்லாம் சிதைக்கப்பட்டு இன்று செய்வதறியாது தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இதன்பிறகு கல்வி அமைச்சருக்கு ஊடகங்கள், அரசியல்பிரமுகர்கள், பெற்றோர்கள், பொதுமக்களால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இரத்தினபுரியில் இரண்டு பாடசாலைகளிலும் ஊவாவில் இரண்டு பாடசாலைகளிலும் உடனடியாக உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் உறுதியளித்திருந்தார்.
இந்தத் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம்.
ஆனால் உரிய வளங்களுடன் பூரணமாக குறித்த பிரிவுகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு இந்த மாணவர்கள் எப்போது பரீட்சை எழுதப்போகிறார்கள்?
இந்த அப்பாவி மாணவர்கள் மத்திய மாகாணத்தில் கல்வி கற்பதற்கான கோரிக்கையை விடுக்கிறார்களே தவிர வேறெந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பது உரியவர்களுக்குப் புரிகிறதா?
சப்ரகமுவவை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியிருக்கும் இருவரும் இதுவரை இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. கல்வி அமைச்சர் வேறு கட்சிதானே? அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்ற மனப்பான்மையில் அவ்விருவரும் இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மாவட்ட பாடசாலை சமூகத்திடையே பெரும் வெறுப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் இவர்களுடைய காதுக்கு எட்டாததன் காரணமும் பின்னணியும் எதுவென மக்கள் நன்கறிவார்கள்.
இது இவ்வாறிருக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சப்ரகமுவ மாகாணத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நோக்குவதற்கான காரணம் என்ன?
அவ்வாறெனின் தேசிய அமைச்சுகளை வாக்கு வங்கியை வளர்த்துக்கொள்வதற்காக மாத்திரம் பயன்படுத்திகிறார்களா?
மலையகம் என்றால் நுவரெலியா மாத்திரம் அல்ல. எமது தமிழ் அரசியல்தலைவர்கள் என நாம் உரிமையோடு கேட்கும்போது தலைசாய்த்து நியாயத்தை கேட்காமல் தட்டிக்கழிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கியிருக்கும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு மிக விரைவாக எட்டப்பட வேண்டும் என்பதே மக்களது கோரிக்கை.
சப்ரகமுவவில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அது நடைபெறும் வரையில் இந்த முறை மாத்திரமாவது மாணவர்கள் மத்திய மாகாணத்தில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை கல்வி அமைச்சு வழங்க வேண்டும்.



Wednesday, October 14, 2015

ஹிட்ஸை அள்ளிக்கொள்ள மனிதத்தை கொலை செய்வதா?


கொத்மலையில் (ஹெல்பொட தோட்டம்) சிறுமியின் சீருடைகளுடன் பொலிஸாரின் வலையில் சிக்கிய இளைஞர் பற்றிய செய்திகள் பல்வேறு இணையத்தளங்களில் வெவ்வேறு விதமாக எழுதப்பட்டன.

காலத்துக்குப் பூக்கும் காளான்கள் போல துளிர்விடும் இணையத்தளங்கள் பல, செய்தி என்ற வடிவில் ஹிட்ஸை அள்ளுவதற்காக செய்யும் வேலைகளால் சமூகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இந்த இளைஞர் குறித்த செய்தியில்,

* வித்தியா, சேயாவுக்கு அடுத்ததாக கொத்மலையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: காமுகன் சிக்கினான்

* ஹெல்பொட தோட்டத்தில் மற்றுமொரு சிறுமி கற்பழிப்பு

* ஹெல்பொட தோட்டத்தில் சிறுமியின் சீருடைகளுடன் சிக்கிய இளைஞன்: சிறுமி காட்டுக்குள் தப்பியோடியிருக்கலாம்? (படங்கள்)

* சிறுமியின் உள்ளாடைகளுடன் ஹெல்பொடயில் சிக்கிய இளைஞன் நையப்புடைப்பு (காணொளி)

* கொத்மலையில் பரபரப்பு: சிறுமியை பலாத்காரப்படுத்திய இளைஞன் பொலிஸாரிடம் சிக்கினான்

* சிறுமியின் உள்ளாடைகளுடன் இருந்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்: கொத்மலையில் சம்பவம் (படங்கள் உள்ளே)

* கொத்மலை ஹெல்பொட தோட்டத்தில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞர் வசமாக சிக்கினார், நடந்தது என்ன? (முழு விபரம்)

இப்படி பல்வேறு இணையத்தளங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன. அதிலும் குறிப்பாக கைது செய்யப்பட்ட இளைஞரின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பதிவிட்டிருந்தன.

உண்மையில், அந்த இளைஞன் சிறுமியை காணவேயில்லை. அப்படியொரு வல்லுறவு சம்பவம் நடைபெறவுமில்லை.

இதற்கிடையில் சில இணையத்தளங்கள் இணைந்து அப்பாவி இளைஞனை குற்றவாளியாகவே சித்தரித்துவிட்டன. இப்போது என்ன செய்வது? அந்த இளைஞர் பக்கத்திலிருந்து பார்த்தால் இங்கே குற்றவாளிகள் யார்?

இளைஞரின் புகைப்படத்தை தரவேற்றியதால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பதிலளிக்கப்போவது யார்? எதிர்காலம் என்னாவது?

ஊடக ஒழுக்கவியல் தொடர்பில் அனைத்து இணையத்தள நடத்துநர்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் செய்தி தொடர்பில் ஆராய்ந்து எழுதுவதே சிறந்ததாகும்.

உதாரணத்துக்கு,
உங்கள் கண்முன்னாலேயே X என்பவர் Y என்பவரை கொலை செய்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். இங்கு X என்பவரை குற்றவாளி என எழுதிவிட முடியாது. அதனை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதுவரை அவர் சந்தேக நபர்தான்.

வெள்ளவத்தையில் தாய்,தந்தை,சகோதரியை கொலை செய்த குமாரசாமி பிரசான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

செய்தி என்ற பெயரில் பரபரப்பை உண்டாக்குவதற்காக மனிதத்தை கொன்றுவிடாதீர்கள்.

-நிர்ஷன் இராமானுஜம்-